வியாழன், 4 ஜூலை, 2024

கடலூரில் ஜாதி ஒழிப்பு மாநாடு - 24.3.1995

 24.3.1995 அன்று கடலூரில் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடும், சிறப்பாகவும் நடைபெற்றது. முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களுக்கும், மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த கழகப் பொறுப்பாளர்களுக்கும் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன்.

மாநாட்டில் ஆபாசத்திலும், ஒழுக்கக் கேட்டிலும், மோசடியிலும் விஞ்சி நிற்பவர் _ பிரேமானந்தாவே! சாய்பாபாவே! என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட பட்டிமன்றம் மக்களுக்கு போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழித்து வெளிக்காட்டும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. மக்களும் இறுதி வரையிலும் அமைதியாகக் கேட்டனர்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, வீதி நாடகம் என சிறப்பாக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உரையாற்றுகையில், தந்தை பெரியார் அவர்கள் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக வைக்கம் மண்ணில் மனித உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்த வைக்கத்தில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை, இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களும் பின்பற்றக்கூடிய அளவுக்கு அகில இந்திய மாநாடாக நடத்தப் போகின்றோம். இந்திய அரசியல் சட்டத்திலே ஜாதி பாதுகாக்கப்படுகிறது. ஜாதியை எந்தெந்த அமைப்புகள் பாதுகாக்கின்றனவோ அவற்றையெல்லாம் நாம் உடைத்தாக வேண்டும் என ஜாதி ஒழிப்பு அவசியம் குறித்து பல கருத்துகளைக் கூறினேன்.

-கி.வீரமணி

அய்யாவின் அடிச்சுவட்டில் (258)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக