புதன், 3 ஜூலை, 2024

தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு - 26.5.1990

 

இயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு

அக்டோபர் 16-31 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி. வீரமணி

25.5.1990 அன்று தஞ்சையில் நடைபெற்ற கழக மாநாட்டில் உரையாற்றும்போது, பார்ப்பனர்களே, உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், எங்களை நீங்கள் எவ்வளவு காலம்தான் ஆதிக்கம் செலுத்துவீர்கள்? எங்கள் மக்களை எல்லாம் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதைப் போல என்றைக்கும் இருப்பார்கள் என்கிற நினைப்புதானே உங்களுக்கு? அதன் காரணமாகத்தானே அந்த அகம்பாவமும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன? எங்களின் தன்மானம் வீழ்ந்தாலும் பரவாயில்லை. நமது இனமானம் நிமிர வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் இழிவுறுத்தலைச் சகித்தோம் என்று உணர்ச்சியுரை ஆற்றினேன். மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், எனக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கும் நிகழ்ச்சி மக்கள் கடலின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் என்னை தராசின் ஒருபுறத்திலே அமரவைத்து உங்களுடைய அன்பை மட்டும் கொட்டவில்லை. இந்த எளிய தொண்டனின் உழைப்பிலே அய்யா அவர்கள் கொள்கையிலே தந்தை பெரியாரின் தன்னலம் கருதாத இலட்சியப் பணியிலே நீங்கள் வைத்திருக்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையைத்தான் கொட்டியிருக்கின்றீர்கள். மறு தட்டிலே என்னை எடை போட்டுப் பார்க்க _ நாணயமாக இலட்சியங்கள் செயல்படுகின்றனவா என்று _ நாணயத்தை வைத்துப் பார்த்து, நீங்கள் செய்திருக்கின்ற இந்த நிலையை எண்ணிப் பார்த்தேன் என்று குறிப்பிட்டேன்.

தஞ்சை சமூகநீதி மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழும் ஆசிரியர் கி.வீரமணி

 26.5.1990 அன்று தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார் உருவப் படத்தைத் திறந்து வைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கியானி ஜெயில்சிங் அவர்கள் உருதுமொழியில் உரையாற்றினார். அவரது உரையை பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் எம்.எல்ஏ., சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்தார். அப்போது, தந்தை பெரியார் பற்றி அவர் கூறும்போது, “இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சமுதாயப் புரட்சி வீரர் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தைத் திறந்து வைப்பதற்கான மகத்தான ஒரு கவுரவத்தை எனக்கு அளித்தமைக்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

 தஞ்சை சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்ட

புலவர் அப்துல் லத்தீப், முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் உடன்

ஆசிரியர் கி.வீரமணி

 மாநாட்டில், அம்பேத்கர் உருவப் படத்தினை திறந்து வைத்து, நீதிபதி திரு.பி.வேணுகோபால் அவர்கள் எழுதிய  “Social Justice and Reservation” என்னும் நூலினை ஜஸ்டிஸ் திரு.ஓ.சின்னப்ப ரெட்டி வெளியிட்டு உரையாற்றினார். நீதிபதி அவர்களின் ஆங்கில உரையை பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான்  மொழி பெயர்த்தார். அப்போது, நீதிபதி அவர்கள், “சமுதாய அந்தஸ்துதான் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. மதத்தை எதிர்க்காமல் சமூகநீதி மலராது; இடஒதுக்கீடு யாரோ போடும் பிச்சையல்ல என்றும், தந்தை பெரியார் கருத்துகள் காலத்தை வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவை” என்றும் ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி குறிப்பிட்டார்.

மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மண்டல் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் இடஒதுக்கீடு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்குமாறும், எல்லா மட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரியும் மத்திய மாநில அரசிலும் மகளிர்க்கு 30 சதவிகித இடஒதுக்கீடு கேட்கும், பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கான மனுக்களில் ஜாதி பற்றிய குறிப்பை ஒழிக்கக் கூடாதென்றும் சமூகநீதி வேண்டி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிறைவுரை ஆற்றினேன். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக