திங்கள், 31 டிசம்பர், 2018

ஓசூரில் ஓங்கிய குரல்களின் உணர்ச்சித் தெறிப்புகள்!

தொகுப்பு: மின்சாரம்

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று (30.12.2018) ஒரு புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்தது. நந்தீஷ் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபரும், சுவாதி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் காதலித்தார்களாம். ஏன் காதலிக்கக் கூடாதா? காதல் செய்வது பஞ்சமா பாதகமா?
'காதல் என்பது உயிர் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ?' என்று புரட்சிக் கவிஞர் பாடினார்.
காதல் இயற்கையானது இல்லை என்றால் ஓர் ஆணும், பெண்ணும் காதலிப்பது எப்படி?
சிவவாக்கிய சித்தர் செவிகளில் அடித்ததுபோல கேட்டாரே!
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே
ஜாதியை இறுக்கிப் பிடித்துப் போர்வையாகப் போர்த்திக் கொள்ளும் புல்லர்கள் சிந்திக்க வேண்டும்.
பிரமற்குக் கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டர்
வசிட்டருக்குச் சண்டாளி வயிற்றில் பிறந்த சத்திரியர்
சத்திரியருக்குப் புலைச்சி தோள்
சேர்ந்த பிறந்த  வியாசர்
என்று கபிலன் கேள்வி மேல் கேள்விகள் கேட்டானே - கிறுக்கர்களுக்கு ஏன் உறைக்கவில்லை?
காந்தியார் மகனுக்கும், ராஜாஜி மகளுக்கும் கல்யா ணம் நடந்தால் அது  பிரபலம்! இந்திராகாந்திக்கும் - ஃபெரோஸ் காந்திக்கும் கல்யாணம் நடந்தால் அது கொண்டாட்டம்!
ஒரு தாழ்த்தப்பட்டவரும், ஒரு பிற்படுத்தப்பட்டவரும் அன்பு வயப்பட்டுக் காதலில் கட்டுண்டு  கடிமணம் புரிந்து கொண்டால் களேபரமா? கொலையா? இது என்ன கொடுமை! இரட்டை அளவுகோல்!
ஓசூரையடுத்த வெங்கடேஷ்புரத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தது குற்றமா?
அவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் காதல் செய்தது குற்றம் என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? மனித மூளையில் ஆரியம் முட்டை யிட்டுப் பொரித்த ஜாதி என்னும் கொடிய பாம்பு கக்கிய விஷம்தானே அந்த ஜாதி. அதற்கென்று அடையாளம் என்ன இருக்கிறது?
தந்தைபெரியார் கேட்டாரே - "நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததன் பயன் ஜாதியில்லை; நமக்குரிய இழிவு ஜாதிதானே! இதைச் சிந்திக்க வேண்டாமா?" என்று சிந்தனைத் தளத்தில் ஒரு சூடு போட்டுக் கேட்டாரே பகுத்தறிவுப் பகலவன் (விடுதலை 8.7.1961).
"ஜாதி என்ற சொல்லே வடமொழி வார்த்தை. தமிழில் அதற்கென்று ஒரு வார்த்தையில்லை. பிறக்கும் போதே யாரும் ஜாதி அடையாளத்தோடு பிறப்பதில்லையே!" என்று தந்தை பெரியார் கூறிய கருத்துக்கு மறுப்புச் சொல்லி விட்டு ஜாதி வெறியர்கள் சாப்பாட்டில் கை வைக்கட்டும்.
ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் தான் தந்தை பெரியார் கொள்கையின் இரு விழிகள். இதற்கு முட்டுக்கட்டைபோடும் எதையும் எதிர்த்தார், எரித்தார்!
இராமனை எரிக்கவில்லையா? இராமாயணத்தைக் கொளுத்தவில்லையா? மனுதர்மம் தீக்கு இரையாக வில்லையா? ஏன் - ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி மூவா யிரத்துக்கும் மேற்பட்ட கருஞ்சட்டைக் கொழுந்துகள் மூன்றாண்டு காலம் வரை கடுந்தண்டனையை அனுபவித்தனரே!
சிறையில் பிறந்த குழந்தைக்குச் "சிறைப் பறவை" என்றும், "சிறை வாணி" என்றும் பெயர் சூட்டப்பட்ட வரலாறு இந்த இயக்கத்துக்கன்றி வேறு யாருக்கு உண்டு? கம்பீரமாகவே கருஞ்சட்டை கேட்கும் கேள்விக்கு இணையாக வேறு ஒன்றும் உண்டோ?
இந்த அடிப்படையில் தான் திராவிடர் கழகம் பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, புதுமனைப் புகுவிழாவாக இருந்தாலும் சரி, பெயர் சூட்டு விழாவாக இருந்தாலும் சரி ஜாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறோம். அதன் மூலத்தை முறியடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.
எங்கெங்கெல்லாம் ஜாதியின் திடீர் கொம்பு  முளைத்துத் தன் சேட்டைகளை ஆரம்பிக்கின்றனவோ, அந்த இடத்துக்கெல்லாம் ஆயிரங்கால் சிங்கமாகக் கர்ச்சித்து ஓடோடி செல்லுகிறோம். ஜாதி வெறித் தனத்துக்குச் சம்மட்டி அடி கொடுக்கிறோம்.
ஒரு கட்டத்தில் - ஏழு மாதங்களில் 26 ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது என்றால் அது சாதாரணமானதுதானா? (தனியே காண்க)
உயர் ஜாதி ஆதிக்கத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த ஆரிய பார்ப்பனர் ஆதிக்கத்தை வீழ்த்த தந்தை பெரியார் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை ஒருங்கிணைத்தார். அந்தப் பெரியார் பூமியில் தலித் அல்லாதார் ஒருங்கிணைப்பு என்று  முண்டா தட்டுவது எத்தகு மோசம்! மன்னிக்கவேப்பட முடியாத பேரழிவுச் சிந்தனை! இதற்கு அவர்கள் என்ன கழுவாய்த் தேடப் போகிறார்கள்?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றாரே திருவள்ளுவர், அதனைப் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்ப்போம்!
அதுவும் ஜாதித் தீ விசிறி விடப்படும் இடத்தில் கால் பதித்து சங்கநாதம் செய்வோம் என்ற திட்டத்தில் திராவிடர் கழகம் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதே டிசம்பர் ஒன்பதாம் தேதி 2012இல் தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு.
இப்பொழுது ஓசூர் பகுதியில் நடந்திருக்கும் ஜாதியக் கொடூரத்தால் கொலையுண்டது போலவே அன்று தருமபுரியில் இளவரசன் - திவ்யா இணையினருக்குப் பெருஞ் சோதனை! தாழ்த்தப்பட்டவர்களின் மூன்று கிராமங்கள் ஜாதீய  வன்கொடுமை காரணமாக சாம்பலாக்கப்பட்டது.
அந்தப் பகுதிக்கு உடனடியாக சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்து, 'கலங்காதீர்கள் - ஜாதி நோய்க்குத் தீ மூட்டுவோம்?' என்று துணிவைக் கொடுத்து தருமபுரியிலே மாநாட்டையும் நடத்திக் காட்டினார் தமிழர் தலைவர்.
அதன் விளைவு வீண் போகவில்லை - தருமபுரி மாவட்டத்தில் ஓர் இணக்கமான சூழல் உருவாயிற்று. ஜாதியைக் காட்டி வாக்கு சேர்த்து வெற்றி பெற முடியாத ஒரு  சூழல் அங்கு மலர்ந்ததே!
ஓசூரில் திராவிடர் கழகத்தால் நேற்று அண்ணா சிலையருகே நடத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடும் வரலாற்றில் தன் வாகைக் கொடியைப் பறக்கவிடும்.
கொலையுண்ட நந்தீசின் பெற்றோர்கள் மாநாட்டு மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து சால்வை போர்த்தி தைரியத்தை ஊட்டினார் தமிழர் தலைவர்.
இடிந்து விழுந்த அவர்களின் மன நிலை தூக்கி நிறுத்தப்பட்டது. "நீங்கள் இனிமேல் தனி மனிதர்கள் இல்லை. உங்களுக்குப் பலமாக நாங்கள் இருக்கிறோம். இந்த மேடையில் வீற்றிருக்கும் இயக்கம் - கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தோள் கொடுப்பார்கள், துவண்டு விடாதீர்கள்" என்று பலத்த கர ஒலிக்கிடையே தமிழர் தலைவர் உரைத்தபோது கண் கலங்காதவர் யாருமில்லை.


நந்தீஷ் - சுவாதி நினைவரங்கில் திராவிடர் கழகத்தின் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நேற்று பிற்பகல் 6 மணி அளவில் தொடங்கப்பட்டது.
விடியல் கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி தூள் கிளப்பியது. 'பறையர்கள்' என்று சொல்லித்தானே கொலையின் எல்லைவரை சென்றீர்கள் - இதோ பாருங்கள் அந்தப் பறையின் ஜாதி ஒழிப்பு இடி முழுக்கத்தை என்று விடியல் கலைக் குழுவினர் கஜா புயலாக அடித்து நொறுக்கினார்கள். ஜாதி வெறியர்கள் காது கிழியட்டும் என்று அதன் ஒவ்வொரு அடியும் சிலாகித்தது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமை யில் நடைபெற்ற ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டின் வரவேற்புரையை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெ. மதிமணியன் நிகழ்த்தினார். இத்தகு மாநாட்டை ஓசூரில் நடத்த வாய்ப்பளித்த கழகத் தலைவருக்குத் தன் நன்றியினை அவர் தெரிவித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநாட்டுத் தலைவரை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் சு. வனவேந்தன் முன்மொழிய, மாவட்ட இணைச் செயலாளர் அ.செ. செல்வம் வழிமொழிந்தார் கிருட்டினகிரி மாவட்ட மாணவர் கழகத் தலைவரும், சட்டக் கல்லூரி மாணவி யுமான கா.வெற்றி கொள்கை முழக்கங்களுக்கிடையே திராவிடர் கழகக் கொடியை உயர்த்தினார்.
பெரியார் பிஞ்சு நன்மதி மழலைச் சொற்களால் தட்டுத் தடுமாற்றமில்லாமல் பேசியதைப் பொது மக்கள் கை தட்டி வரவேற்றனர்.


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்  தொடக்கவுரையாற்றினார்.
* சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?
சுதந்திர நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று  தந்தை பெரியார் கூறினார் - தீர்மானமும் நிறைவேற்றப் பட்டதுண்டு.
மத்திய அரசு அதற்கான சட்டத்தை உருவாக்காததால்  1957 நவம்பர் 26 அன்று ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதியை கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். 3000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்னை பெற்றும் இதுவரை அதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரவில்லை என்று குற்றஞ் சாட்டினார்!
ஓசூர் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே. கோபிநாத்



தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழி களில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.
இவ்வளவுத் தலைவர்களும் நம் ஊருக்கு வந்து கருத்துக்களை தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
***

நான்கு வருணங்களை மனுதர்மம் கற்பித்தது. அதில்  சூத்திரர் நாலாஞ் ஜாதி ஆக்கப்பட்டு குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று ஆக்கப்பட்டதால் சூத்திரர் களாகிய நாம் முன்னேற்றம் அடைய முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
தோழர் மு. வீரபாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தனது உரையில்,
தந்தை பெரியார் தம் கொள்கையில் சமரசமில்லாமல் பாடுபட்டவர். அவர் வழியில் சமரசம் இன்றி சிறப்பாகப் பணியாற்றுபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
***

பெரியார் ஒற்றை மனிதரல்ல; ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாது பாடுபட்டவர். சாதாரண மக்கள் மத்தியில் அவர்கள் மொழியில் பேசி வெற்றி பெற்றவர்.


ஓசூர் மாநாட்டில்  பெருந்திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் (30.12.2018)


உலகப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள், படித்த பெரு மக்கள் பேசுவார்கள். ஆனால் உலகப் பல்கலைக் கழகம் எல்லாம் பள்ளி செல்லாத தந்தை பெரியாரைப் பற்றிப் பேசுகிறது.
***

ஜாதி ஒழிப்பு இயக்கத்தை கவுதமப் புத்தர் தொடங் கினார். தொடச்சியாக கபிலர் முதலானோர் ஜாதியைச் சாடியதுண்டு. அக்பர் அதற்காகப் பாடுபட்டார்.
காந்தியார் வருணா சிரமத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டே தீண்டாமை ஒழிப்புக்காகப் பாடுபட்டார்; அதில் தோல்விதான் கண்டார். தந்தை பெரியார் அதில் மாறுபட்டார். ஜாதிக்கு மூல காரணங்களை எதிர்த்தார். கடவுள் மதங்களை அடித்து நொறுக்கினார்.
***

கொள்கையில் வீரியமாக இருந்த தந்தை பெரியார் தனிப்பட்ட முறையில் யாரையும் வெறுக்கவில்லை.
***

கல்வி வளர்ந்தால், விஞ்ஞானம் வளர்ந்தால் ஜாதி ஒழிந்து விடும் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால் ஒழியவில்லை.
டாக்டர் பட்டம் பெற்றவர்களே ஜாதி சங்கத்துக்குத் தலைமை தாங்குகிறார்கள்.
பெரியார் - அம்பேத்கர் - மார்க்ஸ் கொள்கை யுடையோர் இணைந்து ஜாதி ஒழிப்புச் சுடர் ஏந்துவோம்!
***

இங்கே ஒரு சிறுமி பேசினார் இதுபோல குழந்தைகள் கூட இயக்கப்படுத்துவது திராவிடர் கழகத்தில் மட்டுமே உண்டு என்றார் தோழர் மு. வீரபாண்டியன்.

தோழர் பி. சம்பத்


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பி. சம்பத்:
இந்தக் கேடு கெட்ட ஜாதி என்பது இந்தியாவைத் தவிர, இந்து மதத்தைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கிடையாது.
***

ஜாதி என்பது இந்தியாவுக்கே உரிய தனி சிறப்பாம், அதனை யாரும் ஒழிக்க முடியாதாம். இங்கே திராவிடர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இணைந்து நிற்கிறோம். ஜாதியை ஒழிக்காமல் ஓய மாட்டோம். முன்பைவிட இப்பொழுது எங்களிடம் ஒற்றுமை அதிகரித்துள்ளது - வலிமை பெருகி வருகிறது.
***

ஜாதி என்பது ஆண்டவன் படைப்பாம் - தாழ்த்தப்பட்டோரை ஆண்டவன் படைக்கவில்லை என்றால் அவர்கள்தான் முறையாக பெற்றோர்களுக்குப் பிறந்தார்கள் என்று அர்த்தம்.
***
ஜாதிஒழிப்பு முயற்சி நீண்டகாலமாக நடைபெற்று தான் வருகிறது. இடதுசாரிகளின் பங்கு முக்கியமானது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி ஒழிப்புப்பற்றிய எங்கள் அறிக்கை தெளிவானது.
ஜாதிக்கும், பொருளாதாரத்துக்கும் தொடர்பு உண்டு. தாழ்த்தப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் விவசாயக் கூலிகள் - ஒரு துண்டு நிலம் அவர்களுக்குச் சொந்தம் கிடையாது.
பிற்படுத்தப்பட்டவர்களுள் 70 விழுக்காட்டினர் விவசாயக் கூலிகள் - ஜாதியும் - பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ளன.
***

காலம் மாறவில்லை என்று கூற முடியாது - மாறிக் கொண்டுதான் வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது என்றார்கள் - நடப்பேன் என்றான்.  செருப்பு அணியக் கூடாது என்றனர் - அணிவேன் என்றான். மாற்றம் வந்திருக்கின்றதா இல்லையா - இவ்வகையில் கம்யூனிஸ்டுத் தோழர் சீனிவாசராவ் பணி மகத்தானது.
***

குழந்தைத் திருமணத்தை பார்ப்பனர்கள் ஏன் வற்புறுத்துகிறார்கள் தெரியுமா? சிறு வயதில் திருமணம் நடத்துவதால் அங்கு ஜாதி கலப்புக்கு இடமில்லை, அதனால்தான் அந்தத் தந்திரம்.
***

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதத்தை முன்னிறுத்தும் சக்திகளைத் தூக்கி எறிவோம் என்று கூறினார் தோழர் பி. சம்பத்.
***

ஈரோடு அ. கணேசமூர்த்தி
மதிமுக பொருளாளரும், மேனாள் மக்களவை உறுப்பினருமான அ. கணேசமூர்த்தி:
தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டம் மகத்தானது. காந்தியாருக்கே உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன் 1925ஆம் ஆண்டுக்கு முன் காந்தியார் சென்னையில் சீனிவாசய் யங்கார் வீட்டுக்குச் செல்லும் பொழுதெல்லாம் திண் ணையில் உட்கார வைக்கப்பட்டார்.
அதே காந்தியார் 1925ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனிவாசய்யங்காரின் வீட்டுக்குள்ளும் செல்லும் அளவுக்கு காந்தியாருக்கு உரிமை கிடைத்தது என்றால்  இந்தக் கால கட்டம் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி பிரச்சாரம் செய்த கால கட்டம். அந்த வகையில் தந்தை பெரியார் தொண்டின் தாக்கம் காந்தியார் வரை சென்றிருக்கிறது.
***

இப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கோயில் திருவிழாக்களைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர் ஏதோ அந்த விழாக்களை அவர்களே நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


***

கிராமக் கோயில்களில் நமது இனத்தைச் சேர்ந்த பூசாரிகள் - பண்டாரத்தார் எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். சில நாள்களுக்குமுன் என் உறவினர் வீட்டு நிகழ்ச்சி  ஒன்றுக்குப் போனேன்.
அங்கிருந்த கோயில் ஒன்றில் பூசாரி சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை விசாரித்தபோது ஓர் உண்மை தெரிந்தது. அந்தக் குல தெய்வக் கோயிலின் உரிமையாளர்கள் சமஸ்கிருதத்தில்தான் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். தங்களுக்கு சமஸ்கிருதம் உண்மையிலேயே தெரியாது என்றும் அந்தப் பூசாரி கூறினார். அப்பொழுது நான் அவரிடம் கூறினேன். சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தால் கொஞ்ச நாள்கள் கழித்து சமஸ்கிருதத்தை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று கூறி உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த இடத்தை எல்லாம் பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டு விடுவார்கள் என்று எச்சரித்தேன்.
***

என்னைப் பொருத்த வரையில் எங்கு சென்றாலும் நான் இந்து அல்ல என்று வெளிப்படையாகச் சொல்லக் கூடியவன். வருணாசிரமத்தை ஏற்காத நான் எப்படி இந்து என்று என்னைச் சொல்லிக் கொள்ள முடியும்? என்று நியாயமான வினாவை எழுப்பினார் மதிமுக பொருளாளர்.

ஆ. இராசா



திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
ஒரு கால கட்டத்தில் ஜாதி சங்கங்கள் தங்கள் தங்கள் ஜாதிக்குக் கல்வி வாய்ப்பு வேண்டும் என்பதற்காக ஏற்பட்டன. ஆனால் இன்றோ ஜாதியை சொல்லியே அரசியல் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஜாதி ஒரு முள் வேலியாக இருந்தால் வெட்டி எறிந்து விடலாம். ஆனால் அந்த ஜாதி  என்பது மூளையில் அல்லவா இருக்கிறது என்றார் டாக்டர் அம்பேத்கர்.
ஜாதியை அவ்வளவு எளிதாக ஒழித்து விட முடியாது. ஜாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தையே எரித்த ஒரே தலைவர் தந்தைபெரியார்தான். 3000 பேர் சிறைபட்டனர். சிறையிலே மாண்டவர்களும் உண்டு. அங்கேயே புதைக்கப்பட்டனர். மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி ஆகிய  இரு தோழர்களின் உடல்களைப் போராடி - புதைக்கப்பட்ட பிணத்தை வெளியே எடுக்கச் செய்து திருச்சியிலே மிகப் பெரிய ஊர்வலத்தை  நடத்தி அவர்களை அடக்கம் செய்தவர் அன்னை மணியம்மையார் (பலத்த கரஒலி).
இவ்வளவுப் பெரிய போராட்டத்தை நடத்திய பிறகும் இன்னும் சட்டத்தில் ஜாதி இருக்கிறது.
தந்தை பெரியார் பிறப்பால் பெரிய ஜாதி. ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். பெரியார் பெரும் செல்வந்தார். ஆனால் அவர் ஏழை மக்களுக்காகப் பரிந்து பேசினார். பெரியார் ஆணாகப் பிறந்து பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டார் என்று கூறிய மானமிகு ஆ. இராசா அவர்கள் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முக்கியமாகக் குறிப்பிட்டார்.
எல்லா ஜாதியினரும் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். பறையர்கள் என்று சொல்லப் படுபவர்கள் யார்? யார்? பிராமணர்கள்தான் உயர்ந்த வர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் தான் பறையர்களாக ஆக்கப்பட்டனர்.
வெறும் கல்வி உத்தியோகங்களால் மட்டும் ஜாதி ஒழிந்து விடாது - சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பதெல்லாம் சட்ட ரீதியாக இருக்க வேண்டும். இதற்கு எதிரானவையை சட்ட ரீதியாக அப்புறப்படுத்த வேண்டும்.
நமது நாட்டில் Division of Labour - தொழிலின் அடிப்படையில் பிரிவுகள் இல்லை. மாறாக Division of Labourers  தொழிலாளர்கள் அடிப்படையில் பேதம் இருக்கிறது என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தையும் எடுத்து வைத்தார் மானமிகு ஆ. இராசா அவர்கள்.
திராவிடர் கழகம் நடத்தும் இந்த மாநாடு மிக முக்கியமானது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த அடிப்படைப் பணியைத் தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் அவர்கள் உரை எரிமலையாக வெடித்தது.

2012இல் இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தை மய்யப்படுத்தி குறிப்பிட்ட நாளுக்குள் (தேதியையும் நிர்ணயித்து) பெண்ணை ஒப்படைக்காவிட்டால் விபரீதம் என்று அறிவித்து தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வாழ்ந்த மூன்று கிராமங்களைக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.
அந்தக் கால கட்டத்திலே தருமபுரியிலே ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். திருமாவளவன் தான் இதற்கெல்லாம் காரணம் என்று என்மீது பழி சுமத்திய அந்தக் கால கட்டத்திலே தருமபுரி நகரிலே தீண்டாமை - ஜாதி ஒழிப்பு  மாநாட்டை திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து அதில் என்னையும் பங்கேற்கச் செய்தவர் நமது தமிழர் தலைவர் தான். தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ அதையே செய்து வருபவர் நமது ஆசிரியர் அவர்கள்.
***

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் முக்கியமானவை. ஒவ்வொரு தீர்மானம் குறித்தும் மணிக்கணக்கில் பேசலாம் - அவ்வளவு சிறப்பானவை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப் படுகிறது என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிகச் சிறப்பானது. அதற்காகப் பலத்த கரஒலி எழுப்பி ஆதரிக்கக் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுச்சித் தமிழர் சொன்ன போது  கரஒலி அடங்க வெகு நேரமாயிற்று.
அதேபோல ஜாதி கலவரங்களை முன்கூட்டியே அறிய, கண்காணிக்க காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் 30 வருடமாக நாங்களும் இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறோம்.
சிலை திருட்டைக் கண்டுபிடிக்கக் காவல்துறையில் தனிப் பிரிவு இருக்கிறது. நக்சல் பாரிகளைக் கண்காணிக்க தனிப் பிரிவு இருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற வர்களைக் கண்காணிக்கவும் தனிப் பிரிவு உள்ளது. அதே போல முக்கியமான இந்தஜாதி மோதல்களைத் தடுக்க - கண்காணிக்க  ஏன் தனிப் பிரிவை ஏற்படுத்தக் கூடாது? இந்தத் தீர்மானத்தையும் முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று திருமா அவர்கள் கேட்டுக் கொண்டபோது மீண்டும் பலத்த கைதட்டல்! கைதட்டல்!!
***

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் மானமிகு ஆ. இராசா அவர்கள் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரம் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே யாருக்கும் உதிக்காத இந்தத் திட்டம் கலைஞர் அவர்களின் மூளையில் மட்டும் உதித்தது என்றால், அதற்குக் காரணம் கலைஞர் தந்தை பெரியார் சீடர் (பலத்த கரஒலி).
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித மதச் சின்னங்கள், வழிபாட்டுச் சின்னங்கள் இருக்கக் கூடாது என்று தெளிவாக ஆணையிருந்தும், பல இடங்களில், மதவழிபாட்டுக்கு வழி செய்து இருப்பது எப்படி? இதுகுறித்து இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை மாநில அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுச்சித் தமிழர்.
***

தலித்துகளைப் பற்றி இந்த நாட்டில் யார் கவலைப் பட்டார்கள்? அண்ணன் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதி பாபுலே, கலைஞர்தானே கவலைப்பட்டார்கள். தமிழர் தலைவர் ஆசிரியருக்குத்தானே அக்கறை இருக்கிறது.
***

தந்தை பெரியார் அவர்களால், அவர்கண்ட இயக்கத் தால் பிறந்ததுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. திராவிடர் கழகம் வேறு அல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேறல்ல. காலத்தில்தான் இடைவெளி!
***

எட்டு மாதங்களில் திராவிடர் கழகம் நடத்திய 26 ஜாதி ஒழிப்பு மாநாடுகள்
தந்தை பெரியார் அவர்களின் அடிப்படை இலட்சியமான ஜாதிகளற்ற சமுதாயத்தை (Casteless Society) உருவாக்க அயராது பாடுபடும் திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்தியது. இளைஞரணியினரின் வீதி நாடகத்தோடு தொடங்கிய ஜாதி ஒழிப்பு மாநாடுகள் சரியாக இரவு 10 மணிக்கு கழகப்பொதுச் செயலாளர் அவர்களின் எழுச்சியுரைக்குப் பின்னர் நிறைவு பெற்றன.
மாநாட்டு மேடையில் கழக இளைஞர்கள் பலருக்கு ஜாதி மறுப்பு மணங்களை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.
1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களின் ஆணை ஏற்று ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தி சிறையேகிய வீரர்கட்கும் - வீராங்கனைகளுக்கும் மாநாட்டு மேடையில் "ஜாதி ஒழிப்பு வீரர்" என்ற சான்றினையும் நினைவுப் பரிசையும் அளித்து சிறப்பு செய்தார்கள்.
அவ்வாறு நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாடுகளின் பட்டியல் இதோ
1) திருச்சி மாவட்டம் - லால்குடி - 25.1.1995
2) பெரியார் மாவட்டம் - சத்தியமங்கலம் - 3.2.95
3) சேலம் மாவட்டம் - மேச்சேரி - 4.2.95
4) தருமபுரி மாவட்டம் - கல்லாவி - 5.2.95
5) கட்டபொம்மன் மாவட்டம் - வீரவநல்லூர் - 11.2.95
6) காமராசர் மாவட்டம் - அருப்புக்கோட்டை - 12.2.95
7) விழுப்புரம் ராமசாமிப்படையாச்சி - விழுப்புரம் - 18.2.95
8) தஞ்சை மாவட்டம் - மன்னார்குடி - 20.2.95
9) ராமநாதபுரம் மாவட்டம் - ராமேசுவரம் - 25.2.95
10) பசும்பொன் மாவட்டம் - திருப்பத்தூர் - 26.2.95
11) வள்ளலார் மாவட்டம் - கடலூர் - 24.3.95
12) தென் செங்கை எம்.ஜி.ஆர். மாவட்டம் - உத்தரமேரூர் - 1.4.95
13) வட செங்கை எம்.ஜி.ஆர். மாவட்டம் - புழல் - 2.4.95
14) தாம்பரம் மாவட்டம் - இந்திரா நகர் (சென்னை) - 3.4.95
15) காயிதே மில்லத் மாவட்டம் - நன்னிலம் - 9.4.95
16) அரியலூர் மாவட்டம் - செந்துறை - 14.4.95
17) திருச்சி (மேற்கு) மாவட்டம் - குளித்தலை - 15.4.95
18) நீலமலை மாவட்டம் - உதகை - 5.5.95
19) தஞ்சை மாவட்டம் - ஊரணிபுரம் - 10.5.95
20) புதுகை மாவட்டம் - கந்தர்வகோட்டை - 11.5.95
21) அம்பேத்கர் மாவட்டம் - குடியேற்றம் - 21.5.95
22) வி.இரா.ப. மாவட்டம் - சங்கராபுரம் - 22.5.95
23) அண்ணா மாவட்டம் - சின்னாளப்பட்டி - 2.6.95
24) கோவை மாவட்டம் - பொள்ளாச்சி - 3.6.95
25) சம்புவராயர் மாவட்டம் - செய்யாறு - 15.7.95
26) மதுரை (மேற்கு) மாவட்டம் - கே.கே.பட்டி - 28.8.95
தி.க.வும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள், விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்த்து  மூன்று குழல் துப்பாக்கி என்று சொன்னவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தான் (பலத்த கரஒலி). இடது சாரிகளையும் நான்காவது குழலாக இணைத்து ஜாதியை, அதன் மூல வேரான சனாதனத்தை ஒழிப்போம்!
"தி.க. வேறல்ல -

விடுதலைச் சிறுத்தைகள் வேறு அல்ல!"   -  எழுச்சித் தமிழர்
நந்தீஷ் - சுவாதி கொல்லப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் எது?
சுவாதியின் தந்தை தான் பெற்ற மகளையே கொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்? மன நோயாளியாக அவர் ஆக்கப்பட்டதற்குக் காரணம் சனாதனம்தானே! அந்த சனாதன தர்மம் இருக்கும் வரை - மூளையை இயக்கும் வரை இந்தப் படு கொலைகள் ஜாதிவெறித்தனங்கள் தாண்டவமாடிக் கொண்டுதானே இருக்கும். சனாதன தருமம் என்றாலும், இந்துத்துவா என்றாலும், ஆரியம் என்றாலும், ஆன்மிகம் என்று பெயர் சூட்டினாலும் எல்லாம் ஒன்றுதான்.
சனாதனம் கடவுளின் பெயரால் நிலை நாட்டப்படு கிறது. அதனால் தான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்ற கருத்தை முன்னெடுத்தார் தந்தை பெரியார். இதனை தந்தை பெரியார் எடுத்த அளவுக்கு வேறு யாரும் எடுக்கவில்லை.
***

சமூக சமத்துவத்துக்கும், உரிமைக்கும், ஏற்றத் தாழ்வு களுக்கும் காரணமாக இருக்கக் கூடிய சனாதனத்தை அழிப்பதுதான் நமது முதற்கொள்கை. ஜனவரி 23ஆம் தேதி திருச்சியிலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன  எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். நமது தமிழர் தலைவரும் பங்கேற்பார் (பலத்த கரஒலி).
***

தமிழ்நாட்டில் இருப்பது போல வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இடதுசாரிகள் கூட இணைந்து செயலாற்றவில்லை. தமிழ்நாட்டில் இணைந்து செயலாற்றுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார்தான் - தமிழர்தலைவர் ஆசிரியர்தான்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராட்டிர மாநிலத்தில்கூட இந்த நிலை இல்லை. அம்பேத்கர் பெயரைச் சொல்லிக் கொண்டே சனாதன பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
***

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் பெரியார் உயிரோட்டமாக இருக்கிறார் என்றால் - அதற்குக் காரணம் நமது ஆசிரியர் அவர்கள்தான்.ஆசிரியர் அவர்கள் தரும் ஊக்கமும், ஆதரவும் நமக்குப் பேருதவியாக இருக்கிறது.
புத்தர் - அம்பேத்கர் - பெரியார் - ஆசிரியர் என்ற தொடர்ச்சிதான் முக்கியமானது. எல்லாவிதத் தடைகளையும், சனாதனத்தையும் கடுமையாக எதிர்க் கும் பேராசிரியராக, ஜாதி ஒழிப்புப் போராளியாக நம்மிடை வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது ஆசிரியர் என்று ஒவ்வொரு சொல்லும் தீப்பிழம்பாகத் தெறித்தது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் உரையில்!
நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் ஊமை. செயராமன் தொகுத்து வழங்கினார். நிறைவாக
கா.மாணிக்கம் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 31.12.18

சனி, 29 டிசம்பர், 2018

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!"

"பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்கே நாம் ஒருங்கிணைந்துள்ளோம். இது வெறும் கூடிக் கலைகிற கூட்டமல்ல. நமக்கான ஆட்சியாளர்களைக் கோட்டைக்கு அனுப்பவும் தயாரான கூட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் யார் யாரெல்லாம் கூட்டணி சேர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இனத் துரோகிகள்" என்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவேசமாகக் கூறினார்.
திருச்சியில் கருஞ்சட்டை கர்ஜனை
பெரியார் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று திருச்சியில், தமிழின உரிமை மீட்புப் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத் தில் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத் தினர். பல்லாயிரக்கணக்கில் தொண் டர்கள் குவிந்ததால், போலீஸார் பதற் றத்துடன் காணப்பட்டனர். திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், அரங்க. குணசேகரன் ஆகியோரின் ஒருங்கி ணைப்பில், ஆனைமுத்து, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், அதியமான் ஆகியோர் சகிதமாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேரணியைத் தொடங்கிவைத்தார். சிலம்பம், பறையாட்டம், மேளதாளம் எனக் களைக்கட்டியது பேரணி.
கருப்பு எங்கள் நிறம் என்ற கோவன் குழுவினர் பாடலுடன், மாநாடு ஆரம்ப மானது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், ``தந்தை பெரியாரின் வழியில் தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் திரண்டுள்ளோம். இனி, தமிழகத்தில் மதவெறி, சாதிவெறி அரசியல் தலைதூக்கினால் பெரியார் படை அதைத் தடுத்து நிறுத்தும். எட்டுவழிச் சாலை, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நமது சொத்துகளைப் பறித்து கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்ப்ப தற்கு ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதற்கு எதிராக ஒன்றிணைவோம். இந்தக் கருஞ்சட்டைப் பேரணியின் தொடர்ச்சியாக நீலச்சட்டை, சிவப்புச் சட்டை பேரணிகளையும் நடத்த வேண்டும்" என்றார்.
எப்படி இணைந்தார்கள்?
2014-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள  பெரியாரிஸ்ட் டுகள் மீதும், பெரியார் இயக்கங்கள் மீதும் பிஜேபி, இந்து இயக்கங்கள் கடும் விமர்சனங்களை முன் வைத் தன. தமிழக அரசின் துணையுடன் பலர் கைது செய்யப்பட்டனர். எனவே, பி.ஜே.பி-க்கு எதிராக பெரியார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஒற்றுமையை  வலியு றுத்த வேண்டும் என்ற ஆர்வம் பெரியார் அமைப்புகள் மத்தியில் எழுந்தது அதற்கான முயற்சிகள் கடந்த செப்டம்பரில் தொடங்கின. அந்த முயற்சிதான் திருச்சியில் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள்.
- இ. லோகேஷ்வர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் சுப.வீரபாண்டியன், ``பெரியார் என்பது ஒரு நூற்றாண்டின் சொல். இங்கு இவ்வளவு இயக்கங்கள் உள்ளன. இவை, பெரியார் பெயரிலான கிளைகள் தானே தவிர, பிளவுகள் அல்ல. இந்த மாநாட்டின் நோக்கம் மதவெறி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மட்டுமல்ல. சாதி ஆணவப் படுகொலைகளையும் இந்த மாநாடு எதிர்க்கிறது. நமது எச் சரிக்கை மதவெறியர்களுக்கு மட்டு மல்ல, சாதி வெறியர்களுக்கும் எதி ரானது. தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்ற கனவு கருகிப்போயிருக்கிறது. கரிசல் காட்டில் ஒருபோதும் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலரவே மலராது" என்றார் ஆவேசமாக!
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், "தமிழகத்தில்தான் சுய மரியாதைத் திருமணம் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திரும ணங்கள் மற்ற மாநிலங்களில் இல்லை. சாதி ஒழிப்பும், பெண்ணிய விடு தலையும் பெரியாரியக் கோட்பாடுகள். சாதி ஒழிப்பை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருட்டிணன், "பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கு எதிராக மஞ்சள் சட்டை வெற்றி பெற் றதைப் போல, இந்தக் கருப்புசட்டை அணியும் விளங்கும். நமது அடுத்த நிகழ்ச்சியில், பேரறிவாளனையும், நளினியையும் பங்கேற்கச் செய்வோம். நாம் சிறை நிரப்பும் போராட்டம் நடத் தினால், அவர்கள் வெளியே வரு வார்கள். அடுத்த திட்டம் இதுதான்" என்றார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், "பெரியாரை கொண்டாட காரணம், அவரது தொலைநோக்குப் பார்வைதான். இங்கு பல்லாயிரக்கணக் கான இளைஞர்களைப் பார்க்க முடி கிறது. இவர்களுக்கும் ஏன் பெரியார் பிடிக்கிறது என்றால், பெரியார் வீதியில் பேசியதை நீதிமன்றத்தில் மறுத்த தில்லை. தான் எழுதியதை அட்மின் எழுதினார் என்று சொல்லவில்லை. பெரியார், ஒரு ஹீரோவாகவே வாழ்ந் தார்" என்று சந்தடிசாக்கில் ஹெச்.ராஜாவைச் சீண்டினார்.
- சி.ய.ஆனந்தகுமார்,  இரா.அமுதினியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
நன்றி: 'ஜூனியர் விகடன்' 30.12.2018
- விடுதலை நாளேடு, 29.12.18

வெள்ளி, 28 டிசம்பர், 2018

தந்தை பெரியார் 45ஆம் நினைவு நாள் சென்னையில் அமைதி ஊர்வலம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தோழர்களுடன்  நடந்து வந்தார்





அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மகளிர் மாணவர்கள் சார்பில் மரியாதை



பெரியார் சுயமரியாதை சுடரொளி நினைவிடத்தில் பெரியார் பெருந்தொண்டர்கள் மரியாதை

சென்னை, டிச.24 தந்தை பெரியாரின் 45ஆம் நினைவு நாளையொட்டி இன்று (24.12.2018) சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கங்கள் வானைப் பிளந்தன.
திமுக பொறுப்பாளர்கள் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுமான்கான், மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்களும் உடனிருந்தார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம் சென்னை அண்ணாசாலையில்  தொடங்கியது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்களுடன் ஊர்வலம் முழுவதுமாக நடந்தே வந்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அமைதி ஊர்வலத்தில்  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன்,  அமைப் புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள், இளைஞரணி பொறுப்பாளர்கள், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் கலந்துகொண்டனர்.
மே தினப்பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை,  இர்வின் பாலம், பெரியார் ஈ.வெரா. நெடுஞ்சாலை வழியே  பெரியார் திடலை அமைதி ஊர்வலம் அடைந்தது.
பெரியார் ஈ.வெரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார்  சிலைக்கு திராவிடர் கழக மகளிர் அணிப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் மாலை அணி வித்தார்கள்.
பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தைபெரியார் நினைவிடத்தில்  கழகப் பொறுப் பாளர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  உறுதிமொழிகூற அவரைத் தொடர்ந்து, தோழர்கள் அனைவரும் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றுக்கொண்டார்கள்.
உறுதிமொழி

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை,

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

கடவுள் இல்லை, கடவுள் இல்லை,

கடவுள் இல்லவே இல்லை

என்று ஜாதிக்கு, தீண்டாமைக்கு ஆதாரமான கடவுள் மறுப்பை, மத மறுப்பை , சாஸ்திர, புராண, இதிகாச மறுப்பை, பெண்ணடிமை ஒழிப்பை உருவாக்கி  புதிய தோர் சமுதாயம் காண, சுயமரியாதை சூடுபோட்ட எங்கள் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது 45ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அன்னை மணியம்மையார் அவர்களது நூற்றாண்டு தொடங்குகின்ற காலக்கட்டம் நெருங்குகிற இன்று பெரியார் தொண்டர்களாகிய நாங்கள், பெரியார் பற்றா ளர்களாகிய நாங்கள், பகுத்தறிவாளர்களாகிய நாங்கள், திராவிடப்போராளிகளான நாங்கள் தந்தை பெரியார்   விட்டுச்சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத்தந்த பாதையில் எந்தவித சபலத்துக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்.
பெரியார் மண்ணை, பெரியார் மண்ணாகவே காப்ப தற்கு எங்கள் ரத்தத்தையும் சிந்த,உயிரையும் தியாகம் செய்ய தயார், தயார், தயார் என்ற சூளுரையை மேற் கொண்டு இனிவரும் நூற்றாண்டுகள், பெரியார் நூற் றாண்டுகள். பெரியார் காண விரும்பிய புத்துலக நூற் றாண்டு என்பதை நிலைநாட்ட  அயர்வின்றி உழைப் போம். சோர்வின்றி நடப்போம்.
எல்லா பாதைகளும் ஈரோட்டுப்பாதைக்கே!
எல்லாப் பாதைகளும் ஈரோட்டு பாதைகளுக்கே!!’’
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூற அவரைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றுக்கொண்டார்கள்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மோகனா அம்மையார், மகளிரணி மாநில செயலாளர் கலைச்செல்வி, க.பார்வதி, கு.தங்கமணி,  சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, சுமதி கணேசன், இறைவி, தங்க.தனலட்சுமி, பொன்னேரி செல்வி, பூவை செல்வி, த.மரகதமணி, வெண்ணிலா கதிரவன், இரா.வளர்மதி, பி.அஜந்தா, இ.ப.சீர்த்தி, தொண்டறம்  உள்ளிட்ட மகளிரணி பொறுப்பாளர்களும், பெரியார் பிஞ்சுகளும் மலர் வளையம் வைத்த மரியாதை செலுத்தினார்கள்.
சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலை வர் த.வீரசேகரன்,  பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக் கனி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் மயிலை நா.கிருஷ்ணன், கி.சத்திய நாராயணன், சேரன், கு.தென் னவன், தெ.மாறன், புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி, சைதைதென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் கா.அமுதரசன், இருதயராஜ், திராவிட தொழிலாளர் கழகம் சார்பில் பெ.செல்வராசு, நாகரத்தினம், க.தமிழினியன், திராவிடன் நிதி சார்பில் த.க.நடராசன், குடும்பவிளக்கு நிதி சார்பில் சி.அமர்சிங், தலைமை மேலாளர் வேணுகோபால், பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் மீனாம்பாள், பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் மேலாளர் குணசேகரன், மருத்துவர், செவிலியர், ஆய்வக தொழில் நுட்ப பணியாளர் உள்ளிட்டவர்கள்  தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
கழகப் பொறுப்பாளர்கள்

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டங் களிலிருந்து பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணியினர் பெருந்திரளாக பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அமைதி ஊர்வலத்தில் கழகக் கொடிகளுடனும், தந்தை பெரியார் பட பதாகை களை ஏந்தியும் தோழர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர் கழக மாநில   இணை செயலாளர் (மகளிர் பிரிவு) பா.மணியம்மை, சென்னை மண்டல   இளைஞரணி செயலாளர்  ஆ.இர.சிவசாமி, அமைப்பாளர் சோ.சுரேஷ், குடந்தை கணக்கு தணிக்கையாளர் சண் முகம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதி ராஜ், கல்லக்குறிச்சி மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், செயலாளர் கணேசன், தென்சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்ன ரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன்,   செயலாளர் இரா.இரமேஷ், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், திருவள்ளுவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகி மாறன், அம்பேத்கர் இயக்க நிர்வாகி திண்டிவனம் சிறீராமுலு, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், கவிஞர் மறைமலையான் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பலரும் கலந்து கொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தார்.
மதிமுக

மதிமுக சார்பில் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், ஜீவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்  பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் மு.வீர பாண் டியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ். மூர்த்தி,  ஏ.அய்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் மு.சம்பத், எஸ்.குப்பன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் உதயக்குமார் உள்ளிட்டோர் பெரியார் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார்கள்.
- விடுதலை நாளேடு, 24.12.18

திருச்சி கருஞ்சட்டை - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


* கோயில்களில் தமிழில் வழிபாடு


*ஊர்ப் பெயர்கள் தமிழில் மாற்றம்

* தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருக

* கையால் மலம் அள்ளும் முறைக்கு முடிவு கட்டுக!

*கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!

* 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்க!

ஜாதி, இன, அதிகார, ஆதிக்க, நிலையை முறியடிக்க தந்தை பெரியாரின் இறுதி உரையை மனதிற் கொள்வோம்!


திருச்சி கருஞ்சட்டை - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்




திருச்சி, டிச. 24- ஒற்றைப் பண்பாடு - ஒற்றை அடையாளம் எனும் ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பனீய சக்திகளின் திணிப்பை முறியடிப்போம் என்றும், ஜாதி - இன - அதிகார - ஆதிக்க நிலைகளை வீழ்த்திட தந்தை பெரியாரின் இறுதி உரையை மனதிற்கொண்டு செயல்படுவோம் என்பது உட்பட (இரங்கல் தீர்மானத்தையும் சேர்த்து) 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்கத்தின் சார்பில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட கருஞ்சட்டை மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வீரவணக்கத் தீர்மானங்கள்:


1) தாய்மொழி, இன, நாட்டுரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938-1965 மொழிப் போராட்டங் களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவ கங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக்களங்களில் இதுநாள்வரை உயிர்நீத்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட் டத்தில் உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும் பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

2) தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராகப் போராடி அம் மதவெறியர்களாலே படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அறிஞர் கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர்கள், வெகு மக்கள் என அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

3) தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தம் இன்னு யிர் ஈந்த எண்ணற்ற போராளியர்களுக்கும், ஈகம் செய்திருக் கிற தமிழீழ மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர்நீத்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல்ரகூப், முத்துக் குமார், செங்கொடி உள்ளிட்ட ஈகியர் அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

கொள்கைத் தீர்மானங்கள் :


4) ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் அடக் கப்பட்டுள்ள பல்வேறு மொழித்தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. இந் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசிய இன அடையாள உரிமையின்கீழ்த் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

5) மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர் களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆளுநர் என்கிற அதி கார வடிவம் இன்றும் தொடர்ந்து கொண்டு மொழித் தேசங் களான மாநிலங்களை அடக்கி ஆள்கிற நடைமுறையை இக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே ஆளுநர் என்போர் மாநிலங்களுக்குத் தேவையில்லை என இம் மாநாடு தீர்மானித்து அதை எதிர்க்கிறது.

6) தமிழ்நாட்டின் பண்பாட்டையும், வரலாற்றையும் முழு மையாய் அழித்துப் பார்ப்பனியப் பண்பாட்டை வரலாற்றைத் திணிக்கிற முயற்சியில் வன்முறைகளைத் தூண்டிப் பல படுகொலைகளையும் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் இயங்கத் தமிழக அரசு தடை செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

7) தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டுவதான தமிழக அரசின் அண்மை அறிவிப்பை இம்மாநாடு வரவேற்கிறது. அந்த அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்துவதோடு, எஞ்சியுள்ள எல்லா ஊர்ப் பெயர்களையும் முழுமையாகத் தமிழில் மாற்றிட வேண்டும் என்றும், தமிழ்ப் பெயரில்லாத இந்திய, தமிழக அரசுகளின் திட்டப் பெயர்கள், கோயில்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே அமைத்திட வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

8) தமிழ்நாட்டின் கீழடி உள்ளிட்ட பழஞ்சிறப்புகளைக் காக்கும் வகையில், தமிழகத்தொல்லியல் பொருள்களை, வரலாற்று இடங்களை மிகுந்த அக்கறையோடு தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பதோடு தமிழ்நாட்டில் இயங்கும் தொல்லியல் ஆய்வுத்துறை என்பது தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அதற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி மீட்க வேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9) தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் சாதி வெறியர்களை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அப்படியானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஆணவப் படு கொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அதற்கென அதுகுறித்த உயர்நீதி மன்ற தீர்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனிச் சிறப்புத் திட்டத்தின் வழி கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்திட வேண் டும் என்றும், அவர்கள் சாதி சமயமற்றவர்கள் என்று பதிந்து கொள்கிற வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் என் றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

10) தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் தமிழில் மட்டுமே வழிபாடு இருக்க வேண்டும் என்றும், பிற மொழியினரின் வேண்டுகைக்கு வேண்டுமானால் அவர்களுக்கென அவர்கள் மொழியில் வழிபாடு செய்து கொள்ள வழி அமைக்கலாம் என்றும் வலியுறுத்துவதோடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

11) அறிவியல் பெரிய அளவில் முன்னேறியிருக்கிற இக் காலத்தில் மலக்குழிக்குள் இறங்குவதும், கையால் மலம் அள்ளுவதுமான பணிகளில் மனிதர்களே ஈடுபடும் நிலைக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் கல்வி, வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீட்டு அடிப் படையில் நிறைவு செய்யப்படுவதில் அரசு முழுக் கவனம் செலுத்துவதோடு, தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்து கிறது.

12) பொதுப்பட ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrence List) இருக்கிற கல்வித் துறையை மாநிலங்களின் பட்டியலுக்கு உடனே கொண்டு வரவேண்டும் என்றும், அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற கல்விக்கூடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இந்திய அரசின், பிற பன்னாட்டு நிறு வனங்களின் கல்விக் கூடங்கள், தமிழ்நாட்டில் இயங்க முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. சித்தமருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வியும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் - என்பதோடு, கல்விக்கான எந்த வகை இந்தி யத் தேர்வுகளையும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும், தமிழ்நாட்டிலும் பிற அனைத்து மொழித் தேசங்களிலும் தடை செய்ய வேண்டும் என்றும், அவற்றோடு தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்துக் கல்விகளும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழிக்கல்வியாகவே இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை மொழிப்பாடமாக மட்டுமே பயிலலாம் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

13) தமிழ்நாட்டின் ஆற்று நீர்ப்பாசனப் பரப்புகளுக்குத் தடையாகிற வகையில் கருநாடகா, கேரளா, ஆந்திரா அரசு கள் மேகதாது அணை, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, பாலாற்றில் புதிய அணை என அணைகள் ஏதும் கட்டக் கூடாது என்றும், தமிழகப் பாசனப் பரப்புகளுக்கு இம்மி அளவும் தொல்லை வருகிற படியான அனைத்துச் செயல்பாடுகளையும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துத் தடுக்கவேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்து கிறது. மேலும் இந்திய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்ட முன் வரைவைத் தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. .

14) தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு, டாட்டா உள்ளிட்ட இந்தியப் பெருமுதலாளிகளின் தொழிற் சாலைகளைப் படிப்படியாக நிறுத்தி, அவற்றைத் தமிழக அரசே தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் நடத்திட முன் வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு நிலங்களை, சுற்றுச் சூழலை நாசப்படுத்தகிற மீத்தேன், அய்ட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் மற்றும் அணுமின் நிலையங்களைத் தமிழக அரசு அமைச்சரவை ஒப்புதலோடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிச் சட்ட மியற்றிக் கொள்கிற வகையில் முழுமையான முயற்சியில் தடுத்து நிறுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

15) சென்னை உயர்நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்றுவதோடு, தமிழ்நாட்டிற்கான உச்ச நீதிமன் றம் தமிழ்நாட்டிலேயே அமைந்திட வேண்டுமான வகையில் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உச்ச நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழியா கிறபடியான அமைப்பு முறையைத் தமிழக அரசும், மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் முன்னின்று போராடி மாற்றவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

16) தமிழ்நாட்டு வணிகர்களை நசுக்கும் வகையில் தமிழ் நாட்டிற்குள் நுழைந்திருக்கிற, நுழைய இருக்கிற வெளிநாட்டு, மற்றும் ரிலையன்சு போன்ற இந்தியப் பெரு முதலாளிகளின் வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்க வழிவிடக்கூடாது என இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது. அதேபோல் வணிகர் களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்து வரிகளையும் தமிழக அளவில் மறுத்திட வேண் டும் என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

17) தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தைத் தனியார் வயப்படுத்தி அதன் மூலம் இந்தியப் பெருமுதலாளிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் நடத்திட திட்டமிடுகின்றன. அதன்மூலம் இதுவரை அளிக்கப்பட்டு வரும் குடிசை வாழ் எளிய மக்களுக்கான இலவச மின்சாரமும் உழவர்களுக்கான கட்டணமில்லா (மானிய) மின்சாரமும் நிறுத்தப்படும் ஏற்பாடு உள்ளது. இப் போக்கை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அண்மையில் ஏற்பட்ட கஜா புயலுக்கும், ஏற்கெனவே ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களுக்கும் அடிப்படைத் தேவைக்கான இழப்பீட்டைக்கூட இந்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்கா மல் வஞ்சித்து வருவதை இம் மாநாடு கண்டிக்கிறது. தமிழ் நாட்டரசு கேட்டுக் கொண்ட வகையில் உடனடியாக 15 ஆயி ரம் கோடி உருவாவை இந்திய அரசு அளித்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது.

19) நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வழிப்பறிக் கொள் ளையர்கள் போல இந்திய அரசு, எடுபிடிகளையும், அடி யாட்களையும் வைத்துக் கொண்டு சுங்கச்சாவடிகள் அமைத்து வெகுமக்களிடம் வரிகள் பிடுங்கிக் கொண்டிருப்பதை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கெனவே வண்டிகள் வாங்கும்போதே சாலை வரிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் சாலை, சுங்க வரிகள் என வரிகள் பிடுங்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமாய் இம் மாநாடு வலி யுறுத்துகிறது.

20) வேளாண் தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வரும் சூழலில், வேளாண் இடுபொருள்களுக்கு விலைகளைக் குறைக்க வேண்டும் என்றும், விளைச்சல் பொருள்களுக்கு நியாயமான வகையில் விலை அளித்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துவதோடு, அரிசி, கரும்பு உள்ளிட்ட விளைச்சல் பொருள்களுக்கு இந்திய அரசு விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யாமல் மேலாண்மைக் குழுக்களே விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யும் படியாக இருக்க வேண்டும் என்றும் இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது.

21) தமிழ்நாட்டில் 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைப் பட்டுக் கிடக்கிற பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயாசு, சாந்தன், முருகன், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசின் ஒப்புதலோடு விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்த பின்பும், எந்த விடையும் சொல்லாமல் தமிழக ஆளுநர் அமைதியாயிருக்கும் நிலையைக் கைவிட்டுவிட்டு அவர்களை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. அவர்களைப் போலவே பல ஆண்டுகளாய்ச் சிறையில் அடைப்பட்டிருக்கிற இசுலாமிய சிறையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.

22) இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கு அனைத்துத் தேச அளவில் சுதந்திரமான உசாவல் (விசாரணை) தேவை என்பதை இம் மாநாடு வலி யுறுத்துவதோடு, தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

23) தமிழக வெகுமக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்துகிற வகையில் தமிழிய உணர்வு சார்ந்த சாதி, சமய மறுப்புணர்வைத் தெளிவு படுத்துகிற வகையிலான விழாக் களையும், நிகழ்வுகளையும், மூட நம்பிக்கை எதிர்ப்புப் பேரணிகளையும் தமிழகமெங்கும் பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பின் இயக்கங்கள் ஒருங்கிணைந்தோ தனித்தோ முன்னெடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

24) தமிழக மக்களுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியதையும், சாதி இழிவை ஒழிப்பதையும் தன் வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட பெரியார், சாதி ஒழிப்புக்காக ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றிய அம்பேத்கர் மற்றும் தமிழிய மக்களிடையே அற உணர்வுகளைப் பரப்பிய அறிஞர்களும் செயற்பாட்டாளர்களுமான திருவள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசப்பண்டிதர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்துவதோடு ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராய்ப் பெரியார் முன்னெடுத்து நடத்திய திருக்குறள் மாநாடுகளையும், சாதி ஒழிப்பு மாநாடுகளையும் இப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து தொடர்ந்து ஆண்டு தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்திட வேண்டுமென இம் மாநாடு அனைத்து அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறது.

25. பெரியார் தம் இறுதிச் சொற்பொழிவிலே குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டபடி, நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை முடிவில், நம் மீதான சாதி இழிவுகளையும், அரசியல் அதிகா ரத்தையும் செய்து வரும் அனைத்து அந்நிய ஆதிக்கர்களை யும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றிடும் வகையில் நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை நோக்கோடு திட்டமிட்ட நீண்ட காலப் பணித்திட்டத்தை இக் கூட்டமைப்பு மேற் கொள்ள வேண்டுமென இம் மாநாடு பெரியாரிய உணர்வு கொண்ட அனைத்து இயக்கங்களையும் கேட்டுக் கொள்கிறது.

- விடுதலை நாளேடு, 24.12.18

"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள கருஞ்சட்டையினர் ஒன்றாதல் கண்டே!"



பெரியார் சிலை மீது கை வைக்கலாம் என்று கருதிய ஆரிய சக்திகளே, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே - இங்கே பார் கருஞ்சட்டைக் கடலை - ஆர்த்தெழும் கடல் அலைகளாகப் - பொங்கி எழுந்த புயல் முகத்தைக் காட்டிய கருஞ்சட்டை பேரணியை - கருஞ்சட்டை மாநாட்டை என்று வரலாற்றுக் கல்வெட்டாய், காலத்தின் குரலாய் மண்ணையும், விண்ணையும் கிழித்து கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் கொட்டு முரசமாக கருஞ்சட்டை பேரணியாம் - தமிழின உரிமை மீட்பு மாநாடும் திருச்சியில் பயணித்தது.
கிட்டத்தட்ட 150 அமைப்புகள் இதில் இணைந்து பணியாற்றின. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு என்ற பெயரில் பேரணியும், மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான சுவரொட்டிகள் தந்தை பெரியாரின் உருவம் தாங்கி; திராவிடத் தமிழர்களே, தந்தை பெரியாரின் தத்துவச் செழிப்பு மாநாட்டுக்கும், பேரணிக்கும் வருக வருக என்று கட்டியம் கூறிடும் சுவர் எழுத்துகளுக்கும் பஞ்சமில்லை.
23.12.2018 ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்சி ஜே.டி. திரையரங்கம் அருகில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் என்னும் அலைகளாகப் போர்ப்பாட்டுப் பாடி அணிவகுத்து நின்றனர்.
கருஞ்சட்டைப் பேரணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களும், பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களும் தொடங்கி வைத்தனர்.
பிரிவுகளுக்கு இடம் அளிக்காமல் ஒன்று திரண்டு - கருஞ்சட்டை அமைப்புகள் இணைந்து நின்று கைகோக்கும் தந்தை பெரியாரின் கொள்கைப் பேரணி இது! இது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. கட்டுப்பாடு காத்து அணிவகுத்துக் கொள்கை முழக்க மிடுவீர் என்று கேட்டுக் கொண்டார்.
திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் தத்தம் இயக்கப் பதாகைகளைத் தாங்கி, இருபால் தோழர்களும் "பார் பெருத்ததால் படை சிறுத்ததோ - படை பெருத்ததால் பார் சிறுத்ததோ" என்று வியக்கும் வண்ணம் கோடையிடி முழக்கங்களிட்டுப் புறப்பட்ட கருஞ்சட்டைச் சேனை - பெரும்பாலும் வாலிபர்களின் அணிவகுப்பு என்றாலும் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்களும்கூட, பெரியார் பிஞ்சுகளும் கூட ஓரளவு இந்தக் காணரும் கருஞ்சட்டைப் பேரணி - மாநாட்டில் திரண்டு வந்தனர்.
குமரி முதல் திருத்தணி வரை தொண்டர்கள் வாகனங்களிலும், பேருந்துகளிலும், இரயில்களிலும் வந்து குவிந்து கொண்டே இருந்தனர்.
எப்படிக் கட்டுப்படுத்தி இந்தக் கருங்கடலைக் கொண்டு சேர்ப்பது என்ற கவலை ஒருங்கிணைப்பா ளர்களுக்கு இருந்தது என்றாலும், அந்தக் கவலைக்கே இடமில்லாமல் 'இது தந்தை பெரியாரின் சேனை! கட்டுப்பாட்டுக்கும், கடமை உணர்வுக்கும் கட்டியம் கூறும் இலட்சியப் பாசறை' என்பதால் கரையை உடைக்காத கட்டுப்பாட்டுக் கடலாக அணிவகுத்துப் புறப்பட்டது. அச்சிட்டுக் கொடுக்கப்பட்ட முழக்கங்களை மட்டும் முழங்கி வந்தனர். திருச்சி நகரமே திரண்டு வந்தது போல சாலையின் இருமருங்கிலும் பொது மக்கள் திரண்டு நின்று பேரணியின் முழக்கங்களை உள்வாங்கி எதிரொலித்தனர்.
பிற்பகல் 3.45 மணிக்கு பேரணி புறப்பட்டது என்றாலும் 5.30 மணி வரை பேரணியின் கடைசிப் பகுதி வரை புறப்பட முடியாத அளவுக்கு அப்படியொரு நீண்ட படை வரிசை!
பேரணியில் ஏதாவது பிரச்சினை வராதா? கட்டுப் பாடு குலையாதா என்று கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கழுகுகளுக்குத் தீனி கிடைக்கவில்லை என்பது பேரணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
பேரணியில் தத்தம் கொடிகளோடு முழக்கமிட்டு வந்த தோழர்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தலைமையேற்று சிறப்பாக வழி நடத்தினர் என்பது சிறப்பானது. பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடி தாங்கி கடைசி வரை நடந்தே வந்தார். பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் நடந்தே வந்தனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,  திராவிட விடுதலை கழகம் தலைவர் குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதிய மான், தமிழ்புலிகள் கட்சிகள் நாகை திருவள்ளுவர், தமிழக மக்கள் முன்னணி பொழிலன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் - வாலிபர்கள் - தமிழர்களின் வீரவிளை யாட்டுகளை நடத்திக் காட்டிக் கொண்டே வந்தனர். சிலம்பாட்டம், முத்திரை பொறித்த இருபால் தோழர்கள் பங்கேற்ற பறை முழக்கம் காதுகளைக் செவிடாக்கிற்று.


வீரவணக்கம் வீரவணக்கம்
தலைவர் தந்தை பெரியாருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்.

வெல்லட்டும், வெல்லட்டும்
கருஞ்சட்டைப் பேரணி வெல்லட்டும்!

வேரறுப்போம் - வேரறுப்போம்
காவிப் பயங்கரவாதத்தை
வேரறுப்போம் - வேரறுப்போம்!

மீட்டெடுப்போம் - மீட்டெடுப்போம்
தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!

சாய்ப்போம் - சாய்ப்போம்
ஜாதியினை சாய்ப்போம்!
காப்போம் காப்போம்
பெண்ணுரிமை காப்போம்!
அனுமதியோம் - அனுமதியோம் ஜாதி ஆணவக் கொலைகளை அனுமதியோம்!

தமிழர் என்பது அடையாளம் ஜாதி, என்பது அவமானம்
ஜாதி பெருமை அவமானம்!
இடமில்லை இடமில்லை
மதவெறிக் காவிகளுக்கு
பெரியார் மண்ணில் இடமில்லை

மண்ணை அழிக்க மீத்தேனா,
மலையை அழிக்க நியூட்ரினோவா?
அனுமதியோம் அனுமதியோம்
தமிழா தமிழா ஒன்றுபடு
ஜாதி சழக்கை வென்றுவிடு.

எங்கள் ஆயுதம் பெரியாரே எங்கள் கேடயம் பெரியாரே!
பார்ப்பனியத்தை விரட்டியடிக்க
ஆதிக்க ஜாதியை ஒழித்துக்கட்ட
பெண்ணடிமை விலங்கொடிக்க
எங்கள் ஆயுதம் பெரியாரே! பெரியாரே!
உள்ளிட்ட முழக்கங்களை மண்ணும் விண்ணும் அதிர முழங்கி வந்தனர்.
பேரணியின் முதல் அணி உழவர் சந்தை வந்தடைய, அதற்குப் பிறகு ஒரு மணி 45 நிமிடம் கடந்துதான் கடைசி அணி உழவர் சந்தையை அடைய முடிந்தது என்றால் பேரணியின் நீட்சியை, எண்ணிக்கையினை, பலத்தை எளிதாக அறிந்து கொள்ளலாமே.
கே.டி. திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்ட எழுச்சிமிகு கருஞ்சட்டை பேரணி கரூர் புறவழிச் சாலையிலிருந்து அணிவகுத்து சாலை ரோடு, மாரிஸ் ரோடு, சாஸ்திரி ரோடு ஆகிய நான்கு சாலைகளைக் கடந்து அண்ணா நகர் வழியாக உழவர் சந்தையில் சங்கமமாயிற்று.
முழுப் பேரணியையும் திராவிடர் கழகத் தலைவர் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் மாநாட்டு திடலுக்கு சிறிது தூரத்திற்கு முன்பு உயரமான இடத்தில் நின்றபடி பார்த்தனர்.
பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திருமுருகன் காந்தி, பொழிலன், கோவை கு.இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பேரா. சுப. வீரபாண்டியன், நாகை திருவள்ளுவன், அரங்க குணசேகரன், இரா.அதியமான், பொள்ளாச்சி உமாபதி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,  இளைஞரணி செயலாளர் இளந்திரையன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தொழிலாளர் பேரவைத் தலைவர் மோகன், அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், தென் மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன் ராஜா மற்றும் பல்வேறு மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பங்கு ஏற்றனர்.
மாநாட்டு நிகழ்ச்சி



தொடர்ந்து உழவர் சந்தையில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
முன்னதாக மகஇக கோவன் கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து  விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் வர வேற்புரையாற்றினார்.  தமிழக மக்கள் முன்னணி தலை வர் பொழிலன் தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். இலால்குடி முத்துசெழியன், அறிவரசன், க.திருநாவுக் கரசு, குறிச்சி.கபிலன், இரணியன், இரா.இளவழகன், அ.சி.சின்னப்பத்தமிழர், நா.கருணாகரன், கடவூர் ப.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் நோக்க உரையை மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  சிறப்புரையாற்றினார்.
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி தலைவர் வே.ஆனைமுத்து, குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான்,  முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், டிச.3 இயக்கம் தீபக், புதிய குரல் ஓவியா, சமூகசெயற்பாட்டாளர் சரஸ்வதி, எழுத்தாளர் பாமரன், பேராசிரியர் அ.நீலகண்டன், காவிரி பாதுகாப்பு இயக்கம் முகிலன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், தமிழ்நாடு திராவிடர் கழகம் க.சு.நாகராசன், ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன்,  தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர் சங்க தலைவர் வழக்குரைஞர் பானுமதி, வழக்குரைஞர் கென்னடி,தமிழ்தேச மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன், சொல்லாய்வு அறிஞர் ப.அருளியார்     உள்ளிட்டோர் உரையாற்றினார். இம்மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் பேசினார்.
ஜாதி மறுப்பு திருமணம்

இம்மாநாட்டில் மணமக்கள் செ.இனியன் - ஆ.சாரதா, சா.வசந்தி - சு.முத்துகுமார்,  பா.ஆனந்தராஜ் - க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்பு திருமணங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.
கலந்து கொண்டோர்

இம்மாநாட்டில்   திரைப்பட இயக்குநர் கரு.பழனியப் பன், திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தி.க. பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னரெஸ் பெரியார், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் திராவிடர் கழகம், வழக்குரைஞர் கென்னடி,  உள்ளிட்ட 200 அமைப் புகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், நிர்வாகிகள் இலட்சக்கணக்கில் கலந்து கொண்டனர்.  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கே.எம்.செரீப், தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார  செயலாளர் சினீ.விடுதலைஅரசு உள்ளிட்டோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர்.
நிறைவாக தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன் நன்றி கூறினார்.

திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணி நிறைவு விழாவில், மணமக்கள் செ.இனியன் - ஆ.சாரதா, சா.வசந்தி - சு.முத்துகுமார்,  பா.ஆனந்தராஜ் - க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்புத் திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் கோவை இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி, மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், அதியமான், கரு.பழனியப்பன், கோபி நயினார் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் உள்ளனர் (23.12.2018).
- விடுதலை நாளேடு, 24.12.18

பெரியார்தம் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை


இனப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது

அறிவாயுதத்தை ஏந்தி களத்தில் நிற்கும் கட்டம் இது

பெரியார்தம் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை



இனப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் நெருங்கு கிறது; பெரியார் காண விரும்பிய புதியதோர் புரட்சி உலகம் படைக்க எந்த விலையும் கொடுக்கத் தயார்  என்று   திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய  அறிக்கை  வருமாறு:
நமது அறிவு ஆசான், பகுத்தறிவுப் பகலவனின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2018).
அய்யாவின் மறைவு அவர்தம் லட்சியத்திற்கோ, லட்சியப் பயணப் பாதைக்கோ அல்ல!

அய்யாவின் மறைவு - அவரது உடலுக்கு மட்டுமே! லட்சியத்திற்கோ, லட்சியப் பயணப் பாதைக்கோ அல்ல என்பதை நாளும் நாடு நமக்கு உணர்த்திக் கொண் டிருக்கிறது.
அந்த ஈரோட்டுப் பேராசானின் கணக்கு என்றுமே பிழையானது கிடையாது.
அவரது தொலைநோக்கு இன்றைய தலைமுறையை, இளைஞர் உலகத்தை வியப்புலகத்திற்கு அழைத்துச் செல்கிறது!
திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, அதற்கு மானமும், அறிவையும் ஏற்படுத்தும் பெரும் பணியில் பெரிய வெற்றியைப் பெற்றவர் நம் தந்தை பெரியார்!
தொண்டர்களுக்குப் பயிற்சி!

முழு வெற்றியைப் பறிப்பதற்கு அவர்தம் தொண்டர் களை - சுயமரியாதைப் பாசறையில் பயிற்றுவித்து, பக்குவப்படுத்தி, பாடங்கள் சொல்லிக் கொடுத்து பயணத்தைத் தொடர - பயமின்றி களத்தில் வெல்ல அறி வாயுதங்களையும் அளித்துவிட்டே சென்றுள்ளார்!
பெரியார் சிலைகளைத் தொட்டுப் பார்க்க முயன்ற இன எதிரிகள், பட்டுப்போன பழுதுகளாகி பரிதாபத் துடன் நிற்கின்றனர்!
இந்த பத்தாம் பசலை பழுதுகளான காவிகளை முறிய டிக்க விழுதுகள் புயலெனப் புறப்பட ஆயத்தமாகி விட்டன!
பெரியார் என்ற பகுத்தறிவு மின்சாரக் கம்பியைத் தொட்டவர்கள் அலறி ஓடி பைத்தியக்கார மருத்துவ மனை நோயாளிகள்'' என்ற சான்று வாங்கி, வெளியே வரவேண்டிய சூழ்நிலை!
பெரியார் - ஒரு சிலை அல்ல; காலத்தை வென்ற சீலம்



பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவிடத்தில், கழகத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு (சென்னை பெரியார் திடல், 24.12.2018)

காரணம், பெரியார் - ஒரு சிலை அல்ல; காலத்தை வென்ற சீலம்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரின் தத்துவக் கோட்பாட்டின் சின்னம்! சுயமரியாதைச் சூரியன்!!
புரிந்துகொண்டனர் புல்லர்கள்! இனப்போரின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது! மான மறவர் படை,  இளைய சமுதாயம் உயிரைத் துச்சமாகக் கொண்டு பெரியார் காண விரும்பிய புதியதோர் புரட்சி உலகம் படைக்க எந்த விலையும் கொடுக்கத் தயார் என்று சூளுரைக்கிறது, தனது சூடேற்றப்பட்ட ரத்த நாளங்கள் - புடைத்த தோள்களுடன் அறிவாயுதத்தை ஏந்தி களத்தில் நிற்கும் கட்டம் இது!
நமக்குள் பேதமில்லை; பிளவு இல்லை!

நமக்குள் பேதமில்லை; பிளவு இல்லை - ஒரே இலக்கு - ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிந்த சமுதாயமே!
அந்த இலக்கு நோக்கி, இப்படை தனது அயர்வில்லா பயணத்தைத் துவக்கி, ஆரியத்தை வென்றெடுக்க அறிவாயுதத்துடன் அணிவகுக்கிறது - அய்யா பணி முடிக்க!
நாளைய வரலாறு நமதே!
உலக மயமாகிவிட்ட பெரியார், உள்ளூர் களத்தையும் நமக்குக் காட்டி விட்டார். எனவே, துணிவுடன் தொடர்வோம் அவர்தம் பெரும் பயணத்தை!
வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை
24.12.2018

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கல்



சென்னை சேத்துப்பட்டு பகுதி கழக பொறுப்பாளர் .அ.பாபு அவர்களின் மகன் நா.அன்சர்தீன் 28.11.2018ஆம் நாள் வழக்குரைஞராக பதிவு செய்ததையொட்டி 24.12.2018ஆம் நாள் பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களையும் சந்தித்து பயனாடை அணிவித்தார்.

இதன் மகிழ்வாக விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தாவும்,  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/-ம் வழங்கினார்.

- விடுதலை நாளேடு, 28.12.18

செவ்வாய், 25 டிசம்பர், 2018

சென்னை சைதாப்பேட்டையில் தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

சென்னை, டிச.25 தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் தேரடி அருகில்    24.12.2018 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக மாலை 5 மணியிலிருந்து திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாணவர் கழக இணை செயலாளர் (மகளிர் பிரிவு) பா.மணியம்மை தந்தை பெரியார் குறித்த பாடலைப் பாடினார். பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டத் தில் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் இரா. வில்வநாதன் வர வேற்றார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், சி.செங் குட்டுவன் கு.அய்யாத்துரை, துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோ தரன், இளைஞரணித் தலைவர் ச.மகேந் திரன், செயலாளர் ந.மணித்துரை முன் னிலை வகித்தனர்.

நூல் வெளியீடு


பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டத் தில் இயக்கத்தின் சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. திமுக மாநில மகளிரணி செயலாளர் மாநிலங்களவை திமுக தலைவர் கவிஞர் கனிமொழி புத்தகங்களை வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார். ரூ.380 நன்கொடை மதிப்புள்ள ஆறு புத்தகங்கள்  ரூ.300க்கு வழங்கப் பட்டன.

தலைவர்கள் எழுச்சியுரை


கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, திமுக பொறுப்பாளர்  சைதை குணசேகரன், கழக பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலங்களவை திமுக தலைவர்  கவிஞர் கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு ஆகியோரின் உரையைத் தொடர்ந்து நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் நினைவு நாள் எழுச்சியுரையாற்றினார்கள்.

கலந்து கொண்டவர்கள்


கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலா ளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், சோழிங்கநல்லூர் மாவட் டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், ஆயிரம் விளக்கு சேகர் இராயப்பேட்டை ஆனந்தன் சைதை எத்திராஜ் குடும்பத்தினர் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், சைதை தென்றல், திமுக பொறுப்பாளர்கள் சாதிக், கிருஷ்ணமூர்த்தி, சேகர், கீதா, நாகா மற்றும் திமுக மகளிரணித் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்


யாழ்ஒளி, அரும்பாக்கம் சா.தாமோ தரன், தமிழ்செல்வன், மு.ந.மதிய ழகன், சைதை குணசேகரன், த.கு.திவா கரன், எம்.பி.பாலு, வழக்குரைஞர்கள் வீரமர்த் தினி, சி.அமர்சிங், ந.விவேகானந்தன், சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் மகள் அவ்வை, தி.இரா.இரத்தினசாமி, ஆ.வெங்கடேசன், தே.செ.கோபால், டி.ஆர்.சேதுராமன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் ப.முத்தையன், சீ.இலட்சுமிபதி, ச.இன்பக் கனி, செ.பெ.தொண்டறம்  உள்பட ஏராள மானவர்கள் உரிய தொகை கொடுத்து பெருமகிழ்வுடன் கவிஞர் கனிமொழியிடமிருந்து  புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

பொதுக்கூட்ட முடிவில் மாவட்ட அமைப் பாளர் மு.ந.மதியழகன் நன்றி கூறினார்.

மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழி உரிமைப்போராட்டத்தை திராவிடர் கழகம் துவக்கும்

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, டிச.25 சென்னை சைதாப்பேட் டையில் நேற்று (24.12.2018) மாலை நடைபெற்ற  தந்தை பெரியார் 45ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  சிறப்புரையாற்றிய பின்னர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

கேரளாவில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ். பாஜக வன்முறை செய்வதா?

செய்தியாளர்: தமிழகத்திலிருந்து சபரி மலைக்குப் போன பெண்கள் திருப்பி அனுப் பப்படுகிறார்கள். அவர்கள்மீது கல்வீச்சு இது போன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. தொடர்ச் சியாக இதே மாதிரியான நிலை ஏற்பட்டு வருகிறதே?

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் இதில் முதலில் வழக்குத் தொடுத்தவர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண் டும். உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பை அவர்கள் மதிக்காமல், மத்தியில் ஆளுங்கட் சியாக இருந்துகொண்டே  இப்படி அதுவும் பெண்களிடத்திலேகூட மனிதாபிமானம் இல்லாமல் நடப்பது என்பது இருக்கிறதே, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கேரள அரசாங்கமும் வன்முறையில் ஈடுபடுவோரை அடக்க வேண்டும். இதற்கு மேலும் வன்முறைகளை அனுமதிக்கக்கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத   அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இப்போது யார் தடுக்கிறார்களோ, அவர்களே தங்களை மாற்றிக்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும். எனவேதான், உச்சநீதிமன்றத்தினுடைய உத்த ரவை கேரள அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டியது கட்டாயம்.

சாதாரணமாக ரபேல் விமான வழக்கில் தீர்ப்பைப் பொருத்தவரையிலே,  உச்சநீதி மன்றம் சொல்லிவிட்டது, உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று ஆட்டம் போடுகிறார் களே, அதே உச்சநீதிமன்றம்தான் இதிலே அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குப் போகலாம் என்று சொல்லுகிறது. ஆனால், பெண்களைத் தாக்குவதுதான் ஆர். எஸ்.எஸ்.சினுடைய, பிஜேபியினுடைய முறையா? என்பதுதான் எங்களுடைய கேள்வி.

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாக்குவதா?

செய்தியாளர்: சிபிஎஸ்இ பள்ளிப் பாடத் திட்டத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பாக இந்தி படித்திருக்க வேண்டும். அதேமாதிரி மத்திய அரசுப்பணிகளில் தட்டச்சு பணியிலி ருந்து குறைந்தபட்சம் இந்தி அவசியம் என்று மத்திய அரசு கூறுகிறதே?

தமிழர் தலைவர்: மறுபடியும் ஒரு பெரிய மொழிப்போராட்டத்தை விழிப்பாக நடத் துங்கள் நீங்கள் அதை விடாதீர்கள் என்று இந்தத் தமிழ்நாட்டை கொஞ்சம் எழுப்பிக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற திணிப்புகளைச் செய்கிறார்கள்.

சிபிஎஸ்இயிலே மட்டுமல்ல, தமிழ்நாட் டிலே இருந்து யாராவது நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டாலும், அவர்கள் இந்தியிலேதான் கையெழுத்துப் போட வேண்டும். இந்தியே படிக்காத நீதிபதிகளாக இருந்தாலும், தமி ழிலோ, ஆங்கிலத்திலோ கையெழுத்துப் போடக்கூடாது என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி களாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளக தமிழ்நாட்டி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் இந்தியிலே கையெழுத்துப் போடுவதற்கு, கையெழுத்து போடப் பழகிக்கொண்டுதான் போகவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

அதுமாத்திரமல்ல, பட்டங்கள், விருதுகள் கொடுக்கிறார்கள் அல்லவா? பத்ம விருதுகள் போன்றவை  அனைத்தும் இந்தியில்தான் இருக்கிறது. ஆங்கிலத்திலோ, மற்ற அவர வர்களுடைய மொழிகளில் இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் களிடம்கூட நாங்கள் சொல்லியிருக்கிறோம், வெளிநாட்டு விமானங்களிலே சென்னையிலிருந்து பயணம் செய்தால், அவர்கள் தமிழிலே அறிவிப்புக் கொடுக்கிறார்கள். வெளிநாட்டுக்கு போகிற விமானங்கள் ஓமன், சிங்கப்பூர் விமானங்கள், பிரிட்டிஷ் ஏர்வேஸ் இவைகளில் எல்லாம் தமிழில் அறிவிப்பு வருகிறது. ஆனால், இந்தியாவிலே இருக்கக்கூடிய ஏர் இந்தியா போன்ற  விமா னங்களில், தமிழ்நாட்டுக்குள்ளேயே போகிற விமானங்களில்  தமிழிலே அறிவிப்புகள் கிடையாது. அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் போது, அந்தந்த மொழிகளிலே சொன்னால் தான்  பயணிகளுக்குப் புரியும். எனவே, இவைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக இணைத்து திராவிடர் கழகம் மீண்டும் ஒரு மொழி உரிமைப்போராட்டத்தைத் துவக்கும்.

ஒரு விரல் புரட்சி

செய்தியாளர்: அய்யா, நீங்கள் பேசும் பொழுது, கடைசியாக ஒரு விரல் புரட்சி என்று ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு சொன் னீர்கள், எதைக்குறிப்பிட்டு சொல்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஒரு விரல் புரட்சி என்றால் வேறு ஒன்றுமில்லை, புள்ளி வைப்பதுதான். புள்ளிவைப்பது ஒருவிரல் புரட்சி. அதுதான் அமைதியானது. காமராசர் சொல்வதைப்போல, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம், நிம்மதியாக வாக்களித்துவிட்டு (பொத்தானை அழுத்திவிட்டு) போய்த் தூங்குங்கள் என்று சொல்வார். இப்போது பொத்தானை அழுத்தும்போது, சரியாக பதிவாகிறதா? என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் ஒரு விரல் புரட்சி என்று சொல்கிறோம்.

நோட்டாவோடுதான் பிஜேபி போட்டி

செய்தியாளர்: தமிழிசை இனிமேல்தான் தமிழகத்தில் பாஜக எழுச்சி பெறும் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: ரொம்ப  மகிழ்ச்சி. நோட் டாவைவிட அதிகமாக அவர்கள் எழுச்சி பெறுவது வரவேற்புக்குரியது.

-இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு, 25.12.18

சைதாப்பேட்டை தேரடி தெருவில்தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 

அய்.நா. மனித உரிமையும் - தந்தை பெரியாரின் சுயமரியாதையும் பொதுவுடைமையாளர்கள் தந்தை' என்று சொன்னது பெரியாரை மட்டும்தான்!
கவிஞர் கனிமொழி எம்.பி.,

தோழர் ஆர்.என்.கே.



சென்னை, டிச.25  தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி தெருவில் நேற்று (24.12.2018) மாலை திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் எழுச்சி இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாலை 5 மணிமுதல் இரவு 7 மணிவரை கருத்து மணம் வீசும் இயக்கப் பாடல்களை மக்கள் வரவேற்புக்கிடையே பாடிக்கொண்டிருந்தார். மாநில மாணவர் கழக இணை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மையும் இடை இடையே பாடினார்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.
வண்ண வண்ண சுவரொட்டிகள் இரவைப் பகலாக்கும் ஒளிவிளக்குகளுக்கு இடையே மேடையின் எடுப்பான தோற்றம் மேலும் அழகூட்டியது.
நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மேனாள் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சைதை எம்.பி.பாலு தலைமை வகித்தார். அவர் தனது உரையில், இதே தேரடியில் பலமுறை தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பொதுக்கூட்டம் நடத்தியதையும், தந்தை பெரியாருக்கு வீர வாள் கொடுத்ததையும், இரண்டு முறை மாநாடுகள் நடத்தியதையும் பசுமையாக நினைவு கூர்ந்தார்.
டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட நிலையில், அதனைக் கண்டித்து இதே இடத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பங்கு கொண்டதையும்  பொருத்தமாக நினைவூட்டினார்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தனது சில நிமிட உரையில் பெரியார் சிலையை அவமதித்தால் நாடெங்கும் பெரியார் சிலை தோன்றும் என்று குறிப்பிட்டார்.
சைதை தி.மு.க. பிரமுகர் குணசேகரன் தன் உரையில் சைதாப்பேட்டை என்றால், திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லுவார்கள். தந்தை பெரியாரை யார் யாரோ விமர்சிக்கிறார்கள். அப்படி விமர்சிப்பவர்கள்கூட ஒரு வகையில் தந்தை பெரியாரால் பயன்பெற்றவராகவே இருப்பர். ஒரு பெரியார் சிலை உடைக்கப்பட்டால், ஓராயிரம் சிலை உருவாகும் என்றும் எச்சரித்தார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச் சியை எடுத்துக் கூறினார். குறிப்பாக, ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இதன் பின் விளைவுகளை விவரித்தார்.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தன்னுரையில், ஒரு மனிதன் அரசு நிலத்தில் ஒரு குடிசை போட்டால் 24 மணிநேரத்தில் பிய்த்து எறியப்பட்டுவிடும். ஆனால், அரசுக்குச் சொந்தமான ஓரிடத்தில் ஒரு கல்லை நடலாம்; கொஞ்ச நாள்களில் அது கோவிலாகிக் கும்பாபிஷேகம் நடக்கும். அரசு நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளாது.
இப்பொழுது மாணவர்களுக்குத் தேர்வு நடக்கும் காலம். கோவில்களில் விடியற்காலை முதலே பக்திப் பாடல்கள், அய்யப்பப் பஜனைப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதைப்பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
பொதுவாக, பொதுமக்களுக்குத் தொல்லை தரும் இத்தகைய சட்ட ஒழுங்கு மீறல்களை தட்டிக் கேட்பது திராவிடர் கழகம் மட்டும்தான் என்று குறிப்பிட்டார்.
கவிஞர் கனிமொழி எம்.பி.,

தி.மு.க. மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுவின் தலைவருமான கவிஞர் கனிமொழி அவர்கள் தனது உரையில் கூறியதாவது:
தந்தை பெரியார் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்திற்குமான ஒரே தலைவர் - இரட்சகர் ஆவார்.
தந்தை பெரியார்பற்றி தவறான புரிதல்களும், பிரச்சாரங்களும் நடைபெறுவதை வேதனையுடன் குறிப்பிட்டு, அதன் உண்மை நிலையை விளக்கினார்.
பிறப்பால் பேதம் கூடாது என்றார். ஜாதி அடிப்படையில் நிலவும் சமூக அமைப்பு முறை மாற்றப்படவேண்டும் என்றார். அது எப்படி மற்றவர்களை பகைப்பதாக ஆகும்?
கடவுளை ஒப்புக்கொள்ளாத, நம்பாத தந்தை பெரியார், கலைஞர், ஆசிரியர் ஆகியோர் கோவிலுக்குச் செல்வதில்லை.
அதேநேரத்தில் அதில் நம்பிக்கையுள்ள மக்களுக்காக தந்தை பெரியார் குரல் கொடுக்கவில்லையா? திராவிடர் கழகமும், தி.மு.க.வும் குரல் கொடுக்கவில்லையா? உண்மையைச் சொல்லப்போனால், கோவிலுக்குச் செல்லக் கூடியவர்களின் உரிமைகளுக்கும்கூடக் குரல் கொடுத்தவர்தான் தந்தை பெரியார்.
இந்தியா முழுவதும் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டைத் தாண்டி விட்டால் பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டம் தொங்கிக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் அந்த நிலை கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஜாதிப் பட்டம் போடுவதை அவமானகரமாக வெட்கமாகக் கருதும் மனநிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இந்த உணர்வை ஊட்டியவர் தந்தை பெரியார்தானே!
ஜாதிபற்றிய கவிஞர் கனிமொழியின் உரையில் ஜாதியம் துறப்பதுபற்றியது முக்கியமானதாகும்.
1929 பிப்ரவரியில் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே பெயருக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் ஜாதிப் பட்டத்தைத் துறப்பது என்ற தீர்மானத்தை இணைத்துப் பார்க்கவேண்டும். ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார் அவர்கள் தனது நாடார் பட்டத்தையும், சிவகங்கை இராமச்சந்திரனார் தனது சேர்வை பட்டத்தினையும் மற்றும் பலரும் அம்மாநாட்டில் ஜாதிப் பட்டத்தைத் துறந்ததை இதில் இணைத்துப் பார்க்கவேண்டும்.


தந்தை பெரியாரோ அதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே 1927 ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்னும் தனது ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்ததும் இந்த இடத்திற்குப் பொருத்தமானதே.
18.12.1927 குடிஅரசு' இதழ் வரை நாயக்கர் பட்டம் தொடர்ந்தது. 25.12.1927 குடிஅரசு' இதழில்தான் முதன்முதலாக ஈ.வெ.ராமசாமி என்று பெயர் வெளிவந்தது. ஒரு முக்கியமான தகவல் இதோ:-
ஈராண்டுக்கு முன்னர் உ.பி.யில் லக்னோவில் அகில இந்திய அளவில் டாக்டர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சி முடிந்து அவரவர்களும் திரும்ப இருந்த நேரத்தில், அந்த வளாகத்துக்கான மக்கள் நலத் தொடர்பு அதிகாரி ஒரு வினாவை எழுப்பினார். இந்தியாவின்பல மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்திருக்கும் டாக்டர்கள் தங்கள் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டத்தை வைத்துள்ளனர். தமிழ்நாட்டைத் தவிர!  இது ஏன் என்ற கேள்வியை எழுப்பியபோது, சென்னையிலிருந்து சென்றிருந்த ஒரு டாக்டர் பளிச்சென்று சொன்ன பதில், இந்த இடத்தில் முக்கியமானது.
"எங்கள் நாட்டில் ஒரு தலைவர் இருந்தார். அவர் எங்களுக்குச் சொன்னதெல்லாம் பெயருக்குப் பின்னால் படித்த படிப்பின் பட்டம் இருக்க வேண்டுமே தவிர ஜாதிப் பட்டம் இருக்கக்கூடாது'' என்று சொல்லியிருக்கிறார்'' என்று பதில் சொன்னபோது, ஓ அந்த ராமசாமி நாயக்கரா?' என்றாராம் அந்த அதிகாரி.
அப்பொழுது சென்னை டாக்டர், நாயக்கர் என்பது ஜாதிப் ட்டம். அவர் அதனை ஏற்றுக்கொள்வதில்லை'' என்றாராம் கவிஞர் கனிமொழி சொன்னது சரியானதுதானே!
அத்தகு தமிழ்நாட்டில் ஜாதி உணர்வைவூட்டும் முயற்சி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதற்குத் தூபம் போடுகிறது என்று குறிப்பிட்ட கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள், அறிவியல் கண்டுபிடித்த ஒன்றை மிக முக்கியமாகக் குறிப்பிட்டார். டி.என்.ஏ. என்கிற மரபணு பாரம்பரியத் தன்மையை அறியக்கூடிய விஞ்ஞானம்.
அதன்மூலம் ஒரு இனம் - அதன் முந்தைய நிலை - கலப்பு - இவுற்றை எல்லாம் வெளிப்படுத்தி விடுகிறது - என்னைக் கேட்டால், ஜாதியை உயர்த்திப் பிடிக்கும்  இந்த ஜாதித் தலைவர்களின் டி.என்.ஏ.யை அறியவேண்டும். அப்பொழுது தெரியும் இவர்கள் யார்? இவர்களின் முன்னோர் யார்? எந்தக் கலப்பு என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்று அவர் சொன்னபொழுது பலத்த கரவொலி.
ஜாதி என்பது ஒரு மாயை. அதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதனை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார் என்று குறிப்பிட்ட கனிமொழி அவர்கள், தந்தை பெரியார் தன் வலியை உணர்வதுபோல, மற்றவர்களின் வலியையும் உணரவேண்டும் என்பார்.
அய்.நா. மனித உரிமைகள்பற்றி பிரகடனப்படுத்துகிறது. அதையேதான் தந்தை பெரியாரும் கேட்கிறார். மனித உரிமைக் கோட்பாட்டுக்கு ஜாதி எதிரானது அல்லவா என்று கேட்ட தந்தை பெரியார், மனிதனுக்குத் தேவை சுயமரியாதை' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டதை தி.மு.க. மகளிரணி செயலாளர் அழுத்தமாகவே பதிவு செய்தார்.
இன்று நாட்டில் நிலவும் அரசியலைக் குறிப்பிட்ட அவர், அதனை வரிசைப்படுத்தினார்.
என் மொழியை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்; என் கலாச்சாரத்தை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் உரையாடலுக்கு இடமில்லை என்று சொல்லுகிற ஒரே எதேச்சதிகாரத்தை அரங்கேற்றத் துடிப்பவர்களை அடையாளங் காட்டினார்.
எனக்கு இந்தக் கூட்டத்தில் பெரியார் சிலையை ஆசிரியர் வழங்கியபோது, தூரத்தில் கோவிலிலிருந்து நமசிவாய' என்று கூறும் ஒலி சத்தம் இங்கே கேட்கிறது.
இந்த ஜனநாயக உரிமை நல்லிணக்கம் நம்மிடையே இருக்கவேண்டும்.
இன்னொரு கொடுமை பாலின உரிமைபற்றியது. சபரிமலைக் கோவிலில் ஆண் போகலாம்; பெண் போகக்கூடாது. ஏன் போகக்கூடாது? என்ன காரணம்? ஏனிந்த வேறுபாடு?
இந்த நூற்றாண்டில் பெண்கள் குறிப்பிட்ட கோவிலுக்குள் போகக்கூடாது என்று ஓர் ஆட்சி சொல்லுவது வெட்கக்கேடு என்று உரத்த முறையில் குறிப்பிட்டார்.
பெண்களின் வாக்கு மட்டும் வேண்டும் - ஆனால், கோவிலுக்குச் செல்லும் உரிமை மட்டும் அவர்களுக்குக் கூடாதா?
பி.ஜே.பி.யின் 2014 தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது? 33 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. ஆட்சியே முடியப் போகிறது - இதுவரை அதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை.
நமது பண்பாட்டை, மொழியை, கருத்துச் சுதந்திரத்தை மாநில உரிமைகளை நசுக்கும் ஓர் ஆட்சி இந்தியாவில் இருக்கிறது.
இதிலிருந்து நாம் மீள பெரியார் வழியே நமக்குத் துணை. அவர் வழியை நாம் பின்பற்றி நடக்கவேண்டும். மனிதனை மனிதன் மதிக்கும் தன்மையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம் - தந்தை பெரியார் அவர்களின் இந்த நினைவு நாளில் அதற்கான உறுதிமொழியை எடுப்போம் என்று கூறினார்.
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு



தந்தை பெரியார் நினைவு நாளில் நூல் வெளியீட்டு விழா...

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் (சி.பி.அய்.) தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தன் உரையில், மத்தியப் பி.ஜே.பி. ஆட்சியில் சாமியார்களின் கொழுத்த ஆட்டம் தலைவிரித்தாடுகிறது என்றார்.
ராம்தேவ் என்கிற சாமியார்பற்றி நான்கு ஆண்டுகளுக்குமுன் யாருக்கும் தெரியாது. பதஞ்சலி' என்னும் பெயரில் பல பொருள்களின் விற்பனையாளராக மாறியிருக்கிறார். அவர் கொடுக்கும் அந்த மருந்தைச் சாப்பிட்டால், முதியவர்களும் துள்ளி ஓடுவார்களாம். அந்த ஆசாமிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாம் - இந்த பி.ஜே.பி. ஆட்சியில்.
வாழும் கலை சிறீசிறீ ரவிசங்கர் என்ற சாமியார் சர்வதேச ஃபிராடு.
இன்னொரு சாமியார் ஜக்கி வாசுதேவ் என்பவர். யானை செல்லும் இடத்தையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர். அவர்மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்ற வினாவை எழுப்பினார் தோழர் ஆர்.என்.கே.
மத்திய பி.ஜே.பி. அரசின் அலங்கோலத்தையும் அலசி எடுத்தார். ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்றார்களே, அது நடந்துள்ளதா? நீட்' தேர்வை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில், நீதிபதிகள் தேர்வு அகில இந்திய அளவில் நடக்குமாம். அதனை நம் தாய்மொழியில் எழுதக்கூடாதாம்! அதன் விளைவு என்ன? வெறும் இந்தி தெரிந்தவர்கள் எல்லாம் நீதிபதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார்கள்.
இந்து மதத்தின் பெயரால் ஆட்சி என்பவர்கள், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் எப்படி ஒற்றை ஆட்சியைக் கொண்டு வர முடியும்? என்ற வினாவை வெகு சரியாகவே எழுப்பினார் தோழர் ஆர்.என்.கே.
இந்த நாட்டிலே ஜாதி இருக்கிறது, மதம் இருக்கிறது, கடவுள் நம்பிக்கை இருக்கிறது - ஆனால், மனிதன் இல்லையே என்று ஆர்.என்.கே. அவர்கள் யதார்த்தமாகக் குறிப்பிட்டபோது பலத்த வரவேற்பு!
தமிழ்நாட்டையும், கேரளாவையும் வேறு கண்ணோட்டத்தில் மத்திய அரசு பார்க்கிறது என்றார் ஆர்.என்.கே. அவர்கள்.
என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலை எடுக்க வாய்ப்பு இல்லை என்பதால், கடும் புயலால் பெரும் இழப்புக்கு ஆளான தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் வார்த்தையைக் கூறக் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு மனம் இல்லை.
அதேபோல, கேரளாவில் தாமரை மலர முடியாது என்று உறுதியாகத் தெரிந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் போகக்கூடாது என்று கூறி அங்கே அரசியல் விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார் என்று மிகச் சரியாகவே சொன்னார்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் பெரும்பாலான தமிழ்நாட்டுக் கோவில்களை முன்பு இருந்ததுபோல, தனியாரிடம் கொண்டு போக ஒரு வேலை நடக்கிறது.
கோவில் சிலை திருட்டு என்ற பிரச்சாரம் எல்லாம் இதன் பின்னணியில்தானோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது என்று தோழர் ஆர்.என்.கே. அவர்கள் இந்துக் கோவில் நிலை  எப்படி இருக்கிறது என்பதைப் படம் பிடித்தார்.
கோவிலுக்குள் நுழையும்போதே செருப்பை வெளியில் விடவேண்டும் - அதற்கும் காசு; கோவிலில் அர்ச்சனைச் செய்வதற்கும் பணம் - இவ்வளவையும் தந்துவிட்டு, சாமி கும்பிடச் சென்றால், அங்குக் கடவுளைக் காணவில்லை - திருடுப் போய்விட்டதாம் என்று ஆர்.என்.கே. அவர்கள் சொன்னபொழுது, ஒரே கைதட்டல், சிரிப்பொலி!
இவற்றை எல்லாம் விலாவாரியாகக் குறிப்பிட்ட அவர், தந்தை பெரியாரின் தொண்டு குறித்து மிக உருக்கமாகவே பேசினார்.
பொதுவுடைமைவாதிகளான நாங்களே ஒரே ஒருவரைத்தான் தந்தை என்று சொல்லுகிறோம். அவர்தான் தந்தை பெரியார். வேறு யாரையும் நாங்கள் அப்படிச் சொல்லுவதில்லை என்று சொன்னபொழுது பலத்த கரவொலி.
தந்தை பெரியார் 45 ஆம் ஆண்டு நினைவு - ஒரு நல்ல நம்பிக்கையோடு பிறந்திருக்கிறது. திருச்சியில் கடந்த ஞாயிறு அன்று கூடிய கருஞ்சட்டை இளைஞர்களின் சங்கமம்தான் அது. நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் பெரியார் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைந்து மதவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. எங்களைப் போன்ற முதியவர்களுக்குப் பெருமையாகவும், நல்ல நம்பிக்கையைத் தருவதாகவும் இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
(நாளை தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு 94 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவருக்கு ஆடை போர்த்தி, பெரியார் சிலையையும் வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்).
தொகுப்பு: மின்சாரம்

பேதமில்லாப் பெருவாழ்வே தந்தை பெரியார் தத்துவம்! அதனை நிறைவேற்ற உறுதிகொள்வோம்

(சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையின் ஒளிமுத்துகள்)
தந்தை பெரியார் தொண்டினால் பார்ப்பனர்கள் கூடப் பலன் பெற்றுள்ளனர். கணவன் இறந்தால், பார்ப்பனர் வீட்டுப் பெண்கள் மொட்டை அடித்து வெள்ளைச் சீலை கொடுத்து மூலையில் உட்கார வைப்பார்கள். அந்த நிலை இன்று உண்டா? இந்த மாற்றத்துக்கும் காரணம் பெரியார்தானே!
***

ஆரியர்கள் இந்தியாவுக்கு வரும்போது பெண்களை அழைத்து வரவில்லை; ஆனால், மனுதர்மத்தை மறக்காமல் கொண்டு வந்தனர். அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியாரின் இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்.
கோவிலுக்குப் போகாதே என்று சொல்லுகின்ற நாங்கள், சபரிமலையில் பெண்கள் கோவிலுக்குள் போகவேண்டும் என்கிறோம். கோவிலுக்கு வாருங்கள் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பார்ப்பனர்கள், பெண்களே கோவிலுக்குப் போகாதீர்கள் என்கிறார்கள். இதற்குள்ளிருக்கும் வேறுபாட்டைப் புரிந்துகொள்வீர்.
***

பசு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினால், எருமை மாடுகள் பாதுகாப்பு இயக்கத்தை நடத்த வேண்டி யிருக்கும். பசுவை விட எருமைதான் அதிக பால் கொடுக்கிறது.
***

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்கிறார்கள். 1924 ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி ஆட்சியிலே அரசு ஆணை என்ன தெரியுமா?
எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனித னாய் இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவை களில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.
திராவிடத்தால் யாரும் வீழ்ந்தது கிடையாது - எழுந்ததுதான் வரலாறு.
***

பெண்களுக்கு வாக்குரிமை என்பது இந்தியா விலேயே சென்னை மாநிலத்தில் கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
***

முற்போக்காளர்களைக் கொலை செய்வது, மதக் கலவரங்களைத் தூண்டுவது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸில் எட்டு அமைப்புகள் உள்ளன (Shadow Army).
***

ஆர்.எஸ்.எசை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான மூஞ்சே அந்தக் காலகட்டத்திலேயே முசோலினியைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று, அதேபோல, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார்.
***

இராணுவப் பயிற்சி நிறுவனங்களை நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். மாலேகான் குண்டுவெடிப்பில் பயன் படுத்தப்பட்ட வெடிமருந்து என்பது இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய ஒன்று. இதனை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தியது என்றால், இராணு வத்தில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வெடிமருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்படி கிடைத்தது? இராணுவ அதிகாரியாக இருந்த பிரசாந்த் புரோகித்து தான் இராணுவப் பயிற்சி நிறுவனத்தை நடத்தக் கூடியவர் என்பதிலிருந்து இதன் இரகசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.
***

கருப்புச் சட்டை என்பது போராட்டத்தின் சின்னமாகி இருக்கிறது. எந்தக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தயாராக வைத்துக் கொண்டுள்ளனர். நீதி சொல்லும் இடத்தில் இருக்கும் நீதிபதியும் கருப்புச்சட்டைதான் அணிகிறார்!
***

திருச்சியில் கடந்த ஞாயிறன்று கூடிய கருஞ்சட்டைப் பேரணி - மாநாடு இந்துத்துவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை. நாட்டில் நடப்பது இனப்போராட்டமே. நாங்கள் பதவிக்குப் போகமாட்டோம் - ஆனால், அந்த இடத்திற்கு யார் போகவேண்டும் என்று நிரப்பந்திக்கும் சக்தி எங்களுடையது.
***

மதவாத பார்ப்பனிய சக்திகளை அனுமதிக்க முடி யாது - கூடாது - தந்தை பெரியார் மண்ணில் அதனைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். உதயசூரியன் இங்கே உதிக்கும்போது அந்தக் காரிருள் மறையும் என்பதில் அய்யமில்லை.
***

ரத்த தானம் கொடுக்கும்போதும், உடல் உறுப்புகள் கொடையளிக்கும்போதும் வராத ஜாதி, மற்ற விடயங்களில் மட்டும் எங்கிருந்து குதிக்கிறது.
***

மதம் மனிதனைப் பிரிக்கிறது - ஜாதி மனிதனைப் பிரிக்கிறது - கடவுள்கள் மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால், அனைவரையும் இணைக்கக்கூடிய தத்துவம் தான் தந்தை பெரியார்.
***

ஜாதியற்ற பேதமில்லாப் பெருவாழ்வுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைத் தத்துவம்! அதை சமைப்பதே நமது கடன். அந்த உறுதிமொழியை தந்தை பெரியார் நினைவு நாளில் மேற்கொள்வோம்!
***

தந்தை பெரியாரின் நினைவு நாள் பொதுக் கூட்டத்தினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கவிஞர் கனிமொழிக்கு ஆசிரியர் பாராட்டும் - விருதும்!
கவிஞர் கனிமொழி நம் குடும்பத்துச் செல்வம். சிறந்த நாடாளுமன்றவாதி என்று அவருக்குக் கிடைக்கப் பெற்ற விருது தாய்க்கழகமான திராவிடர் கழகத்துக்கும் பெருமையாகும். எங்கள் மாணவர் அவர். ஆசிரியரை மிஞ்சக்கூடிய அளவுக்கு மாணவர் வளர்ச்சி அடைவது அந்த ஆசிரியருக்குப் பெருமையே!
இந்த விருதின்மூலம் தி.மு.க.வுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பகுத்தறிவாளர் கவிஞர் கனிமொழி என்று கூறி, அய்யா - அம்மா உருவம் பொறித்த நினைவுப் பரிசினை பலத்த கரவொலிக்கிடையே கவிஞர் கனிமொழிக்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சால்வை போர்த்தி தந்தை பெரியார் சிலையையும் வழங்கி மகிழ்ந்தார்.
-  விடுதலை நாளேடு, 25.12.18