செவ்வாய், 3 மார்ச், 2026

சென்னையில் ‘சாஸ்திரிபவன்’ முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட தோழர்கள் கைது!



சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
57 ஆவது முறையாகக் கைது!

சென்னை, மார்ச் 3- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தொடக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆரப்பாட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாவது 57 ஆவது முறையாகும்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தந்த தகவலின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல் தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6,877 இந்திய ஆட்சிப் பணி, 5,099 இந்திய காவல் பணி, 3,193 இந்திய அயல் நாட்டுப் பணி ஆகியவற்றில் முறையே 5,577, 4,594, 2,164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்டவணை ஜாதி  (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை யும் தரப்பட்டுள்ளன.

01.01.2025 நிலவரப்படி, IAS,. IPS, IFS சேவை களில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1,300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1,029 இந்திய அயலுறவுப் பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாகப் பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசு தந்துள்ள இந்த தகவல்களின்படி, சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அய்.ஏ.எஸ்.சில் 8 சதவீதம், அய்.பி.எஸ்.சில் 10 சதவீதம், அய்.எஃப்.எஸ்.சில் 17.28 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பிடி இன்னும் பார்ப்பனர்களின் கைகளில்தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும்தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.

பார்ப்பன – உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
உயர் அதிகாரமிக்க செயலாளர்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால்,
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!

இந்தியாவின் உயர் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர், உயர்ஜாதியினரின் கைகளிலேயே இருக்கிறது என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்! பாரீர், பாரீர்! பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

எனவே, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னையில் இன்று (3.3.2026) காலை 11 மணியளவில் ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கண்டன முழக்கங்களை ஒலித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காவல் துறையினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் தலைவரும், கழகத் தோழர்களும் முதற்கட்டமாக ஷெனாய் நகர் சமூக நலக் கூடத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி க.பெரியார் செல்வி, பசும்பொன் உள்ளிட்டோர் மற்றும் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட
ஒலி முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! வீழட்டும்! வீழட்டும்! ஆரிய ஆதிக்கம் வீழட்டும்! உறுதி செய், உறுதி செய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்! தேவை! தேவை! அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை!

தமிழ்நாடு

 

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே! ஏமாற்றாதே, ஏமாற்றாதே! இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஏமாற்றாதே, ஏமாற்றாதே! எங்கே எங்கே இடஒதுக்கீடு? உயர் பதவிகளில் இடஒதுக்கீடு! அமல்படுத்து! அமல்படுத்து! மண்டல் கமிஷன் பரிந்துரையை   முழுமையாக அமல்படுத்து!

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப் பட்டோருக்கும்,    பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி இடஒதுக்கீட்டை  முழுமையாக வழங்கிடு!

ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே! வெளியிடு, வெளியிடு! வெள்ளை அறிக்கை வெளியிடு! ஒன்றிய அரசின் பதவிகளில் உயர் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடு!

 

அமைத்திடு, அமைத்திடு! சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு!       ஒன்றிய அரசே அமைத்திடு!

பின்பற்று! பின்பற்று! திராவிட மாடலைப் பின்பற்று! ஒன்றிய பாஜக மோடி அரசே! சமூகநீதியை நிலைநாட்டுவதில்   திராவிட மாடலைப் பின்பற்று! கற்றுக் கொள்! கற்றுக்கொள்!     பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைக் கற்றுக் கொள்!

 

EWS என்ற பெயரால் 10 சதவிகித இடங்களை அபகரிக்கும் பார்ப்பனச் சதியை முறியடிப்போம், முறியடிப்போம்! எங்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழர் தலைவர் ஆசிரியரும் பெற்றுத் தந்த சமூகநீதியை அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை விடமாட்டோம், விடமாட்டோம்! போராடுவோம், வெற்றிபெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

தமிழ்நாடு

ஞாயிறு, 1 மார்ச், 2026

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

திருவொற்றியூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் – வெ.மு.மோகன்

மாவட்டச் செயலாளர் – ந.இராசேந்திரன்

மாவட்டத் துணைத் தலைவர் – எம்.ஆர்.எப்.சேகர்

மாவட்டத் துணைச் செயலாளர்கள் – செல்வம், வாசு

1.புது வண்ணை

2.பழைய வண்ணை

3.கொடுங்கையூர்

4.இராயபுரம்

5.திருவொற்றியூர்

6.காசிமேடு

7.மணலி

8.மாத்தூர்

9.எலந்தஞ்சேரி

10.மாதவரம்

11.எண்ணூர்

12.கத்திவாக்கம்

வடசென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – கி.இராமலிங்கம்

மாவட்டத் தலைவர் – தளபதி பாண்டியன்

மாவட்டச் செயலாளர் – புரசை சு.அன்புச்செல்வன்

மாவட்டத் துணைத் தலைவர்கள் – நா.பார்த்திபன், பாலமுருகன்

மாவட்டத் துணைச் செயலாளர் – வ.தமிழ்ச்செல்வன்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஓட்டேரி ந.கார்த்திக்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – பா.பார்த்திபன்

  1. புளியந்தோப்பு
  2. வியாசர்பாடி
  3. பெரம்பூர்
  4. மகாகவி பாரதியார் நகர்
  5. கவிஞர் கண்ணதாசன் நகர்
  6. பெரியார் நகர்
  7. கொளத்தூர்
  8. அண்ணா நகர் – திருமங்கலம்
  9. அயனாவரம்
  10. கீழ்ப்பாக்கம்
  11. புரசைவாக்கம்
  12. வேப்பேரி
  13. பாரிமுனை
  14. எருக்கஞ்சேரி
  15. பட்டாளம்
  16. ஓட்டேரி
  17. வில்லிவாக்கம்,
  18. அமைந்தகரை
  19. மண்ணடி
  20. சூளை

தென்சென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – சைதை மு.ந.மதியழகன்

மாவட்டத் தலைவர் – இரா.வில்வநாதன்

மாவட்டச் செயலாளர் – செ.ர.பார்த்தசாரதி

மாவட்டத் துணைத் தலைவர்கள்
– டி.ஆர்.சேதுராமன், மு.சண்முகப்பிரியன்

  1. எழும்பூர்
  2. சேத்துப்பட்டு
  3. நுங்கம்பாக்கம்
  4. சூளைமேடு
  5. சைதாப்பேட்டை
  6. புதுப்பேட்டை
  7. சிந்தாதிரிப்பேட்டை
  8. ஆயிரம் விளக்கு
  9. தேனாம்பேட்டை
  10. ராயப்பேட்டை
  11. நந்தனம்
  12. ஆழ்வார்பேட்டை
  13. சேப்பாக்கம்
  14. திருவல்லிக்கேணி
  15. நொச்சி நகர்
  16. பட்டினப்பாக்கம்
  17. மயிலாப்பூர்
  18. மந்தைவெளி
  19. ராஜா அண்ணாமலைபுரம்
  20. கோட்டூர்புரம்
  21. அடையாறு
  22. திருவான்மியூர்

மேற்கு சென்னை மாவட்டம்

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் – கரு.அண்ணாமலை

மாவட்டச் செயலாளர் – ராமபுரம் க.சுப்பிரமணி

  1. அரும்பாக்கம்
  2. எம்.எம்.டி.ஏ. காலனி
  3. கோயம்பேடு
  4. வடபழனி
  5. சாலிகிராமம்
  6. சின்மயா நகர்
  7. விருகம்பாக்கம்
  8. வளசரவாக்கம்
  9. ராமாபுரம்
  10. கே.கே.நகர்
  11. அசோக்நகர்
  12. ஆழ்வார் திருநகர்
  13. ஜாபர்கான்பேட்டை
  14. ஈக்காட்டுதாங்கல்
  15. கிண்டி
  16. கத்திபாரா – ஆலந்தூர்
  17. கோடம்பாக்கம்
  18. தியாகராயர் நகர்

- விடுதலை நாளேடு, 01.03.2026

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

பிப். 21இல் தஞ்சையில் நடைபெறும் இருபெரும் மாநாட்டிற்குத் தனிப் பேருந்து, வேன், தொடர் வண்டிகளில் பயணித்துப் பெருந்திரளாகப் பங்கேற்போம் ஏழு மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடலில் முடிவு(சென்னை சார்ந்த மாவட்டங்கள்)



திராவிடர் கழகம்

சென்னை, பிப். 13– கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம் 9.2.2026 அன்று மாலை 5.45 மணிக்கு சென்னை பெரியார் திடல் – அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

திராவிடர் கழகம்

கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில மகளிரணி துணைச் செயலாளர் வீ.கா.ரா.பெரியார் செல்வி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் தஞ்சை இருபெரும் மாநாட்டில் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்பது பற்றியும், மாநாட்டுப் பணிகள் குறித்தும் பேசினர்.

ஏழு மாவட்டங்கள்

தாம்பரம், தென்சென்னை, வடசென்னை, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் கழக மாவட்டங்களின் தலைவர்கள் ப.முத்தையன், இரா.வில்வநாதன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.மு.மோகன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், நீலாங்கரை மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் பேசினர்.

மாவட்டத் தலைவர்கள் உரையாற்றும்போது, மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து அணிகளின் கழகத் தோழர்கள் பெருமளவில் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை – எண்ணிக்கையைக் குறிப்பிட்டனர். மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சுவரெழுத்துப் பணிகள் பற்றியும், பேருந்து, வேன் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்துக் கூறினர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கருத்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழர் தலைவரின் அறிவிப்பு

குறுகிய காலமே உள்ள நிலை என்றாலும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப். 21 அன்று தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் என்று அறிவித்தார். அறிவித்தவுடன் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் மாநாட்டுப் பணிகளை உடடினயாகத் தொடங்கி விட்டனர். மும்முரமாக மாநாட்டுப் பணிகள் நடந்தவாறு உள்ளன.

எழுச்சிக்குக் குறைவில்லை

செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டையும், மகத்தான பேரணியையும் கண்டவர் அனைவரும் திகைத்து நின்றனர். சற்றும் எழுச்சிக்குக் குறைவில்லை.

தஞ்சை மாநாட்டிற்கு சென்னை மாநகரைச் சார்ந்துள்ள இந்த ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் வரவேண்டும். தோழர்கள் – ஆதரவாளர்கள், நண்பர்களோடு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுப் பேரணி சிறப்பாக நடைபெறும். பேரணியில் ஒவ்வொரு கழக அணியினர் மட்டுமே உள்ளவாறு – அணி அணியாக வரவேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

இளைஞர்கள் ஆர்வத்தோடு இந்த இயக்கத்தில் இணை கின்றனர். புதிது புதிதாகத் தோழர்கள் வந்து இணைகின்றனர். இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.

மாநாட்டுப் பிரச்சாரம் செய்வீர்

கழகத் தோழர்கள் சுவரெழுத்து, பதாகைகள், டிஜிட்டல், சோசியல் மீடியா, கைப்பேசிப் பதிவுகள் மூலமாக இந்த மாநாடு குறித்தும், மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியம் பற்றியும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அண்மையில் தஞ்சைக்குச் சென்றேன். மாநாடு நடைபெறுகின்ற தஞ்சை திலகர் திடல் – அண்ணா அரங்கம் ஆகியவற்றுக்கு கழகப் பொறுப்பாளர்களோடு சென்று – பார்வையிட்டு மாநாட்டுப் பணிகள் குறித்து கலந்துரையாடினோம். மாநாட்டில் பங்கேற்க இருக்கின்ற கழகத் தோழர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்படுவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது.

அந்த மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் உற்சாகமாகப் பணி செய்து வருகின்றனர். அந்தத் தோழர்களோடு நானும் இணைந்து தஞ்சைக்கு வருகின்ற உங்களை – கழகத் தோழர்களை வரவேற்பதற்கென்று ஆவலாக காத்திருக்கின்றேன். அனைவரும் திரண்டு வாருங்கள் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிறைவாக கழகத் துணைத் தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது,

கழகத் துணைத் தலைவர் உரை

முக்கியமானதொரு காலத்தில் நம்முடைய கழகத் தலைவர் அறிவித்துள்ள மாநாடுதான் – தஞ்சையில் நடைபெறப்போகின்ற மாநாடு.

இந்த மாநாட்டில் இளைஞர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டும். புதிய தோழர்கள் – பொது மக்களை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கேற்றாற் போன்று மாநாட்டினை நல்ல முறையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

வாழ்க்கை முறை

திராவிடர் கழகம் என்பதே கூட வாழ்க்கை முறைதான். ஒழுக்கம் – நெறி – கொள்கைப் பற்று – மனிதநேயம் இவை பின்னிப் பிணைந்ததுதான் திராவிடர் கழகம். புதிய தோழர்கள் பங்கேற்கும்போது இவற்றின்பால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள். நம்முடைய பயனுக்காக அல்ல. மக்களிடம் இந்தக் கொள்கை ஆழமாக வேரூன்றுகின்ற போதுதான் அவர்களின் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றத்தைப் பெற முடியும்.

ஆரிய ராஜ்ஜியம் வர விடக்கூடாது

தமிழ்நாடு இந்த இயக்கத்தை நம்பித்தான் இருக்கின்றது. “பெரியார் பிம்பத்தை உடைத்துக் காட்டுவோம்” என்று துடியாய்த் துடித்து வருகின்றார்கள். பாசிச பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். இந்த மண்ணில் கோலோச்ச நினைக்கின்ற ஆரிய ராஜ்ஜியம் வரவிடக் கூடாது.

செங்கற்பட்டு – மறைமலைநகர் மாநாட்டில் இளைஞர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டார்கள். சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்திய மாநாடு அது.

தஞ்சை மாநாடு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் இரண்டு மாதமே உள்ள நிலையில் நடக்க இருக்கின்ற மாநாடு. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்ன முடிவெடுத்து, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துள்ளது.

பிரதமர் மோடி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தும் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்வார்கள்.

மாற்றம் வரும்

மீண்டும் தி.மு.க. ஆட்சி என்பதற்கு கழகத் தோழர்கள் இளைஞர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டும். 2026இல் தி.மு.க. வெற்றி என்பது அகில இந்திய அளவில் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்.

தஞ்சை மாநாடு நமது கொள்கை – இலட்சியத்திற்கு வலிமை ஏற்படுத்துகின்ற மாநாடு. மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள். மாநாட்டிற்குத் திரண்டு வாருங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

வீ.அன்புராஜ் அவர்களுக்குப் பாராட்டு

அண்மையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டிப் பேசியபோது, கூட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவருக்கு வாழ்த்து கூறினர். இதற்காக அம்பத்தூர் கழகத் தோழர் ஆ.வெ.நடராஜன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.

பெரியார் பிஞ்சு யாழ் தமிழ் கணீரென்ற குரலில் கடவுள் மறுப்புக் கூறியதை வெகுவாகப் பாராட்டிய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில், நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் யாழ் தமிழுக்கு ரூ.500 பரிசு அளித்தார்.

தஞ்சை மாநாட்டில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள் தனிப் பேருந்து, தனி வேன், தொடர் வண்டிகள், அரசு-தனியார் பேருந்துகளில் என அனைத்து வகை வாகனங்களிலும் பயணித்துப் பெருந்திரளாகக் கலந்து கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்

திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் கருப்பட்டி சிவா, புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் க.தமிழினியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், கி.இராமலிங்கம், நா.பார்த்திபன், ப.கோபாலகிருஷ்ணன், கோ.தங்கமணி, ந.கார்த்திக், க.துரை, வீ.கே.ஆர். பெர்னாட்ஷா, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, மு.செல்வி, த.இளவரசி, எஸ்.நூர்ஜஹான், வழக்குரைஞர் துரை.அருண், கரு.அண்ணாமலை, கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், க.சுப்ரமணியன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், இரா.இரவி, புழல் மு.உதயகுமார், ஆ.இர.சிவசாமி, தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா.இராசு, தனசேகரன், பூவை. க.தமிழ்ச்செல்வன், க.ச.பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், ம.சக்திவேல், இரா.கலைச்செல்வன், இ.தமிழ்மணி, மு.நித்தியானந்தன், சு.வெங்கடேசன், பி.சி.ஜெயராமன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

நிறைவாக, தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாதி நன்றி கூறினார்.

- விடுதலையின் நாளேடு, 13.02.2026

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் ஒரு பார்வை

சமூக ஊடக செயற்பாட்டாளர் குழு(SMAG), வழக்குரைஞர் பு. பாலகோபால் அறக்கட்டளை  இணைந்து நடத்திய
நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 07.02.2026ஆம் நாள் நடைபெற்றது.

வழக்குரைஞர் தளபதி பாண்டியன்  (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு ) வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) அவர்கள் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை)  தொடக்க உரையாற்றினார். திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) தலைமையில் இந் நகழ்ச்சி நடைபெற்றது. : தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர். கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) நன்றி உரையாற்றினார்.

கருத்தரங்கில் முழுமையாக பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து 29 சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்பு சட்டங்களாக ஒன்றிய அரசு 21.11.2025 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. 

1. ஊதிய சட்டம் - 2019 
2. தொழில் உறவு சட்டங்கள் -2020
3. சமூக பாதுகாப்பு சட்டம் - 2020
4. பணியிட பாதுகாப்பு சட்டம் மற்றும் பணிச் சூழல் சட்டம் - 2020

இட் சட்டங்கள் குறித்த நன்மை தீமைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. 

புதிய நான்கு சட்டங்களில் உள்ள சில பகுதிகளை பற்றி பார்ப்போம்: 

1. ஊதியம் 
'அனைத்து தொழிலாளர்களுக்கும் 'குறைந்தபட்ச ஊதியம்'  உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று கூறுகிறது. 
1(அ) அடிப்படை ஊதியம் 
'மொத்த சம்பளத் தொகையில் அடிப்படை ஊதியம் 50 விழுக்காடு இருக்க வேண்டும்'. 
இது தீர்ப்புகளில் சொல்லப்பட்டது தான். அதை சட்டமாக மாற்றி உள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியம் நடைமுறையில் உள்ளது. 
தொழிற்சாலை பணியாளர்களுக்கு மட்டும்தான் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. சேர்க்கை ஆணை மடல் 
தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்போது 'பணி நியமன ஆணை'வழங்கப்பட வேண்டும்' என்று சொல்கிறது. 
பொதுவாக தொழிற்சாலைகளில் முதலில் தற்காலிக தொழிலாளர்களாக சேர்ந்து கொள்கின்றனர். பிறகு தனக்கு ஏற்புடையவராக இருந்தால் தொழில் பழகுநர் கடிதம் கொடுத்து; பிறகு நிரந்தரப்படுத்தி கொள்கிறார்கள். 
ஆனால் இந்த சட்டத்தில் தொழிற்சாலைக்குள் வேலைக்காக சேர்க்கப்பட்டவர்கள்; தற்காலிக தொழிலாளர்களோ, பதிலியோ, தொழில் பழகுநரோ, ஒப்பந்த தொழிலாளரோ யாராகயிருந்தாலும் அவர்களுக்கு 'சேர்க்கை ஆணை மடல்' வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

3. சம வேலைக்கு சம ஊதியம் 
'ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்' என்று கூறுகிறது. 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 

4. இரவுப் பணியில் பெண்கள்
இரவு நேரத்திலும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறது இந்த சட்டம். 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 
முதலில் சில துறைகளுக்கு மட்டும் இரவு பணியில் பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிறகு 10 பேர் சேர்ந்து ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தால் பாதுகாப்புடன்; அதாவது வீடு வரை பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வண்டி ஏற்பாடு செய்து தர வேண்டுமென இருந்து வருகிறது. 
இது தீர்ப்பின் மூலம் நடைமுறையில் இருந்து வந்தது. 
அதை சட்டமாகவே மாற்றியிருக்கிறார்கள். 

5. பணிக்கொடை 
அய்ந்து ஆண்டுகள் பணி முடித்தால்தான் பணிக்கொடை கிடைக்கும் என சட்டம் இருந்தது. அதை ஓராண்டாக மாற்றி உள்ளனர்.

6. பொது மருத்துவ பரிசோதனை
40 தொழிலாளர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

7.PF, ESI, காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு சலுகை 
இவை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் தான்.
முதல் நாளிலிருந்தே வழங்கப்பட  வேண்டும் என்று தற்போது கூறுகிறது.

சட்டவிரோதமாக பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இச் சலுகைகளை வழங்காமல் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

8. இரட்டிப்பு ஊதியம் 
அனுமதி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் மணி நேரங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வழிவகை செய்கிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டம் தான். 

9. அபாயகரமான துறைகளில் நூறு விழுக்காடு பாதுகாப்பு. இதுவும் ஏற்கனவே உள்ளது தான்.

10. 500 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். 

11. பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு 
பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்; அதில் பெண் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். 

இது ஏற்கனவே தீர்ப்பின் மூலம் 2013ஆம் ஆண்டுசட்டம் நடைமுறையில் உள்ளது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

12. தொழிற் சங்கங்கள் தொடங்க வேண்டுமானால் தொழில் 
நிறுவனத்தின் அனுமதி வேண்டும். 

இது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும்.

13. தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு 
100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற முறை மாற்றப்பட்டு 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.

14. குறைதீர் குழு (Grievance Redressal Committee): 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயமாகப் பணியாளர் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். 

100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைக் குழு (Works Committee) சட்டப்படி அமைக்கப்பட வேண்டும் என்று இருந்தது. 
இதைத்தான் 'குறைதீர் குழு' என்ற பெயரில் மாற்றி அமைத்துள்ளது.

தொழிற் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை(தொழிற்சங்கங்கள் சட்டம் மற்றும் தொழிற் தகராறு சட்டம்), தொழிலாளர்களை மிகுதியாக பாதிக்கும் வகையில் திருத்தியுள்ளனர் என்பது தான் அனைவருடைய கவலையும் ஆகும்.
ஆகையினால் தான் தொழிலாளர்கள் இச் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். 

முக்கிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த நூல்கள் வருமாறு
தமிழில் தொழிலாளர் சட்டங்கள் அடங்கிய நூல்
தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் சட்டம் (அரசு உரிமம் பெற்ற நூல்)
தொழிற்சாலைகள் சட்டம் (ஒன்றிய அரசே 1954 இல் வெளியிட்ட தமிழ் நூல்)
மாதிரி நிலையானைகள் சட்டம்


.

 

 

திங்கள், 9 பிப்ரவரி, 2026

பெரியார் பெருந்தொண்டர் தி.இரா. இரத்தினசாமி - இர. ஆதிலட்சுமி படத்திறப்பு நிகழ்ச்சி



சென்னை பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 08.02.2026 முற்பகல் 10:30 மணி அளவில் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா. இரத்தினசாமி - இர.ஆதிலட்சுமி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சியும், ஆவண காணொலி மற்றும் நினைவுமலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படத்தை திறந்து வைத்து புகழ் உரை ஆற்றினார்.

கழகத் தோழர்கள், வணிகப் பெருமக்கள், ஆதிமாறன், வந்திய தேவன், திருமுருகன் காந்தி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பலர் உரையாற்றினர். 

நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் 'நினைவு மலர்' வழங்கப்பட்டது.

நினைவு மலர் அடங்கிய கைப்பை 
நினைவு மலர் 
நினைவு மலர் வெளியீடு 
தி.இரா.இரத்னசாமி - இர.ஆதிலட்சுமி
படத்திறப்பு 
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழ் உரை 

-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 1996 ஜனவரி 4 5 6 ஆகிய மூன்று நாட்களில் நான்காவது உலக நாத்திகர் மாநாடு நடைபெற்றது. 

அந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து 120 பேர் ' பினாகினி விரைவு தொடர்வண்டி' மூலம் சென்றனர்.

அதில் சென்னையில் இருந்து புறப்பட்ட தாம்பரம் மற்றும் சென்னை தோழர்கள் ஒரு குழுவாக இருந்தனர். 

அதில் தி.இரா.இரத்தினசாமி, ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் ப.முத்தையன், தென் சென்னை செ.ர.பார்த்தசாரதி மற்றும் பலர் அடங்குவர். 
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டின் நுழைவு வாயிலில்
ஆஸ்திரேலியா பகுத்தறிவாளருடன்
இங்கிலாந்து பகுத்தறிவாளருடன்
வெளிநாட்டு (நாட்டின் பெயர் தெரியவில்லை)பகுத்தறிவாளருடன்
விஜயவாடா தெருக்களில் 'கடவுள் மறுப்பு' தத்துவத்தை தெலுங்கில் அச்சிட்டு துண்டறிக்கையாக வழங்குதல்.
விஜயவாடா கிருஷ்ணா ஆற்றின் 'கிருஷ்ணா சாகர்' அணையின் மேற்புறம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி . வீரமணி அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி.
தி.இரா. இரத்தினசாமி அவர்களும் அவரின் இணையர் இர. ஆதிலட்சுமி அவர்களும்.

தி.இரா. இரத்தினசாமி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள்  14.10.2025 மறைவுற்றார்.

  உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு சிறு தொழில்களைச் செய்து, உழைப்பால் உயர்ந்த நிலையை எய்தியவர்.

தொடக்கத்தில் மிட்டாய் வியாபாரம், புலி மார்க் சீயக்காய், ஜம்போ தீப்பெட்டி என்று கடைகளுக்கு விநியோகித்து, அன்னை இந்திரா நகர் (சேலையூர் பகுதி) வியாபாரிகள் சங்கத் தலைவர் என்கிற அளவுக்கு உயர்ந்தவர். அந்த நகரின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து தொண்டறப் பணி ஆற்றியவர்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும், சென்னை மண்டல கழகத் தலைவராகவும், மாவட்டக் கழகக் காப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரிய இயக்கப் பணிகளை ஆற்றிய அரும்பெரும்  பெரியார் பெருந்தொண்டர் ஆவார். மாதந்தோறும் ஒரு கூட்டம் என்ற ஒருமுறையை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி வந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.

- 14.10.2025 விடுதலை நாளேட்டில் வந்த இரங்கல் அறிக்கையின் சுருக்கம்

-விடுதலை நாளேடு 19.01.1996

செ.ர.பார்த்தசாரதி அவர்களின் விஜயவாடா உலக நாத்திகர் மாநாடு குறித்த பயணக் கட்டுரை

-----------------------------------------------------------------------------------

சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், நெய்வேலி ஞானசேகரன், ஆ.இர. இராமசாமி, ஆ.இர. சிவசாமி, முத்துமணி, தங்கமணி, திருமணம் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை, 8.2.2026)

- விடுதலை நாளேடு, 9.2.2026

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 



திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு 16.01.26 முற்பகல் 11 மணி அளவில், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ஈ.குமார்,  மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு நாள்: அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்வளையம் வைத்து மரியாதை (சென்னை, 3.2.2026)

 


அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், போளூர் பன்னீர்செல்வம், சிதம்பரம் செல்வரத்தினம், மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் எழுத்தாளர் முத்துவாவாசி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோவீ.ராகவன், சூளைமேடு இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், இராமச்சந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி, பழனிபாலு, முரளி, க.கலைமணி, விஜய், மகேஷ், கணேசன், அசோக்குமார், பெரியார் மாணாக்கன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை

அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை, பிப்.3 –  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணாவின்57ஆம் ஆண்டு  நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘பெரியாரோடு இருந்த காலமே
எனக்கு வசந்த காலம்!’’

‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்’ என்று  பேரறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சரானவுடன் தாம் எழுதிய தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்க் கட்டுரையில் குறிப்பிட்டார்.  ‘‘நான் இன்றைக்கு முதலமைச்சர்  நாற்காலியில் அமர்ந்தது பெருமையாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், நான் பெரியாருடன் பிரச்சாரத்தைத் தொடங்கி, காடு மேடெல்லாம் அவரோடு சென்ற காலம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வசந்த காலம்’’ என்று பூரிப்போடு குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர், நேரிடையாகத் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்று, அவர் நடத்தி வந்த அந்த ஆட்சி, இன்றைக்கும் பாதை மாறாமல், கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த நேரத்திலும் சரி, அதுபோல், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒரு முழுக் கட்டம் முடிந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி விரைந்து போகக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் சரி, சிறப்பாக அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு போகிறார்.

அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள்,

அண்ணா கொடுத்த முழக்கங்கள்!

சில நேரங்களில்,  சில ஆட்சிகள்  அருகிக்கொண்டு போகும். ஆனால், அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள், அண்ணா கொடுத்த முழக்கங்கள், இன்றைக்குப் பெருக்கல் இருக்கிறதே தவிர,  மற்றபடி சுருக்கலிலோ, வழுக்கலிலோ இல்லை. அதைச் செய்கின்ற ஒரு  நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்குத் தொடர்கிறது.

எனவேதான், அண்ணாவை நாம் போற்றுகிறோம், அண்ணாவைப் பின்பற்று கிறோம். அண்ணா வகுத்தப் பாதையில் அயராது உழைக் கிறோம். அண்ணாவினுடைய முப்பெரும் சாதனைகள் என்றைக்கும் நிரந்தரமானவை. அதற்கு எடுத்துக் காட்டாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக் கின்ற அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத் தான், அண்ணாவுக்குச் சிறப்பான ஒரு பெருமையை நாம் உண்டாக்குகின்றோம் என்று அர்த்தம்.

அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு!

அண்ணா உருவாக்கிய கட்டடம் மணல் மேடு அல்ல. அது கற்பாறை, தொடரும். அதுதான் அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அதை நிரூபிக்கும். அதை உலகத்திற்கு அறிவிக்கும்.

செய்தியாளர்: ஒரு பக்கம் நட்சத்திரங்கள் தொடங்கி இருக்கக்கூடிய புதிய கட்சி; இன்னொரு பக்கம் வலிமையான வலதுசாரி கூட்டமைப்பு – இன்றைய காலகட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்ன மாதிரியான ஓர் அரசியல் தேவைப்படுகிறது? என்ன மாதிரியான நிலைப்பாடு மக்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தேர்தல் முடிந்தவுடன், வலது – ‘‘சாரி’’ என்று சொல்வார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

-விடுதலை நாளேடு, 3.2.26