வியாழன், 28 நவம்பர், 2019

மாநில இளைஞரணி- மாணவர் கழகக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு

5,000 ‘விடுதலை' சந்தாக்களை அளிக்க முடிவு

சென்னை, நவ. 24- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ‘விடுதலை' சந்தாக்களை சேர்ப்பது என்று திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை

திராவிடர் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையின் முதல் பிரதியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி  மற்றும் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பிரின்சு என்னாரெசு பெரியார், இளந்திரையன், செந்தூரபாண்டியன் ஆகியோர் வழங்கினர் (சென்னை பெரியார் திடல், 24.11.2019).

இன்று (24.11.2019) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

அய்.அய்.டி. மாணவியின் சந்தேக மரணமும் -

அரசு செய்ய வேண்டிய நடவடிக்கையும்

சென்னை அய்.அய்.டி.யில் மதவாத - ஜாதிய நெருக்கடியின் காரணமாக மரணிக்க நேர்ந்த ஃபாத்திமா லத்தீப்புக்கு இக்கூட்டம் தனது இரங்கலைத் தெரிவிப் பதுடன், இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை காலந்தாழ்த்தாமல் கைது செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறுவனங்கள் பார்ப்பன ஆதிக்கக் கூடாரமாக இருப்ப தால், இந்நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் சேர்க்கையிலும், பேராசிரியர்கள் நியமனத்திலும் இடஒதுக்கீடு முழுமையான அளவில்   பின்பற்றப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருப்பதே மேற்கண்ட மரணங்கள் தூண்டப்படுவதற்கு முக்கிய காரணம் என்ப தால், இது மிகமிக முக்கியம் என்பதையும் இக்கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்  2:

விருது பெற்ற

தமிழர் தலைவருக்கு பாராட்டு

செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்காவில் நடை பெற்ற மாநாட்டில் அமெரிக்க மனிதநேய சங்கத்தின்; (American Humanist Association)  சார்பில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்”(Humanist Life Time Achievement Award) விருது வழங்கி சிறப்பித்தமைக்கு திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொள்வதுடன், விருது பெற்ற தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பெருமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல்

நவம்பர் 11 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

மாநில இளைஞரணி - மாணவர் கழகக் கூட்டத்தில் திரண்டிருந்த தோழர்கள் (சென்னை பெரியார் திடல், 24.11.2019)

தீர்மானம் 4:

‘விடுதலை' சந்தா

இன உரிமை மீட்பு ஏடான ‘விடுதலை'க்கு பெரு மளவில் புதிய சந்தாக்களை சேர்த்தும், பழைய சந்தாக் களைப் புதுப்பித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக 5,000 ‘விடுதலை' சந்தாக்களை வழங் குவது எனவும், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் களோடு கழக இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

“சுயமரியாதை நாள்”

தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை உலக மயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப் பணித்தும், சமூகநீதிக்கு அவ்வப்போது ஏற்படும் ஆபத் துக்களை தடுத்திட இந்திய அளவிலும், தமிழகத்திலும் ஓயாது களத்தில் நின்று போராடி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை டிசம்பர்-2 ‘‘சுயமரி யாதை நாளாக'' கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடுவது, குருதிக்கொடை வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது, பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது, உள்ளிட்ட மனித நேய பணிகளை மேற்கொள்வதுடன் நாடெங்கும் கழகக் கொடிகளை ஏற்றி, கொள்கை பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6:

‘நீட்' புதிய கல்விக் கொள்கையை

ரத்து செய்க!

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும், சமூக நீதிக்கு விரோதமான ‘நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழர் தலைவர் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு (சுயமரியாதை நாள்) டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘நீட்', புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் பரப்புரை தெருமுனைக் கூட்டங் களை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 7:

பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக தோழர்களை  உடல்வலிவு, உள்ள உறுதி, சகிப்புத் தன்மை உள்ளவர்களாக உருவாக்கிடவும், பேரிடர் காலங்களில் அவதியுறும் மக்களுக்கு உத விடும் நோக்கோடும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன் தொடங் கப்பட்ட பெரியார் சமூக காப்பு அணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது மிடுக்குடன் செயல்பட்டு வருகின்றது.  2020 ஆண்டில் நாடு முழுவதும் பரவலாக பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி முகாம்களை நடத்திடுவது, மாவட்டத்திற்கு குறைந்தது 50 இளைஞர்களை பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி பெற்ற இளைஞர்களாக உருவாக்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 8:

திராவிட மாணவர் கழக தென் மண்டல மாநாடு

திராவிட மாணவர் கழக தென்மண்டல மாநாட் டினை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும் ஏராளமான மாண வர்களை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய் யப்படுகிறது.

தீர்மானம் 9:

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட் டினை 2020 மே மாதம் 16 ஆம் தேதி அரியலூரில் மாபெரும் பேரணியுடன் மிக எழுச்சியுடன் நடத்து வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 10:

மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்புக்கு கண்டனம்

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய ‘நீட்' பீ.ஜி. தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 30,774 இடங்களில் 50 சதவிகிதம் மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இப்போது உள்ள இட ஒதுக்கீடு நடைமுறையின்படி 50 சதவிகிதம் பொதுப் பிரிவிலும், 22.5 சதவிகிதம்  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கும், 27 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசோ - அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட் டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங் களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப் பிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக்கல்லூரி இடங்களை எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் பெரும் எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு திராவிடர் கழக இளைஞரணி, திரா விட மாணவர் கழகம் வன்மையானக் கண்டனத்தை தெரிவிக்கிறது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை இக்கூட் டம்  வலியுறுத்து கிறது. தவறினால் ஒத்தக்கருத் துள்ளவர்களை ஒன்று திரட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக் கும் எந்தவித போராட்டத்தையும் சந்திக்க திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தயார் என தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 11:

2020 பிப்ரவரியில் திருச்சியில் மதவெறி-ஜாதி வெறி முறியடிப்பு மனிதநேய மாநாட்டை நடத்திட திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (11.11.2019) எடுக்கப்பட்ட முடிவை வர வேற்று, தேவை யான ஒத்து ழைப்பு அனைத்தையும் அளிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

- விடுதலை நாளேடு, 24.11.19

சனி, 23 நவம்பர், 2019

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி

* அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழகத் தோழருமான எம்.நடராஜன் அவர் களின்  4ஆம் நினைவுநாளையொட்டி (26.11.2019) அவரது துணைவியார் பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.10 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு வழங்கினார். அந்நாளை அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் நினைவு கூர்கிறது.

 

நடராஜனின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது இணையர் பத்மாவதி கழகத் துணைத் தலைவரிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ.10,000/- காசோலை வழங்கினார்.  உடன்: சோழிங்கநல்லூர் துணைச் செயலாளர் தமிழ்இனியன். (சென்னை பெரியார் திடல் 23.11.2019)

- விடுதலை நாளேடு 23 11 19

வியாழன், 21 நவம்பர், 2019

சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

‘நீட்'டை ரத்து செய்க! உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை நீக்குக!


சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, நவ.11 ‘நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கை நீக்கம் - நடைபாதைக் கோவில்களை அகற்றக் கோரியும் - தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவோர்மீது நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் - பாபர் மசூதி தொடர்பான வழக்கில்- மசூதியை இடித்தது சட்ட விரோதம் - நீதிமன்ற தீர்ப்புபடி விரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள்மீதான வழக்கைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில்  இன்று (11.11.2019) காலை நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற்கொடை அளிக்கப்பட்டது).

பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டிண மூர்த்தி (வயது 84, மறைவு 19.9.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது).

பகுத்தறிவு எழுத்தாளர், நூல்கள் பலவற்றின் ஆசிரியர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 31.10.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது).

கபித்தலம் பெரியார் பெருந்தொண்டர் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019),

திருச்சி  மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மணப்பாறை திருமால் (வயது 93, மறைவு 28.10.2019),

வடசென்னை கழக மூத்த மகளிரணி வீராங்கனை பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங் கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்,  இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் இச்செயற் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2 (அ):

‘‘நீட்'' தேர்வு நீக்கப்படவேண்டும்

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ‘நீட்' என்னும் நுழைவுத் தேர்வு திணிக்கப்படுவதால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருவது கண்கூடு. ‘நீட்' தேர்வுக்கு முன் - பின் இவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உண்மை மிகவும் திடுக்கிட வைக்கிறது.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் ஓராண்டு, ஈராண்டு ‘நீட்' கோச்சிங் வகுப்புகளில் சேர்ந்து படித்ததும், அதற்காக பல லட்சம் ரூபாய் செலவிட்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனியாக இருப்பது இதன்மூலம் உறுதியாகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதிகள்  கிருபாகரன், வேல்முருகன் இந்த யதார்த்த உண்மைகளை சுட்டிக்காட்டி ‘நீட்'டை நீக்குவது அவசியம் என்ற பொருள்படும்படி நீதி மன்றத்தில் அறிவித்ததையும் கவனத்தில் கொண்டு, ‘நீட்' தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும் இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டு, வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த வகையில், ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளித்திடும் வகையில் மத்திய அரசை வலியுறுத்திப் புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் கட்சி வேறுபாடின்றி அரசுக்கு இந்த வகையில் துணை நிற்பர் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்ற பட்சத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து,  தீவிரமான பிரச்சாரம், பெரிய அளவிலான போராட்டம் என்ற இருமுனை அணுகுமுறைகளைக் கடைப் பிடிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 2 (ஆ):

27 சதவிகித இட ஒதுக்கீடு!

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான 50 விழுக்காடு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதும், அதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பெயரால் உயர்ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் - அப்பட்டமான  சமூக அநீதியும், உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட மனுதர்ம சிந்தனைப் போக்கே என்று இச்செயற்குழு திட்டவட்டமாக சுட்டிக்காட்டுவதுடன், சட்டப்படியான ஒதுக்கீடு பிரிவினருக்கு - குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3:

தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேசியக் கல்விக் கொள்கை ஒன்றை செயல்படுத்திட முனைந்துள்ளது.

பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், பருவ நிலைகள் சூழ்ந்த பல மாநிலங்களைக் கொண்ட இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமேயாகும். இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற  அடிப்படையில் தவறான புரிதலோடும், கண்ணோட்டத்துடனும் இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான தேசிய கல்வி என்ற முறையில் பாடத் திட்டத்தைத் திணிப்பது, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மூன்று மொழிகளை மூன்றாம் வகுப்பு அளவிலேயே திணிப்பது - அய்ந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வு நடத்துவது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத அநீதிகளாகும்.

மத்திய அரசின் தேசிய கல்வித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின்இருமொழிக் கொள்கைக்கு விரோதமானதுஎன்பது ஒருபுறம்;  அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு அரசுப் பொதுத் தேர்வு என்பது பிஞ்சு உள்ளங் களில்கல்வியின்மீதுஅச்சத்தையும், எதிர்ப்பையும்ஏற்படுத் தும் ஆபத்தான ஒன்றாகும். உள ரீதியான பாதிப்பை இளம் பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்தும் என்று கல்வியாளர்களும் கூறி வருவது கருத்தூன்றி கவனிக்கத்தக்க தாகும்.

அரசு தேர்வில் வெற்றி பெறவில்லையெனில் குலத் தொழிலை நோக்கி மாணவர்களை விரட்டும் மறைமுகமான ஏற்பாடாகவே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைக் கருதிட வேண்டியுள்ளது.

கலைக் கல்லூரிகளில் சேருவதற்குக்கூட இனி நுழைவுத் தேர்வு என்பது ஆபத்தான ஏற்பாடாகும்; கல்வியில் இடையில் நிற்கும் (டிராப் அவுட்ஸ்) எண்ணிக்கையைத்தான் அதிகரிக்கும் என்பதையும் தொலைநோக்கோடு இச்செயற்குழு எச்சரிக்கிறது.

நூற்றுக்கு நூறு அனைவரும் கல்வி வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாகவும், செயல்பாடாகவும் இருக்கவேண்டுமே தவிர, கல்வி வளர்ச்சியைத் தடுப்பதாகவோ, முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக்கூடாது என்பதையும் இச்செயற்குழு மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறது.

அரசனை விஞ்சிய விசுவாசியாக வரும் கல்வி ஆண்டி லேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற தமிழ்நாடு அரசின் அவசர அலங்கோல நடவடிக்கைக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அந்த முடிவை உடனடியாக கைவிடுமாறும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட ஏற்பாடு செய் யப்பட்டுள்ள குழுவானது கல்வியாளர்களைக் கொண்டதுமல்ல என்பதால், இந்தத் திட்டத்தை அடியோடு கைவிட்டு, மாநில அரசுகளின் பொறுப்பில் கல்வித் திட்டத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியும் - மதவாத திசை திருப்பலும்!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையும், நடவடிக்கை களும் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டு, அதன் காரணமாக சிறு, நடுத்தர தொழில்கள் நசிந்தும், பெரிய எண்ணிக்கையில் வேலையிழப்பும் ஏற்பட்டு நாடே நிலை குலையும் ஒரு சூழ்நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், மதவாதத்தை முன்னிறுத்துவது, ஆளும் கட்சியே வன்முறைகளைத் தூண்டுவது என்பதல்லாமல் நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும், அமைதிக்கும், ஜனநாயக உணர்வுக்கும் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஜனநாயகப் பாதையில், மதச்சார்பின்மை, சமூகநீதி, அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புச் சிதையாமல், சோசலிசப் பாதையில் பயணிக்க உரிய மாற்றங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

பள்ளியில் மதம், ஜாதி அடையாளங்கள் கூடாது

பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி, மத மாச்சரி யங்களைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

குறிப்பாக ஜாதியைக் குறிக்கும் வண்ண வண்ண கயிறுகள் கட்டி பள்ளிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. சங் பரிவார்கள், கல்விக் கூடங்களில் தலையிடுவது - நுழைவது கட்டாயம் தடுக்கப்படவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

பாபர் மசூதியும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9.11.2019 அன்று அளித்த தீர்ப்பு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை என்பனவற்றை சோதனைக்கு உட்படுத்திய தீர்ப்பாகவே இச்செயற்குழு கருதுகிறது.

இந்தத் தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றே!

மதக் கலவரங்கள் வெடித்துவிடக் கூடாது என்ற கண் ணோட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றாலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது சட்ட விரோதம் என்றும், நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியிருப்பதால், 27 ஆண்டுகளாக இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான விசாரணை நடந்து வருவதால், மேலும் காலதாமதம் செய்யாமல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான வழக்கு விசா ரணையை - இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கினை 40 நாள்கள் தொடர்ந்து விசாரித்தது போலவே, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கையும் விரைவாக நடத்தி, குற்றமிழைத்தவர்கள்மீதான தண்டனை உறுதி செய்யப்பட ஆவன செய்யுமாறு மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட ஒன்றே என்பதையும் இச்செயற்குழு நினைவூட்டுகிறது.

தீர்மானம் எண் 7:

சிலைகளை அவமதிக்கும், கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார்கள்மீது நடவடிக்கை தேவை!

மக்களால் போற்றத்தக்க மதிப்பு வாய்ந்த தலைவர்களின் சிலைகளுக்கு காவி சாயம் பூசுவது, அவமதிக்கும் வகையில் சாணியை வீசுவது, செருப்பு மாலை சூட்டுவது போன்ற அநாகரிக செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது - பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்களின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் திருவள்ளுவரையும் அவமதிக்கும் போக்கு கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற கெட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது - சங் பரிவார்களின் கடந்தகால நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்த ஒன்றாகும்.

இவ்வாறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் காலம் தாழ்த்தாமல் சட்டப்படி தண்டிக்க வகை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

நடைபாதைக் கோவில்கள் - அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கோவில்களை அகற்றுக!

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படை யிலும், ஏற்கெனவே மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்த ஆணையின் அடிப்படையிலும் அனைத்து நடைபாதைக் கோவில்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எழுப் பப்பட்டுள்ள அனைத்து மதக் கோவில்களையும் உடனடியாக அகற்றுமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

சட்டம் - ஒழுங்கு நிலை

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என்பதற்கு - அன்றாடம் வெளிவரும் தகவல் களே சாட்சியங்களாக அமைந்துள்ளதால், சட்ட - ஒழுங்கை நிலை நிறுத்துவதில் முழு கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

மதவெறி - ஜாதி வெறி முறியடிப்பு மனிதநேய மாநாடு

திருச்சியில் 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் மதவெறி - ஜாதி வெறி முறியடிப்பு மனித நேய மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு 11 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார் - அ.அருள்மொழி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைக் கொண்டாடுவோம், தந்தை பெரியாரை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்

கழக பிரச்சார செயலாளர்  வழக்குரைஞர்  அருள்மொழி உரை

சென்னை, நவ.1  நேதாஜி சிறந்த வீரர்; ஆனால், ஹிட்லர் கொடியவன் என்பது நேதாஜிக்கு எப்படிப் புரியாமல் போனது. வெள்ளைக்காரன் செய்கிற கொடுமைகளை விட, ஹிட்லர் செய்கிற கொலைகள் எவ்வளவு மோசம் என்று உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அவர்கள்.

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு

பிறந்த நாள் பொதுக்கூட்டம்

17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப்பொண்ணாவேன்''

வழக்காடு மன்றத்திற்குள் நுழைவதற்கே, வெறும் கட்சிக்காரர்களாக சென்று கொண்டிருந்த அந்த நீதிமன்றத்தில், ஒரு அய்யர் வீட்டுப் பெண் பாடுவதாக, பழைய திரைப்படப் பாடல் ஒன்று வரும்; அதில் நான் மகிழ்ச்சியாக ஆடுவேன், பாடுவேன் என்று ஒரு இளம் பெண் சொல்வாள். நாளைக்கு நான் என்ன ஆவேன் என்றால், ‘‘மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப் பொண்ணாவேன்'' என்று.

ஏனென்றால், வக்கீல் என்றாலே, மயிலாப்பூர் வக்கீல்தான். ஒரு பெண் பாடுகிறாள் என்றால், அவள் மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப் பொண்ணாவேன் என்கிற அளவிற்கு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் அவர்களே நிறைந்திருந்த அந்த நீதிமன்றத்தில், வழக்குரைஞராக நுழைந்து, தன்னுடைய வழக்கை தானே வாதாடி, இந்தியாவின் மிகப்பெரிய ஒரு அரசியல் சதித் திட்ட வழக்கை முறியடித்து 2ஜி என்பதை தன்னு டைய பெருமையாக மாற்றிய, மக்களவை உறுப்பினர் எந்நாளும் சிறந்த பகுத்தறிவாளர், நமது மரியாதைக்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைப் பரப்பு செயலாளர் மானமிகு ஆ.இராசா அவர்களே,

தந்தை பெரியாரின் தேவையை

இந்த உலகம் உணரச் செய்தவர்

தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தபொழுது, திராவிடர் கழகத்திற்கு ஒரு நெருக் கடியான காலம், அதைத் தொடர்ந்து இந்த நாட்டிற்கே ஒரு நெருக்கடி காலம் வந்தது. இந்த இயக்கத்தின் நெருக்கடியையும், நாட்டிற்கே வந்த நெருக்கடி நிலையையும் எதிர்கொண்டு, அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றினார். அவர்களுடைய குறுகிய கால அந்தப் போராட்டத்தில், அவர்களோடு துணை நின்று, அன்னை மணியம்மையார் அவர்களும் மறைந்த பிறகு, தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கி, இந்த மாநிலம் முழுவதும் மீண்டும் பெரியார் அலை எழுவதற்குக் காரணமாகவும், இன்று உலகம் முழுக்க தந்தை பெரியாருடைய பெயர் ஒலிப்பதற்கும், இந்தியாவில், எந்த மாநிலத்தில் பிரச்சினை, சுயமரியாதை இல்லை, சமூகநீதி இல்லை என்றாலும், அதற்கு என்ன காரணம் என்றால், அந்த மாநில தலைவர்கள், எங்கள் மாநிலத்தில் ஒரு பெரியார் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகின்ற அளவிற்கு, தந்தை பெரியாரின் தேவையை இந்த உலகம் உணரச் செய்தவருமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,

கூடியிருக்கின்ற இன உணர்வுமிக்க பெருமக்களே, அனைவருக்கும் வணக்கம்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை

ஏன் கொண்டாடுகிறோம்?

அய்யா அவர்களுடைய பிறந்த நாளை ஏன் நாம் கொண்டாடுகிறோம்? அய்யாவே சொன்னார், இது புகழ் பாடுவதற்கு அல்ல; பஜனை பாடுவதற்கு அல்ல. எங்கள் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காக. அந்தக் காரணத்திற்காகத்தான் நான் இந்தக் கொண்டாட்டத்தை அனுமதிக்கிறேன் என்று.

அய்யாவைப்பற்றி பேசுவது என்றால், பிரபஞ்சம், அண்டம், பேரண்டம் என்றெல்லாம் சொல்கிறார்கள். வானத்தைப் போல, அதற்குப் பின்னால் என்ன? அதற்குப் பின்னால் என்றால், அது திரையா? இல்லை, அது ஒரு புகை என்கிறார்கள். அது என்னவாக இருக்கிறது என்று தெரியாது.

உலகம் ஒரு கோள். பூமி ஒரு கோள். அதுபோன்று, நிலா ஒரு கோள். 9 கோள்களைத்தான் முன்பு கண்டு பிடித்தார்கள். இன்றைக்கு அதற்கு மேல் கண்டுபிடித்தி ருக்கிறார்கள். ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருக் கிறது; அதற்கு உடுமியின் கூட்டம் என்று சொன்னார்கள்.

பேரண்டத்தை தன் மூளையில் சுமந்தவர்

தந்தை பெரியார்

அதனால்தான், விண்ணோடும், உடுக்களோடும் பிறந்த தமிழ் என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

நாம் தேடத் தேட, புதிது புதிதாகக் கிடைத்து கொண் டிருக்கின்றன, இந்தப் பேரண்டத்தில். அப்படி ஒரு பேரண்டத்தை தன் மூளையில் சுமந்தவர் தந்தை பெரியார்.

நாம் தேடத் தேட, படிக்க படிக்க, நாம் கற்றுக்கொள்வது புதிதாகவும், இப்படி ஒரு சிந்தனையாளர் உலகத்தில் இருந்திருக்கிறார்களா? என்று ஆராய்ச்சி செய்கின்ற அளவிற்கு, ஒரு பேரறிஞர் இந்த நாட்டில் பிறந்தார், அவ ரைப் படிப்பதன்மூலம், அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதன்மூலம், இந்த இனத்தை, அறிவில் மேன்மையுறச் செய்யும் பயன் நமக்கு இருக்கிறது. அதனால் தந்தை பெரியாரை நாம் கொண்டாடுகிறோம்.

ஒரு கேள்வி,

அய்யாவினுடைய அறிவு எப்படிப்பட்டது என்றால், நெருப்பில் எதைப் போட்டாலும், அந்த அழுக்கெல்லாம் பொசுங்கி, உறுதியான பொருள் வெளிப்படும். அதுபோல, நம்முடைய அறிவு உறுதியடையவேண்டும் என்றால், அதில் ஏற்படுகின்ற சந்தேகங்கள் எல்லாம் பொசுக்குகிற நெருப்புப் போன்று, அய்யாவினுடைய ஒரு பக்கத்தைப் படித்தால் போதும், சாதாரணமாக உலகத்தில் அறிவியல் மாறுது; மனிதர்கள் நிறைய வளரு கிறார்கள்; உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்ளலாம்; மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய காலம் வரும் என்று சொல்லி, கடைசியாக அந்தக் கட்டுரையில் அய்யா சொல்லுகிறார்,

கடவுள் நம்பிக்கை

ஓரளவிற்கு இருந்துதான் தீரும்!

இப்படியெல்லாம் மனிதனுக்கு எல்லா சவுகரியங்கள் கிடைத்த பிறகு, கடவுள் என்கிற நம்பிக்கை இருக்குமா? என்று கேட்டால்,

யாராக இருந்தாலும் என்ன சொல்வார்கள்? தன்னு டைய கொள்கைக்கு சாதகமாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், அய்யா சொல்கிறார், ‘‘ஓரளவிற்கு இருந்துதான் தீரும்'' என்கிறார்.

அப்படி என்றால், எல்லாமே நிறைவாகி விட்டது என்றால்,  அய்யாதான் இன்னொரு இடத்தில் சொன்னார், ‘‘தேவைகள் அற்றுப்போன இடம், கடவுள் செத்துப் போன இடமாக இருக்கும்'' என்று.

அப்படி, தேவைகள் அற்றுப்போய், மனிதனுக்கு எல்லாம் கிடைத்து மகிழ்ச்சியாக இருந்தால், எதற்கு அவனுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று கேட்டால், ‘‘அது ஓரளவிற்கு இருந்துதான் தீரும்'' என்று சொல்கிறார்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

ஏன் இருக்கவேண்டும் என்பதைப்பற்றி சொல்கிறார்,

‘‘மனிதனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஒரு அகந்தை உண்டு. எனக்குத் தெரியாது என்று அவனால் சொல்ல முடியாது. ஆகவே, இந்த உலகம் தோன்றியதற் கான காரணத்தையும், சில இயற்கை செயல்களுக்கான காரிய காரணத்தையும், இதற்கு எது  காரணம் என்று கேட்டால், எனக்குத் தெரியாது என்று சொல்ல, மனித னுடைய அகம்பாவம் இடம் கொடுக்காது. ஆகவே, தனக்குத் தெரியாது என்பதற்குப் பதில், ஒரு விடையைக் கண்டுபிடித்து அதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று சொல்வதற்கு அவனுக்கு ஒரு பதில் கிடைக்கிறது.

ஆகையினால், மனிதனுடைய இந்த அறியாமையை மறைக்கிற அகந்தை இருக்கிறதே, அந்த அகந்தைக் காகவாவது கடவுள் நம்பிக்கை இருந்துதான் தீரும்'' என்றார்.

நண்பர்களே, இப்படி ஒரு சிந்தனையாளரை, புரிந்து கொள்வதற்கே இந்த இனத்திற்கு இன்னமும் பக்குவம் இல்லை. நாம் இன்னமும் அதனை மக்களிடையே எப்படி எடுத்துச்சொல்வது என்று திகைத்து நிற்கிறோம்.

ஆனால், இளைய தலைமுறையினர், புதுமையை விரும்புகின்றவர்கள் தந்தை பெரியாரை எப்படிப் பற்றிக்கொள்கிறார்கள்?

பெரியாரை வியந்து பாடிய பெரியவர்கள்!

அன்றைக்குத் தந்தை பெரியாரை வியந்து பாடிய பெரியவர்கள் இருக்கிறார்கள்.

தீண்டாமைப் பிணி இங்கு வேண்டாமே என்று

அன்று சிறையினில் இளைத்தார் வைக்கத்தில்

செந்தமிழ் காக்கவே அண்ணாவைப்போல்

பல தீரரை அழைத்தார் பக்கத்தில்

ஜாதி வேரைச் சுட்டுத்

தாழ்ந்தவர் உயர்ந்திட

ஓயாது ஊர்தோறும் நடை நடந்தார்

சாகும்போதும் அந்த தந்தை

உழைத்ததுபோல், தமிழரை உயர்த்திட

யார் வருவார்?

இது அன்றைக்குப் பெரியவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி பாடியது.

பெண்ணே, பெண்ணே

திரும்பிப் பார்

பெரியார் தொண்டை

நினைத்துப் பார்

மண்ணுக்கும் கீழாய்

உனை மதித்தோரின்

மண்டையில் அடித்தார்

பெரியார் பார்

என்று கவிஞர் கலி.பூங்குன்றன் பாடினார்.

பெரியார் அவனுக்குத் தோழன் ஆகிவிட்டார்!

ஆனால், இன்றைக்கு ராப் சீசன். இன்றைய இளைஞர் களுக்கு கவிதை, பாட்டு பாடிக் கொண்டிருக்க நேரம் இல்லை.

ஒரு சின்ன வயது இளைஞர் பாடுகிறார்,

கிழவண்டா,

இவன் கிழவண்டா

தமிழ் இனத்தைத்

திருத்த வந்த

உழவண்டா!

என்று.

என்னடா, அவன், இவன் என்று பாடுகிறாரே என்றால், அவ்வளவு உரிமையாக பெரியார் அவனுக்குத் தோழன் ஆகிவிட்டார்.

இளைஞர்கள் எழுதுகிறார்கள்,

‘‘யோவ் கிழவா! நாங்கள் படிக்கவேண்டும் என்பதற் காகத்தானே இவ்வளவு தூரம் போராடினாய்! நாங்கள் படித்துவிட்டோம், வந்து பாருய்யா!'' என்று.

அப்படி உரிமையோடு இன்றைய இளைஞர்கள் அந்தக் கிழவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இராவணன் கேட்ட கேள்வியிலே

நீதி தேவனே மயங்கி விழுந்துவிட்டார்

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘‘நீதிதேவன் மயக் கம்'' எழுதினார். பேராசிரியர் அவர்கள் ‘‘நீதி கெட்டது யாரால்?'' என்று அய்யாவினுடைய நீதிமன்ற உரையை சொன்னார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘‘நீதிதேவன் மயக் கம்'' எழுதினார். அந்த நீதி தேவனுடைய கோர்ட்டில், இராவணனுடைய வழக்கு மறு விசாரணைக்கு வருகிறது.

இராவணன் கேட்கிறார், ‘‘என்னை அரக்கன் என்றீர்கள்; என்னை இரக்கமில்லாதவன் என்றீர்கள்; இவர்கள் எல்லாம் யார் என்று, தாயைக் கொன்றவனை, பிள்ளைக் கறி கேட்டவனை என்று ஒவ்வொருவராகக் காண்பித்து, இவர்களுக்கெல்லாம் இரக்கம் இல்லையே, இவர்களை ஏன் நீங்கள் அரக்கன் என்று சொல்லவில்லை'' என்று, இராவணன் கேட்ட கேள்வியிலேதான், நீதி தேவனே மயங்கி விழுந்துவிட்டார்.

எங்கள் பேரரக்கர் தலைவர்!

அப்படி மறு விசாரணை செய்யச் சொல்லி, இராவ ணனை, அசுரன் என்று சொன்னவர்களை, இராட்ச சர்களை, இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா? தந்தை பெரியாரை சொல்லுகிறார்கள்,

‘‘எங்கள் பேரரக்கர் தலைவர்'' என்று.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இறந்த பொழுது, சில பேர் வடை, பாயாசம் வைத்து சாப் பிட்டார்கள்.

அப்பொழுது சொன்னார்கள், எங்கள் அரக்கர் தலை வர், யாருக்காவது அப்படி சொல்ல தைரியம் வருமா? அவர்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள், நாங்கள் அரக்கர் கூட்டமடா என்று.

இப்படி சொல்லுகிற துணிவை அடுத்த தலை முறைக்குக் கொடுத்தவர் யார் என்றால், அன்பாக கிழவர் என்று அழைக்கப்படும் இளைஞர்.

அதை இன்றைக்கு மக்களிடத்திலே நாம் கொண்டு சென்றால், அப்படி ஒரு வரவேற்பை நம்முடைய சிறுவர் களும், இளைஞர்களும் பெறுகிறார்கள், நமக்குக் கொடுக்கிறார்கள்.

ஏன்?

இன்றைக்கு நமக்கு ஏற்படுகிற நெருக்கடி. தந்தை பெரியார் பாராட்டில் வளர்ந்தவர் அல்ல; எதிர்ப்பில் வளர்ந்தவர்.

நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அவர் சொன்னதும், நீங்கள் என்னை நல்லவன் என்று சொல்லி, கடவுள் என்று சொல்லி, தேரிலே தூக்கி வைக் காதீர்கள். என்னை கெட்டவன் என்று சொல்லுங்கள்; அயோக்கியன் என்று சொல்லுங்கள். அப்பொழுதுதான், இவர் என்னதான் சொன்னார் என்று தேடி படிப்பார்கள்; தெரிந்துகொள்வார்கள். நீ நல்லவன் என்று சொல்லி விட்டால், பாராட்டி விட்டுப் போய்விடுவார்கள் என்ப தால், என்னை அயோக்கியன் என்று சொல்லுங்கள் என்று சொல்லுகிற துணிச்சல் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்.

இன்றைக்குப் பெரியாரைக் கண்டால்,

எதிரிகள் நடுங்குகிறார்கள்

அதனால்தான், இன்றைக்கு அவரைக் கண்டால், எதிரிகள் நடுங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத் திலும் நடக்காத எதிர்ப்புப் புரட்சியை, இன்றைக்கு மோடி அரசாங்கம், ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் எங்கே சந்திக்கிறது - தமிழ்நாட்டில்தான் சந்திக்கிறது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் எதிர்க் கட்சிகள் இருக்கின்றன; தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால், ‘‘பாசிஸ்ட் மோடி'', ‘‘ரேசிஸ்ட் மோடி'', ‘‘சாடிஸ்ட் மோடி'' என்று அறிவிக்கின்ற துணிச்சல் தமிழ்நாட்டில், திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய தலைவருக்குத்தான் இருந்தது.

தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற பெருங்கொடை

இந்தியாவில் நடந்த தேர்தலில் அவர்கள் அதிர்ச் சியடைந்த இடம் அதுதான். அவர்களுடைய தேசியக் கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் னால், இங்கே ஆளுகிற அவர்களுடைய உதவியாளர் கள், அல்லது நம்முடைய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு  என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. ஆனால், தேசிய கல்விக் கொள்கைத் திட்டமே இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தில் கூறப்பட்ட 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு என்ற மனக்கோளாறு படைத்த கொடுமையாளர்களுடைய திட்டத்தை, இங்கே உள்ள அரசு நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னவுடன், உடனடியாக வந்த எதிர்ப்பு, விமர் சனங்களைக் கண்டு இன்றைக்கு அவர்களை யோசிக்க வைக்கிறது; பின்வாங்க வைக்கிறது. மூன்றாண்டுகளுக்கு இல்லை என்று இன்றைக்கு அவர்கள் அறிவிக்கத் துணிந்திருக்கிறார்கள் என்றால், அந்த எதிர்ப்பு எங்கே இருந்து கிளம்புகிறது? தந்தை பெரியார் போட்ட அடித்தளத்திலிருந்து கிளம்புகிறது.

எதையும் அறிவு கண்கொண்டு பார்ப்பதும், எதிர்ப் பதும்தான் தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற பெருங்கொடையாகும்.

நண்பர்களே, 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிந்தது.

உலகம் போர் பற்றி பேசுகிறது; இந்தியாவும் போரால் பாதிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வெல்வார்களா? வீழ்வார்களா? அவர்கள் வென்றால், நமக்கு விடுதலை. தோற்றால் கிடையாது - என்பது ஒரு பக்கம்.

அதேநேரத்தில், இந்தியாவில் பெரிய வீரரான நேதாஜி அவர்கள், பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்கிறேன் என்று ஹிட்லரோடு கூட்டு வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கும் நேதாஜி அவர்களை எல் லோரும் புகழ்கிறார்கள். தந்தை பெரியாரும் புகழ்ந்தார்.

தந்தை பெரியார் நேதாஜியை குறை சொல்லவேயில்லை. அவர் காங்கிரசில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்று வருத்தப்பட்டார்.

உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார்

ஆனால், அந்த நேதாஜியைப் பார்த்து, அவருக்கு வெள்ளைக்காரனைவிட ஹிட்லர் கொடியவன் என்று புரியாமல் போய்விட்டதே என்று எழுதிய தலைவர் தந்தை பெரியார்.

இன்றைக்கும் அய்யோ, நேதாஜி என்று பேசக்கூடாது; இந்தப் பக்கம் விவேகானந்தர்; அந்தப் பக்கம் நேதாஜி. தெய்வ பக்தி - தேசப் பக்தி. இந்த நாடகத்திற்கு நடுவில், நேதாஜி சிறந்த வீரர்; ஆனால், ஹிட்லர் கொடியவன் என்பது அவருக்கு எப்படிப் புரியாமல் போனது. வெள்ளைக்காரன் செய்கிற கொடுமைகளைவிட, ஹிட்லர் செய்கிற கொலைகள் எவ்வளவு மோசம் என்று உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார்.

அவர் ஏதோ, படிக்காதவர், பள்ளிக்கூடம் போகாதவர் என்பதெல்லாம் கிடையாது. உலக அரசியலைப் படித்துப் பேசினார்; மற்றவர்கள் பேச முடியாத செய்தி களைத் துணிந்து பேசினார். அந்த அறிவும், துணிவும் நம் அடுத்த தலைமுறையினருக்கு வரவேண்டும் என்றால், பெரியாரைக் கொண்டாடுவோம், தந்தை பெரியாரை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.11.19