ஞாயிறு, 7 ஜூலை, 2024

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா மூன்று நாள் விழா! - 20, 21, 22.4.1989

 

இயக்க வரலாறான தன் வரலாறு(234) : 

உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில்

கி.வீரமணி


 புரட்சிக் கவிஞர்

பாரதிதாசன்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா மூன்று நாள் விழாவாக 20, 21, 22.4.1989 ஆகிய நாள்கள். இரண்டு நாள் விழா, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. மூன்றாவது நாள் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. நிறைவு விழா கூட்டத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். விழாவில், சோ.ஞானசுந்தரம், ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், காவிரிச்செல்வன் உள்ளிட்ட கழக நிருவாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நான் உரையாற்றும்போது, சட்டமன்றத்தில் கலைஞர் தாக்கப்பட்டதை நினைத்து நினைத்து ரத்தக் கண்ணீர் வடித்து வருகிறோம் என்று கண்டித்து உரையாற்றினேன்.

புரட்சிக்கவிஞர் விழாவில் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, புதுவைத் தாக்குதலுக்கு தந்தை பெரியாரின் மருந்துத் துளிகள், சட்டசபைத் தாக்குதலுக்கு வீரமணியின் கண்ணீர்த் துளிகள், என் இதயத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு, தாய்க் கழகம் தரும் மருந்துத் துளிகள் என்றும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மூன்று நாள் விழாவிலும், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிருவாகிகள் உறுதுணையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.


புரட்சிக் கவிஞர் விழாவில் கலைஞர் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

 முதுபெரும் மூதாட்டியார் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் மறைவு

முதுபெரும் மூதாட்டியார் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் முடிவு எய்தினார்கள். ரத்த அழுத்தத்தினால் கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு 31.5.1989 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிட்டது.

திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம்பரனார் அவர்களின் துணைவியார் ஆவார்கள். திருமதி சிவகாமி சிதம்பரனார் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த விதவைத் திருமணமாகும். திராவிடர் கழகத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து இரங்கல் அறிக்கை வாசிக்கப்பட்டது. நான், துணைவியார் மோகனாவுடன் சென்று மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். சென்னை மாவட்ட தி.க. தலைவர் எம்.பி.பாலு மற்றும் பெரியாரணித் தொண்டர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

சாமி சிதம்பரனார் மற்றும் துணைவியார் சிவகாமி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக