திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு 16.01.26 முற்பகல் 11 மணி அளவில், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ஈ.குமார், மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!
சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், போளூர் பன்னீர்செல்வம், சிதம்பரம் செல்வரத்தினம், மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் எழுத்தாளர் முத்துவாவாசி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோவீ.ராகவன், சூளைமேடு இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், இராமச்சந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி, பழனிபாலு, முரளி, க.கலைமணி, விஜய், மகேஷ், கணேசன், அசோக்குமார், பெரியார் மாணாக்கன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை
அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
சென்னை, பிப்.3 – வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அறிஞர் அண்ணாவின்57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
‘‘பெரியாரோடு இருந்த காலமே எனக்கு வசந்த காலம்!’’
‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சரானவுடன் தாம் எழுதிய தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்க் கட்டுரையில் குறிப்பிட்டார். ‘‘நான் இன்றைக்கு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது பெருமையாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், நான் பெரியாருடன் பிரச்சாரத்தைத் தொடங்கி, காடு மேடெல்லாம் அவரோடு சென்ற காலம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வசந்த காலம்’’ என்று பூரிப்போடு குறிப்பிட்டார்.
முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர், நேரிடையாகத் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்று, அவர் நடத்தி வந்த அந்த ஆட்சி, இன்றைக்கும் பாதை மாறாமல், கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த நேரத்திலும் சரி, அதுபோல், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒரு முழுக் கட்டம் முடிந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி விரைந்து போகக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் சரி, சிறப்பாக அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு போகிறார்.
அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள்,
அண்ணா கொடுத்த முழக்கங்கள்!
சில நேரங்களில், சில ஆட்சிகள் அருகிக்கொண்டு போகும். ஆனால், அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள், அண்ணா கொடுத்த முழக்கங்கள், இன்றைக்குப் பெருக்கல் இருக்கிறதே தவிர, மற்றபடி சுருக்கலிலோ, வழுக்கலிலோ இல்லை. அதைச் செய்கின்ற ஒரு நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்குத் தொடர்கிறது.
எனவேதான், அண்ணாவை நாம் போற்றுகிறோம், அண்ணாவைப் பின்பற்று கிறோம். அண்ணா வகுத்தப் பாதையில் அயராது உழைக் கிறோம். அண்ணாவினுடைய முப்பெரும் சாதனைகள் என்றைக்கும் நிரந்தரமானவை. அதற்கு எடுத்துக் காட்டாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக் கின்ற அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத் தான், அண்ணாவுக்குச் சிறப்பான ஒரு பெருமையை நாம் உண்டாக்குகின்றோம் என்று அர்த்தம்.
அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு!
அண்ணா உருவாக்கிய கட்டடம் மணல் மேடு அல்ல. அது கற்பாறை, தொடரும். அதுதான் அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அதை நிரூபிக்கும். அதை உலகத்திற்கு அறிவிக்கும்.
செய்தியாளர்: ஒரு பக்கம் நட்சத்திரங்கள் தொடங்கி இருக்கக்கூடிய புதிய கட்சி; இன்னொரு பக்கம் வலிமையான வலதுசாரி கூட்டமைப்பு – இன்றைய காலகட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்ன மாதிரியான ஓர் அரசியல் தேவைப்படுகிறது? என்ன மாதிரியான நிலைப்பாடு மக்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தேர்தல் முடிந்தவுடன், வலது – ‘‘சாரி’’ என்று சொல்வார்கள்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னையில் கழக துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்
சென்னை, பிப்.1 மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழி தோண்டியது போதாதென்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது முற்றிலும் சமூகநீதியை ஒழிப்பதே! இதனைக் கண்டித்தும், ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையிலும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று (31.1.2026) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.
வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோ தெரபி (B.P.T.) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (Neet) பங்கேற்பதைக் கட்டாயமாக்கி தேசியத் துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளும், அதன் காரணமாக உருவாகும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளில் பயிலும் மாணவர்களும்தான் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்புப் பலமாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம்.
கிராமப்புற மாணவர்களின்…
கிராமப்புறங்களிலிருந்தும், ஏழை – எளிய குடும்பங்களிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும் ஏராளமானோர் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து படித்து, பயிற்சி பெற்று உரிய தகுதியுடன் மருத்துவப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் பள்ளிக் கல்வியை முக்கியமற்றதாக்கி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயில வேண்டிய –தனியார் பயிற்சி மய்யங்களுக்கு ஆள் பிடித்துவிடும் வேலையைத் தான் ‘நீட்’ தேர்வு செய்துகொண்டிருக்கிறது.
இன்றும் ‘நீட்’ என்னும் மருத்துவக் கல்வித் தடையைத் தகர்க்கத் தமிழ்நாடு போராடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இத்தகைய நுழைவுத் தேர்வை வேளாண் கல்லூரிகளுக்கு கொண்டு வருவதற்கும் இந்திய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு காரணமாக இணைய முடியாத சூழலில் இருந்தவர்கள், பாரா மெடிக்கல் சர்வீசஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து மருத்துவத் துறைக்கு சேவையாற்றி வந்தனர்; தற்போது அதனையும் இல்லாதொழிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்கிறது.
‘நீட்’ தேர்வுக்கான காரணங்கள் பொய்
‘நீட்’ தேர்வைக் கொண்டு வரும் போது அதற்கான காரணங்கள் என்றும், நியாயங்கள் என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு எவற்றையெல்லாம் சொன்னதோ, அவையெல்லாம் பொய் என்பது அப்பட்டமாக அவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு கொண்டு வருவதைக் கண்டித்தும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.1.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில் BPT, BOT படிப்புகளுக்கும் ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும், இது ஏழைக் குடும்பங்களை ‘நீட்’ பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகளைக் கண்டித்து திராவிடமாணவர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக நேற்று (31.1.2026) தமிழ்நாட்டில் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், அரசியல், சமுதாய அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூகநீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று (31.1.2026) மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவர் ப. வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். அண்ணா பல்கலைக் கழகச்செயலாளர் ரொசாண்டோ, மெட்ராஸ் பல்கலைக் கழக அமைப்பாளர் ஆதித்யலினார்டோ, வடசென்னை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் டாவின்சி செ.க. புகழேந்தி, அன்புமதி, கண்ணம்மா, திராவிட இலக்கியா, நித்தியகுமார், நித்தியபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் தொடக்கவுரையாற்றினார்.
எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைத் தீர்ப்பு ‘நீட்’ ஒழிப்பு! சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு மூக்கறுப்பு! நீட்டுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை மிதிப்பதா? சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை ஏற்க மறுப்பதா?
மருத்துவக் கனவைப் பறித்தது போல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் கல்லூரி வாயிலை அடைக்காதே! தூண்டாதே தூண்டாதே! ஒன்றிய அரசே தூண்டாதே! மாணவர் போராட்டத்தைத் தூண்டாதே!
பள்ளிக்கல்வியை ஒழிக்க நினைக்கும் கார்ப்பரேட்களின் கைக் கூலியே! கல்வித் துறையில் தனியார் மயத்தைத் திணிக்கும் கள்ளக் கூட்டாளியே! பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!மக்கள் விரோத ஒன்றிய அரசே!
ஓயாது ஓயாது! பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது! என கழகத் தோழர்கள் ஒலி முழக்கம் எழுப்பினர்.
கண்டன உரை
இதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடிக.அன்பழகன், தோழர் மணியரசன் (புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி), தேனி அரசு செவிலியர் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வி.கே.ஆர். பெரியார் செல்வி, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.
நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டக் கண்டன உரையாற்றினார். ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி. அறிவுமதி இணைப்புரை வழங்க, மாநில திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், மேனாள் துணைப்பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை கி. தளபதிராஜ், பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், மா வட்ட செயலாளர் ந. ராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, மாவட்டச் செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன்.
முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் முனைவர் பட்டம் பெற்றதை யொட்டி டி.கே. நடராஜன் குடும்பத்தினர் சார்பில் கண்ணுசாமி – சுசிலா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனக்கு அளிக்கப்பட்ட நன்கொடை தொகை ரூ.1 லட்சத்தை திராவிடர் கழக அறக் கட்டளைக்கு அப்படியே நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். உடன், நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர் (சென்னை, 16.1.2026).
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ச.மாரியப்பன், ஈ.குமார், சைதை ரா.ரவி, மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர் இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது
சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
சட்ட விளக்க வகுப்புகள்
சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், 27.12.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், பெரியார் களம் சார்பில் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல் வகுப்பாக, “சமூக மாற்றமும் – பெண்ணுரிமைக்கான சட்டங்களும்” எனும் தலைப்பில், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இரண்டாம் வகுப்பாக, ”சமூகநீதி – சட்டமும், போராட்டமும்” எனும் தலைப்பில், கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மூன்றாம் வகுப்பாக, “மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நான்காம் வகுப்பாக, “இந்துசமய அறநிலையத்துறை சட்டமும் – கோயில் உரிமைகளும்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அய்ந்தாம் வகுப்பாக, “தீண்டாமை ஒழிப்பும் முக்கிய வழக்குகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தினர். ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
டாக்டர் அம்பேத்கரின் கணிப்பு!
‘‘மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்த திராவிடர் கழகத் தலைவர், சட்டம் தொடர்பான ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினார். முதலில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துவதை வரவேற்ற அவர், “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, ” அதிகமான தலைப்புகளில் வகுப்புகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அதிகம் பகிரப்படாத கருத்தை மாணவர்கள் முன்வைத்தார். அதாவது, “Even though i bounded by the supreme court judgment. But, i’m not respect to the same” என்று ஆழமாக சொன்னதை நினைவுபடுத்தினார். மேலும் அவர், Secularism, Socialism ஆகிய சொற்கள் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு விவாதங்களில் வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய முக்கியமான, ஆழமான கருத்துகளை, புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தார்.
சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் அதனை மீறலாமா?
மதச்சார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியவர்கள், ”என் மதம் தான் – இந்து மதம் தான் ஆளவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டினார். Secularism, Socialism ஆகிய இரண்டும் இடைச்செருகல் என்று, ஒன்றிய அரசின் விளம்பரத்தில் அந்த இரண்டும் சொற்கள் இல்லாமல் வெளியிட்டதை நினைவுபடுத்தி, ”இடைச்செருகலாக இருந்தாலும், அந்த சட்டத்தின் மீதுதானே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அதை எப்படி மீற முடியும்?” என்ற ஆழமான கேள்வியை மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தார். தொடர்ந்து, அதைவிட மோசமான ஒரு தகவலை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “இந்தியா என்றாலே இந்து நாடுதான். இதை அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொண்டால் என்ன? ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் என்ன?” என்று இதுவரை மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாக பேசுவதை நினைவூட்டி, இதே சிந்தனைப் போக்கில், “ஜனநாயக முறையில் தேர்வாகித்தான் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். அந்த திசையில்தான் இந்தியாவும் சென்றுகொண்டிருக்கிறது” என்று சட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைமையை புரியவைத்து தமது வகுப்பை நிறைவு செய்தார்.
சான்றிதழ் வழங்கல்!
நிகழ்வில் சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 50 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் கேள்வி பதில் பகுதி நடைபெற்றது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்களும் மற்றவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இறுதியாக அனைத்து மாணவர்களும் நடைபெற்ற பயிலரங்கம் பற்றி தங்களது கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ”பெரியார் களம்” அமைப்பு சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பங்கேற்றோர்
கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண், கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்; வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், க, கலைமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். இறுதியில் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.