மாநில மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநில மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 அக்டோபர், 2024

இடஒதுக்கீட்டைக் காக்க சென்னையில் நடைபெற்ற மாநில மாநாடுகள் (13, 14.07.1985 )

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான தன்வரலாறு(216)

இடஒதுக்கீட்டைக் காக்க மாநில மாநாடுகள்

கி. வீரமணி


கலைஞர் கழக மாநாட்டுக்கு வருகை தந்தபோது, பெரியார் தற்காப்பு இளைஞர் அணியினர் அணிவகுப்பு மரியாதையுடன் மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்; பொதுச்செயலாளர் அவர்களும் உடன் வருகிறார். (13.7.1985)


05.07.1985 அன்று சைதாப்-பேட்டை தேரடி திடலில் நடந்த மாநாட்டு விளக்க பொதுக்-கூட்டத்தில் கலந்து-கொண்டு,  குஜராத் முதல்வர் சோலங்கி சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்றதை உணர்ச்சியோடு சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

 

 

 

“குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் சோலங்கி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ‘வீக்’ (Week) வாரப் பத்திரிகை சோலங்கியைப் பற்றி எழுதும்போது ‘Solanki was following foot steps of Periyar’  என்று எழுதியது. (சோலங்கி பெரியார் பாதையை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்) குஜராத் காந்தியார் பிறந்த மாநிலம். அங்கே இப்போது காந்தியார் வெளியே போய்விட்டார், பெரியார் புகுந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் செய்ததைப் போல பார்ப்பனரே இல்லாத ஓர் அமைச்சரவை அமைத்துக் காட்டியிருப்பவர் சோலங்கி. அது மட்டுமல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே அந்த மாநிலத்தின் போலீஸ் அமைச்சராக அவர் நியமித்திருக்கிறார்.

 

அவரைப் பணியை விட்டு, பதவியை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமை ஓட்டுப் போட்ட மக்களுக்குத்தான் உண்டு! ஆனால், பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் அவரை விரட்டப் பார்க்கிறார்கள். இதேபோன்று அநியாயங்கள் பார்ப்பன _ பனியா ஆளும் வர்க்கம் நினைத்ததைச் செய்கிறது என்று கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.


மாநாட்டில் நடந்த படத்திறப்புகள் (1) புரட்சிக்கவிஞர் படத்தை பேராசிரியர் ராமநாதனும் (2) நடிகவேல் எம்.ஆர்.ராதா படத்தை கவிஞர் முகவை ராஜமாணிக்கமும் (3) ஜாதி ஒழிப்பு வீரர்கள் படத்தை பிரச்சார அணி செயலாளர் செல்வேந்திரனும் (4) தமிழ் ஈழம், படத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தனும் (5) ஆஞ்சா நெஞ்சன் அழகிரி படத்தை – எம்.கே.டி. சுப்பிரமணியமும் (காமராசர் காங்கிரஸ் கட்சி செயலாளர்) திறந்து வைத்தபோது எடுத்த படம்

13, 14.07.1985 ஆகிய தேதிகளில் கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முதல் நாளே இதன் வெற்றிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து-விட்டன. நமது கழகக் குடும்பங்கள் தமிழ் மான உணர்வு படைத்தோர் அனைவரும் கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு வந்து திரள வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்-கிணங்க, சென்னைக் கருங்கடல் என்று கண்டோர் வியக்கத்தக்க வண்ணமும் தமிழுணர்வு உள்ள அத்துணைப் பேர்களது சங்கமக் கடல். அந்தக் கருங்கடல் பெரியார் திடல் முழுவதும் நிரம்பி வழிந்ததால் பொதுவானவர்கள் பலரும் பாராட்டினார்கள், வியந்தனர், நம்பிக்கை கொண்டனர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சீருடை அணிந்த தற்காப்புப் படை அணிவகுத்து இருந்தது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கருநாடக மாநில தி.க. மகளிர் அணி அமைப்பாளர் சொர்ணாம்மாள் எம்.ஏ. அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் வருகை தந்து மாநாட்டில் கலந்து-கொண்டார். மாநாட்டில் அன்னை நாகம்மையார் உருவப் படத்தை ஈரோடு சுப்பையாவும், அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்தை காமராஜ் காங்கிரஸ் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியமும், புரட்சிக்கவிஞர் படத்தை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் இராமநாதனும், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை கவிஞர் முகவை இராசமாணிக்கமும், அன்னை மணியம்மையார் படத்தை வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதனும், சுதந்திர தமிழ் ஈழ படத்தை கவிஞர் காசி.ஆனந்தனும், பேரறிஞர் அண்ணா படத்தை மதுரை ஆதீனகர்த்தரும் திறந்து வைத்து உரையாற்றினர்.

மாநாட்டில் தாலி அகற்றுதல் நிகழ்ச்சியும், வேம்பையன் அவர்கள் தமது துணைவியார்  சுசிலா அணிந்திருந்த பவுன் தாலியை கழற்றி, தமிழன் குரலாக ஒலிக்கும் விடுதலையின் வளர்ச்சிக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்கள். அதுபோல மு.கங்காதரன் அவர்களின் துணைவியார் அவர்களும் தமது தாலியை அகற்றிக் கொண்டார்.

தொடர்ந்து நான் மேடையில் ஒரு குழந்தைக்கு ‘விடுதலை மணி’ என்று பெயர் சூட்டினேன். தொடர்ந்து லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழினத் தொண்டருமான வீரசிங்கம், தோழர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்களும், மேடையில் மூத்த உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு மூத்த உறுப்பினர்களாக இருப்பவர்களும், வழிகாட்டியாக இருப்பவர்களுமான இயக்க வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் தூக்குமேடை நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் மாநாட்டில் தலைமை உரையை நிகழ்த்தினேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு ஆரியர் கூத்தாடி மகிழ்ந்து, சிற்சில இடங்களில் பாயாசம் சாப்பிட்டவர்கள் உண்டு. பெரியார் என்ற மாமலை சாய்ந்துவிட்டது. இனிமேல் நாம் அச்சமின்றி நாம் ஆதிக்கபுரியில் அமர்ந்து ஆட்சி செலுத்தலாம் என்று அவசரக் கணக்கு போட்டது. அந்தக் கணக்கு ஒரு தப்புக் கணக்கு என்பதை இன்று நாடே கண்டு ஒப்புக்-கொள்ளும் நிலை ஏற்பட்டது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழகத்திலும், ஒரு சில தென்னாட்டு மாநிலங்களில் மட்டுமே தந்தை பெரியார் வாழ்ந்தார் என்ற நிலைமை மாறி இப்போது தந்தை பெரியார் வடமாநிலங்களுக்கும் சென்றுவிட்டார்.

“தந்தை பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் மறைந்த உண்மை அகிலத்திற்கெல்லாம் புலனாகிறது.

தந்தை பெரியார் அவர்களுடைய வருமுன்னர் சொல்லும் அறிவும், வருமுன்னர்க் காக்கும் செயலும் அவரை உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் சிந்தனையாளராக உயர்த்திக் காட்டுகிறது. இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ்-காரர்கள் இந்த நாட்டில் இருக்கும்போதே ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் இனி எதிர்காலத்தில் ஜனநாயகம் (Democracy) இந்த நாட்டில் மலராது, பார்ப்பன நாயகம் (Brahminocracy) தான் வரும் என்றார். அதைத்தானே கடந்த காலத்திலும் இன்றும் நாம் கண்டு வருகிறோம் என்று எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.

முதல் நாள் மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தில் இதுவரையிலே அய்ம்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வந்திருக்கின்றன என்றாலும்கூட, முதல் திருத்தம் தந்தை பெரியாரால், அண்ணாவால், நாம் நடத்திய போராட்டத்தால்தான் உருவாக்கப்பட்டது என்கிற வரலாற்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது.


அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் சமுதாயத்திலே இடஒதுக்கீடு தேவை. அது எந்த அடிப்படையிலே என்றால் பொருளாதார அடிப்படையிலே அல்ல, சமூக அடிப்படையில் கல்வி அடிப்படையில் Socially and Educationally என்ற சொற்றொடரோடு அந்த அரசியல் சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக ஏறியதை மறந்துவிடக் கூடாது’’ என்று கூறினார்கள்.

தூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாரவி தோன்றும்

ஒரு காட்சி (13.7.1985 மாநாட்டில்)

முதல் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அரசு பணிகளில் மகளிர்க்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இளைய சமுதாயமே! ஆபாச போதைகளிலிருந்து விடுபட மாற்று ஏற்பாடுகள், காலில் விழும் பழக்கத்தை ஒழித்திடுக, தீக்குளிப்பை கைவிடுக, ஜாதி மதக் கலவரங்களை ஒடுக்க நடவடிக்கை, ஜாதி ஒழிய கலப்பு மணம், இந்தி திணிப்பை ஒழிக்கப் போராட்டம், மாநிலப் பட்டியலில் கல்வி உள்ளிட்ட தீர்மானங்கள் அவற்றுள் அடங்கும்.

இரண்டாவது நாள் நடைபெற்ற இடஒதுக்கீடு காப்பு மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு 18 சதவீதத்திற்கும் அதிகமாக தருக, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் குறையாது காப்பீர், மண்டல் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்-படுத்தும். இடஒதுக்கீடு சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவீர் உள்ளிட்ட தீர்மானங்-களிலும் ஜாதி சான்றிதழ், மாணவருக்கு உதவித் தொகை, மாணவர் வருகைப் பதிவு, உள்ளிட்டவைகளில் தமிழக அரசு மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் இம்மாநாடு மிகுந்த பலன் தந்த மாநாடாகும்.

-கட்டுரையின் ஒரு பகுதி

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு (10.8.1996)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (271) (கட்டுரையின் ஒரு பகுதி)

ஜுன் 16-30 ,2021

உண்மை இதழ்

புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் காட்சி

10.8.1996 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு புதுக்கோட்டையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. நகரமெங்கும் கழகக் கொடித் தோரணம்கூரையில் பொலிவுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் கழகக் குடும்பத்தினர் குவிந்தனர்.

மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக புதுக்கோட்டை எல்லையில் 25 மோட்டார் சைக்கிள்களிலும், வேன்களிலும் ஏராளமான கழகத் தோழர்கள் வரவேற்று முழக்கமிட்டனர். மாநாட்டையொட்டி, அறிவியல் கண்காட்சி, புத்தக விற்பனை, கருத்தரங்கு, சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு என விழாக் கோலம் பூண்டது.

புதுக்கோட்டையைக் குலுக்கும் வகையில் சிறப்பான பேரணி நடைபெற்றது. இளைஞரணி அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் என சிறப்பான வகையில் மாவட்டப் பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் _ கீழ ராஜவீதி, அண்ணாசாலை வழியாக வந்து இரவு 8:00 மணிக்கு மாநாட்டுப் பந்தலை அடைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் என்னை அமர வைத்து கழகத் தோழர்கள் பெரும் ஆரவாரத்துடன் அழைத்துச் சென்றனர்.

மாநாட்டு மேடையில் பெண்களின் அடிமைச் சின்னமெனும் தாலியை நீலமலை மாவட்ட தி.க. செயலாளர் கருணாகரன் அவர்களது துணைவியார் ஜோதி அவர்களும், நீலமலை மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் இரா.தாமோதரன் அவர்களது துணைவியார் மகேஸ்வரி அவர்களும் மேடையிலேயே  அகற்றினர்.

மாநாட்டில் நிறைவுரையாற்றுவதற்கு முன்பாக கழகத் தோழர்கள் பெரிய தராசினை மேடையின் மய்யப் பகுதியில் கொண்டு வந்து ஒரு தட்டில் என்னை அமர வைத்து எடைக்கு எடை வெள்ளி வழங்கும் நிகழ்வினை பெரும் மகிழ்ச்சியோடு நிகழ்த்தினர். புது வரலாறு படைத்த மாநாட்டில் உரையாற்றுகையில், “எனக்கு நீங்கள் எடைக்கு எடை வெள்ளி கொடுத்து என்னை பெருமைப்படுத்தினாலும், நான் அமர்ந்திருந்த பொழுது எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அய்யா, அம்மா படத்திற்கே அது காணிக்கை என்பதை நன்றியுணர்ச்சியோடு, அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன். இங்கு எனக்கு மிகுந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த இளைஞரணி மாநாட்டை நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் புட்பநாதன் மற்றும் செயலாளர், இளைஞரணி செயலாளர் என அனைத்து பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பான அளவுக்குப் பணியாற்றி சிறப்பித்திருப்பதைக் காண முடிகிறது. நம்மைப் பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும், நமது இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்க வந்த காலத்திலும் நாம் அவர்களை இலட்சியம் செய்து பதில் சொல்லிக் கொண்டிராமல் நமது இலட்சியத்திலேயே கவலை வைத்துக் கொண்டு, ‘நாம் அப்படித்தான் செய்வோம், இஷ்டமிருந்தால் பின்பற்றி வா, இல்லாவிட்டால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அதன் பேரிலோ நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை! என்று சொல்லிக் கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான் நல்லதோ, கெடுதியோ நமது இயக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் இதனை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது சீரிய முயற்சியால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாம் எப்பொழுதுமே கொள்கை ரீதியாக இருப்போம். கொள்கை ரீதியாக இருந்தால் யாரோடும் இருப்போம். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். இதை எப்பொழுது கையாண்டார்கள் என்பதே பல பேருக்குத் தெரியாது. இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியாரா என்று கேட்கலாம். நான் பெரியார் அல்ல; ஆனால், பெரியாருடைய காலடியில் இருந்த மண்ணுக்குரிய புத்திகூட இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கு அனுபவ சிந்தனை உடையது என்பதைச் சவால் விட்டு என்னால் கூற முடியும். ஆகவேதான், சொல்லுவது, சுட்டிக்காட்டுவது எங்களுடைய கடமை; எங்களுக்குரிய உரிமை. தமிழகத்தில் நாங்கள் எதற்கிருக்கின்றோம்? இந்த இனத்துக்குச் சோதனை வரும்பொழுது, சமூகநீதிக்குக் கேடு வரும்பொழுது, மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும்பொழுது தற்கொலைப் பட்டாளமாக மாறுவோம், மாறித்தான் தீருவோம்!

கூடியிருக்கும் இளைஞர்களே, நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இறுதிமூச்சு அடங்குகிறவரை செய்து கொண்டிருப்பேன். உங்களுடைய நம்பிக்கையைப்  பாழாக்க மாட்டேன்’’ என பல்வேறு கருத்துகளை இளைஞர்கள் மனத்தில் படும்படி எடுத்துக் கூறினேன். நெல்லையில் இருந்து சென்னை திரும்பி விடுதலையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

_ கி.வீரமணி

திங்கள், 8 ஜூலை, 2024

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு - 23.7.1990

இயக்க வரலாறான தன் வரலாறு(237) : 

நவம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

 திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 23.7.1990 அன்று சென்னை பெரியார் திடலில் பம்பாய் தொல்காப்பியனார் அரங்கத்தில் கரூர் பி.கே.அய்யா (இவர் வைக்கம் போராட்ட வீரர்) நினைவுப் பந்தலில் எழுச்சியுடன் தொடங்கியது.

கா.மா.குப்புசாமி

மாநாட்டில், பேரணியும் தந்தை பெரியார் சமூகக் காப்பணி அணிவகுப்பு நடத்திய மாட்சியும் காவல் துறையினரையே கவர்ந்து என்றால் அதன்  சிறப்பைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிற அளவில், பெண்கள் அணி வகுப்பு, குதிரைகள் அணி வகுப்பு, பெரியார் பிஞ்சுகளின் மழலை முழக்கங்கள், மாவட்ட வாரியான அணிவகுப்பு, சென்னையே குலுங்கும்வண்ணம் நடை பெற்றது! இம்மாநாட்டின் வெற்றி மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி, தஞ்சை கா.மா.குப்புசாமி ஆகியோரின் அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

மாநாட்டில், உரையாற்றும்போது, பி.ஜே.பி. என்றால், ‘பிராமின் ஜனதா பார்ட்டி’ என்று பொருள். எத்தனை ஏடுகளைப் பார்ப்பனர்கள் நடத்தினாலும், எங்கள் கரித்துண்டு எழுத்துகளுக்குமுன் எம்மாத்திரம்?

தந்தை பெரியார் மறைந்து இருக்கலாம். ஆனால், பெரியார் கைத்தடியாக இருக்கக்கூடிய பெரியாருடைய தொண்டர்கள் இந்த நாட்டிலே இலட்சோபஇலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தேன்.


ஞாயிறு, 9 ஜூலை, 2023

குடந்தை மாணவர் அணி மாநாட்டில் தென் சென்னை தோழர்கள்

8.7.18 மாலை குடந்தை மாநகரத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவழ விழா மாநாட்டின் பேரணியில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் அணிவகுத்த போது...

வெள்ளி, 14 அக்டோபர், 2022

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு -24,25,26.12.96

 

அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (274)

ஆகஸ்ட் 1-15,2021

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு

கி.வீரமணி


சென்னையில் மாநில மாநாடு வேலை நடைபெற்று வருகின்ற நிலையில் கழகப் பற்றாளரும், பெரியார் பெருந்தொண்டர்கள் மூவர் அடுத்தடுத்து மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. பாரீசில் வாழ்ந்த சுயமரியாதை வீரரும், திருமதி சுசீலா எத்துவால் அவர்களது கணவரின் தம்பியான திரு.பக்தவத்சலம் அவர்கள் 16.12.1996 அன்று பாரீசில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தோம். மறைந்த ‘பக்தா’ அவர்கள் கழகத்திடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு நல்ல சுயமரியாதை வீரர். புதுவையைச் சார்ந்த அவர் பல ஆண்டுக்காலம் பாரீசில் பணியாற்றி ஓய்வு பெற்று அங்கேயே தங்கியிருந்தவர் ஆவார்.

அவரது மறைவு கேட்டு இரங்கல் தந்தியை அவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பினேன். பாரீசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமதி சுசீலா அவர்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன்.

திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான டி.ஆர்.கே.டி.எஸ்.மூர்த்தி 17.12.1996 அன்று திருவண்ணாமலையில் மறைவுற்றார் என்ற செய்தியைஅறிந்து வருந்தினேன். மாணவர் பருவந்தொட்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர். மறைந்த அவருக்கு வயது 68. சிறிது காலமாகவே உடல்நலமற்று இருந்தார். கவுதமன், சித்தார்த்தன் என்ற இரு மகன்களும், மனைவியும் உண்டு. அவர்களது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பி ஆறுதல் கூறினேன்.

திருப்பனந்தாள் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழகத் தலைவரும் நீண்டகால இயக்க முன்னணி வீரரும், துகிலியில் அய்யா சிலை நிறுவி அயராது பாடுபட்டவருமான துகிலி நடராசன் 19.12.1996 அன்று மறைவுற்றார் என்ற  செய்தி மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பினேன். தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்கள் கழகத் தோழர்களிடையே மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

சென்னை பெரியார் திடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு டிசம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கழகத்தின் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்புடன் நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகம், புதுவை, மும்பை, ஆந்திரா, தில்லி எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில் காலை 9:00 மணிக்கு திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலைக்கு கழகத் தோழர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள், பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மாநாட்டினைத் துவங்கி வைத்தேன். டாக்டர் நாவலர் அவர்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்து சிறப்பு செய்தார். உடனே அவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின், பெரியார் அறிவியல் கண்காட்சி மய்யத்தைத் துவங்கி வைத்து முழுமையாக அதனைப் பார்த்து பெரிதும் வியந்து பாராட்டினார்.

பெரியார் சமூகக் காப்பு அணி மரியாதை செய்யும் வகையில் அணிவகுத்து ஒருவர் பின் ஒருவராக வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். அதனைக் கண்ட வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்த அத்துணை தோழர்களும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்து மலைத்தனர். பல்வேறு கட்சி பிரமுகர்களும் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் தந்தை பெரியார் படத்தை அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் இலக்குவன் தமிழ் திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் பன்னாட்டமைப்பு _ பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெரியார் பன்னாட்டமைப்புக் கருத்தரங்கம் காலை 10:30 மணியளவில் சென்னை அபுபேலஸில் துவங்கியது.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பன்னாட்டு நாத்திகர் கழகம், மனித உரிமைகள் சங்கம் ஆகியவற்றின் துணைத் தலைவர் எம்.லெவி ஃபிராகல் (நார்வே) தலைமை தாங்கி உரையாற்றுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மனிதநேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடியவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கேள்விப்பட்டிருந்தேன். அதனை உங்களைப் பார்க்கையில் உணர்கிறேன். இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால், இங்கர்சாலுக்கு நியூயார்க் நகரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்க முடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்க முடியாத ஒன்று. இதை இங்கு மிகப் பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் பெரும் வியப்பு ஏற்பட்டது. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை பெரிய சாலைக்கு வைக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்குக் கண்டேன்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதத்தினால் நடக்கக்கூடிய கொடுமைகளை யெல்லாம், அடக்குமுறைகளையெல்லாம் குறிப்பாக இந்து மதத்திலிருக்கிற அடக்குமுறைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை விழிப்படையச் செய்வதைக் கண்டு வியக்கிறேன். இதற்காக நாம் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை இதற்காக நடத்த வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் நீங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் நானும் கலந்து கொள்ளுவேன் என்று சொல்லக்கூடிய விருப்பம் எனக்கு வருகிறது’’ எனப் பல கருத்துகளை அவர் எடுத்துக் கூற பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

கருத்தரங்கில், “21ஆம் நூற்றாண்டுக்கும் தந்தை பெரியாரின் கருத்துகள் ஏற்புடையவை _ புதிய சமுதாயத்தைப் படைப்பதில் பெரியாரின் பங்களிப்பு’’ என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். மாநாட்டில் பங்கு கொண்ட மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கப்பட, அவரின் பிரதிநிதி ஜனதாதள முன்னணித் தலைவர் ஜெகவீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவைச் சார்ந்த இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அதை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு உடல்நலக் குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பேசிய ஒலி நாடாவை அனுப்பியிருந்தார். அது மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. அவர் கைப்பட எழுதியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், “தந்தை பெரியார் அவர்கள் ஒரு புதிய சமுதாயத்தைக் குறித்த தொலைநோக்காளர் ஆவார். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பெரியாரின் கொள்கைகளைத் தெரிவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தின் பொன் விழா மாநாட்டில் கலந்துகொண்டு பெரும் பேற்றைப் பெற்றேன். எனக்கு விருது அளித்துப் பாசத்தையும், நல்லெண்ணத்தையும் காட்டுகின்ற திரு.வீரமணி அவர்களுக்கும், பெரியார் அமைப்பைச் சார்ந்த டா

க்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் உறுதியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி மற்றும் மதச் சார்பின்மை எனும் இலக்குக்காக எங்கிருந்தாலும் என்றைக்கும் ஓயாது உழைப்பேன்’’ என தமிழில் கையொப்பமிட்ட வாழ்த்துக் கடிதம் மேடையில் வாசிக்க கழகத் தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, சிங்கப்பூர் நாகரத்தினம், சோம.இளங்கோவன், நார்வே லெவி ஃபிராகல் ஆகியோருக்கு மேடையில் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தோம். முதல் நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக ‘பெரியார் சி.டி.ராமை’ தொடங்கி வைத்து உரையாற்றினேன். அந்த உரையில், “21ஆம் நூற்றாண்டே பெரியார் நூற்றாண்டுதான். அதனை செயல்படுத்த உலகெலாம் பெரியார்; எல்லார் உள்ளங்களிலும் பெரியார் என்று ஆகவேண்டுமானால் என்ன வழி என்று சிந்தித்தபோது அறிவியல் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அறிவியலின் உச்சகட்டம் _ கணினி. உலகம் முழுவதும் பெரியாரை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம். இன்னும் சிறப்பாகச் செய்வதற்காகத்தான் ‘பெரியார் சி.டி.ராம்’ என்பதைச் செய்து இருக்கிறோம். இதிலே சிறந்த தகுதி படைத்த கிரியா உற்பத்தியாளர்கள் யார் எனத் தேடி, பாலசுப்ரமணியம் என்ற தமிழர் மூலம் இதனை உருவாக்கியுள்ளோம். பல மாதங்கள் செய்ய வேண்டிய பணியினை, சில மாதங்களுக்குள்ளாக முடித்து உலகம் முழுவதும் அதை பரப்ப இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு, பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். நிகழ்வில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சமூகநீதி மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் முதலில் பிற்பகல் சென்னையைக் குலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் பேரணி நடைபெற்றது. தந்தை பெரியார் திடலுக்கு முன்பு விழுப்புரம் இராமசாமிப் படையாச்சியார் மாவட்டத் தலைவர் புலவர் ந.தங்கவேலன் அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். 64 மோட்டார் சைக்கிள்களில் கழகக் கொடிகளுடன் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். வழியெல்லாம் இளைஞர்கள் வாணவெடிகள், அதிர்வேட்டுகள் வெடித்துக் கொண்டு உற்சாகத்துடன் குரலெழுப்பி வந்தனர். பேரணியில் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் பெரியார் வேடமிட்டு கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தி வந்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்கள் அவரவர் மாவட்ட பதாகைகளுடன் அணிவகுத்து கட்டுப்பாட்டுடன் நடந்து வந்தனர். பெரியார் சமூகக் காப்பு அணி வீராங்கனைகள் பேரணியை சிறப்பாக வழிநடத்தி வந்தனர். வழியெங்கும் தோழர்கள் சுருள் கத்தி வீச்சு, கொம்பு விளையாட்டு, குஸ்தி, வாயில் மண்ணெண்ணெய்யை -ஊற்றி நெருப்புத் தீ கொப்பளிக்கின்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர். மதியம் துவங்கிய பேரணி இரவு 8:00 மணிக்கு தங்கசாலை திறந்தவெளி மாநாட்டை அடைந்தது.

அந்த சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்ட சமூகநீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் ஒரு தனி மனித வரலாறு. அவர் இந்திய நாட்டிற்கே உரிய தலைவர் அல்ல; உலகத்திற்கே உரிய தலைவர் என்று சொல்ல வேண்டும். புதிய உலகத்தை, சமத்துவமான, சமூகநீதியுடைய உலகத்தைப் படைக்கும் ஆற்றல் பெரியார் கொள்கைகளுக்கு இருக்கிறது. அவருடைய பாதையில் உழைத்து வருகின்ற நம்முடைய தலைவராக இருக்கின்ற வீரமணி அவர்களுக்கும் ஒரு பெருமை சேர்க்கின்ற வகையில் ‘சமூகநீதி வீரமணி விருது’ என்ற விருதினை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் கொள்கைகள், நடைமுறைகள் எல்லாம் இந்த நாட்டினுடைய கொள்கைகளாக நடைமுறைகளாக மலர்ந்து வருகின்றன. இதன் பெருமையெல்லாம் வீரமணியையே சாரும். நமது வீரமணி அவர்கள் தலைமை தாங்கி நடத்தியிருக்காவிட்டால் மண்டல் பரிந்துரைகள் நடைமுறைக்கே வந்திருக்காது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையிலே இந்த நாட்டை நடத்தி வைக்கின்ற பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு உண்டு. உங்கள் போராட்டங்களால் இந்தியா முழுமைக்கும் நன்மை அடையும். உங்கள் போராட்டங்களில் நாங்கள் உங்களோடு என்றும் இருப்போம் என்று உறுதி அளிக்கிறேன்’’ என பல அரிய கருத்துகளைக் கூறி உரையாற்றினார். மாநாட்டின் 2ஆம் நிகழ்வை நிறைவுரையாற்றி முடித்து வைத்தேன்.

(நினைவுகள் நீளும்…)

கட்டுரையின் ஒரு பகுதி இது...

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (275)

ஆகஸ்ட் 16-31,2021

திராவிடர் கழகம் ஒரு திறந்த புத்தகம்!

கி.வீரமணி

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கோ.அரங்கநாதனின் இளைய மகன் ஆர்.அண்ணாதுரைக்கும், நடராசனின் மகள் என்.கஜலட்சுமிக்கும் வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு விழா 15.12.1996 அன்று சென்னை இந்திரா நகர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினேன். தாம்பரம் மாவட்டக் கழகச் சார்பில் வாழ்த்து மடல் அளிக்கப்பட்டது. விழாவில் கழகத்தின் பொறுப்பாளர்களும், அழைப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூகநீதி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வு டிசம்பர் 26 அன்று காலை 9:00 மணிக்கு பெண்ணுரிமை மாநாடு என்னும் கருத்தமைவில் கலை நிகழ்ச்சியும், பெண்கள் நலம் சார்ந்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், பெண்கள் கருத்தரங்கம் பல்வேறு தலைப்புகளில் கழகப் பொறுப்பாளர்கள், உரை நிகழ்த்தினர். மாலை 4:00 மணிக்கு திராவிடர் கழக மாநில மாநாடு என்னும் பொருளின் கீழ் கழகப் பொறுப்பாளர்கள் வழிமொழிய தமிழர் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலை மாநாட்டு மேடையிலே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. அதில், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்ட தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் ஆகியோரின் செல்வி ஈ.வெ.ரா.ம.அமலா மணி அவர்களுக்கும், தஞ்சை மாவட்டம் உம்பளப்பாடி மணமகன் ம.அண்ணாதுரை அவர்களுக்கும், பசும்பொன் மாவட்ட தி.க. செயலாளர் சாமி.திராவிடமணி _ செயலெட்சுமி ஆகியோரின் செல்வன் என்னாரெசு பிராட்லா, காரைக்குடி சொக்கலிங்கம் _சரசுவதி ஆகியோரின் செல்வி ஜான்சிராணி அவர்களுக்கும், சேலம் மாவட்டம் மின்னக்கல் வை.பழனிச்சாமி _ லெட்சுமி ஆகியோரின் செல்வன் ப.செல்வகுமார், திருச்சியைச் சேர்ந்த இரத்தினம்_பானுமதி ஆகியோருடைய செல்வி மணிமேகலை ஆகியோருக்கும், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பிரதிநிதி மு.இரா.இளங்கோவின் தம்பியும், காஞ்சிபுரம் மு.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோர்களுடைய செல்வன் மு.இரா.சேகர், காஞ்சிபுரம் மணி _ நீலா ஆகியோருடைய செல்வி ம.லதா ஆகியோர்களுக்கும் ஒரே மேடையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அய்ந்து திருமணங்களும் ஜாதி மறுப்புத் திருமணங்களாகும். இத்திருமணங்களில் தாலி அணிவிக்கப்படாதது ஒரு தனிச் சிறப்பாகும். அனைவருடைய கைத்தட்டல்களுக்கிடையே மண விழா நிறைவு பெற்றது.

அதனைத்தொடர்ந்து அய்ம்பெரும் பெரியார் தொண்டர்களை சிறப்பித்து பரிசு வழங்கினேன். மயிலாடுதுறை கோ.அரங்கசாமி, மாநில தி.க. மகளிரணிச் செயலாளர் க.பார்வதி, சேலம் அப்பாய், கண்கொடுத்த வனிதம் கண்பார்வையற்ற பிச்சையன், மறைந்த டோல்கேட் பிச்சை சார்பாக அவரது மகள் சிந்தனைச் செல்வி ஆகியோருக்கு செயராமன் _ சகுந்தலா அறக்கட்டளை சார்பாக சால்வைகளை அணிவித்து, தந்தை பெரியார் உருவம் பொறித்த மோதிரத்தை மக்கள் கடலின் ஆரவாரம் _ கைத்தட்டல்

களுக்கிடையே அணிவித்தேன். பெரியார் பெருந் தொண்டர்களைப் பாராட்டி உரையாற்றுகையில், “ஒவ்வொருவருடைய சிறப்பையும், அவர்களின் இயக்க ஈடுபாட்டையும், எப்படி குடும்பமாகத் தன்னை இணைத்துக் கொண்டு கழகத்திற்கு உழைத்த மேன்மைகளைக் குறிப்பிட்டு அவர்களை வாழ்த்தினேன். இன்று இந்த இயக்கத்தை விட்டு யாராவது ஓடுகிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கத்திலே இருந்து எதையும் எடுத்துப் பழக்கப்பட முடியவில்லையே என்பதற்காக ஓடுகிறார்களே தவிர வேறு இல்லை. இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் பல முனைகளிலே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டாற்றக்கூடிய பெரியார் பெருந் தொண்டர்கள் பலரும் இன்னும் கழகத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களைச் சிறப்பிக்க வேண்டிய நமது கடமை, அவர்களே இயக்கத்தின் ஆணி வேர்கள்! எனவேதான், இவர்களைப் பாராட்டுவதிலே, நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எனக்கு இட்ட கட்டளையை இதன் மூலமாக நிறைவேற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என பல கருத்துகளைக் கூறி உரையாற்றினேன். அதன்பின் பெரியார் கொள்கைகளை பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியில் பயின்று பட்டயம் பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்துகொண்டு தோழர்களை உற்சாகப்படுத்தி வந்த சிறப்பு அழைப்பாளர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “நான் இங்கே வருவதற்கு முன்னால் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பெரியார் அறிவியல் கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அங்கே விஞ்ஞான உண்மைகளை எவ்வளவு எளிமையாக _ சிறப்பாக அந்த மாணவிகள் விளக்கினார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு அய்யா வீரமணி அவர்கள் மேல் ஓர் நன்றி உணர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த மாணவிகளை அவர்கள் எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்ற நினைத்து வியந்து போனேன். தந்தை பெரியார் மாதிரி தீர்க்கதரிசி உலகத்திலே வேறு எவரும் கிடையாது. நீ நன்றாக நடித்தாலும் உனக்குச் சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைக்காது. அதனால்தான் உனக்கு ‘சிவாஜி கணேசன்’ என்கிற பட்டம் கொடுக்கிறேன் என்று தந்தை பெரியார் சொல்லிப் பட்டம் கொடுத்தார். எதிர்காலத்தை

முன்கூட்டியே கணிக்கக் கூடிய திறமை பெரியாருக்கு அப்பொழுது இருந்திருக்கிறது. இன்றைக்கு அவர் எழுதி வைத்த விஞ்ஞானக் கருத்துகள் எல்லாம் நடைமுறைக்கு வருவதை நாம் பார்க்கிறோம். அவர் என்னென்ன சொன்னாரோ அவையெல்லாம் நடந்துகொண்டு வருகின்றன. மக்களுக்கு உங்களைப் போல் தொண்டு செய்கிற_ தியாகம் செய்கிற தோழர்களைவிட சினிமாவில் நடிக்கிற எங்களுக்கு போராடும் குணம் குறைவு. எங்களை விட நீங்கள் பெரிய தியாகிகள் _ வீரர்கள். இந்தக் கடவுள் நம்பிக்கைதான் மூடநம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஆணிவேராக இருக்கிறது.

நாட்டில் ஜாதிக் கலவரம் உருவாவதற்குக் காரணமே மதத் தலைவர்கள்தான். இந்த மதத்துக்கெல்லாம் தலைவன் கடவுள்தான். அதனால், அந்தக் கடவுளை ஒழித்தால்தான் எல்லாப் பிரச்சினைகளும் தீரும். நாட்டில் சாமியார்களுக்கெல்லாம் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் சாமியார்கள் கஞ்சா, அபினைவிட பெரிய போதையைக் கொடுக்கிறார்கள். அது தெரிந்தும் அவர்கள் பின்னாலே மக்கள் போகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டது பெரியார் புத்தகங்களைப் படித்துத்தான். பெரியார் கொள்கைகள் மீது நான் ஈடுபாடு கொண்டதற்குப் பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யாராவது ஒருவர் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தால், அந்தப் படத்தில் நான் காசு வாங்காமல் நடித்துக் கொடுப்பேன். (பின்னர், பெரியார் திரைப்படத்தில் நடித்தும் சிறப்புக்குரியவரானார்.) பெரியார் வேடத்தில் என்னைப் பார்த்துவிட்டேன் என்றால் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவேன். இது நடந்தே தீரும்’’ என்பதைப் போன்ற கருத்துகளை மாநாடு மூலமாக சிறப்புரையாற்றினார்.

எனது உரையில், “இங்குக் கூடியிருக்கும் குடும்பம் எவ்வளவு நெருக்கமான குடும்பம். எவ்வளவு பகுத்தறிவுள்ள குடும்பம், கொள்கைகளுக்காக தங்களை அழித்துக் கொள்கின்ற கருப்பு மெழுகுவத்திகளாக இருக்கின்ற குடும்பம் என்பதை நிலைநாட்டக் கூடிய வகையில் கடந்த மூன்று நாள்களாக இடையறாமல் தொடர்ந்து இங்கே நாம் குழுமியிருக்கிறோம். அதற்கு முதற்கண் என்னுடைய நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அருமை நண்பர்களே! அடுத்து வரக்கூடிய இருபத்தி ஓராம் நூற்றாண்டு நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டுதான் என்பதை நாம் உலகுக்கு எடுத்துக்காட்டப் போகின்றோம். ஒரு வெளிநாட்டுக்காரர் என்னை வந்து சந்தித்தார். உங்களுடைய இயக்கத்திலே எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதை அவ்வளவு சுலபமாகச் சொல்ல முடியாது என்று எண்ணிவிட்டு, எங்களுடைய இயக்கத்திலே இரண்டு விதமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னேன். கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் ஒரு வகை; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் மற்றொரு வகை என்று சொன்னேன். அவர் அதிர்ந்து போய் நீங்கள் ஏதாவது இரகசிய இயக்கம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை, இரகசிய இயக்கத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் எந்த இரகசியமும் கிடையாது.- எங்களுடைய இயக்கம், எங்களுடைய கொள்கை ஒரு திறந்த புத்தகம். அதனால்தான் எங்களுடைய இயக்கத்தை எதிரிகளாலும், துரோகிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள்  பாராட்டை எதிர்பார்ப்பவர்கள் அல்ல; நன்றி எதிர்பாராமல் தொண்டாற்றுபவர்கள்’’ என்றேன்.

இந்த மாநாடு எனக்கு வயதைக் கூட்டவில்லை, வயதைக் குறைத்திருக்கிறது என்பதை மெத்த பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் தொய்வில்லாப் பணியின் மூலம் டெல்லியில் தந்தை பெரியார் கொள்கை புன்முறுவல் பூக்கிறது. இன்னும் நிறைய பணியிருக்கிறது. வருங்காலத்தில் இயக்கத்திற்கு புதிய இளைஞர்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. மகளிரின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். ஜனவரியில் கிராமப் பிரச்சாரத் திட்டத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மக்களிடையே புதிய பிரச்சார உத்திகளை ஏற்படுத்தி இயக்கத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும். எனக்கு உங்களைப் பார்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்னும் உங்களுக்காக உழைத்து, உங்களை என்னுடையே தோளிலே தூக்கிச் சுமப்பதற்கு உரிமை பெற்றவன் என்ற முறையிலே அந்த வலிமையோடு உழைக்கின்றேனே அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. சிலர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம், விலக்கப்பட்டவர்களை வைத்து வியாக்கியானம் செய்யலாம், வழக்கு மன்றத்திற்குப் போகலாம் என்று நினைத்தால் அதைச் சந்திப்பதற்கு இந்தப் படை எப்போதும் தயாராக இருக்கிறது.அப்படி நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. உங்களுக்குப்பின்புலம் எது? எங்கே இருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். மிக நன்றாகவே தெரியும். எனவேதான்

தந்தை பெரியார் இட்ட -_ விட்ட பணிகளை முடிக்க எந்த நம்பிக்கை என் மீது வைத்திருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை என்னுடைய இருதயத்தின் கடைசி துடிப்பு இருக்கின்ற வரையிலே, என்னுடைய உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை காப்பாற்றுவேன் என்பதைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்

கெல்லாம் சொல்ல இருக்கிறது. நண்பர்களே, நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. காரணம், நம்முடைய நியாயங்கள் தோற்பதில்லை. வெற்றி நமதே! வீறுகொண்டு நடைபோடுவோம்’’ என உலகளவில் பெரியாரின் தேவையும் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் பா.தெட்சிணாமூர்த்தி நன்றி உரையாற்றினார்.

திராவிடர் கழகம் டிசம்பரில் நடத்திய சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த உலக மனிதநேய அமைப்பின் உறுப்பினரான லெவி ஃபிராகல் அவர்கள் நார்வே சென்ற பின், மாநாட்டு நினைவுகளை எண்ணி பெருமகிழ்ச்சி கொண்டு,

நமது பணியினைப் பாராட்டும் வகையில் ஒரு கடிதத்தினை 9.1.1997 அன்று கழகத்திற்கு அனுப்பினார். அதில்,

அன்புள்ள திரு.வீரமணி,

திசம்பரில் 23, 26 ஆகிய நாள்களில் நான் சென்னை வந்திருந்தபோது, தாங்கள் என்னிடம் காட்டிய அளவற்ற அன்புக்காகவும், விருந்தோம்பலுக்காகவும் நான் என்னுடைய ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பகுத்தறிவாளர்கள் / மனித நேயப் பற்றாளர்களின் ஒரு நிகழ்ச்சி அமெரிக்கா அல்லது அய்ரோப்பாவில் இல்லாமல் இந்தியாவில், உலக அளவில் மிகச் சிறப்பான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது வித்தியாசமாக இருக்கிறது.

தங்களையும், தங்கள் தமிழக மக்களையும் மீண்டும் சந்திக்கவும், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் தங்கள் பணி குறித்து முழுமையாக அறியவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் அங்குத் தங்கியிருந்த காலத்தில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக் கொண்ட திரு.போகா அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அன்புடன்,

லெவி ஃபிராகல் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களது தமக்கையர் ஆயப்பாடியைச் சார்ந்த இராசேசுவரி, சிங்கப்பூர் ஓ.டி.மூர்த்தி ஆகியோரின் செல்வன் தெ.வீரமணிக்கும், விழுப்புரம் டி.சந்திரசேகரன், சுமதி ஆகியோரின் செல்வி உமாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 19.1.1997 அன்று பொறையாறு சியாமளா கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தி வைத்தேன். கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் சிங்கப்பூர் தி.நாகரத்தினம், எம்.ஆர்.சந்திரன், திருமதி விஜயகுமாரி ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். விழாவில் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும், தந்தை பெரியாரின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினேன். விழாவில் ஏராளமான பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அடுத்து மதுரையில் நடைபெறும் திருமணத்திற்குப் புறப்பட்டேன்.

சுயமரியாதைச் சுடரொளி மதுரை ஓ.வி.கே.நீர்காத்தலிங்கத்தின் பேத்தி மணவிழா 20.1.1997 அன்று மதுரை ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. மணமக்கள் ஓ.வி.கே.என். அறிவுச் செல்வம், அ.சித்ரா ஆகியோருடைய செல்வி சுஜிபிரியா அவர்களுக்கும், மதுரை ஆர்.சந்திரசேகரன், சி.மல்லிகா ஆகியோரின் செல்வன் சி.வெங்கடேஸ்ராஜ் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரை யாற்றினேன். மணவிழாவில் கு.வெ.கி.ஆசான், சி.மகேந்திரன், பேராசிரியர் காளிமுத்து, அ.இறையன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், திருமகள் இறையன் மற்றும் ஏராளமான மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு அருகிலுள்ள ஒக்கநாடு மேலையூரில் அய்யா சிலை திறப்பு விழா மற்றும் கிராமப்புற பகுத்தறிவு மாநாடு 21.1.1997 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டேன். பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலையை மக்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே, அதிர்வேட்டு ஒலிக்க திறந்து வைத்தேன்.

காலை முதலே கிராமப்புற பகுத்தறிவு மாநாடு துவங்கி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கமும், நாடகமும் சிறப்பாக நடைபெற்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் அரவிந்த் என்ற சிறுவனுக்கு பெரியார் செல்வம் என்றும், வீதி நாடக நடிகர் தெற்கு நத்தம் வேம்பையன் ஆண் மகனுக்கு தமிழ்ச் செல்வன் எனவும், சாந்தியின் பெண் மகவுக்கு மணியம்மை எனவும், முத்துலெட்சுமி, முருகேசன் ஆகியோருடைய ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வம் எனவும், பெரியார் மணி _ சாந்தா ஆகியோருடைய பெண் மகவுக்கு அன்புமணி எனவும் பெயர் சூட்டினேன். மாநாட்டு நிகழ்ச்சிகளை மாநில இளைஞரணிச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வை.குப்புசாமி ஆகியோர் சிறப்பாக அமைத்திருந்தனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழாக் குழுவிற்கு சால்வைகளை அணிவித்தேன். நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு 10 மூடை நெல்லை கிராமப்புற மக்கள் சார்பாக விழாக்குழுவினர் வழங்கினர். மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி சுந்தர் திருமண மண்டபத்தில் வழக்குரைஞர் இரெ.பழனியப்பன் _ டாக்டர் சரோஜா ஆகியோரின் மகன் வழக்குரைஞர் இரவிசங்கர், பெங்களூர் டாக்டர் லதா ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் 27.1.1997 அன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பெரியார் பெருந்தொண்டர் தி.நாகரத்தினம், இரத்தின நடராசன், வெங்கடாசலம், ‘அரிமா’ ரெங்காச்சாரி ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, பாராட்டினர்.

(நினைவுகள் நீளும்…)

செவ்வாய், 12 ஜனவரி, 2021

கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு - 1985

கலைஞர் கழக மாநாட்டுக்கு வருகை தந்தபோது, பெரியார் தற்காப்பு இளைஞர் அணியினர் அணிவகுப்பு மரியாதையுடன் மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்; பொதுச்செயலாளர் அவர்களும் உடன் வருகிறார். (13.7.1985)


மாநாட்டில் நடந்த படத்திறப்புகள் (1) புரட்சிக்கவிஞர் படத்தை பேராசிரியர் ராமநாதனும் (2) நடிகவேல் எம்.ஆர்.ராதா படத்தை கவிஞர் முகவை ராஜமாணிக்கமும் (3) ஜாதி ஒழிப்பு வீரர்கள் படத்தை பிரச்சார அணி செயலாளர் செல்வேந்திரனும் (4) தமிழ் ஈழம், படத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தனும் (5) ஆஞ்சா நெஞ்சன் அழகிரி படத்தை - எம்.கே.டி. சுப்பிரமணியமும் (காமராசர் காங்கிரஸ் கட்சி செயலாளர்) திறந்து வைத்தபோது எடுத்த படம்

05.07.1985 அன்று சைதாப்-பேட்டை தேரடி திடலில் நடந்த மாநாட்டு விளக்க பொதுக்-கூட்டத்தில் கலந்து-கொண்டு,  குஜராத் முதல்வர் சோலங்கி சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்றதை உணர்ச்சியோடு சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

 

 

 

“குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் சோலங்கி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ‘வீக்’ (Week) வாரப் பத்திரிகை சோலங்கியைப் பற்றி எழுதும்போது ‘Solanki was following foot steps of Periyar’  என்று எழுதியது. (சோலங்கி பெரியார் பாதையை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்) குஜராத் காந்தியார் பிறந்த மாநிலம். அங்கே இப்போது காந்தியார் வெளியே போய்விட்டார், பெரியார் புகுந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் செய்ததைப் போல பார்ப்பனரே இல்லாத ஓர் அமைச்சரவை அமைத்துக் காட்டியிருப்பவர் சோலங்கி. அது மட்டுமல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே அந்த மாநிலத்தின் போலீஸ் அமைச்சராக அவர் நியமித்திருக்கிறார்.

 

அவரைப் பணியை விட்டு, பதவியை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமை ஓட்டுப் போட்ட மக்களுக்குத்தான் உண்டு! ஆனால், பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் அவரை விரட்டப் பார்க்கிறார்கள். இதேபோன்று அநியாயங்கள் பார்ப்பன _ பனியா ஆளும் வர்க்கம் நினைத்ததைச் செய்கிறது என்று கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.

13, 14.07.1985 ஆகிய தேதிகளில் கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முதல் நாளே இதன் வெற்றிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து-விட்டன. நமது கழகக் குடும்பங்கள் தமிழ் மான உணர்வு படைத்தோர் அனைவரும் கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு வந்து திரள வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்-கிணங்க, சென்னைக் கருங்கடல் என்று கண்டோர் வியக்கத்தக்க வண்ணமும் தமிழுணர்வு உள்ள அத்துணைப் பேர்களது சங்கமக் கடல். அந்தக் கருங்கடல் பெரியார் திடல் முழுவதும் நிரம்பி வழிந்ததால் பொதுவானவர்கள் பலரும் பாராட்டினார்கள், வியந்தனர், நம்பிக்கை கொண்டனர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சீருடை அணிந்த தற்காப்புப் படை அணிவகுத்து இருந்தது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கருநாடக மாநில தி.க. மகளிர் அணி அமைப்பாளர் சொர்ணாம்மாள் எம்.ஏ. அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் வருகை தந்து மாநாட்டில் கலந்து-கொண்டார். மாநாட்டில் அன்னை நாகம்மையார் உருவப் படத்தை ஈரோடு சுப்பையாவும், அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்தை காமராஜ் காங்கிரஸ் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியமும், புரட்சிக்கவிஞர் படத்தை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் இராமநாதனும், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை கவிஞர் முகவை இராசமாணிக்கமும், அன்னை மணியம்மையார் படத்தை வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதனும், சுதந்திர தமிழ் ஈழ படத்தை கவிஞர் காசி.ஆனந்தனும், பேரறிஞர் அண்ணா படத்தை மதுரை ஆதீனகர்த்தரும் திறந்து வைத்து உரையாற்றினர்.

மாநாட்டில் தாலி அகற்றுதல் நிகழ்ச்சியும், வேம்பையன் அவர்கள் தமது துணைவியார்  சுசிலா அணிந்திருந்த பவுன் தாலியை கழற்றி, தமிழன் குரலாக ஒலிக்கும் விடுதலையின் வளர்ச்சிக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்கள். அதுபோல மு.கங்காதரன் அவர்களின் துணைவியார் அவர்களும் தமது தாலியை அகற்றிக் கொண்டார்.

தொடர்ந்து நான் மேடையில் ஒரு குழந்தைக்கு ‘விடுதலை மணி’ என்று பெயர் சூட்டினேன். தொடர்ந்து லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழினத் தொண்டருமான வீரசிங்கம், தோழர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்களும், மேடையில் மூத்த உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு மூத்த உறுப்பினர்களாக இருப்பவர்களும், வழிகாட்டியாக இருப்பவர்களுமான இயக்க வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் தூக்குமேடை நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் மாநாட்டில் தலைமை உரையை நிகழ்த்தினேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு ஆரியர் கூத்தாடி மகிழ்ந்து, சிற்சில இடங்களில் பாயாசம் சாப்பிட்டவர்கள் உண்டு. பெரியார் என்ற மாமலை சாய்ந்துவிட்டது. இனிமேல் நாம் அச்சமின்றி நாம் ஆதிக்கபுரியில் அமர்ந்து ஆட்சி செலுத்தலாம் என்று அவசரக் கணக்கு போட்டது. அந்தக் கணக்கு ஒரு தப்புக் கணக்கு என்பதை இன்று நாடே கண்டு ஒப்புக்-கொள்ளும் நிலை ஏற்பட்டது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழகத்திலும், ஒரு சில தென்னாட்டு மாநிலங்களில் மட்டுமே தந்தை பெரியார் வாழ்ந்தார் என்ற நிலைமை மாறி இப்போது தந்தை பெரியார் வடமாநிலங்களுக்கும் சென்றுவிட்டார்.

“தந்தை பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் மறைந்த உண்மை அகிலத்திற்கெல்லாம் புலனாகிறது.

தந்தை பெரியார் அவர்களுடைய வருமுன்னர் சொல்லும் அறிவும், வருமுன்னர்க் காக்கும் செயலும் அவரை உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் சிந்தனையாளராக உயர்த்திக் காட்டுகிறது. இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ்-காரர்கள் இந்த நாட்டில் இருக்கும்போதே ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் இனி எதிர்காலத்தில் ஜனநாயகம் (Democracy) இந்த நாட்டில் மலராது, பார்ப்பன நாயகம் (Brahminocracy) தான் வரும் என்றார். அதைத்தானே கடந்த காலத்திலும் இன்றும் நாம் கண்டு வருகிறோம் என்று எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.

முதல் நாள் மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தில் இதுவரையிலே அய்ம்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வந்திருக்கின்றன என்றாலும்கூட, முதல் திருத்தம் தந்தை பெரியாரால், அண்ணாவால், நாம் நடத்திய போராட்டத்தால்தான் உருவாக்கப்பட்டது என்கிற வரலாற்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் சமுதாயத்திலே இடஒதுக்கீடு தேவை. அது எந்த அடிப்படையிலே என்றால் பொருளாதார அடிப்படையிலே அல்ல, சமூக அடிப்படையில் கல்வி அடிப்படையில் Socially and Educationally என்ற சொற்றொடரோடு அந்த அரசியல் சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக ஏறியதை மறந்துவிடக் கூடாது’’ என்று கூறினார்கள்.

தூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாரவி தோன்றும்

ஒரு காட்சி (13.7.1985 மாநாட்டில்)

முதல் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அரசு பணிகளில் மகளிர்க்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இளைய சமுதாயமே! ஆபாச போதைகளிலிருந்து விடுபட மாற்று ஏற்பாடுகள், காலில் விழும் பழக்கத்தை ஒழித்திடுக, தீக்குளிப்பை கைவிடுக, ஜாதி மதக் கலவரங்களை ஒடுக்க நடவடிக்கை, ஜாதி ஒழிய கலப்பு மணம், இந்தி திணிப்பை ஒழிக்கப் போராட்டம், மாநிலப் பட்டியலில் கல்வி உள்ளிட்ட தீர்மானங்கள் அவற்றுள் அடங்கும்.

இரண்டாவது நாள் நடைபெற்ற இடஒதுக்கீடு காப்பு மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு 18 சதவீதத்திற்கும் அதிகமாக தருக, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் குறையாது காப்பீர், மண்டல் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்-படுத்தும். இடஒதுக்கீடு சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவீர் உள்ளிட்ட தீர்மானங்-களிலும் ஜாதி சான்றிதழ், மாணவருக்கு உதவித் தொகை, மாணவர் வருகைப் பதிவு, உள்ளிட்டவைகளில் தமிழக அரசு மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் இம்மாநாடு மிகுந்த பலன் தந்த மாநாடாகும்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் சில பகுதிகள்

உண்மை இதழ், 16-31.12.18