திராவிட மாணவர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிட மாணவர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 மே, 2025

திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள்

 


விடுதலை நாளேடு

சென்னை, மே 11 தேசிய கல்வி ஒழிப்பு, ‘நீட்’ தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு, மாணவர்கள் மத்தியில் பரவிவரும் போதை ஒழிப்பு, ஜாதி-மத தாக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பது உள்பட இக்கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

11.05.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற  திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரை யாடல் கூட்டத்தில் முன்மொழியப்படும் தீர்மானங்கள்:

முன்மொழிந்தவர்: ஆ.அறிவுச்சுடர்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 1:

தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்புக்கு நன்றி!

நீட், தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா யோஜனா என்று தொடர்ந்து சமூகநீதியைச் சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடுஞ்செயல்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு, அதற்கெதிரான அணியைத் திரட்டி, விழிப்புணர் வூட்டி, இந்தப் பாதிப்புகள் தமிழ்நாட்டு மாணவர்களை அண்டாமல் காத்து வரும் தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்புக்குத் திராவிட மாணவர் கழகம் தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறது. தந்தை பெரியாரின் அடியொற்றி, 80 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கை, 60 ஆண்டுகளுக்கும் மேலான விடுதலை ஆசிரியப் பணி, 48 ஆண்டுகளாகத் தொடரும் இயக்கத் தலைமை ஆகியவற்றால், தமிழ்நாடும், இந்தியாவெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுள்ள இட ஒதுக்கீடும், சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வும் வரலாற்றில் என்றும் நிலைக்கக் கூடியவை ஆகும். தொடரும் சவால்களை எதிர்கொள்ள தமிழர் தலைவரின் ஆணை ஏற்று, திராவிட மாணவர் கழகத்தின் செயல் பாடுகளைத் தீவிரமாக்கிட உழைப்பது என்று இக் கூட்டம் உறுதியேற்கிறது.

முன்மொழிந்தவர்: செ.பெ.தொண்டறம்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 2:

மாநில உரிமை மீட்பு
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மறைமுகமாகக் கட்டுப்படுத்த முயன்ற தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் மூலம் தடுத்து, தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், சமூகநீதியையும், பல்கலைக்கழகங்களின் உரிமையையும் மட்டுமல்லாமல், இந்திய மாநிலங்கள் அனைத்தின் உரிமையையும் மீட்டுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு திராவிட மாணவர் கழகம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: த.சிவபாரதி

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 3:

‘விடுதலை’, பகுத்தறிவு ஏடுகளை
பள்ளி, நூலகங்களில் இடம் பெறச் செய்க!

தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களில் சமூகநீதியும், அறிவியல் மனப்பான்மையும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டியுள்ளார். இவற்றையே மூச்சாகக் கொண்டு, கடந்த 90 ஆண்டுகளாக வெளிவரும் ‘விடுதலை’ நாளேட்டையும், ‘உண்மை’, ‘The Modern Rationalist’, ‘பெரியார் பிஞ்சு’ ஏடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்லுதல் இத்திசையில் பெரும் பயனை விளைவிக்கக் கூடியதாகும். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைத்துப் பள்ளிகளிலும், நூலகங்களிலும் இவ்வேடுகள் கிடைக்கச் செய்ய வேண்டுமென இக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: சு.ச.திராவிடச் செல்வன்

(சட்டக்கல்லூரி அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 4:

2025-–2026 ஆம் ஆண்டுக்கான
திராவிட மாணவர் கழகத்தின் செயல் திட்டங்கள்:

(i) திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி களில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்வது.

(ii) அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி, கல்வி நிலையங்கள் அருகில் திராவிட மாணவர் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்து “JOIN DSF” சுவர் எழுத்து பிரச்சாரம் செய்வது.

(iii) கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்துவது.

(iv) திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது.

(v) அனைத்து மாவட்டத்திலும் திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்குச் சமூக ஊடகப் பயிற்சி அளிப்பது.

(vi) உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளிதழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாக PDF மூலமாக மாணவர்கள் மத்தியில் அனுப்பி பிரச்சாரம் செய்வது.

(vii) 1925-2025 நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்க வரலாறு, குடிஅரசு இதழ் வரலாறு ஆகிய இரு பொருளைக் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்துவது.

முன்மொழிந்தவர்: ம.சூர்யா

(கோபி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர்)

தீர்மானம் எண் 5:

போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கவனத்தைச் சிதைத்து, வாழ்க்கையை அழிக்கும் பல்வேறு போதைகள் நம்மைச் சூழ்ந்திருப்பதை இக் கூட்டம் மிகுந்த கவலையுடன் கவனத்தில் கொள்கிறது. மதம், ஜாதி, பதவி, சினிமா, சமூக ஊடகம், புகை, மது, மருந்து போதைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன. திராவிட மாணவர் கழகம் போதை ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்துள்ளது.

மனிதருக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் குணமான சுயமரியாதையை இல்லாதொழிப்பதில் போதைப் பழக்கங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடக்கும் இக் காலகட்டத்தில், நம் மாணவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படாமல் காக்க, மீண்டும் அதே போன்று, பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மாணவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் கல்வி நிலையங்களிலும், மாணவர்கள் பெரிதும் வசிக்கும் இடங்களிலும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பல்துறைப் போட்டிகள், வழிகாட்டல் முகாம்கள், துண்டறிக்கை, குறுங்காணொலிகள், திரையிடல்கள் ஆகியவற்றின் மூலம் தனித்துவத்துடன் ஆண்டு முழுவதும் போதை ஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மாணவர் கழகத் தோழர்கள் அதிக அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வரவேண்டுமென்று இக் கூட்டம் அழைப்புவிடுக்கிறது.

முன்மொழிந்தவர்: சீ.தேவராஜ் பாண்டியன்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 6:

மாணவர்களிடம் ஜாதி, மத அமைப்புகள் ஊடுருவலா? நடவடிக்கை தேவை!

ஜாதி, மத உணர்வைத் தூண்டும் விதமாகச் செயல்படும் அமைப்புகளை எக் காரணம் கொண்டும் மாணவர்களை அணுகவிடாமல் தடுப்பதும், மாணவர்களிடம் இத்தகைய உணர்வுகள் தலையெடுக் காமல் விழிப்புணர்வூட்டுவதும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பணிகளாகும்.  சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கத்துக்காக உழைக்கும் அனைத்து அமைப்புகளும், அரசும், குறிப்பாக காவல்துறையும், கல்வித்துறையும் இப் பிரச்சினையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இக் கூட்டம் அழைப்பு விடுக்கிறது.

முன்மொழிந்தவர்: ச.சஞ்சய்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 7:

தமிழர் தலைவரின் ஆணையேற்போம்!

போராட்டக் களம் காண்போம்!

நீட் தேர்வால் தற்கொலைகள் தொடர்வதும், மாணவர்களும், பெற்றோரும் அலைக்கழிக்கப்படுவதும் நாளும் தொடர்கதையாகி வருகிறது. மருத்துவக் கல்வியையும், கட்டமைப்பையும் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்டும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் விரோதமானவையாகும். நீட் தேர்வு ஒழிப்புப் போர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இறுதி வெற்றி கிட்டும் வரை சற்றும் ஓயாமல், அயராமல் போராடி, நீட்டை ஒழித்து, சமூகநீதியையும் மாநில உரிமையையும் மீட்க தமிழர் தலைவரின் ஆணையேற்க இக் கூட்டம் உறுதி பூணுகிறது.

மும்மொழிக் கொள்கையையும், தேசியக் கல்விக் கொள்கையையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிப்பதைக் கண்டித்து, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் மே 20 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!

 


விடுதலை நாளேடு



சென்னை, மே 12  மாணவர்களும், இளைஞர்களும், மகளிரும் இத்தனைப் பேர் திரண்டு இருப்பதைப் பார்க்கும்போது, நாம் உற்சாகம் பெறுகிறோம் – இளமை பெறுகிறோம். தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்பதற்கு இதுபோன்ற எழுச்சிக் கூட்டமே பதில்! தந்தை பெரியார் பணி முடிப்பதே நமது ஒரே இலக்கு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

திராவிடர் மாணவர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

நேற்று (11.5.2025) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட, தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், அவைத் தலைவர் மற்றும் மகளிர் அணியின் புதிய பொறுப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களாகிய அத்துணை தோழர்களையும் தனித்தனியே பெயர் சொல்லி அழைக்க நேரமின்மையால், அனைவரையும் அழைத்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும்.

நான் பேசவேண்டிய செய்திகள் ஏராளம் இருக்கின்றன. குறுகிய காலத்தில் நம்முடைய மகளிரணிப் பொறுப்பா ளர்கள் தமிழ்ச்செல்வி, மணியம்மை மற்ற தோழர், தோழியர்கள், இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து உற்சாகமாக இக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வணக்கங்களும், வாழ்த்துகளும்!

பெண்களை முன்னுக்குக் கொண்டுவரும்

இயக்கம் இது!

சமூகநீதிக்காக இருக்கின்ற இயக்கம் நம்மு டைய இயக்கம். அந்த சமூகநீதிக்கு இந்த நிகழ்வே ஓர் உதாரணமாகும்.

அது என்னவென்றால், நம்முடைய இளைஞரணி தோழர்கள், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்  எல்லாம் முன் வரிசை யில் அமர்ந்திருந்தார்கள். நாங்களும், அவர்களை யொட்டியேதான் தலைமைக் கழகப் பொறுப்பா ளர்கள் எல்லாம் அமர்ந்திருந்தோம்.

மகளிர், நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள் என்றவுடன், அவர்களையெல்லாம் முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்று  முன்னுக்குக் கொண்டு வந்துவிட்டோம். பொறுப்பாளர்கள் நாங்களும் எங்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டோம். பெண்களை முன்னுக்குக் கொண்டுவரும் இயக்கம்தான், பெரியாரின் இயக்கமாகும்.

இளைஞரணியினர் முன் வரிசையில் அமர்ந்திருந்த தால், மகளிரணியினர் பின்தங்கிய சமுதாயமாக ஆகிவிட்டார்கள். இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் ஆக்கப்பட்டது.

அவர்களுக்கு எந்தவிதமான தகுதிக் குறைவும் கிடையாது. நீங்கள் முன்பே வந்து அமர்ந்து விட்டதுபோன்றுதான், நிறைய பேர் அவர்களைத் தள்ளிவிட்டு, அமர்ந்துவிட்டார்கள்.

அவர்களுக்கும், நமக்கும் வேறுபாடு என்ன வென்றால், அவன், நம்மை ‘‘முன்னேறாதே’’ என்று பிடித்துக் கீழே தள்ளிவிட்டான்.

ஆனால், நாம் அப்படியில்லை.

நீண்ட நாள்கள் அவர்கள் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் முன்னுக்குப் போகட்டும் என்று நாம் பின்னுக்கு வந்துவிட்டோம். இது தொடரவேண்டும். இதுவே ஒரு மகிழ்ச்சிகரமான தொடக்கமாகும், இது ஒன்று.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்!

இரண்டாவது, தோழர்களே! ஆஸ்திரேலியா பிரச்சார பயணத்திற்கு நானும், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும் சென்றிருந்தோம் என்பது பெரும்பகுதி தோழர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அங்கே நாங்கள் எதிர்பார்த்ததைவிட, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களின் எதிர்பார்ப்பைவிட வெற்றி கரமாக நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்வளவு பேர் ஆதரவு நமக்கு இருக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டார்களே நினைக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில், மூன்று வாரங்கள் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கிருந்து திரும்பி வரும்போது, என்னுடைய உடல்நிலை கொஞ்சம் தளர்ந்தது. ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை.

ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும்போதுகூட அதுபோன்ற  நிலையில்தான் என்னுடைய உடல்நிலை இருந்தது. என்னுடைய இணைர் உள்பட ஆஸ்திரேலிய பயணம் செல்வதை பலரும் விரும்பவில்லை.

முதலமைச்சர்கூட, ‘‘என்ன அண்ணே, அவ்வளவு தூரம் பயணம் போகவேண்டுமா? உங்களால் முடியுமா?’’ என்று கேட்டார்.

‘‘பரவாயில்லீங்க’’ என்றேன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிகள் ஒன்றுகூட தடைப்படவில்லை. ஆனால், உடல் கோளாறுகள், இடையூறுகள் இருந்துகொண்டுதான் இருந்தன.

ஒரு பக்கம் வலி இருந்தாலும், இன்னொரு பக்கம் அய்யாவினுடைய கொள்கையின் வலிமையினாலும், தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றதாலும், மகிழ்ச்சியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

உடல்நிலையையும்
பொருட்படுத்தாமல்…

‘‘உணவு விடுதியில் நீங்கள் சாப்பிடவேண்டாம்; வீட்டிலிருந்து தயாரிக்கப்படும் உணவை ஆசிரியருக்குக் கொடுத்துவிடுகிறோம்’’ என்று சொல்லி, அதன்படியே செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் கழகப் பிரச்சாரத்தை  முடித்துக்கொண்டு, இங்கே வந்த பிறகு, அதனுடைய தாக்கம் இருந்தது. அதுவரையில், கொள்கைப் பார்வை, பயணங்கள் இதில்தான் என்னுடைய கவனம் இருந்தது. உடல்நிலையைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. வலி இருந்தாலும், மேடை ஏறியவுடன் அந்த வலியைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்று இரவு 12 மணிய ளவில்தான் தூங்குவேன். அதிகாலை எழுந்துவிடுவேன். இப்படியே இருந்ததால், என்னுடைய உடல்நிலை தளர்ந்தது.

ஆகையால், சில மருத்துவப் பரிசோதனைகளை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு, மருத்துவர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என்று தடுத்தனர்.

அந்த நேரத்தில்தான், வெளியூர் பயணத்தை ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை நிறுத்தினேன். துணைத் தலைவர் கவிஞர், ‘விடுதலை’யில் என்னுடைய உடல்நிலையைப்பற்றிய அறிவிப்பைப் போட்டு, ‘‘ஆசிரி யரின் வெளியூர் பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன’’ என்று அறிவித்தார்.

மருத்துவர்கள் சொன்னதற்குக் கட்டுப்பட்டு, நான் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தேன்.

அதற்குப் பிறகு, நான் என்னுடைய உடல்நிலை யைப்பற்றி கவலைப்படவில்லை. கழகப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டேன்.

மருத்துவர்கள் கொடுப்பது மருந்து –

உங்களைப் பார்ப்பதுதான் மாமருந்து!

பொதுவாக, மருத்துவர்கள் எனக்குக் கொடுப்பது மருந்து. ஆனால், நான் என்னுடைய உடல்நலனைப்பற்றி கவலையில்லாமல், அதைப்பற்றி மறந்திருந்தேன். பிறகு, என் உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தவுடன், எனக்குத் தோன்றியது, ‘‘உடனே கமிட்டிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றேன்.

ஆனால், நான் எதிர்பார்த்தைவிட, நிறைய பேர் வந்திருக்கிறீர்கள்.

எனவே, என் உடல்நலத்திற்காக எனக்கு மருத்து வர்கள் இதுவரையில் கொடுத்தது மருந்து!

ஆனால், இன்றைக்கு இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, சகோதரிகள், தாய்மார்கள், மகளிர ணித் தோழர்கள், மாணவர் கழக, இளைஞரணித் தோழர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது, இதுதான் எனக்கு மாமருந்து.

என்னுடைய உடல்நலம் நன்றாக இருக்கிறது. இனிமேல், என்னை ஓடச் சொன்னீர்கள் என்றாலும், ஓடுவேன், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

எனக்கு என்றால், தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு அல்ல; இந்த இயக்கத்திற்கு மாமருந்து!

தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று சிலர் கேட்டார்கள்.

அவர்களுக்கு இந்த கமிட்டிக்கு வந்திருக்கும் கூட்டமே பதில்!

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்பவர்களுக்கு இத்தகைய கூட்டம்தான் பதில்!

இவ்வளவு பேர் மகளிர் இந்தக் கமிட்டியில் பங்கேற்பார்கள் என்று நானே நினைக்கவில்லை. தமிழ்ச்செல்வி, மணியம்மை போன்றவர்களைப் பாராட்ட வேண்டும். உங்களையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது.

பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்று வார்த்தையால் மட்டும் சொல்லக்கூடாது. மகளிரணியினர் இதுபோன்ற சந்திப்புகளில் அதிகம் கலந்துகொள்ளவேண்டும். உங்களையெல்லாம் பார்க்கும்போது, உற்சாகம் தானாக வருகிறது.

அதேபோன்று, என்னுடைய பேட்டரி, உங்களால் சார்ஜ் ஆகிறது; உங்கள் பேட்டரி, என்னால் சார்ஜ் ஆகிறது.

இக்கமிட்டி முடிந்து திரும்போது, நானும் அதிக உற்சாகத்தோடு செல்வேன்; நீங்களும் உற்சாகமாகத்தான் போவீர்கள்.

பெரியார் காலத்தில், மாணவர் கழகம் மட்டும் இருந்தது. திராவிடர் கழகம் உருவாவதற்கு ஓராண்டிற்கு முன்பே குடந்தையில் உருவானது அது என்பது வரலாறு.

ஆனால், இளைஞரணி, மகளிரணி போன்றவை அதற்குப் பிறகுதான் உருவாகியது.

அய்யா காலத்தில், மகளிரணி என்று தனியே கிடையாது. அய்யாவுக்குப் பின், இயக்கத்திற்கு அம்மா தலைமை தாங்கினார்.

இந்தியாவிலேயே ஒரு நூற்றாண்டைக் காணக்கூடிய இயக்கம்; நீதிக்கட்சியோடு இணைத்தால், நூற்றாண்டைத் தாண்டியிருக்கக் கூடிய இயக்கம், இந்த இயக்கம்.

தந்தை பெரியார் என்ற இமயமலை போன்ற ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவர், அவர் உடலால் மறைந்துவிட்ட ஒரு நிலையில், அந்த இடத்தை நிரப்பக்கூடியது யார்?

தந்தை பெரியாருக்காகவே வாழ்ந்த அன்னை மணியம்மையார்!

பெரியார் அவர்கள், யாரையும் அதற்காகப் பரிந்துரை செய்யவில்லை. அதேநேரத்தில், அம்மா அவர்கள், தந்தை பெரியாருக்காகவே வாழ்ந்தவர்; அவருக்காகவே வாழ்க்கையைத் தந்தவர்.

இன்று அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாள். அன்னை நாகம்மையார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டிக்காத்தவர்கள். இயக்கத் தோழர்களையெல்லாம் தன்னுடைய பிள்ளைகளாகக் கருதியவர். ஜாதி மறுப்புத் திருமணம், கைம்பெண் திருமணம், ஜாதி, மத மறுப்பு மணம், மணவிலக்குப் பெற்றவர்களுக்கு மறுமணம் செய்து வைத்த பெருமை அன்னை நாகம்மையாருக்கு உண்டு.

அன்னை நாகம்மையாருக்கும், அன்னை மணி யம்மையாருக்கும் என்ன வேறுபாடு என்றால், அன்னை நாகம்மையார் அவர்கள், பெரியார் அவர்களை, 13 வயதில் திருமணம் செய்துகொண்டவர். இயல்பான மணவாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய வாழ்விணையராக ஆக்கிக் கொண்டது, சட்டப்படிக்கான ஒரு ஏற்பாடே தவிர, மற்றபடி அன்னை நாகம்மையாருடன் வாழ்ந்தது போன்று அல்லாது, தாம்பத்திய வாழ்க்கை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

யாருக்காக செய்தார்கள் என்றால், நமக்காக, நம்முடைய இயக்கத்திற்காக.

இந்த இயக்கத்தின் பலம்
எங்கே இருக்கிறது தெரியுமா?

அந்த ஏற்பாட்டை அன்றைக்கு அய்யா செய்ய வில்லை என்றால், இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்தில் நாம் அமர்ந்திருக்க முடியுமா? பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம், 50 ஆண்டுகள் நிலைத்து இருக்கிறது. எந்தக் கொம்பனாலும் இதை அசைத்துப் பார்க்க முடியாது. இந்த இயக்கத்தினுடைய வேர் மிகப் பலமாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஓர் இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுகின்ற ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

காரணம், அன்னை மணியம்மையார் அவர்களுடைய துணிவு. அன்னையாரைப் பார்த்தால், மிகவும் எளிமையாக இருப்பார். கையில் ஒரே ஒரு பைதான் வைத்திருப்பார். அதில் ஒரு மாற்றுச் சேலையும், ரவிக்கையும் வைத்திருப்பார். கார் கூட அன்னையாருக்குத் தனியே கிடையாது. அய்யாவினுடைய வேனைத்தான் பயன்படுத்துவார்.

அய்யா காலத்தில் நான் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, அதற்குப் பிறகு அய்யா மறைந்த பின்னும் மீண்டும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டேன்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில், அன்னையாரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற பெண் உலகத்திலேயே அன்னை மணியம்மையார்தான்!

ஏனென்றால், ஒரு நாத்திக இயக்கம், சுயமரியாதை இயக்கம் – அந்த இயக்கத்திற்கு முதன்முறையாக, இந்தியாவிலேயே, ஏன் ஆசியாக் கண்டத்திலேயே, உலகத்திலேயே என்றுகூட சொல்லலாம்; ஒரு சமூகப் புரட்சி இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார் என்பது அன்னை மணியம்மையார் அவர்கள்தான்.

அதற்குக் காரணம், அய்யா அவர்கள் போட்ட பாதை தான். அய்யா உருவாக்கியதுதான்; அன்னையார்மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை நியாயப்படுத்தப்பட்டு, அய்ந்தாண்டுகள் அன்னையார் அவர்கள், அய்யா இருந்திருந்தால், எப்படிப் போராட்டக் களத்தில் நிற்பாரோ, அதே பொலிவோடு நின்றவர்.

இதே இடத்தில், இந்த இடத்திற்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. ‘‘இராம லீலா’’வை வடநாட்டில் கொண்டா டியபோது, தமிழ்நாட்டில், ‘‘இராவண லீலா’’வை நடத்தி, இந்தியாவையே அலற வைத்த பெருமை அன்னை மணியம்மையாரின் தலைமைத்துவம்தான்.

அதேபோன்று, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டம். அன்னை மணியம்மையார் அவர்கள், மருத்துவமனையில் பாதி நாள்களிலும், வெளியில் மீதி நாள்களும் இருப்பார்கள்.

அய்ந்தாண்டுகள்தான் தலைமைப் பதவியில் இருந்தார். அவருடைய கணக்கு என்னவென்றால், பெரியாரை நூறாண்டுகள் வாழ வைக்கவேண்டும் என்பதுதான். அதில் நான் தோற்றுவிட்டேனே என்று வருத்தப்பட்டார்.

அன்னையாரைத் தூற்றியோரும் பிற்காலத்தில் போற்றினர்!

அன்னை மணியம்மையார் – பெரியார் திரும ணத்தைப்பற்றி விமர்சனம் செய்து, இயக்கத்தைவிட்டு வெளியேறிய அண்ணா அவர்கள், பிற்காலத்தில், ‘‘அன்னையாரால்தான், அய்யா நீண்ட பல ஆண்டுகாலம் வாழ்ந்தார்’’ என்று சொன்னார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பின்னாளில், ‘‘அன்னை என்று அழைக்காமல், இந்தப் பொடிப்  பெண்ணை வேறு என்னவென்று அழைப்பது?’’ என்றார்.

அப்படிப்பட்ட காலத்தில், நான் தயங்கித் தயங்கித்தான் அன்னையாரிடம் ஒரு கருத்தைச் சொன்னேன். ஏனென்றால், இயக்கத் தலைவர் அவர்.

இங்கேகூட சொன்னார்கள், ‘‘தலைவர் சிந்திக்க வேண்டும்; செயலாக்குவது தொண்டர்கள், தோழர்கள்’’ என்று.

அதற்கு நேரெதிராக தொண்டர்கள் சிந்திக்க ஆரம்பிக்கக் கூடாது. நேற்றுகூட பாகிஸ்தான் பிரச்சி னையில், முப்படைத் தளபதி என்ன சொல்கிறாரோ, அதைத்தான் செய்யவேண்டும்.

‘‘இல்லை, இல்லை, எனக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருக்கிறது’’ என்று சொல்லி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இராணுவம் என்ன ஆவது?

இந்த இயக்கம், பகுத்தறிவு இயக்கம். அப்படியானால், ஏன் தொண்டர்கள் யோசிக்கக்கூடாதா? என்று கேட்கலாம்.

யோசிக்கலாம்; உங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு. பகுத்தறிவுப்படி எல்லா கருத்துகளையும் சொல்லலாம். ஆனால், எங்கே? இதுபோன்ற கமிட்டிகளில்.

மாறுபடலாம்; ஆனால்…

அதற்குப் பிறகு, விவாதம் செய்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு,  நாமெல்லாம் கலந்து ஒரு முடிவை எடுத்த பிறகு, ஒரே கருத்துதான் இருக்கவேண்டும். இந்தப் பதில், மகளிரணிக்கு மட்டுமல்ல, இளைஞரணிக்கும், மாணவர் கழகத்திற்கும் சேர்த்துதான் சேர்த்துத்தான்.

இல்லை இல்லை, எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்று சொன்னால், பகுத்தறிவு பற்றி பேசுகி றீர்களே, அவர்களுக்கு உரிமை இல்லையா? அவர்கள் என்ன அடிமையா? என்று சிலர் கேட்கலாம்.

மாறுபடுவதற்குத் தாராளமாக உரிமை உண்டு. யாருக்கு? ஆனால், நாணயமாக அவர் வெளியே போய்விட வேண்டும்.

இங்கே இருந்துகொண்டே, முன்னால் ஒன்று பேசுவது; பின்னால் ஒன்று பேசுவது இருக்கக்கூடாது.

‘‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூற்றும் ஆக்கத் தரும்’’

ஆகவே, இந்த இயக்கத்தில் அதுபோன்று கிடையாது. இந்த இயக்கம் நாளுக்கு நாள் பரிசுத்தமாகிறது. தங்கத்தை நெருப்பில் போடப் போட, அது பரிசுத்த மாவதைப்போன்று!

நீங்கள் பாத்திரங்களைப் புளி போட்டு தேய்க்கும் போது, பாத்திரம் தேய்வதுபோன்று இருந்தாலும், அந்தப் பாத்திரம் மிகப் பொலிவோடு, ஒளியோடு, சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. அதுபோன்றதுதான் நம்முடைய இயக்கமும்.

மகளிரணியை ஏற்படுத்தாதது, ஏன்?

அன்னை மணியம்மையாரிடம் கேட்டோம், ‘‘நம்முடைய இயக்கத்தில் மகளிரணி அமைப்பை ஏற்படுத்தவேண்டும்’’ என்று.

கொஞ்சம் யோசித்தார் அன்னை மணியம்மையார்.

‘‘என்னம்மா’’, என்றோம்.

‘‘புகார் நிறைய வரும், அதனால்தான் யோசிக்கிறேன்’’ என்றார்.

ஏனென்றால்,  அம்மா அவர்களைப்பற்றி அந்த அளவிற்கு அவதூறுச் செய்திகளைப் பரப்பினார்கள். உலகத்தில், வேறு எந்தப் பெண்ணும், அன்னையார் போன்று, இழிவை, அவதூறைச் சந்தித்திருக்க முடியாது. ஆனால், அவையெல்லாம் உண்மையான புகார் கிடையாது. அதனால், அன்னை மணியம்மையார் மகளிரணி வேண்டாம் என்று நினைத்திருப்பார்.

அப்போது நான் சொன்னேன், ‘‘அம்மா, இது ஒரு முயற்சிதான்; நம்முடைய தோழர்கள் கட்டுப்பாடா னவர்கள்; ஒழுக்கமானவர்கள், நாணயமானவர்கள்; மற்ற இயக்கத்தில் வேறுமாதிரியாக இருக்கலாம்; நம்முடைய இயக்கத்தில் அதுபோன்று இல்லை’’ என்றேன்.

‘‘சரி, உன்னுடைய இஷ்டம்; மகளிரணியை தொடங்குங்கள்’’ என்றார் அன்னை மணியம்மையார்.

பிறகு, தஞ்சாவூர் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் திராவிடர்  கழக மகளிரணி அமைப்பைத் தொடங்கினோம்.

அதேபோன்று தோழர்களே, இளைஞரணித் தோழர்க ளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். அய்யா காலத்தில் இளைஞரணி என்று தனியே ஒன்று கிடையாது.

அய்யாதான் முதல் இளைஞர். ஏனென்றால், இளைஞர் என்பது வயதைப் பொருத்தது அல்ல; உழைப்பைப் பொருத்ததுதான். நான் இளைஞன்தான். இளைஞரணிப் பொறுப்பாளன்தான்; எனக்கு ‘‘92 வயதாகிவிட்டது, 92 வயதாகிவிட்டது’’ என்று மிரட்டாதீர்கள்; எனக்கு 29 வயதுதான் – உங்களையெல்லாம் பார்த்த பிறகு, இந்தக் கூட்டம் முடிந்த பிறகு!

92 வயது எப்போது என்றால், சாப்பிடும்போது ஞாபகத்திற்கு வரும் – அளவோடு சாப்பிடவேண்டும் என்பதால்.

நோய் வந்தவுடன், மருந்து சாப்பிடும்போது எனக்கு 92 வயது.

எனக்கு வயது 92 அல்ல; 29 தான்!

உங்களையெல்லாம் பார்க்கும்போது, போராட்டக் களத்தில் நிற்கும்போது, எழுதும்போதெல்லாம் எனக்கு 29 வயதுதான். இன்னுங்கூட வயதைக் குறைக்கவேண்டுமானால், குறைத்துக் கொள்ளலாம்.

அந்த உற்சாகம் நமக்கு இருக்கின்ற வரையில் நாமெல்லாம் என்றைக்கும் இளைஞர்கள்தான். அதுதான் நம்முடைய கொள்கை.

இரண்டு பேர்தான் அந்த உற்சாகத்தை நிலைநாட்டுகிறார்கள்.

ஒன்று, அய்யாவும், அய்யாவினுடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்ற உங்களைப் போன்ற இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள்.

இன்னொருவர், நம்முடைய கொள்கை எதிரிகள்.

அவர்கள்தான், நம்மைக் கொஞ்சம்கூட  சோர்வடையவிடாமல், ‘‘இருக்கீங்களா, நாங்கள் சவால் விடுகிறோம்’’ என்கிறார்கள்.

‘‘நீ, வாய்யா, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லுகின்ற துணிச்சல் நமக்குண்டு.

இந்த இரண்டு பேரால்தான், எங்களுடைய ஆயுள் நீளுகிறது. இதில் வேறொரு ரகசியமும் கிடையாது.

ஓர் இராணுவ வீரன்போல…

எதிரி நன்றாக இருக்கிறான்; கடுமையாக இருக்கிறான். அப்போது போர்க் களத்தில் நிற்கின்றவன் தூங்கிக் கொண்டா இருப்பான். அவனுக்கு எதிரில் நிற்பவர்கள் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், இவனுக்குத் தூக்கம் வருமா? எதிரில்  நிற்பவர்களை ஒழிப்பது எப்படி? அடக்குவது எப்படி? என்பது ஓர் இராணுவ வீரனுக்கு எப்படி கடமையாக இருக்குமோ, அதுபோன்றுதான் நம் எல்லோருக்கும்.

அவரவர்கள் வயதை மறந்துவிட்டு, அவரவருடைய உணர்வின் காரணமாக இங்கே வந்திருக்கிறீர்கள். இக்கமிட்டி முடிந்து செல்லும்போது, அனைவரும் இளைஞரணியினர்தான். ஆகவேதான், இளைஞரணியையும், மகளிரணியையும் பிரிக்கவில்லை.

எங்களைப் போன்றவர்களை உருவத்தில் பார்த்தால் குறைவாகத்தான் இருப்போம். மணியம்மை, மதிவதனியைப் பார்த்தீர்கள் என்றால், உருவத்தில் சிறிதாக இருக்கிறோம் என்று நினைக்கலாம் கொள்கை பலமாக இருப்போம்.

ஆகவே தோழர்களே, நம்முடைய குடும்பம் பலமான குடும்பமாகும்.

இயக்கத்தின் பலம் எது?

அய்யா உருவாக்கிய  இந்த இயக்கம், மிகப் பலம் வாய்ந்த இயக்கமாகும். அதில் எத்தனை பேர் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு காலத்தில் நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கைக் குறைவுதான். படிக்காதவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

ஆகவே, எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ண பலமும், செயல்திட்டமும், உறுதியும், வீரமும்தான் முக்கியம்.

ஆகவே, நீங்களெல்லாம் இங்கே வந்தமைக்காக மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் நீங்கள் வரவேண்டும். இந்த ஆண்டிற்கு தனியே ஒரு சிறப்பு உண்டு.

தந்தை பெரியார் பணி முடிப்பதே
நமது ஒரே இலக்கு!

சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு அது. இளைஞர்களுக்கும் சேர்த்துதான் இதைச் சொல்லுகிறேன், கவனமாகக் கேளுங்கள்.

அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘ஒரு சிறிய குப்பியில் மருந்தை அடைத்து, அதில் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியதுபோன்று, பெரியார் தமது உழைப்பை – பல நூற்றாண்டுகளை, ஒரு நூற்றாண்டுக்குள் அடைத்துவிட்டார்’’ என்றார்.

(தொடரும்)

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை தீர்மானங்களை நிறைவேற்றும் விதமாக அனைவரும் நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.




புதன், 11 செப்டம்பர், 2024

சென்னையில் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்


விடுதலை நாளேடு

சென்னை, ஆக.19- திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.08.2024 அன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.

கூட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை ஏற்று உரையாற்றினார். மேலும் இக்கூட் டத்தில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொண்டறம், பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் அறிவுச்சுடர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
கூட்டத்தில் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கவனிக்கோ இளந்திரையன்,பாரதி, சஞ்சய், யாழ்ஒளி, வெங்கடேஷ், அபினா சுருதி, நிலவரசி மற்றும் சென்னகிருஷ்ணன் ஆகிய தோழர் கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கூட்டத்தின் இறுதியில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் நாகை மு.இளமாறன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை அருகே சிளம்பவேளங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் (20) இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது பேரதிர்ச்சியை தருகிறது. இன்னும் எத்தனை மாணவர்களை இழக்கப் போகிறோம்? இதற்கு பிறகு நீட்டினால் ஒரு மாணவர் உயிரிழந்து விடக் கூடாது, சமூக நீதியும், கல்வி உரிமையும் பறிக்கப்படக்கூடாது, என்ற நோக்கில் நீட்டை ஒழிக்கப் போராடுவோம்.

உயிரிழந்த மாணவர் தனுஷ் அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
செப்.17 உலகத் தலைவர், அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் – சமூக நீதி நாள் விழாவினைத் திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும், பள்ளி கல்லூரி வாயில்களில் திராவிடர் கழக இலட்சியக் கொடியினை ஏற்றி, தந்தை பெரியார் அவர்களின் படத்தினை வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவது என்றும், மாணவர்கள் மத்தியில் துண்டறிக்கைப் பிரச்சாரத்தைச் செய்வது எனவும்,
2024 – 2025 ஆண்டில் திராவிட மாணவர் கழகத்தை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வலுப்படுத்துவது எனவும், கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை செயல்படுத்துவதெனவும், கல்வியை காவி மயமாக்கிட ஒன்றிய மதவாத பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இந்துத்துவ கருத்துக்களை திணிக்கும் ஒன்றிய மதவாத பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு (ம) இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A(h) விளக்கி திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் தொடர் பிரச்சாரக் கூட்டத்தை நடத்து வது எனவும்,சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வினை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும்,
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையை மீறி பல்கலைக்கழக வேந்தர் என்ற பெயரில் பல்கலைக்கழக செயல் பாடுகளில் ஆளுநர் தலையிடுவதும், இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. கருத்துகளை மாணவர்கள் மத்தியில் திணிக்கச் செய்வதும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை சரியாக வழிநடத்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் கடத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தப் போக்கு ஏற்கத்தக் கதல்ல. கொல்லைப்புற வழியில் ஆளுநர் மாளிகை மூலம் உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யத் துடிக்கும் ஆளுநரின் போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தேவை எனில் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் வழிகாட்டுதலுடன் போராட்டத்தில் ஈடுபடவும் திராவிட மாணவர் கழகம் தயார் என உறுதியேற்கிறது எனவும் முடிவு செய்யப்பட்டது.