செவ்வாய், 15 அக்டோபர், 2024

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்கள்

* ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை ஏற்காத தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு நவம்பர் 26இல் ஈரோட்டில் சுயமரியாதை  இயக்கத்தின் எழுச்சிமிகு மாநாடு! 

விடுதலை நாளேடு

 *கல்வி நிதியை நிறுத்திய மோடி அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

* தமிழ்நாடு  மீனவர்களின் மீதான தாக்குதல் – மீன்பிடி உரிமைக்கு எதிரான 
இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுக!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்கள்
தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு, தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை அளிக்க மறுக்கும் ஒன்றிய பிஜேபி அரசுக்குக் கண்டனம், ஒன்றிய அரசின் குலக்கல்வித் திட்டமான ‘விஸ்வ கர்மா போஜனா’ திட்டத்தை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவுக்குப் பாராட்டு, நவம்பர் 26ஆம் நாள் ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
6.10.2024 (ஞாயிறு) பிற்பகல் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்.
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்: 4ஆம் பக்கம் பார்க்க
தீர்மானம் எண் 2:
ஈரோட்டில் சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு விழா!
தமிழின சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும், வெற்றியையும் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை – ‘குடிஅரசு‘ வார இதழ் பிறந்த ஈரோட்டில் – திராவிடர் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டமாகிய இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டம் நடத்தப்பட்ட நவம்பர் 26 ஆம் தேதியன்று சிறப்புடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 3:
தமிழ்நாடு மீனவர்கள் நலனும் – உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும்!
கச்சத்தீவு – இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் தருணங்களில், கடற்கொள்ளையர்கள் தாக்குதல், மீன் வலைகள் உள்ளிட்ட மீன் பிடித் தொடர்பான கருவிகளைக் கொள்ளை அடித்தல், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது, பிறகு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது, அபராதம் மற்றும் சிறைக் கொடுமையை அனுபவிப்பது – இவற்றையும் தாண்டி, தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்தும் வகையில், மொட்டையடிப்பது வரை, தமிழின மீனவர்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் அவமானமும், கேள்விக் குறியாகவும் ஆகிவிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி, தமிழின மீனவர்களின் சுதந்திரமான மீன் பிடிக்கும் உரிமை நிலை நிறுத்தப்படவேண்டும் என்றும், இலங்கை அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்தும், சிறிது அசைவுகூட இன்றி, ‘யாருக்கோ வந்த இழவு’ என்ற போக்கில், ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடந்து கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும், தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இப்பிரச்சினைக்குச் சட்ட ரீதியான முடிவினை ஏற்படுத்திட, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி, உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 4 (அ):
கல்வி நிதியை நிறுத்திய மோடி அரசின்
நடவடிக்கை கண்டிக்கத்தக்கது
‘‘புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்’’ எனத் தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,434 கோடியாகும். மீதமுள்ள ரூ.2,152 கோடி நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படும். இந்தத் தொகை 4 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு, முதல் தவணையாக ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நிதியைத் தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித் துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு வருகிற மாதத்திற்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பி.எம்சிறீ பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் 10+2+3 கல்வி முறைக்கு மாறாக, 5+3+3+4 கல்வி முறையை கடைப்பிடிக்க வேண்டும்; தொழில்கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிபந்தனைகள் இல்லாமல் பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த யோசனையை ஏற்க ஒன்றிய அரசு மறுத்து விட்டது.
‘‘ஒன்றிய அரசின் ‘பிஎம்சிறீ’ திட்டத்தில் தேர்ந்தெடுக் கப்படும் பள்ளிகள் மட்டும் அனைத்து வசதிகளுடன் ஆகச்சிறந்தப் பள்ளிகளாக்கப்படுமாம்; மற்றப் பள்ளிக ளெல்லாம் சாதாரணப் பள்ளிகளாகவே இருக்குமாம்! இது எவ்வளவு பெரிய அநீதி! இரண்டு வகைப் பள்ளிகளுமே மக்களின் வரிப்பணத்தில் இயங்கும்போது, ஒரு பள்ளிக்கு எல்லாமும், மற்ற பள்ளிக்கு எதுவுமே கொடுக்காமல் இருப்பது – குழந்தைகளின் உரிமையைப் பறிக்கக்கூடிய நயவஞ்சக வேலையே! இப்படி பாகுபாடு காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இது வெறுமனே இந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கைக்காக மட்டுமே எதிர்க்கவில்லை. பள்ளிகளிடையே பாகுபாட்டையும் மாணவர்களிடையே சமத்துவமற்ற கல்வியை புகுத்துவ தாலும்தான் எதிர்க்கிறோம்!’’ என கல்வியாளர்கள் எதிர்த்து உள்ளனர்.
நாங்கள் ‘சமக்ர சிக்ஷா’வையும், ‘பிஎம்சிறீ’ பள்ளிகளையும் இன்டர்லிங்க் செய்துவிட்டோம். நீங்கள் பிஎம்சிறீ பள்ளிகள் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டால்தான் மீதமுள்ள நிதியைத் தருவோம்’ என ஒன்றிய அரசு கூறுவது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது – சீர்குலைப்பதாகும்.
இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்து, அதனை இயக்கமாக மாற்றிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு! அதன் காரணமாகத்தான் இன்றைக்கு கல்வி வளர்ச்சி குறியீட்டில் முதன்மை மா நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ் நாடு அரசின் கொள்கையான இரு மொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசின் நிதி நிறுத்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற திராவிடர் இயக்கத்தின் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் தர வேண்டிய கட்டாயத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் அனைத்து முற்போக்கு அமைப்புகளையும் இணைத்து மக்கள் மன்றத்தில் போராட வேண்டும் என திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு அனைவரையும் வற்புறுத்துகிறது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான பிரச்சினை அல்ல; அந்தந்த மா நில கல்வி முறையை ஒடுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதை பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் இணைத்து நாம் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4(ஆ):
தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!
‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருப்பது – வரவேற்கத்தக்கதும் – பாராட்டத் தக்கதுமாகும். இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4(இ):
பா.ஜ.க.வின் திட்டங்களை பள்ளிகளில் போட்டியாக நடத்துவதா?
ஒன்றிய அரசு கைவிட வேண்டும்
ஒன்றியத்தில் ஆளும் மைனாரிட்டி பாஜக அரசின் பிஎம்சிறீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த ஒன்றிய அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
அதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள “ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்” ஆகிய தலைப்புகள் சர்ச்சைக்குரியவை.
மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மாணவர் விரோதப் போக்காகும், வன்மையான கண்டனத் திற்குரியதாகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை திராவிடர் கழக தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 5:
உச்சநீதிமன்ற உணவகத்தில்
உணவு கட்டுப்பாடா?
‘நவராத்திரி விழா’ என்கிற பெயரில் ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இது குறித்து வழக்குரைஞர் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். மாமிச உணவு வழங்கக் கூடாது என வாய்மொழி வழியாக உத்தரவிட்டு கட்டுப்பாடு விதித்தது அநீதி என்றும், ஒரு சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வழக்குரைஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். நவராத்திரி உணவுடன் வழக்கமான உணவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், இவ்வாறான கட்டுப்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும், ஒரு சிலருக்காக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்றும் வழக்குைஞர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.
என்ன உணவு சாப்பிட வேண்டும் என நீதிமன்றத்தாலேயே அறிவுறுத்தப்படுவது இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் உணவு பழக்கத்திற்கும், உணர்வுக்கும் எதிரானது ஆகும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்றும் அவ்வாறு எடுத்துச் செல்வோரை அடித்துக் கொல்லும் நிகழ்வுகள் நாளும் நடந்தேறி வருகிறது. இது குறித்து நீதிமன்றங்களில் வழக்கும் இருக்கின்றன. ‘செக்குலர்’ நாடு எனப் பேசும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அலுவலகத்தில் உணவுக்கு ஒரு சார்பான விதிமுறைகளை உருவாக்குவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதாகாது. இதே போன்று ஒவ்வொரு மத பண்டிகையின்போதும் நீதிமன்றம் உணவு கட்டுப்பாடு விதிக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது.
சிறைச்சாலையில் கைதிகளை ஜாதி அடிப்படையில் ஒதுக்கி வைப்பது சட்ட விரோதம் என சொல்லும் உச்ச நீதிமன்றம், இன்று தனது வளாகத்தில் இயங்கும் உணவுக் கூடத்தில் உணவுத் தடை விதிப்பது எந்த விதத்திலும் நியாய மாகாது.
இது தவறான முன்னுதாரணமாகி விடும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்குரைஞர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு அளித்து, உணவு கட்டுப்பாடு விதிக்கும் செயலை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
தீர்மானம் எண் 6:
ஒன்றிய அரசின் சமூக அநீதிக் கொள்கை
மோடி அரசு ஒன்றியத்தில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இட ஒதுக்கீடு கொள்கையை முறையாக பின்பற்றாமல் வந்துள்ளதை ஒன்றிய அரசின் தரவுகளே வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. அய்.சி.ஏ.ஆர் என்ற நிறுவனத்தில் இட ஒதுக்கீடு இல்லாமலேயே 2700 விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி.) அதிக மதிப்பெண் பெற்ற எஸ்.சி., எஸ்.டி. ஓபிசி விண்ணப்பதாரர்கள் 3000 பேருக்கு மேல் உள்ளவர்களை, பொதுப் போட்டியில் சேர்க்காமல், அந்தந்த பிரிவில் சேர்க்கும் கொடுமை இன்னமும் தொடர்கிறது. அய்.அய்.டி. மும்பை பேராசிரியர் நியமனத்திற்காக விண்ணப்பித்த 779 ஓபிசியில், ஒருவர் கூட தகுதி பெற வில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் இதே போன்று ஒடுக்கப்பட்ட பிரிவினர் வாய்ப்பு மறுக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய ஆணையங்கள், நாடாளுமன்ற குழுக்கள் எல்லாம் செயல்படாமல் இருக்கின்றன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் எஸ்.சி., எஸ்.டி. ஓபிசி பிரிவினர் இன்னமும் அதிகாரப் பதவிகளில் பத்து சதவீதம் கூட இல்லாத நிலைதான் உள்ளது என்பது சமூக அநீதியும், அவமானகரமானதுமாகும். சமூக நீதி அமைப்புகள் ஒன்று திரண்டு நீதி பெற போராட இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.
தீர்மானம் எண் 7:
பட்டியல் ஜாதியினருக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மீண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வரவேற்கத்தக்கது
கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனினும், உரிய ஆய்வுகளுக்கு பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம், பஞ்சாப் அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும்” என தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகிய 7 பேர் அடங்கிய அமர்வு 1.8.2024 அன்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை, உச்நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பேலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், ‘‘தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்ற விதிகள் 2013இன் ஆணை XLVII விதி 1ன் கீழ் மறுஆய்வு செய்வதற்கான வழக்கு நிரூபிக்கப்படவில்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’என்று நீதிபதிகள் கூறினர். இதில் நீதிபதி பேலா எம் திரிவேதி மட்டும், பட்டியல் ஜாதிக்குள் பின்தங்கி உள்ளோர் என்பதை அரசு வகைப்படுத்தமுடியாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இருப்பினும் பெரும்பான்மை அடிப்படையில் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
சமூக நீதியின் நோக்கமே, அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கிய செயல்பாடுதான். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பல ஜாதிகள் உள்ள நிலையில், அனைத்துப் பிரிவினரும் வாய்ப்பை எதிர் நோக்குவதும், அதனை அரசுகள் செயல்படுத்துவதும் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதைத் தான் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளித்திட மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்ததை இச்செயற்குழு வரவேற்கிறது.
தீர்மானம் எண் 8:
சாலைகள், பாதைகள், நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களும் –
உச்சநீதிமன்ற ஆணையும்!
பொது சாலைகள், நடைபாதைகள், வீதிகள், நீர்நிலைகள்மீது அனுமதியின்றி கட்டப்படும் எந்த மத வழிபாட்டுத் தலங்களையும் உடனே அகற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
2010 ஆம் ஆண்டிலும் இப்படியொரு தீர்ப்பு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளும், ஒன்றிய அரசுகளும் உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்தாதது – நீதிமன்ற அவமதிப்பாகும்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஆணையில் குறிப்பிட் டபடி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களையும் உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 9:
அரசியலில் கடவுளைப் பயன்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பும் – இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசும்!
திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் அரசியலில் கடவுளைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இது ஏதோ தெலுங்கு தேச கட்சியின் தலைவர் திரு.சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒன்றிய பி.ஜே.பி. தலைமையிலான அரசுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடியதாகும்.
இந்துராஜ்ஜியம் அமைப்போம் என்றும், ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என்றும், இந்தியாவில் ஒரே மதம், அது ஹிந்து மதம் என்றும் கூறுவதோடு, அயோத்தியில் ராமன் கோவிலைக் கட்டுவதில் முதல் நிலையில் இருந்து செயல்பட்டவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் வேறு யாருக்கும் பொருந்துவதைவிட, தேசிய கட்சியான பி.ஜே.பி.,க்கும், பி.ஜே.பி., தலைமையிலான ஆட்சிக்கும் முதன்மையாகப் பொருந்தும் என்று இச்செயற்குழு அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.
உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் தலையிட்டு, அரசின் மதச் சார்பின்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 10:
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் (வயது 87), பெரியார் பெருந்தொண்டர் வலசைக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85), மூத்த வழக்குரைஞர் கிருட்டினகிரி ஜி.எச்.லோகாபிராம் (வயது 91), அவினாசி அங்கமுத்து (வயது 84), மருதூர் செல்வி அம்மையார் (வயது 72), வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் (வயது 75), சிவகாசி மு.பார்வதி (வயது 68), தெற்குநத்தம் சரோஜா (வயது 85), டாக்டர் கண்ணன், வேலூர் அ.பொன்னப்பன், பெரம்பூர் கி.சம்பத், திருச்செந்தூர் ரெ.சேகர், மதுக்கூர் பாண்டியம்மாள், கோபி அம்மாசை, தேனி சீதாலட்சுமி, ஆத்தூர் பூசம்மாள், கழகத் தோழர்கள் அ.பன்னீர்செல்வம் மற்றும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர் பரத் உள்ளிட்ட தோழர்களின் மறைவிற்கும், சமூகநீதிப் போராளி பேராயர் எஸ்றா.சற்குணம் அவர்களின் மறைவிற்கும் இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவர்களின் பிரிவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தலைமைக் கழக
அமைப்பாளர்களின் பணி
ஈரோடு – திராவிடர் கழகப் பொதுக்குழுவில், கழகச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படும் வகையில் தலைமைக் கழக அமைப்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கென்று குறிப்பிட்ட மாவட்டங்களும் ஒதுக்கப்பட்டன.
திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட
புதிய பொறுப்பாளர்கள் (20.09.2024 முதல் 05.10.2024 வரை)
1) தஞ்சை மாவட்டம்
தலைவர் : ச.சிந்தனையரசு
செயலாளர் : இர.மகேந்திரன்
2) காரைக்கால் மாவட்டம்
தலைவர் : மோ.மோகன்ராஜ்
துணைத் தலைவர் : சே.சசிகுமார்
செயலாளர் : பி.அறிவுச்செல்வன்
துணைச் செயலாளர் : தி.மனோ
அமைப்பாளர் : பா.பாரதி
அண்ணா கல்லூரி பொறுப்பாளர்கள்
தலைவர் : ரா.ரஞ்சித்
செயலாளர் : செ.சதீஷ்குமார்
கலைஞர் கல்லூரி பொறுப்பாளர்கள்
தலைவர் : க.முருகன்
துணைத் தலைவர் : க.கார்த்திகா
செயலாளர் : வீ.ரவீன்குமார்
துணைச் செயலாளர் : க.கலைச்செல்வி
நிரவி அரசு உயர்நிலைப் பள்ளி பொறுப்பாளர்கள்
தலைவர் : தி.இனிதன்
செயலாளர் : பி. ஆகாஷ்
3) நாகை மாவட்டம்
தலைவர் : மு.குட்டிமணி
செயலாளர் : க.பாரதி
துணைத் தலைவர் : ம.ஆதித்யன்
துணைச் செயலாளர் : தே.இளமாறன்
நாகை நகர அமைப்பாளர் : ம. இளமாறன்
நாகை நகர து. அமைப்பாளர் : செ.அறிவுச்செல்வன்
திருமருகல் ஒன்றிய தலைவர் : பா.அரிஹரன்
திருமருகல் ஒன்றிய செயலாளர் : லெ.மணிகண்டன்
4) பட்டுக்கோட்டை மாவட்டம்
தலைவர் : ம.மதன்
செயலாளர் : அ.முத்தமிழ்வேந்தன்
நகரத் தலைவர் : நீ அ. அகரமுதல்வன்
நகரச் செயலாளர் : ப.சந்தோஷ்
நகர துணைச் செயலாளர் : ஆர். சச்சின்
5) திருவாரூர் மாவட்டம்
மாவட்ட தலைவர் : கே. அழகேசன்
மாவட்ட செயலாளர் : அ.அறிவுச்சுடர்
திரு.வி.க அரசு கலைக் கல்லூரி
தலைவர் : வே. அறிவழகன்
6) மன்னார்குடி மாவட்டம்
தலைவர் : இ.தீனதயாளன்
செயலாளர் : ச.சாருக்கான்
அமைப்பாளர் : பெ.அன்புசெல்வன்
நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் : வீர.தமிழ்தென்றல்
நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் : பா.பாலகிருஷ்ணன்
நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் : உ. கதிர்வேலன்
7) அரூர் மாவட்டம்
தலைவர் : சாய்கிருஷ்ணன்
செயலாளர் : கு.ஹரிஹரன்
கடத்தூர் ஒன்றிய தலைவர் : ப.பெரியார்
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியதலைவர் : ராஜேஷ்
மொரப்பூர் ஒன்றிய தலைவர் : ஆ.பிரதாப்
அரூர் ஒன்றிய தலைவர் : சஞ்சீவ்
வேப்பிலைப்பட்டி கிளைத் தலைவர்: சு.சூர்யா
8) தருமபுரி மாவட்டம்
தலைவர் : ச.கி.வீரமணி
செயலாளர் : செ.இனியன் பிரபாகரன்
9) அரியலூர் மாவட்டம்
தலைவர் : த.சிவமணி
துணைத் தலைவர் : இரா. இன்பத்தமிழன்
செயலாளர் : மு. தமிழ் அறிவாளன்
துணைச் செயலாளர் : நி. பெரியார் செல்வன்
10) பெரம்பலூர் மாவட்டம்
தலைவர் : பொ.பிறைசூடன்
செயலாளர் : க. குமரேசன்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துதல், இயக்க ஏடுகளுக்கு, இதழ்களுக்குச் சந்தா சேர்த்தல், புதிய உறுப்பினர்களை குறிப்பாக பாலின வேறுபாடுகளின்றி இளைஞர்களை கழகத்திற்குக் கொண்டு வருதல், பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் உள்ளிட்ட பணிகள் தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
கழகத் தலைமைச் செயற்குழுவில் (6.10.2024) கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்
திண்டுக்கல் மாவட்டம்: 
மாவட்டத் தலைவர் : வழக்குரைஞர் 
மு. ஆனந்தமுனிராசன்
மாவட்டச் செயலாளர் : த. கருணாநிதி
மாநகரத் தலைவர் : அ. மாணிக்கம்
மாநகரச் செயலாளர் : மு.செல்வம்
உசிலம்பட்டி கழக மாவட்டம், மேலூர் கழக மாவட்டம் இரண்டும் இணைக்கப்பட்டு மதுரை புறநகர் கழக மாவட்டமாக செயல்படும்.
மாவட்டக் காப்பாளர்:சுப. தனபாலன், வாடிப்பட்டி
ரோ. கணேசன், விக்கிரமங்கலம்
மாவட்ட தலைவர் : த.ம. எரிமலை
மாவட்டச் செயலாளர் : பா. முத்துக்கருப்பன்
மாவட்ட துணைத் தலைவர் : அழ. சிங்கராசு
மாவட்டத் துணைச் செயலாளர் : து. சந்திரன்
பொதுக்குழு உறுப்பினர் : அ. மன்னர்மன்னன்
மேலூர் நகரத் தலைவர் : லெ. வீரமணி
திருமங்கலம் நகரத் தலைவர் : மு. சண்முகசுந்தரம்
திருமங்கலம் நகரச் செயலாளர் : சி.பாண்டியன்
திருவாரூர் மாவட்டம்
 தலைவர் :சு. கிருஷ்ணமூர்த்தி
மாவட்டச் செயலாளர் :சவு. சுரேஷ்
தலைமை கழக அமைப்பாளர்
மாவட்டங்கள் நாகை திருவாரூர் : வீ. மோகன், திருவாரூர்
அரியலூர் மாவட்ட தொழிலாளரணி
தலைவர் : வெ. இளவரசன்
செயலாளர் : மா. கருணாநிதி
அமைப்பாளர் : சி. கருப்புசாமி
இந்த வகையில், தலைமைக் கழக அமைப்பாளர்கள் ஆற்றிய பணிகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தலைமைக் கழக அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதைக் கடமையாகக் கருதி உழைக்கவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக