வியாழன், 4 ஜூலை, 2024

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செந்துறையில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் , திருச்சி (மேற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக குளித்தலையில் பேருந்து நிலையம் அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு

 14.4.1995 அன்று அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செந்துறையில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெண்ணாடத்திலிருந்து ரயில் மூலம் செந்துறைக்குச் சென்றபோது கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். புலவர் வை.நாத்திகநம்பி மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். சி.காமராஜ் மாநாட்டைத் திறந்து வைத்தார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன், பகுத்தறிவு ஆசிரியரணி செயல்முறைத் தலைவர் ந.வெற்றியழகன் ஆகியோர் பேசினார்கள்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச் சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே திறந்து வைத்து உரையாற்றுகையில், பக்தி மோசடி, ஜாதி ஏன் ஒழிய வேண்டும் என்பதற்கான காரணங்கள், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை ஆகியவை பற்றி விரிவாகக் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தேன். மாநாட்டையொட்டி, மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் தீ மிதித்தல் மற்றும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டு நிகழ்வில் கூவாகம் ரவி_தேன்மொழி ஆகியோரின் பெண் குழந்தைக்கு மணியம்மை எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தேன். ஜாதி ஒழிப்பு வீரர்களைப் பாராட்டிச் சிறப்பித்தேன். அடிமைச் சின்னமாம் தாலி அகற்றல் நிகழ்வில் பெருவாரியான பெண்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முரசொலி முகிலனின் ஈரோட்டுப் பூகம்பம் என்னும் தலைப்பில் சிறப்பான நாடகமும் நிகழ்த்தப்பட்டது. மாநாட்டிற்காக செந்துறை நகரமே வண்ண வண்ண சுவரெழுத்துகளால் எங்கு பார்த்தாலும் பளிச்சிட்டன.

 

 

 

15.4.1995 அன்று திருச்சி (மேற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக குளித்தலையில் பேருந்து நிலையம் அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. குளித்தலை நகர தலைவர் கி.திராவிடமணி கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் கட்டடத்தில் தந்தை பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தேன். கட்டடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் படத்தையும் திறந்து வைத்தேன். நிகழ்ச்சியில் தென் மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் கல்வி வள்ளல் மதுரை பே.தேவசகாயம், உரத்தநாடு இரா.குணசேகரன், மதுரை மாவட்ட மகளிரணித் தலைவர் அன்னத்தாயம்மாள் உடனிருந்தனர்.

பெரியார் பாலத்திலிருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், நா.சந்தானகிருட்டினன் அரங்கில் எஸ்.பி.செல்வத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரத்தை வழங்கியும், பெரியார் பெருந் தொண்டர்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிவித்தும் சிறப்பித்தோம். ஈட்டி கணேசன்_லட்சுமி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வன் எனப் பெயர் சூட்டினேன். தெற்குநத்தம் சித்தார்த்தன் குழுவினரின் கருத்துச் செறிவுமிக்க வீதி நாடகமும் மேடையில் நடத்தப்பட்டது.

மாவட்ட கழகப் பொருளாளர் கவிஞர் பழ.ராமசாமி நாணயங்களாலான மாலையும், ஓட்டல் அதிபர் சீனன் நோட்டுகளால் ஆன மாலையையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாநாடு மேடைக்குச் செல்லும் வழி நெடுகிலும் கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் வணக்கம் செலுத்தி சிறப்பான வரவேற்பை அளித்தனர். மாநாடு முடியும் வரை மக்கள் பெரும் கூட்டமாக இருந்து உரையை செவிமடுத்துக் கேட்டுச் சென்றனர்.

-கி.வீரமணி

அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக