மகளிரணி கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிரணி கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

ஆக. 27 இல் சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு மகளிருக்கென்று போதிய நேரம் அளிக்கப்படும்!

மகளிர் பணிகள் வீறுகொண்டு எழட்டும் - எதிர்ப்புகள் நொறுங்கட்டும்!


கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில  கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை


தொகுப்பு: மின்சாரம்




சென்னை, மே 16  எதிர்ப்புகள் எழ எழத்தான் நம் பணிகள் வீறுகொண்டு எழும். மகளிர் பங்கு சிறப்பாகத் தொடரட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னையில் நேற்று (15.5.2019) முற்பகல் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

தமிழர் தலைவர் உரையின் வீச்சுகள்


தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் வருகை தந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

***


ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

***


நீங்கள் பேசவேண்டும்; நாங்கள் கேட்கவேண்டும்


இத்தகு கூட்டங்களில் மகளிராகிய நீங்கள் பேச வேண்டும் - நாங்கள் கேட்கவேண்டும்; பெண்கள் பேச்சை ஆண்கள் கேட்க ஆரம்பித்தால், குடும்பமும், நாடும் சிறந்தோங்கும்.

***


மகளிரணி, மகளிர் பாசறை அணிகளைப் பலப் படுத்தவேண்டும்.

பொறுப்பாளர்கள் மாதம் ஒருமுறை வீடுகளுக்குச் சென்று சந்திக்கவேண்டும்.

5 பேர் இருந்தால் ஒரு கிளை என்று ஆரம்பித்துவிடலாம்.

***


ஏச்சுகளைக் கண்டு அஞ்சாதீர்!


முகநூலில் திட்டி எழுதினால், அதனை அலட்சியப் படுத்துங்கள். நம் நாட்டுப் பொது வாழ்வில் இவை எல்லாம் இயல்புதான். அன்னை மணியம்மையார் சந்திக்காத வசவுகளா? இழிவுகளா? நமது தலைவர் அம்மாவை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் - சரியாகிவிடும்!

***


கழகத்திற்குப் பெண் பேச்சாளர்கள் தேவை. பெண் களுக்குப் பேச்சுப் பயிற்சி - கொள்கை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

***


திராவிடர் கழகம், பொதுவுடைமைக் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இம்மூன்றும் 1925 ஆம் ஆண்டில் ஒரே காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டவை.

***


திராவிடர் கழகமும் - ஆர்.எஸ்.எசும் நேரிடையாக எதிர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவை.

***


அவர்கள் ஜாதி பாதுகாக்கப்படவேண்டும் என்பவர்கள் - நாமோ ஜாதி மறுப்பாளர்கள், ஒழிப்பாளர்கள்.

***


அவர்களின் கொள்கை பெண்ணடிமை - நமது கொள்கையோ பெண்ணுரிமை.

ஆர்.எஸ்.எஸில் பெண்களைச் சேர்ப்பதில்லை. அதுதோன்றி 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆர்.எஸ்.எஸில் பெண்கள் அமைப்புத் தோன்றியது.

***


குழந்தை ஒரு பிரச்சினையா?


குழந்தை இல்லாவிட்டால், அது ஒன்றும் குறையில்லை. பெற்ற குழந்தைக்கும், வளர்ப்புக் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? நம் மனதைப் பொறுத்ததுதான்.

நாயைக் கொஞ்சுகிறான், தனக்குப் பிறக்காத குழந் தையைக் கொஞ்சக்கூடாதா? என்று கேட்டவர் பெரியார்.

***


பெரியார் செய்த புரட்சி


1908 ஆம் ஆண்டிலேயே தனது வீட்டில் சிறு வயதிலேயே கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்துப் புரட்சியைச் செய்தவர் பெரியார்.

***


தம் வீட்டுப் பெண்களைப் பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தவரும் அவரே!

***


பெண்ணுரிமை என்று வரும்போது திருவள்ளு வரைக்கூட விட்டு வைக்காதவர் பெரியார்.

***


பெண்களுக்கு நகைகள் எதற்கு? வீண் அலங்காரம் எதற்கு? மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்களை ஒதுக்கலாமா? அது சமுதாய வளர்ச்சிக்குக் கேடல்லவா? பெண் அடிமை என்பது மனித சமுக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (- தந்தை பெரியார், குடிஅரசு', 16.6.1935).

***


அது என்ன ஹவுஸ் ஒய்ஃப்? ஹவுசுக்கு எதற்கு ஒய்ஃப்?

***


மகளிருக்கான மருத்துவ உதவிப் பணிகள் தொடங்கப்படும், அது முக்கியமே!

***


பொறுப்புகளை மாற்றுவது எல்லோருக்குமே பயிற்சி தேவை என்பதற்காகத்தான். மற்றபடி பணிகளை சிறப்பாகவே செய்துள்ளனர்.

***


ஆகஸ்டு 27 இல் சேலத்தில் கழகத்தின் பவள விழா மாநாடு


சேலத்தில் திராவிடர் கழகத்தின் பவள விழா வரும் ஆகஸ்டு 27 அன்று நடக்கவுள்ளது. இரு நாள்கள் நடைபெறக் கூடிய அம்மாநாட்டில் மகளிருக்கென்று போதிய நேரம் ஒதுக்கப்படும்.

***


எதிர்ப்புகள் நமக்கு உரமூட்டும்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி கருத்தரங்குகள் மாவட்டந்தோறும் நடைபெறவேண்டும். ***

எதிர்ப்புகள் வரட்டும், அதுவே நம் எழுச்சிக்கு உரமூட்டும். அடிக்க அடிக்கவே பந்து எழும்பும்!

***


வீட்டுக்கு வீடு பெரியார் பிஞ்சு வாங்கப்படவேண்டும்; நம் பிள்ளைகளுக்குத் தலைசிறந்த கருத்துப் பயிற்சி இது.

***


மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் வரும்போது மகளிர்க்கு நேரம் ஒதுக்கப்படும்.

***


ஒரு முக்கிய காலகட்டத்தில் நம் இயக்கப் பணிகள் வீறுகொண்டு நடைபெற வேண்டும், நடைபெறட்டும்! கழகத் தலைவரின் உரையில் தெறித்த வழிகாட்டும் முத்துகள் இவை!

பாரத புண்ணிய பூமியின்' இலட்சணம் இதுதான்!


பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று பாதாம்பால் சாப்பிட்டு சாரீரத்தைத் தூக்கிப் பாடுவதில் ஒன்றும் குறைவில்லை.


உலகில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தாண்டவமாடும் நாடுகளின் வரிசையில் இந்தப் பாரத புண்ணிய பூமி'க்கான மகத்தான இடம் என்ன தெரியுமா? முதலிடம்! முதலிடம்!! முதலிடம்!!!


அமெரிக்க ஆய்வு நிறுவனம் 20.6.2018 அன்று வெளியிட்ட புள்ளி விவரம் என்ன கூறுகிறது?


நாள்தோறும் போர்ப் பீரங்கிகள் வெடித்துச் சிதறும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளில்கூட பெண்கள் இந்தளவு சீரழிக்கப்படவில்லை.


கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 2,78,886 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவானதில் தண் டனை பெற்றவர்கள் 30 விழுக்காட்டுக்கும் குறைவே!


சட்டமன்றத்தில் அமர்ந்து கைப்பேசியில் ஆபாசப் படங்கள் பார்த்ததிலும் அறநெறி பேசும் பா.ஜ.க.வுக்குத்தான் முதலிடம். அந்தக் கூத்து  கருநாடக மாநில சட்டப்பேரவையில் நடந்தது. 3 பேர் மாட்டிக் கொண்டனர். இவர்களாவது சட்டமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்களே ஆபாசப் படம் பார்த்த கதை தெரியுமா? குஜராத் பா.ஜ.க. அமைச்சர்கள் இருவர்தான் அந்தக் கேடு கெட்டவர்கள்.


***


543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளு மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் வெறும் 62 பேர்களே! (11 விழுக்காடு).


பின்தங்கிய நாடுகள் என்று கருதப்படுகின்ற ருவாண்டா, பொலிவியா, செஷல்ஸ், நமீபியா, பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில்கூட பெண்களின் விழுக்காடு அதிகமே!


உலக அளவில் எடுத்துக்கொண்டால், நாடாளு மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் 22.4%, அய்ரோப்பாவில் 25.2%


ஆப்பிரிக்காவில் 22.6%


ஆசியாவில் 19%


அரேபிய நாடுகளில் 18%


இந்தியாவிலோ வெறும் 11%


இந்திய சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத் திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்ட முன்வடிவு 1996 முதல் நிலுவையில் உள்ளது என்பது வெட்கக்கேடே!


இதில் 'பாரத மாதா' என்ற பட்டப் பெயர் கிரீடம் வேறு!


நேற்று (15.5.2019) சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


-  விடுதலை நாளேடு, 16.5.19

மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்


மாநில அளவில் சுற்றுப்பயணம்  செய்து மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சாரம், குடும்பக் கலந்துரையாடல் நடத்திட முடிவு


ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியை எடுத்துக்கொள்ளலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு




சென்னை, மே 15 திராவிடர் கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்


திராவிடர் கழகத்தின் பொருளாளராக, மகளிரணி, மகளிர் பாசறைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அரும்பணியாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

மகளிர் பணிகள்


பெண்கள் மற்றும் மாணவிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மய்யப்படுத்தி, துண்டறிக்கைகள் வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது, தேவைப்படும் சமயத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

மகளிரணி - மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்


திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை செயல்பாடுகளை ஊக்குவித்து மாநிலம் தழுவிய அளவில் பலம் வாய்ந்த அணிகளாகக் கட்டமைப்பது என்றும், அதற்கு முழுமையான அளவில் நேரம் ஒதுக்கிப் பணியாற்றிட மாநிலப் பொறுப்புகளுக்குக் கீழ்க்கண்டவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

மகளிரணி மாநில செயலாளர்:


தகடூர் தமிழ்ச்செல்வி


மகளிரணி மாநில அமைப்பாளர்:


பேராசிரியர் கண்மணி, தேவக்கோட்டை


மாநில மகளிர் பாசறை மாநில செயலாளர்:


வழக்குரைஞர் மணியம்மை


மாநில மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்:


சட்டக்கல்லூரி மாணவி மதிவதனி


சென்னை மண்டல மகளிரணி தலைவர்:


தங்க.தனலட்சுமி


சென்னை மண்டல மகளிரணி  செயலாளர்:


ஓவியா




தீர்மானம் எண் 4:

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்புத் தருதல்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் முன்னின்று சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:

குடும்பங்களுக்கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துக!


மாவட்டம் தோறும் சென்று மகளிரைச் சந்தித்து கலந்துரையாடி பொறுப்பாளர்களைப் புதிதாக நிய மித்து, மகளிர் அணி மற்றும் பாசறையின் பணிகளை மேம்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, குடும்பங்களுக் கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:

ஜாதி மறுப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியைப் பயன்படுத்தலாம் என்ற வரவேற்கத்தக்க தீர்ப்பு


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் - இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசோக் குமார், கங்குலி மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் கருதப்படுவர் என்று தீர்ப்பு வழங்கியது (2008, டிசம்பர்).

இந்தத் தீர்ப்பை மாற்றவேண்டும் என்று திராவிடர் கழக மகளிர் அணி மாநாடுகளில் தொடர்ந்து தீர்மானங் களை நிறைவேற்றி வலியுறுத்தி வந்துள்ளோம்.

அதற்கு வெற்றி கிடைக்கும் வகையில், மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பட்வாய்க் என்ற எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவி தொடர்ந்த மேல்முறையீட்டில் - மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை  நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ள தீர்ப்பு (21.4.2019) வரவேற்கத்தகுந்த சிறப்பான ஒன்றாகும்.

இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு உள்ளது. இப்போது மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி கலப்பு தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள் தனது தாயாரின் ஜாதியையும்  பயன்படுத்தலாம்" என்று தீர்ப்பு வழங்கி இருப்பது தந்தை பெரியார் கொள்கைக்கு, திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இக் கூட்டம் கருதி மகிழ்கிறது.

தீர்மானம் 7:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை


சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு  33 சதவிகித இட ஒதுக்கீடுபற்றி திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் (சி.பி.எம்.) கொண்டு வந்தபோது (7.2.2018) அத்திருத்தத்துக்கு எதிராக பி.ஜே.பி.யுடன் சேர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்ததை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

1996 முதல் நிலுவையில் இருந்துவரும் இந்த சட்ட முன்வடிவை விரைவில் நிறைவேற்றுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

- விடுதலை நாளேடு, 15.5.19

'தொய்வின்றி - தொடர்புகளோடு பணியாற்றுவோம்!'

மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் மகளிர் தெரிவித்த கருத்துகள் - ஆலோசனைகள்

1) மாநிலப் பொறுப்பாளர்கள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

2) குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திட வேண்டும்.

3) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மகளிர் இல் லத்திலும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். (வருடத்தில் 10 கூட்டங்கள் நடக்க வாய்ப்பு உண்டே!)

4) மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலமாகக் கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாட வேண்டும்.

5) கதை சொல்லிகள் உருவாக்கப்பட்டு குழந்தைகளிடம் பகுத்தறிவுக் கருத்துகளை ஊட்ட வேண்டும். அப்படி சொல்லிக் கொடுத்தால் நம் பிள்ளைகள் பள்ளிகளில் அந்தக் கருத்துக்களை தங்களோடு படிக்கும் பிள்ளைகளிடம் கூறுவர். 6) மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

7) திருமணம் சுயமரியாதை முறையில் நடை பெற்றால் கூட மரணத்தின்போது மூடநம்பிக்கை களைத் திணித்து விட சிலர் குறியாக இருப்பார்கள், அதை தடுக்கப்பட வேண்டும்.

(திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி கூறியதாவது எங்கள் பகுதியில் பாடைகளை மகளிரே தூக்கிச் செல்லுகிறோம். மூடநம்பிக்கைக்குச் சிறிது கூட இடம் தருவதில்லை என்றார். பலத்த கரஒலி!)

8) வீட்டில் பெரியார் கருத்துகளையும், கழக செயல்பாடுகளையும் பற்றிப்பேச வேண்டும். வீட்டில் பேசினால்தான் பிள்ளைகளுக்கு நம் கருத்துப் போய்ச்சேரும். இந்தப் பணியை நாம் செய்யாவிடில் இந்தத் தலைமுறையோடு நம் குடும்பங்களிலிருந்து கொள்கை வெளியேறி விடும்.

9) மகளிரிடம் கொள்கை சென்றடையாவிட்டால் குடும்பங்களிலோ, மக்களிடமோ கொள்கை போய்ச் சேராது.

10) கலை நிகழ்ச்சிகள், தெரு நாடகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

11) பெண்களுக்கென்று தனியாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும்.

12) கழகக்குடும்பத்தின் பிள்ளைகளை பெரியார் பிஞ்சு பழகு முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

13) முகநூலில் கருத்துகளைத் தெரிவிக்க கழக மகளிரணியினர் முன்வரவேண்டும். கேவலமாக நம்மைத் தாக்கிப் பதிவு செய்வார்கள்; அவர்களின் நோக்கம் நம்மை முக நூலிலிருந்து வெளியேற்றுவதே - அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அவர்கள் போலவே ஆபாசமாக பதிவு செய்யாமல், நமது கருத்து களைப் பதிவு செய்ய வேண்டும். படிப் பவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

14) சிறிய சிறிய துண்டறிக்கைகளை வெளியிட வேண்டும் - வீட்டுக்கு வீடு கழக மகளிரணியினர் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

15) நம் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

16) கிராமப்புறப் பிரச்சாரம் தேவை. பெண்கள் பிரச்சாரம் செய்தால் கிராமத்து பெண்கள் வெளியில் வந்து காது கொடுத்துக் கேட்பார்கள். மகளிர் பாசறைப் பெண்களுக்கு பறையிசை கற்று கொடுத்து, கிராமப் பிரச்சாரத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

17) நமது அமைப்புகளுக்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டால் தொடர்பு பணியில் தொய்வு ஏற்பட்டுவிடும். கைப்பேசி காலத்தில் தொடர்புகள் எளிதே!

18) சுயமரியாதைத் திருமண நிலையக் கிளைகளை மாவட்டந்தோறும் ஏற்படுத்துவதால் பலதரப்பட்ட பொது மக்களின் தொடர்புகள் நமக்குக் கிடைக்கும்; அதன் வழி நம் இயக்கமும், கொள்கையும் பெரும் அளவில் பொது மக்களிடம் போய்ச்சேரும்.

19) பெண்களுக்கான உடல்நலம் பேணும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

20) மகளிர் தொடர்பான சமுகப் பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு களத்துக்கு வந்து போராட வேண்டும்.

இவ்வாறு சிறப்பான கருத்துகளையும், திட்டங் களையும் ஆர்வத்துடன் எடுத்து வைத்தனர்.

கருத்துரைகள் - ஆலோசனைகள் வழங்கிய கழக மகளிர்

திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று (15.5.2019) முற்பகல் 11 மணிக்குக் கூடியது. குமரி முதல் திருத்தணி வரை உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.

மகளிர் அணி, மகளிர் பாசறையை தமிழ்நாடு தழுவிய அளவில் வலுவாக உருவாக்குவதற்கான ஆலோசனைகள், இவ்வமைப்பினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்து வைத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். பெரியார் பிஞ்சு செ.சி.காவியன் கடவுள் மறுப்பு கூறினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை ஆற்றினார். இக்கூட்டத்தின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தஞ்சை கலைச்செல்வி, கோ.செந்தமிழ்ச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கும்முடிப்பூண்டி செல்வி, திருச்சி அம்புஜம், குடியாத்தம் தேன்மொழி, கூடுவாஞ்சேரி நூர்ஜகான், வாலாஜாபாத் ரேவதி, திருச்சி சங்கீதா,  வடலூர் ரமா பிரபா, திருப்பத்தூர் கவிதா, ஈரோடு இராசேசுவரி, ஆவடி வனிதா, கும்முடிப்பூண்டி இராணி, பண்ருட்டி முனியம்மாள், லால்குடி குழந்தைதெரசா, திருச்சி சாந்தி, புதுச்சேரி விலாசினி, கோவை செல்வி, தேவக்கோட்டை பேராசிரியர் கண்மணி, ஒசூர் செல்வி, திருச்சி ரெஜினா பால்ராஜ், இசபெல்லா, மத்தூர் இந்திராகாந்தி, எண்ணூர் தென்னரசி, வேலூர் லதா, தஞ்சை வள்ளியம்மை, கோவை யாழினி, திருவாரூர் மாவட்டம் மகேஸ்வரி, வேலூர் ஓவியா ஆகியோர் உரைக்குப் பிறகு மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை நன்றி கூற பிற்பகல் 2.40 மணியளவில் கலந்துரையாடல் சிறப்பாக நிறைவுற்றது.

தனித் தன்மையான கருத்துக்கள்

* கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, குறைந்தது ஒரு ஆண்டு கழித்தோ அல்லது சொந்தமாக சம்பாதிக்கும் நிலை உறுதியான பிறகே திருமணம் நடக்க வேண்டும்.

* கோயில் திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே முன்னின்று நடத்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பக்தியின் மூலம் தங்கள் அமைப்பை பொதுமக்களிடம் கொண்டு செல்லுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

*  பசு கோமாதா பிரச்சாரம், விளக்கு பூஜை என்ற பெயரால் பெண்களை ஒன்று திரட்டுதல் போன்ற வேலைகளில் இந்துத்துவா காவிக் காரர்கள் தீவிரமாக இறங்குகிறார்கள். இதனை அம்பலப்படுத்த வேண்டும்.

*  கழகக் குடும்பங்கள் அந்தந்தப் பகுதிகளில் ஒருங்கிணைந்து வாட்ஸ் அப் குரூப்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதனை விரிவாக்கிக் கொண்டே போகலாம்.

*  வீட்டுப் பணிகளில் வாழ்விணையர்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த மனநிலை ஏற்பட்டால் வெளி உலகிலும் பாலியல் சமத்துவம் ஏற்படும் - அந்த நிலை ஏற்பட்டால் பாலியல் தொடர்பான வன்மங்களும் குறையும் என்பது போன்ற தனித் தன்மையான கருத்துக்களையும் மகளிர் எடுத்து வைத்தனர்.

திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் பங்கேற்றோர் (சென்னை பெரியார் திடல், 15.5.2019)

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 16.5.19

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122 ஆவது கலந்துரையாடல் -

திராவிடர் கழக மகளிருக்கு எங்கெங்கும் வெற்றியே! சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122 ஆவது கலந்துரையாடல் - பாராட்டு சிறப்புக் கூட்டம்


சென்னை, ஆக.5 சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ஜூலை மாதம் 21ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக வெவ்வேறு தளங்களில் விருது பெற்ற கழக மகளிர் பாராட்டப்பெற்றனர்.

ஆவடி மாவட்ட மாணவர் கழக தலைவர் தொண்டறம் கடவுள் மறுப்பு கூற மாலை 6 மணி அளவில் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. பெரியார் சுயமரியாதை திருமண நிலை யத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  நிகழ்ச் சிக்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற வழக்குரைஞர்  வீரமர்த் தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மகளிர் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமுதாய நலனில் அக்கறை கொள்ள முழுமுதற் காரணம் தந்தை பெரியார் அவர்களே. தேவதாசி முறையை ஒழிக்க அயராது உழைத்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும், தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவந்த டாக்டர் முத்துலட்சுமியும் தந்தை பெரியாரின் பெண்ணடிமைத்தன ஒழிப்பிற்குப் பாடுபட்டவர்களே. இன்று பாராட்டு பெறும் மூவரும் தந்தை பெரியார் விழைந்தப் புரட்சிப் பெண்களே என்று வாழ்த்தினார்.

பாராட்டு பெற்ற மூவர்



க.பார்வதி (முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர்) அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) மற்றும் கலைமணி பழனியப்பன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.

க.பார்வதி அவர்கள் சென்னை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் மகளிரணியில் பொறுப்பிலிருந்தவர். தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் கட்டளைக்கிணங்க நடை பெற்ற பல போராட்டங்களிலும் பங்கேற்று சிறையும் சென் றிருக்கிறார். மறைந்த பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் இறையன், ஏபிஜே மனோரஞ்சிதம் மற்றும் கழக மகளிருடன் இணைந்து தமிழ் நாட்டின்  பல பகுதிகளுக்கும் கால்நடை சுற்றுப்பயணமாகச் சென்று கழகத்தின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிய வர். இயக்கப் பணிகளுடன் தன் வாழ்விணையர் கணேசன் அவர்களுடன் இணைந்து தன் குடும்பத்தையும் கொள்கை குடும்பமாக்கியிருக்கிறார். இவரது இயக்கப் பணிகளையும் தொண்டறத்தையும் பாராட்டி சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் இவருக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டுள்ளது.

அ.கலைச்செல்வி இவர் தஞ்சை மாவட்ட, மண்டல திராவிடர் கழக மகளிரணியில் பல பொறுப்புகளிலிருந்தவர். தற்போது மாநில மகளிரணி செயலாளராக செவ்வனே பணி யாற்றி வருகிறார். இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். இவரது வாழ்விணையர் வழக் குரைஞர் அமர்சிங் அவர்களும் கழகப் பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இருவரும் தங்கள் குடும்பத்தினையும் கொள்கை குடும்பமாக வார்த்திருக்கின்றனர். கலைச்செல்வி அவர்களின் கொள்கை பிடிப்பையும் சமூகத் தொண்டறத்தை யும் பாராட்டி 26.5.2018 அன்று தஞ்சாவூர் பல்கலைக்கழக இலக்கியத்துறை, மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம், திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் ஆகியவை இணைந்து மொரிசியசு நாட்டில் கடந்த மே மாதம் நடந்த அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாட்டில் அவருக்கு "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது" அந்நாட்டின் குடி யரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கலைமணி பழனியப்பன் கழக வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளரான இவர் பொதுக்குழு உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவரது விருந்தோம்பல் பலராலும் பாராட்டப்பட்டதாகும். தனது குடும்பத்தினரையும் தந்தை பெரியாரின் சீரியக் கொள்கை வழிப் பற்றாளர்களாக வளர்த்தெடுத்துள்ளார். தனது இல்ல விழாக்கள் அனைத்தையும் எவ்வித சடங்குகளுமற்ற கொள்கை பாதையில் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஊற்றங் கரையில் தாழ்த்தப்பட்டவர்களை வீடுகளில் பணிக்கமர்த்த பலரும் மறுத்த நிலையில் முதல்முதலாய் அவர்களைத் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்திய பெருமை இவரையும் இவரது இணையர் மானமிகு பழனியப்பன் அவர்களையுமே சாரும். வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று கூறி உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய 1979 ஏப்ரலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ஊற்றங் கரையில் இவ்விணையர்களால் நடத்தப்பட்டது. தன் கையா லேயே மாட்டுக்கறி சமைத்து ஊர் பொதுமக்களுக்குப் பரிமாறிய பெருமை அம்மையாரையே சாரும். இவரின் தொண்டைப் பாராட்டி கல்வி கலை இலக்கிய பண்பாட்டு உரையாடல்களுக்கான சமத்துவ மேடையாகச் செயல்படும் கற்பி அமைப்பு இவருக்கு "பே பேக் டூ சொசைட்டி அவார்ட்" (Pay Back to Society Award) என்ற விருதினை வழங்கியுள்ளது.

பாராட்டு

விருது பெற்ற மூவரையும் பாராட்டி சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக சிறப்பு செய்யும் வகை யில் ஒவ்வொருவருக்கும் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆசிரியர் வீரமணி ஆகியோரின் உருவம் பதித்த வாழ்த்து கேடயமும் ஒரு சேலையும் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களுக்கு ந.தேன்மொழி, சி.லதா, திருமகள் -இறையன் குடும்பத்தினர், பன்னீர்செல்வம், தாம்பரம் முத்தையன், செந்துறை இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு செய்தனர்.

ஏற்புரை

பாராட்டு பெற்ற மூவரும் தங்கள் ஏற்புரையின் போது தாங்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கும், விருதுகள், பாராட்டுகள் பெறுவதற்கும் தாங்கள் தெளிவு பெற்று விரும்பி ஏற்றுக்கொண்ட தந்தை பெரியாரின் கொள்கைகளே காரணம் என்றும் இவை அனைத்தும் தந்தை பெரியாரின் வெற்றி என்றும் அழுத்தமாகப் பதித்தனர். தவிர, தங்கள் அனைவரின் வெற்றிக்கும் தங்கள் இணையர்களின் சலிக்காத ஒத்துழைப்பே முழுக்காரணம் என்று கூறி இணையர்களின் பங்கிணையும் பதிவு செய்தார்கள். பாராட்டு பெற்ற தோழர் களில் பார்வதியும், கலைமணி பழனியப்பனும் தங்கள் இணையர்களை இழந்த பின்னும் இயக்கக் கொள் கைகளி லிருந்து சற்றும் பிறழாமல் முன்பைவிட அதிக முனைப் புடனும் உறுதியுடனும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் பெற்ற விருதைவிட சென்னை பெரியார் திடலில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் மற்றும் மகளிர் தோழர் களின் பாராட்டுதல்களே தங்களை மேலும் தொண்டறத்திற்கு ஊக்குவிக்கின்றன என்று ஒருமித்துக் கூறினர்.

பாராட்டுரைகள் வருமாறு:

ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்): திராவிடர் கழக மகளிர் அணி சார்ந்த மகளிர் சாதனை சாதாரணமானது அல்ல; இந்த மதச்சார்பான சமூ கத்தில் சாதியையும் மதத்தையும் எதிர்த்து பெண்கள் போராடு வது மிகச்சிறந்த சாதனை! விருது பெற்ற கலைச்செல்வி அம்மா;  பார்வதி அம்மா, கலைமணி அம்மா  மூவருமே இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டவர்களே....நூற்றில் 99 சதவீதம் பெண்கள் கடவுள் இருக்கு என்று தீச்சட்டி எடுத்தால் ஒற்றை ஆளாய் தீச்சட்டி ஏந்தி கடவுள் இல்லை என்று முழக்கம் இட்டவர்கள்,கலைமணி அம்மா அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டவை ஏராளம். அருமையான மாமியார் மருமகள் உறவு & யாரிடமும் காணாத ஒன்றை கலைமணி அம்மாவிடம் கண்டேன், கற்றேன்!

ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்): சமூகத் தொண்டறத்தில் மகளிர் ஈடுபடுவதே அபூர்வம். அப்படி ஈடுபட்ட மகளிர் பாராட்டப்படுவது அதைவிட அதிசயம். சமூகத்தால்  "கடவுள் இல்லை ஜாதி இல்லை" என்று கூறும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கழகத்தவர் அதிலும் தொண்டறத்தில் ஈடுபடும் மகளிர் தூற்றப்படாமல் விருது அளித்து பாராட்டப்  படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. மகளிராகிய நம் அனை வருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இம்மூவரும் மேலும் விருதுகளைப் பெற்று தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகறியச் செய்வர் என்பது உறுதி என்று பாராட்டினார்.

தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்): தந்தை பெரியார் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையின், முழு உதாரணமாக வாழ்ந்தார். தனக்கு பின் இயக்கத்தை அன்னை மணியம்மையார் தலைமை ஏற்கும்படி செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 5 மகளிரை தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆக்கி ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தை நம் இயக்கத்தில் ஏற்படுத்தி இருக்கிறார். நம் துணைத்தலைவர் கவிஞர் அய்யா அவர்கள், தன் வாழ்விணையரை, வாங்க, போங்க என்று தான் அழைக்கிறார். இதனை இன்றைய இளைய தலைமுறையினரும் பின்பற்ற வேண்டும். பெண்ணுரிமை கொள்கை பட்டொளி வீசிப் பறக்கும் இயக்கம் திராவிடர் கழகமே என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.

கோ.செந்தமிழ்ச்செல்வி (திராவிட மகளிர் பாசறை, மாநில செயலாளர்): விருது பெற்ற மகளிர் தோழர்களை பாராட்டு வதோடு நிற்காமல் அவ்விருதுகளை சரியானபடி நம் அமைப்புத் தோழர்களுக்கு வழங்கிய அந்த அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு அரசியல் உட்பட அனைத்து நிலைகளிலும் வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமே பெண் களை வைத்துள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. ஆனால் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அப்படிப் பட்டதல்ல. முற்றிலும் களப்பணிகள், மாநாடுகள், கருத்தரங் குகள், மகளிர் சந்திப்புகள் போராட்டங்கள் என ஏராளம்.

விருது பெற்றஇந்த தோழர்கள் முற்றிலும் கடவுள் மறுப் பாளர்கள். சமுதாயத்தை சீரழிக்கும் நச்சுகளான சாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, தீண்டாமை போன்ற அனைத்துக்கும் அடிப்படையான கடவுள் என்னும் கற் பனையை ஏற்காது. சுயமரியாதையோடு வாழ்வதே பெரிய புரட்சி. இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் பெண்ணு ரிமைக்கான களங்களில் தந்தை பெரியாரை மறைத்து பேசிட முயல்கிறார்கள். ஏனென்றால் முழுமையான சுயமரியாதை பெண்ணியம் என்பது கடவுள் மறுப்பே என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். நான் சொல்கிறேன் "சமூக விஞ்ஞானி" என்பதையும் கடந்து "பெண்ணுரிமை விஞ்ஞானி" பெரியார்! ஏனென்றால் பெண்களுக்கான அத்தனை மாற்றங் களையும் சிந்தித்தவர் பெரியார் என்று நமது விளக்க உரையில் குறிப்பிட்டார்.

கழகத் துணைத் தலைவர்

கவிஞர் கலி.பூங்குன்றன்

நான் பார்வையாளராகத்தான் வந்தேன். இப்போது மேடையில் ஏற்றப்பட்டிருக்கிறேன். இது ஒரு அருமையான நிகழ்ச்சி. எங்கும் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி. இங்கு மூவர் பாராட்டப் பட்டிருக்கின்றனர். அந்த விருதுகளுக்குப் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்த அந்தக் குழுவினருக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். இந்த மூவரின் பூர்வீகமும் எனக்குத் தெரியும். முதலாவதாக, பார்வதி. அவர் முதலில் மேடையேறிய நாளிலிருந்தே எனக்குத் தெரியும். இன்று அவர் நம் இயக்கக் குடும்பங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு வித்திட்டவர் அவரது இணையர் கணேசன் அவர்கள். சாதாரணமாக ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாகக் கூறுவர். ஆனால் திராவிடர் இயக்கத்தின் சிறப்பு ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆண் இருப்பதுதான். மகளிருக்கு வேறு எந்த சிறப்பும் தேவையில்லை. தந்தை பெரியார் அவர்களுக்கு "பெரியார்" என்று பட்டமளித்தார்களே அதுவே சிறப்பு. இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் "திராவிடர் கழக மகளிரணியினர் தனித்தன்மை பெற்றவர்கள்" என்று கூறியுள்ளார். அதற்கு அன்னை மணியம்மையாரே உதாரணம். நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு இந்திரா காந்தி அம்மையார் சென்னை வந்த போது ஆசிரியர் தலைமை யில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்தது. அந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மறுத்தபோது அந்த நிகழ்ச்சிக்கு நானே தலைமை தாங்குவேன் என்று கூறி தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் திருச்சி மருத்துவ மனையிலிருந்து வந்து கருப்புக்கொடி காட்டி சிறை சென்றவர் அன்னை மணியம் மையார். தன்னுடைய இராவணலீலா நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அம்மையாரின் நூற்றாண்டை அடுத்த ஆண்டு மிகச்சிறப்பாக நடத்தி நம் கொள்கை எதிரிகளை வியக்க வைக்க வேண்டிய கடமை கழக மகளிருக்கு உள்ளது. பார்வதி எதையும் தாங்கக்கூடிய "ஷிலீஷீநீளீ றிக்ஷீஷீஷீயீ" ஆனவர்.

அடுத்ததாக கலைச்செல்வி. இவருடையத் தந்தை பூண்டி கோபால்சாமியை நான் நன்கு அறிவேன். ‘குமுதம்' வார இதழில் கிருபானந்த வாரியார் அவர்கள் எழுதிய வாரியார் விருந்துக்கு மறுப்பாக நான் எழுதிய வாரியாருக்கு மருந்து எனும் கட்டுரையைப் பாராட்ட பூண்டியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். அதற்கு அய்யாவும் வந்திருந்தார். அந்நிகழ்ச்சியில் ‘விடுதலை' மலரில் நான் எழுதிய ஒரு பாடலுக்குக் கலைச்செல்வி நடனமாடினார். கோபால்சாமி அவர்களின் புனைப்பெயர் செங்குட்டுவன். இவர் திராவிட மாணவர் கழகம் ஆரம்பித்த மூவரில் ஒருவர். அவருக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. நம் ஆசிரியர் சிறுவராக இருந்த போது அவரை தன் தோளில் உப்புமூட்டை தூக்கியுள்ளார். அவரது மற்றொரு சிறப்பு இராவண லீலாவில் கொளுத்தப் பட்ட இராமன், இலக்குமணன், சீதை ஆகிய மூவரின் சிலையையும் செய்தவர் இவர்தான். இப்போது கலைச்செல்வி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதின் காரணம் அவர் அவ்வாறு வளர்க்கப்பட்டார்.

அடுத்ததாக கலைமணி. இவரது துணைவர் பழனியப்பன் அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர். ஒரு காலகட்டத்தில் அந்தக் குடும்பம் துயரில் தத்தளித்த போது உறுதியுடன் நின்று தன் குழந்தைகளை நல்ல முறையில் ஒரு தந்தை யாகவும் இருந்து கொள்கை கோட்பாட்டுடன் வளர்த்தவர் கலைமணி. சமீபத்தில் அவருடைய மகன் ஜெகன்பாபுவுக்கு சிறந்த மருத்துவர் என்ற விருது வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய விருந்தோம்பல் அனைவரும் அறிந்தது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி சொல்லியாக வேண் டும். தேவதாசி முறை ஒழிப்புக்கு காரணமாக இருந்தவர். அவர் சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டு வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர் சத்தியமூர்த்தி அய்யர். இது கடவுள் காரியம். இதனால் அவர்கள் இறந்த பின் நேரடியாக சொர்க்கத்திற்குச்  செல்வார்கள். இந்த மசோதாவை இப்போது அனுமதித்தால் இராமசாமி நாயக்கர் பிறகு கோவிலில் மற்ற ஜாதியினரையும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சொல்வார் என்று நம்முடைய இக்கால போராட்டத்தை அப்போதே கூறினார். அப்போது தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி முத்துலட்சுமி அம்மை யார் சட்டசபையில், இவ்வளவு நாட்கள் இதைச்செய்து எங்கள் குடும்பத்து பெண்கள் சொர்க்கம் சென்றார்கள். இனிமேல் இந்த தேவதாசி காரியங்களை உங்கள் குடும்பத்து பெண்கள் செய்து அவர்களே சொர்க்கத்திற்குச் செல்லட்டும் என்று கூறினார். முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் டாக்டர். அவர்கள் இந்த மசோதாவைக் கொண்டுவந்தது  ஆச்சரியமில்லை.

ஆனால் இதற்கு அடித்தளத்திலிருந்து வித்திட்டவர்கள் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள். அதில் முக்கியமானவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இந்தி எதிர்ப்பின் போது 1938 ஆகஸ்டு 1ஆம் நாள் 100 பேர் கொண்ட தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்துத் துவங்கியது. அதன் தலை வர் தஞ்சாவூர் குமாரசாமி பிள்ளை. சேனாதிபதி பட்டுக் கோட்டை அழகிரி. படையில் அனைவரும் ஆண்கள். அதில் ஒரே பெண் இராமாமிர்தம் அம்மையார். ஒரே பெண்ணாக இருந்தும் அவர் கலந்து கொண்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவருடையத் துணிவு. மற்றொன்று திராவிடர் கழக ஆண்களின் ஒழுக்கம். இப்படி சரித்திரம் கொண்ட நம் இயக்கத்திலிருந்து இன்று மும்மூர்த்திகள் பாராட்டப் படுகிறார்கள். இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்திய மகளிருக்கு வாழ்த்துகள். பாராட்டு கூட்டங்கள் எங்கும் நடத்தப்பட வேண்டும். அது அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கும். விருது பெற்றவர்களைப் பாராட்டி & எங்களுக்கும் சிறப்பு செய்ததற்கு என் சார்பிலும், என் வாழ்விணையர் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உரையாற்றினார்.

முன்னதாக கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் & அவரது இணையர் சி.வெற்றிச்செல்வி ஆகியோரின் பொன் விழா இணையேற்பு நாளை முன்னிட்டு இருவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துரைகளும் தெரிவித்து, பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பாராட்டு பெற்ற மூவரும் மற்றும் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களும் சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறைக்கு நன்கொடையாக ரூபாய் அய்நூறு வீதம் அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாலை சிற்றுண்டியும். தேநீரும் சி.வெற்றிச்செல்வி அவர் களால் வழங்கப்பட்டது. சுமதி கணேசன் அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



தொகுப்பு:

ச.இன்பக்கனி

(தலைமை செயற்குழு உறுப்பினர்)