வியாழன், 4 ஜூலை, 2024

தாராபுரம் திராவிடர் எழுச்சி மாநாடு - 28.05.2005

 

-கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுலை1-15-2024

வரலாற்றுச் சிறப்புமிக்க தாராபுரம் திராவிடர் எழுச்சி மாநாடு 28.05.2005 அன்று காலை பேரெழுச்சியுடன் உற்சாகத்துடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள இராசா விசுவநாத் மகாலில் ஈரோடு அக்ரகாரம் ‘சுயமரியாதைச் சுடரொளி’ இல. பெருமாள் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது.

மாநாட்டையொட்டி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருந்தனர்.

மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் நகர தி.க. செயலாளர் தா.சா. பாலு வரவேற்றுப் பேசினார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

திராவிடர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார் ஆசிரியர்…

கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி ‘எரியட்டும் மனுதர்மம்’, கோபி ந.கருப்பண்ணன் ‘ஒழியட்டும் இராமாயணம்’, தஞ்சை இரா. பெரியார்செல்வன் ‘மடியட்டும் மகாபாரதம்’, அ. அண்ணாதுரை ‘புதையட்டும் புராணங்கள்’ சு.சிந்தனைச்செல்வன் ‘அழியட்டும் இந்துத்துவா’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கத்தில் மிகச் சிறப்பாக உரையாற்றினர்.
அடுத்து பிற்பகல் 1 மணிக்கு நாம் தொடக்க உரையாற்றினோம். அப்போது ‘‘இன்றைக்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. ராக்கெட்டைத் தயாரிக்கிறார்கள். அது எல்லையில்லாத தூரத்திற்குச் செல்கின்றது. அங்கு அறிவுக்கும் தடையில்லை. எல்லைக்கும் தடையில்லை. தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் அங்கு விஞ்ஞானிகளாகப் பணியாற்றுகிறார்கள். நமது நாடு ராக்கெட்டை அனுப்புவதிலே மகிழ்ச்சி இருக்கிறது.

அதே நேரத்தில் தமிழன் கட்டிய கோவிலுக் குள்ளே தமிழனுடைய பணத்தாலே தமிழனுடைய பக்தி உணர்வினாலே கட்டப்பட்டிருக்கின்ற கோவிலுக்குள்ளே என்னுடைய சகோதரன் தாழ்த்தப்பட்டவன் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரே காரணத்தால் என்னுடைய இன்னொரு சகோதரன் நீ இங்கே நில், அவனை அங்கே நில் என்று சொல்லிவிட்டு இந்த நாட்டுக்கே சம்பந்தம் இல்லாத பார்ப்பான் கருவறைக்குள் இவர் மட்டும் சென்று நான் தான் சாமியைக் குளிப்பாட்டுவேன் என்று சொன்னால், அந்தப் பார்ப்பன ஆதிக்க ஆணவத்தின் முதுகெலும்பை முறிக்கின்ற வரையிலே எங்களுக்கு வேலை இருக்கிறது; சமத்துவத்தை உருவாக்கியாக வேண்டும் எனக் குறிப்பிட்டு உரையாற்றினோம்.

திராவிடர் எழுச்சி மாநாட்டையொட்டி எற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மாலை 5 மணிக்கு காமராசபுரத்தில் (வடதாரை) அணி வகுத்து நின்று புறப்பட்டது. பேரணியை அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் தொடங்கி வைத்தார். கோவை திராவிடர் கழக இளைஞரணிப் பொறுப்பாளர் தமிழ்முரசு அவர்களின் மகன் சித்தார்த்தன், கூரிய அரிவாள் மீது ஏறி நின்று கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கினான்.

பளபளக்கும் அந்தக் கூரிய அரிவாள் மீது ஏறி நின்றதோடு மட்டுமல்லாமல் சிறுவன் எழுப்பிய முழக்கம் அனைவரின் சிந்தனைகளைக் கிளறிவிட்டது.

டெம்போ டிராவலரை ஈரோடு தோழர்கள் ராஜா, திருமுருகன் ஆகியோரும், மாருதிக் காரை ஈரோடு இராசன், குன்னூர் ராமன் ஆகியோரும் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர்.

காமராசபுரத்தில் தொடங்கியப் பேரணி சின்னக் கடைவீதி, ஜவுளிக்கடைவீதி, உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வழியாக மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும் சீரணி அரங்கினை வந்தடைந்தது. விழா இறுதியில் நாம் நிறைவுரையாற்றினோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை, காவிரி நதி நீர் பங்கீடு, சமூக நீதி உள்ளிட்ட 8 முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திராவிடர் கழக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் க. யோகானந்தம் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
(நினைவுகள் நீளும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக