
சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
57 ஆவது முறையாகக் கைது!
சென்னை, மார்ச் 3- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
தொடக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆரப்பாட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாவது 57 ஆவது முறையாகும்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தந்த தகவலின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல் தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:
மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6,877 இந்திய ஆட்சிப் பணி, 5,099 இந்திய காவல் பணி, 3,193 இந்திய அயல் நாட்டுப் பணி ஆகியவற்றில் முறையே 5,577, 4,594, 2,164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்டவணை ஜாதி (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை யும் தரப்பட்டுள்ளன.
01.01.2025 நிலவரப்படி, IAS,. IPS, IFS சேவை களில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1,300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1,029 இந்திய அயலுறவுப் பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாகப் பதிவாகியுள்ளன.
ஒன்றிய அரசு தந்துள்ள இந்த தகவல்களின்படி, சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அய்.ஏ.எஸ்.சில் 8 சதவீதம், அய்.பி.எஸ்.சில் 10 சதவீதம், அய்.எஃப்.எஸ்.சில் 17.28 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவின் அதிகாரப்பிடி இன்னும் பார்ப்பனர்களின் கைகளில்தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும்தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.
பார்ப்பன – உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!
2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
உயர் அதிகாரமிக்க செயலாளர்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால்,
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!
இந்தியாவின் உயர் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர், உயர்ஜாதியினரின் கைகளிலேயே இருக்கிறது என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்! பாரீர், பாரீர்! பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!
எனவே, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னையில் இன்று (3.3.2026) காலை 11 மணியளவில் ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கண்டன முழக்கங்களை ஒலித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காவல் துறையினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் தலைவரும், கழகத் தோழர்களும் முதற்கட்டமாக ஷெனாய் நகர் சமூக நலக் கூடத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி க.பெரியார் செல்வி, பசும்பொன் உள்ளிட்டோர் மற்றும் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட
ஒலி முழக்கங்கள்!
வாழ்க வாழ்க வாழ்கவே சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! வீழட்டும்! வீழட்டும்! ஆரிய ஆதிக்கம் வீழட்டும்! உறுதி செய், உறுதி செய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்! தேவை! தேவை! அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை!

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே! ஏமாற்றாதே, ஏமாற்றாதே! இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஏமாற்றாதே, ஏமாற்றாதே! எங்கே எங்கே இடஒதுக்கீடு? உயர் பதவிகளில் இடஒதுக்கீடு! அமல்படுத்து! அமல்படுத்து! மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்து!
நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப் பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்கிடு!
ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே! வெளியிடு, வெளியிடு! வெள்ளை அறிக்கை வெளியிடு! ஒன்றிய அரசின் பதவிகளில் உயர் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடு!
அமைத்திடு, அமைத்திடு! சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு! ஒன்றிய அரசே அமைத்திடு!
பின்பற்று! பின்பற்று! திராவிட மாடலைப் பின்பற்று! ஒன்றிய பாஜக மோடி அரசே! சமூகநீதியை நிலைநாட்டுவதில் திராவிட மாடலைப் பின்பற்று! கற்றுக் கொள்! கற்றுக்கொள்! பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைக் கற்றுக் கொள்!
EWS என்ற பெயரால் 10 சதவிகித இடங்களை அபகரிக்கும் பார்ப்பனச் சதியை முறியடிப்போம், முறியடிப்போம்! எங்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழர் தலைவர் ஆசிரியரும் பெற்றுத் தந்த சமூகநீதியை அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை விடமாட்டோம், விடமாட்டோம்! போராடுவோம், வெற்றிபெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!


