புதன், 27 டிசம்பர், 2017

தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளில்

தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘‘நினைவிடத்தில் நின்று முழங்குவோம்‘’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:



*அறியாமை இருட்டை அகற்றிய அய்யா தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் மறைந்த நாள் (24.12.1973)

*இன்று 44 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், அவர்தம் இயக்கம் - அவர் தந்த தத்துவங்கள் வீறு கொண்டு வெற்றி நடைபோடுகின்றன என்பது வியக்கத்தக்க ஒன்றல்லவா? காரணம்,

*தந்தை பெரியார் என்பவர் தனி மனிதரல்ல! ஒரு தத்துவம் - ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம்  - வரலாற்றில் என்றும் வாழும் பேரொளி! போராளி! கட்டுப்பாடுமிக்கது கருஞ்சட்டை இராணுவம்!!

*கட்சிகள் மறையும்; இயக்கங்கள் மறையா; பதவிகளுக்கு மரணம் உண்டு; இலட்சியங்கள் சாகாத சரித்திரம் படைக்கும் வற்றா ஊற்றுக்கள்!

* மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று மானுடத்திற்கு அறிவுரைத்த ஆசான் அவர்.

*‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக் காகவும் பிறக்கவில்லை’’ என்று சமுதாயப் பற்றுடன் வாழ்ந்து, மனித குலத்திற்கே தொண்டு செய்வது, சுயமரியாதையைச் சொல்லிக் கொடுப்பது, அவனது அவசியப் பணியாக வேண்டும் என்று அகிலத்திற்கும் பாடம் எடுத்த பகுத்தறிவுப் பேராசான் அவர்!

*மானுடப் பார்வையால் அவரது இலட்சியங் களுக்கு எல்லைக்கோடு கட்ட முடியவில்லை. எனவேதான் அவரது ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்‘ என்ற நிலையில் நாடு  பின்பற்றி நின்று பெருமை அடைகிறது.

* ‘ஈரோடு’ என்ற ஊரே இவரால் இன்று பேரழகும், பேரேடும் பெற்று, பெருமைக்குரியதாகி அகிலத்தின் அகலப் பார்வையால் விழுங்கப்படுகிறது!

* ‘விடுதலை’யின் வெளிச்சமும், ‘குடிஅர’சின் கோலமும், ‘பகுத்தறிவி’ன் பாங்கும் பட்டொளி வீசி பறக்க வித்திட்ட மண் அது!

* ‘பெரியாருக்கு முன்?’ - ‘பெரியாருக்குப் பின்’ என்றே இங்கே வரலாற்றுக் காலங்களும், மாற்றங்களும், மவுனப் புரட்சிகளும் காலக் கணக்கில் கருத்தோட்டம் செலுத்தவேண்டிய கட்டாயத்தை வரலாறு பெற்றுள்ளது!

* அய்யாவையும், அவர் கண்ட இயக்கத்தைப் பரப்பிட்ட, பாதுகாத்து பவனி வர உழைத்த அன்னை யர்கள் நாகம்மையாரும், மணியம்மையாரும் அய்யா வின் அருந்தொண்டர்கள்!

அன்று எதிர்நீச்சலில் அவருடன் போர்க்களத்தில் நின்று வென்று காட்டிய விழுப்புண் ஏற்ற வீரர்களாம் எம் சுயமரியாதைச் சுடரொளிகள் எல்லாம் அவர்தம் நினைவின் அங்கங்கள் - கொள்கைச் சிங்கங்கள்!

வீரவணக்கத்தை நாம் வெற்றுச் சொற்களால் கூறவில்லை; அவர்கள் நடத்திய போரினைத் தொடர்ந்து, களங்களில் வெற்றிப் பாதையை நட்டுவிட்டுத்தான் நாம் தலையைத் தாழ்த்தி வீரவணக்கம் கூறிய வண்ணம் நேரிய பயணத்தை நெஞ்சம் நிமிர்த்தி நடைபோடுகிறோம்!

சமூக நீதிக்கான வெற்றி சட்டங்களால் உறுதி செய்யப்பட்டும், சாகாத சரித்திரம் படைக்கும் வண்ணம் உலகம் முழுவதும் சுயமரியாதைச் சூரியனின் கதிரொளிகள் காரிருளை விரட்டவும்,

ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கை கள் அற்ற புதியதோர் உலகு அமைக்கும் பெரும் போரின் அடுத்தடுத்த கட்டங்களை, வென்றெடுக்கவும் விலை மதிப்பற்ற வீரர்களின் கோட்டமாம் இவ்வியக்கம் வீறுகொண்டு வெற்றி நடைபோட்டு நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் அரும் பணியில்  அவர் வழிவந்த நிலையில் முழுமை அடையும் வண்ணம் வெற்றி பெற்று அடுத்தாண்டுக்குள் நினைவிடத்தில் மலர் வளையமாய் வைப்போம் என்ற திடச் சித்தத்துடன் தொடருகிறோம் எம் தந்தை விட்ட பணியினை!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை 
24.12.2017



- விடுதலை நாளேடு,24.12.17

வியாழன், 21 டிசம்பர், 2017

இனமானப் பேராசிரியர் பிறந்த நாளில் நூல்வெளியீடு கருத்தரங்கில் உணர்ச்சிமிக்க உரிமை முழக்கங்கள்

சென்னை, டிச.19 திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (18.12.2017) மாலை  திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேரா சிரியர் க.அன்பழகன் அவர்களின் 96 ஆம் பிறந்த நாள் விழா, பேரா சிரியர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வில் பழிவாங்கப்படும் இடஒதுக்கீடு உரிமை முழக்கக் கருத்தரங்கம்  நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

பயனாடை பாராட்டு

96ஆம் பிறந்த நாள் காணும் இனமானப் பேராசிரியருக்கு பெருமகிழ்வுடன் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் இரா.முத்தரசன், விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தோழர் இரா.முத்தரசன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பய னாடை அணிவித்தார்கள்.

96ஆம் பிறந்த நாள் காணும் இனமானப்பேராசிரியர் அவர் களுக்கு தோழர் இரா.முத்தரசன், எழுச்சித்தமிழர் தொல். திருமா வளவன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

இந்திய சமூகநீதி இயக்கம் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் இனமானப் பேராசிரியர் அவர்களுக்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் பயனாடை அணிவித்தார்.

இனமானப் போர்முழக்க
உரையாற்றிய தலைவர்கள்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து எழுச்சியுரையாற்றினார்.
திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன் பழகன் அவர்கள் உணர்ச்சி மிகுதி யுடன் இனமான சிறப்புப் பேரு ரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத் தரசன் சிறப்புரையாற்றினார்கள்.

நூல் வெளியீடு

இனமான பேராசிரியர் க.அன் பழகன் அவர்கள் எழுதிய நூல் களான வளரும் கிளர்ச்சி, வாழ்க திராவிடம், தொண்டா? துவே ஷமா? ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல் களின் நன்கொடையில் கழி வுடன் ரூ.150க்கு அளிக்கப்பட்டது-
பேராசிரியர் நூல்களை வெளியிட மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பெற்றுக்கொண்டார்.

மேனாள் சட்டமன்ற உறுப் பினர் குழந்தை தமிழரசன், திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம்,  வட சென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன்,  தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தையன், பகுத்தறிவாளர் கழக அமைப்புச்செயலாளர் இரா.தமிழ் செல்வன், பகுத்தறிவாளர் கழக தலைமையிட பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றி செல்வி, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, பொதுக்குழு உறுப் பினர் ஆர்.டி. வீரபத்திரன், மேனாள் மேயர் சா.கணேசன், த.கு.திவாகரன், புலவர் பா.வீரமணி, ஆ.சீ.அரு ணகிரி,    வா.மு.சே.திருவள்ளு வர், தங்க.தனலட்சுமி, தாம் பரம் இலட்சுமிபதி உள்ளிட்ட ஏராளமா னவர்கள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து பெற்றுக் கொண்டனர்.

விடுதலைநகர் செயராமன் விடுதலை ஓராண்டு சந்தா தொகையை தமிழர் தலைவர் அவர்களிடம் அளித்தார்.

திருச்சி சிறுகனூர்  பெரியார் உலகÕ நிதியாக ரூபாய் பத்தாயிரம் தொகையை வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பழனி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வழக் குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, திராவிட இயக்க  ஆய்வாளர் எழுத்தாளர் க.திரு நாவுக்கரசு,   அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நல சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணா நிதி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் அ.இராமசாமி, செயலாளர் பேரா சிரியர் ந.க.மங் களமுருகேசன்,  மு.பி.பாலசுப்பிர மணியன், மறைந்த பேராசிரியர் மா.நன்னன் துணைவியார் பார்வதி,  விடு தலை சிறுத்தைகள் கட்சி செல்வம், செல்வதுரை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிந்தாதிரிப்பேட்டை மாறன், தலை மைக் கழக பேச்சாளர் காரைக்குடி  தி.என்னாரெசு பிராட்லா, தமிழ் சாக்ரட்டீஸ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளி வண்ணன், கோ.வீ.ராகவன், மஞ்சநாதன் உள்பட ஏராளமான வர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர். தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 19.12.17

நமது இனமானப் பேராசிரியர் நூறாண்டும் கண்டு நீடு வாழ்க வாழ்கவே!

ஒரு மாலைப் பொழுதில் உயர் எண்ணங்களின் ஊர்வலம்!

மின்சாரம்




"நாம் திராவிடர்கள் ஆம், நாம் திராவிடரே! இந்த உணர்வுதான் நம்மை தலை தூக்கச் செய்யும் - நமது உரிமைகளை மீட்டுத் தரும். திராவிடன் என்றால் அதில் தமிழர் வாழ்வும், உரிமையும் அடங்கியதுதான்.

திராவிடர் என்றால் நாம் மூத்த குடிகள். நாம் திராவிடர் என்பதை மறந்து விட்டால் நாம் பெற்றது எல்லாமே பறிப் போய்  விடும். இன்றைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி திராவிடர் இனம் தலை தூக்கக் கூடாது என்பதை இலட்சிய மாகக் கொண்டு மக்களின் மனதைத் திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறிக் கொண்டா லும் அவர்களின் உள் மனச் சிந்தனை வேறுவிதமாக உள்ளது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுருக்கமாக அதே நேரத்தில் சுருக்கென்று நெஞ்சில் தைப்பது போலப் பேசினார் இனமானப் பேராசிரியர்.

இதனை தனது பிறந்த நாள் பெருந் செய்தியாக நமது இனமானப் பேராசிரியர் அறிவித்ததாக நாம் எல்லோரும் கருத வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன பொழுது பலத்த கரவொலி.

திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் 96ஆம் ஆண்டு பிறந்த நாளும், அதனையொட்டி பழி வாங்கப்படும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமை முழக்கக் கருத்தரங்கமும் நடைபெற்றன. 60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மூன்று நூல்கள் மறுபதிப்பாக திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக இவ்விழாவில் வெளியிடவும் பட்டது. எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் நூல்கள் வெளியீடு என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனி முத்திரைச் சிறப்பாகும்.

நூல்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டுமானால் இத்தகு நூல்கள் வெளிவர வேண்டியது அவசியமல்லவா?

விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாளவன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் ஆகியோர் எடுத்து வைத்த கருத் துகள் இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான சூரணங்கள்.

தோழர் முத்தரசன்

தோழர் முத்தரசன் கூறினார். நாம் யார்? ஆண்டாண்டுக் காலமாய் மனுதர்மத்தின் பெயரால் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்த மக்கள்.

கல்வி கற்பதே குற்றம் என்று ஆக்கப்பட்டவர்கள். இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்பட்டது. தேவைப்படுகிறது. இதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்ட தற்கும் காரணம் தந்தை பெரியார் அல்லவா?  திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை இது! இதனை யார் தான் மறுக்க முடியும்? என்று உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கூறினார்.

அவர் அடையாளம் காட்டிய கருத்தும், தகவலும் மிகவும் முக்கியமானவை. இன்றைக்கு மத்தியில் மோடி தலைமை யிலானது அசல் மனுதர்ம ஆட்சியே! அதனை நாம் மறந்து விடக் கூடாது என்று சொன்னது கவனிக்கத்தக்கதாகும். ஏதோ மேம்போக்காக தோழர் முத்தரசன் கூறவில்லை வரலாற்று களை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்தினால் அதன் உண்மை வெளிச்சமாகவே தெரியும்.

மண்டல் குழுப் பரிந்துரையை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி -  வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு தருவதாக சமூக நீதிக் காவலராக இருந்த பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்திலே அறிவித்தபோது அதுவரை வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பிஜேபி, தன் ஆதரவை விலக்கிக் கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்ததே! 27 ஆண்டுகளுக்குமுன் நமது கண்ணெதிரே நடந்த இந்த அநீதியை நினைவுபடுத்திக் கொண்டால் தோழர் முத்தரசன் அவர்கள் அடையாளப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி  வகையறாக்களின் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் தாத்பரியம் என்ன என்பது வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே பளிச் சென்று தெரியுமே!



96ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பேராயர் எஸ்றா. சற்குணம் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். (சென்னை பெரியார் திடல் --18.12.2017)


இந்த நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இந்திரஜித்குப்தா அவர்கள், மண்டல் குழுப் பரிந்துரை அமல் செய்யப்படுவது தொடர்பான விவாதத் தின்போது (6.9.1990) நாடாளுமன்றத்தில் பேசியதை மிகவும் பொருத்தமாக எடுத்துக் காட்டினார் இதோ இந்த உரை:

"* 52 விழுக்காடாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வருக்கு தற்பொழுது வழங்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடே போதாது.

*  இடஒதுக்கீட்டை எதிர்க்கின்ற ஒரு 15லிருந்து 17 விழுக்காடு மக்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என வீட்டோ செய்வதற்கு அனுமதிக்க முடியாது.

* முதன் முறையாக, முதல் கட்டமாக இந்த இடஒதுக் கீட்டை வெறும் 27 விழுக்காடாக துவங்கும் நிலையில், இந்த இடஒதுக்கீட்டிலும் ஒரு பொருளாதார அளவுகோலை திணிப்பது சரியல்ல என எனது கட்சி கருதுகிறது.

* இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய்விடும் என்ற வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

* இடஒதுக்கீட்டை எதிர்த்து பல இளம் பெண்கள், தகுதி செத்து விட்டதாக பாடைகட்டி ஊர்வலம் நடத்துகின்றனர். திறமை இறந்து விட்டதாக சிதைக்கு தீ மூட்டுகின்றனர். எங்கள் வருங்காலக் கணவர்கள் வேலையில்லாத் திண்டாட் டத்தால் தவிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்கின்றனர். ஆனால், இப்பொழுதே கோடிக்கணக்கான இளைஞர்கள் எந்தத் தவறும் செய்யாமலே வேலையில்லாமல் இருக் கின்றனர். அவர்களைப் பற்றி இந்த இளம் பெண்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் தங்களது வருங்காலக் கணவர்களுக்கு வேலை கிடைக்காது என கவலைப்படுகின்றனர். இது என்ன சமூகப் பார்வை? கல்வி, வேலை வாய்ப்பை இதுவரை அனுபவித்து வந்தவர்கள் சமூக உணர்வின்றிப் பேசலாமா?"

தோழர் இந்திரஜித் குப்தாவின் இந்த நறுக்குத் தெறித்த உரையைத் தான் மிகப் பொருத்தமாக எடுத்துகாட்டினார் தோழர் முத்தரசன் அவர்கள்.



எம்ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் ரூ.9000க்கு மேல் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற ஆணை பிறப்பித்தஅந்தத் தருணத்திலேயே அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி அந்த ஆணை ஒழிக்கப்படும் வரை பல களங்களை உருவாக்கியது திராவிடர் கழகமும் அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி. வீரமணி  அவர்களும் ஆவார்கள்.

அந்த ஒருங்கிணைப்பில் கடைசி வரை கல்தூண்போல் உறுதியாக நின்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இந்த இடத்திலே நினைவூட்டுகிறோம்.

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளும் இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற நாளும் ஒன்றாக இருந்ததால், அது குறித்த அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்தார் முத்தரசன்.

குஜராத்தில் கடந்த தேர்தலைவிட இந்த முறை பிஜேபி பெற்ற இடங்கள் குறைவுதான். உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெரும் சரிவை பிஜேபி  சந்தித்தவரையில்  என்று முகத்தில் அறைத்தது போல் பதிவிட்டார் தோழர் முத்தரசன்.

மற்றொரு முக்கிய கருத்துண்டு. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டால் கொலை வரை கொண்டு செல்லும் பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கான கருத்தாக்கம் அது.

பார்ப்பனக் குடும்பங்களில் ஜாதி மாறி திருமணமும் ஒரு  சில இடங்களில் நடப்பதுண்டு. ஆனால் அவர்கள் இந்த விடயத்தில் எப்படி  நடந்து கொள்கிறார்கள்? அடிதடியில் இறங்குகிறார்களா? கத்தியைத் தூக்குகிறார்களா? சில நாட்கள் அமைதியாக இருந்து பின்னர் அடங்கிப் போய் விடவில்லையா?



பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வராத ஜாதி ஆவணக் கோபம் பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தவர்களே (அட சூத்திரர்களே) உங்க ளுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது என்பதுதான் தோழர் முத்தரசன் கேட்ட வினாவுக்கான விளக்கமாகும்.

எழுச்சித் தமிழரின் "இலக்கண சுத்தமான" கருத்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களின் உரை ஆற்றோட்டமாக அமைந்திருந்தது. 96ஆம் ஆண்டு காணும் இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் சிறப்பை சிலாகித் தார். தன்னைவிட வயது குறைந்த கலைஞர் அவர்களைத் தலைவராக அன்பழகனார் ஏற்றுக் கொண்டது எப்படி?

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து கழகத்தைக் காப்பாற்றிய கலைஞருக்குத் துணை நின்றவர் பேராசிரியர்.

'கலைஞரைப் போல உழைக்க முடியாது; கலைஞரைப் போல பேச முடியாது; கலைஞரை போல எழுத முடியாது; கலைஞரைப் போல தந்தை பெரியாரின் கருத்துக்களை வேறு யாராலும் எடுத்துக் கூற முடியாது, அதனாலே என்னைவிட ஒரு வயது குறைந்த கலைஞரை என் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொன்ன பேராசிரியரின் பெருந்தன்மை யையும், கழகத்தைக் கட்டிக் காக்கும் கடமை உணர்வினையும் துலாக் கோலில் நிறுத்திப் பார்ப்பது போல் துல்லியமாக எடுத்துரைத்தார் எழுச்சித் தமிழர். கலைஞர் அவர்களிடம் பேராசிரியர் கொண்டிருந்த தோழமை உணர்வினை வெறும் பாராட்டுக்காக நான் எடுத்துக் கூறவில்லை - நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது என்று சொன்னதுதான் எத்தனைத் துல்லியம்!

மாணவனாக இருந்த காலத்திலிருந்தே பெரியார் திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், வியாழன் தோறும் நடை பெறும் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டங்களில் எல்லாம் பார்வையாளராக இருந்து தன்னைத் தானே தந்தை பெரியார் அவர்களின் கொள்கையில் செதுக்கிக் கொண்ட மலரும் நினைவுகளையும் பதிவு செய்தார்.

திராவிடர் கழகத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டையும் தோலூரித்தார் தொல். திருமா வளவன் ஆரிய எதிர்ப்பு இல்லாத தமிழ்த் தேசியத்தால் என்ன பலன்? ஆரிய எதிர்ப்பினை கொள்கையாக உடையது தான் திராவிடம்.

ஆரிய எதிர்ப்பு இல்லாத தேசியம் தமிழர்களுக்கு எதிராகத் தான் திரும்பும் - ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு  எதிராகத்தான் திரும்பும் - ஜாதி ஒழிப்பிலும் அவர்களுக்குத் தெளிவு ஏற்படுவதில்லை.

இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில் 70 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெறும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது மிகப் பெரிய அநீதி.

அந்த 27 சதவீத இடஒதுக்கீடும் முழுமையாக அளிக்கப் படுவதில்லை. 50 சதவீதத்துக்குமேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.
இடஒதுக்கீடு என்பது நீதித் துறையிலும் கொண்டு வரப் பட வேண்டும்; அதுவரை நம் போராட்டமும் தொடர வேண்டும்.

அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் வேலை வாய்ப்பு என்பது வெறும் 15 விழுக்காடுதான் 85 சதவீத இடங்கள், வேலை வாய்ப்புகள் தனியார் துறைகளில்தான் உள்ளன.

பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்த்துறைக்குத் தாரை வார்க்கவே ஒரு தனித்துறை மத்திய அரசிடம் இருக்கிறது அதுதான் Dept of Dis Investment பொதுத்துறையின் பங்கு களைத் தனியாருக்கு விற்றுக் கொண்டு இருக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் திராவிடர் கழகம் வீதியில் இறங்கிப் போராடி வருகிறது. சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பதவி உயர் விலும், இடஒதுக்கீடு என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் எழுச்சித் தமிழர் விரிவாக எடுத்துரைத்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத் திலும் பின் தங்கியவர்கள்தான் ஆனாலும் அவர்களே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுடன் கை கோப்பது தான் விபரீதம். எதிரிகளின் வில்லுக்கு அம்பாகப் பயன்படலாமா?

ஜாதி, மத வெறியைத் தூண்டி அரசியல் நடத்துபவர் களுக்குப் பலியாகி விடலாமா? வி.பி.சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்த போதுகூட அங்கும் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் அவருக்கு எதிராகத் தூண்டி விடப்பட்டனர். தோழர் முத்தரசன் சொன்னதுபோல ஜாதி மாறிக் காதல் செய்தால் வன்முறை தாண்டவமாடுவது சரியானதுதானா? என்ற வினாவை எழுப்பினார் திருமா. அவர்களின் இந்தக் கருத்தினை விழாவுக்குத் தலமை வகித்த தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வழிமொழிவது போல கருத்தினைப் பதிவு செய்தார்.

குஜராத்திலே சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை ஏவி விடப்பட்டபோதுகூட மதவாத சக்திகளுக்குக் கருவி யாகப் பயன்படுத்தப்பட்டது மலைவாழ் மக்கள் என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஆதிக்கப் பிரிவினர் எப்படி எல்லாம் காய்களை நகர்த்திக் குளிர் காய்கின்றனர்.

மதச் சார்பின்மை, சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பிரச்சாரம், களப் பணி, போராட்டங்களில் ஈடுபட வேண்டும் குறிப்பாக திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பணியில் ஈடுபட்டே வருகின்றன. மற்றவர்களும் ஒருமுகமாக இணைந்து போராடும்போது களமாடும்போது இதற்கான தீர்வு கிடைக்கும் எனும் பொருளில் எழுச்சித் தமிழர் அடுக்கடுக்கான கருத்துக்களை அழகாகப் பதிவு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை உரையில் நாட்டில் வகுப்புவாரி உரிமை கடந்து வந்த பாதையினை நேர்த்தியாக எடுத்துக் கூறினார். நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் வகுப்புரிமை ஆணை செயல்படுத்திய வரலாற் றைத் தொடங்கி மண்டல் குழுப் பரிந்துரையின் நெடிய வரலாறு வரை நிகழ்ச்சி நிரல் போல விளக்கினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் காகாகலோல்கர் நடத்து கொண்ட நேர்மைற்ற செயலை எல்லாம் விரிவாக விளக்கி னார் ஆணையத்தின் அறிக்கையை அரசிடம் அளித்துவிட்டு, அதற்கு முரணாக பிரதமர் நேருவுக்குத் தனியாகக் கடிதம் எழுதிய அந்தப் பார்ப்பனிய அறிவு நாணயமற்ற செயலை அம்பலப்படுத்தினார்.

மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்த வைக்க 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் திராவிடர் கழகம் நடத்திய வரலாற்றைக் கூறினார்.

இரண்டாவது பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்திற்குத் தலைமை வகித்த பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) அவர்களையும், குழு உறுப்பினர்களையும் பெரியார் திடலுக்கு அழைத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச் சியில் பி.பி. மண்டல் சொன்ன வார்த்தைகளையும் எடுத்துக் கூறினார்.

எங்களால் அரசுக்கு அறிக்கையைத்தான் அளிக்க முடியும் அதனைச் செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் கையில் தானிருக்கிறது. திராவிடர் கழகம்தான் அதற்கான வழி முறைகளை வகுக்க வேண்டும் என்று பி.பி. மண்டல் சொன்னதையும் எடுத்துச் சொல்லத் தவறவில்லை திராவிடர் கழகத் தலைவர்.

மண்டல் குழுப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கேகூட திராவிடர் கழகம் மாநாடு நடத்தியதுண்டு. சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் நடத்திய அந்த மாநாட்டில் தேவராசு அர்சு அவர்களும் பங்கு கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். தாழ்த்தப் பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர் என்றார்.

எவ்வளவோ அரும்பாடுபட்டு, போராடி பெற்ற பிற்படுத் தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு - அது அமலுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆகியும் முழுமையான அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்ற சோகத்தை எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர்.

குரூப் ஏ பிரிவில் 17 விழுக்காடு, குரூப் பி பிரிவில் 14 விழுக்காடு, குரூப் சி பிரிவில் 11 விழுக்காடு, குரூப் டி பிரிவில் 10 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் 24 மத்திய அமைச்சகங்களின் பணிகளில் உள்ளதாக  மத்திய அரசின்  பணியாளர் பயிற்சித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் பி பிரிவில் 15 விழுக்காடு, குரூப் சி பிரிவில் 17 விழுக்காடு, குரூப் டி பிரிவில் 18 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசின் 57 அமைச்சகங்கள், துறைகள், அரசமைப்பு அதிகாரம் பெற்ற துறைகளுக்கான பணிகளில் உள்ளதாக மத்திய அரசின்  பணியாளர் பயிற்சித்துறை தகவல் 1.1.2017 அன்று வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சக செயலகத்தில் குரூப் ஏ அலுவலர்களுக்கான பிரிவில் 64 பணியிடங்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்படவில்லை. திறந்த போட்டியில் 60 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடத்தில் நால்வரும் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் 503 பேரில் 25பேர் மட்டுமே பிற்படுத் தப்பட்டவர்களாக உள்ளனர்.

மத்திய அமைச்சக அலுவலகங்கள் 35இல் 24இலும், மத்திய அரசுத் துறைகள் 37இல் 25இலும் மண்டல் பரிந்துரை யின்படி, பிற்படுத்தப்பட்டவர்களுககான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, கடந்த 24 ஆண்டுகளாக அரசமைப்பை செயல் படுத்தவேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவல கம், குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றில்  நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசின் துறைகளில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் பயன்பெறாதநிலை இருந்து வருகிறது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகள் தனியார்த் துறைக்கு மாற்றப்படுவதிலும் "சமூக நீதி" பிரச்சினையும் உள்ளடக்க மாகவே உள்ளது. தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டால் அங்கு இடஒதுக்கீடு கிடையாது அல்லவா? இடஒதுக்கீடுக்கு எதிராக திரை மறைவில் சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன என்று விளக் கமாக கருத்துகளையும் தகவல்களையும் அடுக்கடுக்காக சொன்னார் ஆசிரியர். (முழு உரை பின்னர்).

மாலை 6.30 மணிக்குத் தொடங்கப்பட்ட கூட்டம் இரவு 8.30 மணிக்கு நிறைவுற்றது. மாலை 6 மணிக்கே மக்கள் திரள் மண்டபத்தில் கூடி விட்டது. பொதுக் கூட்டம் அல்லாமல் கருத்துச் செறிவு மழையாக வீசும் பல்கலைக் கழக வகுப்பறை போல அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.  ஆம் ஒரு மாலைப் பொழுதில் நடைபெற்ற உயர் எண்ணங்களின் ஊர்வலம் என்று சொன்னால் அது மிகையாகாது ஆகவே ஆகாது!

(96ஆம் அகவை காணும் இனமான பேராசிரியர்

க. அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை கழகத் தலைவர் தெரிவித்தவை முதல் பக்கம் காண்க).


- விடுதலை நாளேடு, 19.12.17

வியாழன், 14 டிசம்பர், 2017

மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை



பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 9.12.2017)


- விடுதலை நாளேடு,10.12.17

நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களாட்சியா?

நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களாட்சியா?

உதயசூரியனுக்கே வாக்களிப்பீர்!

ஒளி பிறக்கட்டும் - இருள் ஒழியட்டும்!!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

அதிமுக ஆட்சியின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

 

சென்னை,டிச.14தமிழ்நாட்டில்தற்போதுநடப்பது ஆளுநர் ஆட்சியே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் ஆட்சியல்ல; அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களும் அறவேயில்லை. இந்த நிலையில், உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர் என்று வாக்காளர்களுக்கு ஆதாரங்களை எடுத்துக்காட்டி வேண்டுகோள் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னைஆர்.கே.நகர்சட்டப்பேரவைத்தொகுதி யைச் சேர்ந்த செரியன் நகர், வ.உ.சி. நகர் (கொருக்குப் பேட்டை)  ஆகிய இரு இடங்களில் நேற்று (13.12.2017) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் என்பது இரண்டாவதுஇடைத்தேர்தல்! இதுவரை ஒரு இடைத் தேர்தல்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்; இந்தஆர்.கே. நகரில் ஒரு வித்தியாசம் - இது இரண்டாவது இடைத் தேர்தல்; முதல் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரலில் அறி விக்கப்பட்டு, அதற்கு தடை விதிக்கப்பட்டு மறுபடியும் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.



ஏன் இரண்டு இடைத்தேர்தல்?

கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட அந்த இடைத் தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது? அதற்கான காரணம் என்ன? அந்தக் காரணங்கள் சரி செய்யப்பட்டு மறு படியும் இந்தத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடக்கிறதா என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லவேண்டும்.

அப்படிப் பதில் சொல்லாமலேயே மறுபடியும் இடைத்தேர்தல் நடக்கிறது.

வாக்காளர்களுக்குப் பண பட்டுவாடா செய்யப் பட்டது என்று காரணம் கூறிதான் ஏப்ரலில் நடக்க விருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத் தியது.

பண பறிமுதல் செய்யப்பட்டதே - அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

யார் யார் எல்லாம் பண பட்டுவாடா செய்ததற்கான பொறுப்பாளர்கள்-அவர்களிடம்கைப்பற்றியபணம் எவ்வளவு என்பது விலாவாரியாக அன்று வெளியிடப் பட்டது. ரெய்டு செய்தவர்களே வெளியிட்டார்கள்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - ரூ.13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம்

அமைச்சர்கள்:

செங்கோட்டையன் - ரூ.13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம்

வைத்தியலிங்கம் - ரூ.11 கோடியே 13 லட்சத்து 48 ஆயிரம்

திண்டுக்கல் சீனிவாசன் - ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்

பி.தங்கமணி - ரூ.12 கோடியே 67 லட்சத்து 32 ஆயிரம்

எஸ்.பி.வேலுமணி - ரூ.14 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரம்

டி.ஜெயக்குமார் ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்.

மொத்தத் தொகை: ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம்.

பண பட்டுவாடா செய்யப்பட்டதற்காக ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பண பட்டுவாடா செய்தவர்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இவை எதுவும் நடக்காமலேயே, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலேயே எந்தக் காரணத்துக்காகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதோ, அந்தக் காரணம் நிறைவேறாமலேயே மறுபடியும் இடைத்தேர்தல் என்றால், இதைவிட மோசடி ஒன்று இருக்க முடியாது.

இப்படி அடிக்கடி இடைத்தேர்தல் வரவேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கத்தான் செய்வார்கள் - ஏன்? வாக்காளர்கள்கூட எதிர்பார்ப்பார்கள்; கார ணத்தை நான் சொல்ல விரும்பவில்லை - உங்களுக்கே தெரியும் (பலத்த கரவொலி, சிரிப்பொலி).

45,000 போலி வாக்காளர்களைக் கண்டுபிடித்த தி.மு.க.வின் சாதனை!

தி.மு.க. செய்த சாதனைக்கு இத்தொகுதி வாக்காளர் கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோர் நன்றி தெரிவிக்கவேண்டும்; பாராட்டவும் வேண்டும்.

இந்தத் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர் களை தி.மு.க. கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. இந்தியாவிலேயே இத்தகைய சாதனையைச் செய்தது தி.மு.க.தான் (கரவொலி!).

தி.மு.க.வைப் பாராட்டிய உயர்நீதிமன்றம்

இன்றுகூட சென்னை உயர்நீதிமன்றம் தி.மு.க.வைப் பாராட்டியுள்ளது. கடைசியாக 5,000 போலி வாக்காளர் கள் இத்தொகுதியில் இருப்பது குறித்து தி.மு.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதனை ஏற்று 2,500 வாக்காளர்களை உடனே நீக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு எதிர்க்கட்சி செய்யவேண்டிய கடமையைச் சரிவர செய்திருக்கிறது தி.மு.க.



செத்தவர்கள் உயிர் பெறுவதும், உயிருள்ளவர்கள் சாகடிக்கப்படுவதும் நமது ‘புண்ணிய’ பூமியில் நடக்கும் தேர்தலின்போதுதான்.

எதற்காகப் பிரச்சாரம் செய்கிறோம்?

நாங்கள் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளோம் என் றால், அது தி.மு.க.வுக்காகக்கூட அல்ல- நாட்டு நலனுக் காக - வளர்ச்சிக்காக - அதனை தி.மு.க. செய்யும் என்பதால்தான் - இந்தத் தி.மு.க. ஆதரவுத் தேர்தல் பிரச்சாரம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் கட்சி தி.மு.க. - தாய் மண்ணுக்காகப் பாடுபடும் கட்சி தி.மு.க.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?

நன்மைகள் என்ன?

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்ன? என்பதை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டாமா?

ஊழலைத் தவிர இந்த ஆட்சி செய்தது என்ன? இந்த ஆட்சியை  வீட்டுக்கு அனுப்பவேண்டாமா?

ரேஷன் கடை என்று பெயருக்கு இருக்கிறது. எது கேட்டாலும் இல்லை, இல்லை என்ற பாட்டுதான். அம்மா உணவகங்களும் மூடப்படும் நிலைதான். அவர்களுக்குள் பங்காளி சண்டை நடந்துகொண்டு இருக்கிறதே தவிர, ஆட்சியைப் பயன்படுத்தி மக் களுக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணம் இல்லை; மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டியதைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சி இல்லை.

நடப்பது கவர்னர் ஆட்சியா?

உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றார் கலைஞர். மாநில சுயாட்சிக்கு ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருந்தால் மட்டும் போதுமா?

இப்பொழுது தமிழ்நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா? அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியா? கவர்னர் ஆட்சியா? என்ற நிலைதானே! மறுக்க முடியுமா? புரோகிதர் ஒருவர் தமிழ் நாட்டுக்கு ஆளுநராக வந்திருக்கிறார். (பன்வாரிலால் புரோகித்)

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கெல்லாம் செல்லுகிறார் கவர்னர் - அதிகாரிகளை அழைக்கிறார். ஆய்வு நடத்துகிறார். இதற்குமுன்பு இப்படியெல்லாம் நடந்ததுண்டா?

புயலாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கவர்னர் செல்லுகிறார் - மக்களை சந்திக்கிறார்; நேராக டில்லிக்குச் செல்லுகிறார். நான்கு மத்திய அமைச்சர்களைச் சந்திக்கிறார். தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைச் செய்யவேண்டியவர் கவர்னரா? முதலமைச்சரா? எதற்கெடுத்தாலும் “அம்மா, அம்மா’’ என்கிறார்களே,  அந்தம்மா முதலமைச்சராக இருந்தால் ஆளுநர் இப்படியெல்லாம் ஆட்டம் போட முடியுமா? தலைமைச் செயலகத்தில்தான் ரெய்டு நடந்திருக்குமா?

கவர்னருக்கு ஆளும் கட்சி சர்டிபிகேட்!

இப்பொழுது என்ன நடக்கிறது? கவர்னர் நன்றாகத்தானே செயல்படுகிறார் என்று சபாஷ் போடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியைப் பொருட்படுத்தாமல், ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதுபற்றிக் கவலைப்படுவதில்லை. இந்த நிலையில், இந்தத் தொகுதியில் ஆளும் கட்சிக்காரர் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பினாலும் என்ன பிரயோசனம்? கவர்னர்தானே ஆளப் போகிறார்? நடப்பது சரணாகதி மந்திரி சபைதானே!



‘நீட்’டைத் தடுக்காதது ஏன்?

இந்தியாவிலேயே 29 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது கலைஞர் ஆட்சி. வேறு எந்த மாநிலத்தில் இந்த சாதனை நடந்திருக்கிறது? ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. தந்தை பெரியார் போராடி, நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அந்த நிலை ஒழிக்கப்பட்டது.

கலைஞர் ஆட்சியில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள்

மாவட்டந்தோறும் கலைஞர் ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதால், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து கிராமப்புற ஏழை, எளிய மக்களிடமிருந்து டாக்டர்கள் உருவாக முடிந்தது.

இன்றைய நிலை என்ன? மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வு இந்த வாய்ப்பை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டதே!

‘நீட்’டை ஜெயலலிதா ஆதரித்தாரா? இல்லையே! ‘நீட்’டை எதிர்த்து இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதே - அதற்கு மத்திய அரசு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை? மூச்சுவிடவில்லையே அ.தி.மு.க. அரசு! முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்.சை நேரில் பார்த்து வேண்டுகோள் வைத்தோமே!

வாக்களிக்கும்முன் அனிதாவை நினையுங்கள்!

அனிதாக்கள் தற்கொலைக்கு விரட்டப்பட்டதற்குக் காரணம் இந்த ‘நீட்’தானே? வாக்களிக்கச் செல்லும்பொழுது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதாவின் முகம் உங்கள் நினைவில், கண்களில் தோன்ற வேண்டாமா? சமூகநீதிக்குக் குழிவெட்டிய மத்திய பி.ஜே.பி. அரசுக்கும், அதற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கும் வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பிக்கவேண்டாமா?

சட்டம் - ஒழுங்கு நிலை எந்த நிலையில்?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலை என்ன? திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் - இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு அய்ந்தாண்டுகள் கடந்த நிலையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையே! கடைசியாக சி.பி.அய்.யிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதே. இதுதான் அ.தி.மு.க. அரசின் திறமைக்கு அடையாளமா?

உங்கள் வீட்டில் விளக்கு எரிய என்ன செய்யவேண்டும்?

எனவே, இருள் நீங்கிட, உதயசூரியன் தேவைப்படுகிறான். 21 ஆம் தேதி காலை வாக்குச் சாவடிக்குள் செல்லுங்கள் - பெட்டி மறைவான இடத்தில் இருக்கும். வாக்களிக்கும் இயந்திரத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு எதிர்த் திசையில் இருக்கும் பொத்தானைக் கொஞ்சம் அழுத்தி அழுத்துங்கள். விளக்கு எரியும்; அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும். வெளிச்சம் பரவும் - இருள் அகன்று ஓடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.



====================


இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.

ஓ.எஸ்!

இ.பி.எஸ்.ஸாக இருந்தாலும் சரி, அல்லது ஓ.பி.எஸ்.ஸாக இருந்தாலும் சரி டில்லி ஆணையிட்டால், எல்லாம் ‘‘ஓ.எஸ்.’’தான்; ‘நோ’ என்ற பேச்சுக்கே இடமில்லை!

 

====================


இடைத்தேர்தலா? எடைத்தேர்தலா?

இது இடைத்தேர்தல் என்கிறார்கள்; அதைவிட மக்கள் எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் இது. ஆளும் கட்சி என்ன செய்திருக்கிறது இந்தத் தொகுதியில்? எந்த வளர்ச்சிப் பணியைச் செய்து கொடுத்திருக்கிறது என்று வாக்காளர்கள் எடை போட்டுப் பார்க்கக் கிடைத்திட்ட நல்லதோர் வாய்ப்பு இது.

இடைத்தேர்தலை எடை போட்டுப் பார்த்து நீங்கள் ஆண்டது போதும் என்று கூறி, ஆளும் கட்சிக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது.

 

====================


சின்னம் முக்கியமா?

தேர்தலில் கட்சிச் சின்னம் முக்கியம் என்ற கருத்து உலா வருகிறது. இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால், தங்களுக்கு வெற்றி உறுதி என்று ஆளும் தரப்பில் மார்தட்டப்படுகிறது.

இதே ஜெயலலிதா அம்மையார் இரட்டை இலை சின்னத்தில் நின்று பர்கூரில் தோற்கவில்லையா? எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோதே 1980 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வி அடையவில்லையா? அப்பொழுது இரட்டை இலை சின்னத்தில்தானே அ.தி.மு.க. போட்டியிட்டது?

சின்னம்தான்வெற்றிக்குத்தேவையானதுஎன்று சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது தான்.

====================


கொருக்குப்பேட்டைப் பகுதி எத்தகையது?

இந்தக் கொருக்குப்பேட்டைப் பகுதி தொழிலாளர் கள் அதிலும் குறிப்பாக நகர சுத்தித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன் றிய பகுதியாகும். சிங்காரவேலர், ஜீவரத்தினம் போன்றவர்கள் கால் பதித்த பகுதி. எலமந்தா என்ற ஆதி ஆந்திரா குடும்பத் தோழரை, மானமிகு கலைஞர் அவர்கள் சட்டமன்ற மேலவை உறுப்பின ராக அமர்த்தி மகிழ்ந்தார். உங்கள் வாக்கு உதய சூரியனுக்கே என்பதில் அய்யமில்லை. உதிக்கட்டும் உதயசூரியன், விலகி ஓடட்டும் காரிருள்.



- விடுதலை நாளேடு,14.12.17