செவ்வாய், 15 மே, 2018

பொன்னேரி படைத்திட்ட பொன்னேடு!

*கிடுகிடுக்க வைத்த பேரணி - உரத்துக் கேட்ட கொள்கை முழக்கம்


*கிழியட்டும் ஜாதி என்ற பறை முழக்கம்!

*மயிர்க் கூச்செறிந்த வீர விளையாட்டு

*கருத்தரங்கக் கர்ச்சனைகள்!

*கழகப் பொறுப்பாளர்களின் கருத்துரைகள் - காலக்கல்வெட்டான தீர்மானங்கள்!



சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு "திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!'' என்ற எழுச்சி முழக்கத்தோடு நேற்று (12.5.2018) சனி மாலை 5 மணியளவில் தொடங்கப்பட்டது.


மாநாட்டையொட்டி புழல் முதல் பொன்னேரிவரை எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - கழகத் தோழர் ஓவியர் புதுவயல் இரணியனின் கைவண்ணம் பளிச் சிட்டது. எழுத்துகளும், பதாகைகளும், வண்ண வண்ண சுவரொட்டிகளும் மாநாட்டின் நோக்கத்தைப் பறைசாற்றின.

சாலையின் இருமங்கிலும் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது.

மாலை 5.30 மணிக்கு பொன்னேரி பேரூராட்சி அலு வலகம் அருகில் பேரணி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன் தலைமையில், மண்டலக் கழகச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் கொடியசைத்திட அதிர்வேட்டு கொள்கை முழக்கத்துடன் புறப்பட்டது.

பேரணிக்குக் கீழ்க்கண்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சு.எழில், ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் வை.கலையரசன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சட்டநாதன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.பவன்குமார், தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.கதிர்வேல், வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார் பிஞ்சுகள் முன்வரிசையில் கழகக் கொடியைப் பிடித்து நிற்க  வரிசைக்கு இருவர் வீதம் கழக மகளிர் அணியினரும் தொடர்ந்து இளைஞரணி, மாணவரணி மற்றும் கழகத் தோழர்களும் அணிவகுத்து நின்ற காட்சி இராணுவ மிடுக்காக ஜொலித்தது. ஒவ்வொரு தோழரின் கரத்திலும் கழகக்  கொடி அல்லது கொள்கை முழக்கப் பதாகை கட்டாயம் காட்சி அளித்தது.

பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தினர் பேரணியில் சிலம்பாட்ட சாகசங்களை நடத்திக் காட்டினர். அந்தக் குழுவில் சிறுவர்களும் இடம்பெற்று நடத்திக் காட்டிய சிலம்ப விளையாட்டுகள் மயிர்க் கூச்செறியச் செய்தன.

புத்தர் பறை இசைக் குழுவினர் தூள் பரப்பினர். கிழியட்டும் ஜாதி என்பது இலட்சிய முழக்கமாக இருந்தது. கழக மகளிர் அணியினர் தீச்சட்டியை ஏந்திப் போர் முழக்கமிட்டனர்.

தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?'' என்று மகளிரே தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வந்தது பொது மக்களுக்கு ஒரு வகையில் மிரட்சியாக'க்கூட இருந்தது என்று சொல்லலாம். சிந்திக்கவும் தூண்டியது.

கழக மகளிர் அணி - மகளிர்ப் பாசறையைச் சேர்ந்த தோழர்கள் தமிழீழம், டார்வின் சூர்யா, விஜயலட்சுமி, ஜெயந்தி, சுபா மற்றும் சமரன், மனோஜ், மணிகண்டன், செல்வக் கணபதி, முகிலன், மணிமாறன் ஆகியோர் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.

கடவுள் சக்தி என்று சொல்லி அலகுக் குத்தி பக்தர்கள் தேர் இழுப்பார்கள் அல்லவா! பக்திக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை - இதோ பார் கடவுள் இல்லை என்று முழக்கமிட்டு முதுகில் அலகுக் குத்தி கார் இழுத்துக் காட்டுகிறோம் என்று பறைசாற்றி, பொழிசை கண்ணன், சரவணன் ஆகியோர் இழுத்து வந்து அசத்தினர். காரினை அனாசியமாக இழுத்து வந்ததுடன் நிற்கவில்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு வந்த காட்சியை இளைஞர்கள் பார்த்து வியந்தனர்.

கடவுள் சக்தி' என்று சொல்லித் தேர் இழுக்கும் பக்தனே! கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுக்கும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்த்தீயா, பார்த்தியா'' என்று முழக்கமிட்டு வந்த காட்சி தனிச் சிறப்பு! இந்த இளைஞர்கள் தங்களை வருத்திக்கொண்டே, மக்களுக்குப் பகுத்தறிவுத் தீயைக் கொளுத்தும் கொள்கை செயல்பாட்டினைப் பலதரப்பு மக்களும் பாராட்டிச் சொன்னதைக் கேட்க முடிந்தது.
பேரணியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று பார்த்து வியந்ததும், பாராட்டியதும் கழகத்தின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டும். முக்கிய வீதிகள் வழியாக பேரணி மாநாடு நடைபெறும் பொன்னேரி அரிஅரன் கடைவீதிக்கு வந்து சேர்ந்தது.
வரும் வழியில் இருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பச்சைத் தமிழர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு  கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து வந்தனர். அத்தகு இடங்களில் எல்லாம் வெகுமக்கள் நிறைந்து காணப்பட்டனர். அங்கு பெரியார் வீர விளையாட்டுக்காரர்கள் சிலம்ப சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் இருந்தனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைதிக்குப் பங்கமின்றி - பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். இப்படி நடந்ததில் காவல்துறையினருக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாகும்.
கலைமாமணி பன்னீர்செல்வம் இசை மழை!
பேரணி ஒரு பக்கம் வந்து கொண்டே இருக்க, மாநாட்டு மேடையில் கலைமாமணி'' திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை தேன்மழை பொழிந்து கொண்டிருந்தது. அப்பொழுதே மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
மாநாட்டு மேடை கலை வண்ணத்துடன் கம்பீரமாகக் காட்சி அளித்தது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆசிரியரும், ஆசானுமாகிய ஆ.திராவிடமணி அவர்கள் பொன்னேரியையடுத்த ஆசானப்புதூரைச் சேர்ந்தவர் என்பதால், அரங்கத்திற்கு அவர்பெயர் சூட்டப்பட்டு மேடையின் முகப்பில் அவர் படமும் அணி செய்யப்பட்டது.
பொன்னேரியில் பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னோடியாக இருந்து அருந்தொண்டாற்றிய ஆசிரியர் மறைந்த சந்திரராசு அவர்களின் பெயர் மாநாட்டு மேடைக்குப் பொருத்தமாகச் சூட்டப்பட்டு அவர் படமும் காட்சியளித்தது. அந்த இருபெரும் இயக்க வீரர்கள்பற்றி தமிழர் தலைவர் மாநாட்டில் குறிப்பிட்டபோது உள்ளூர் மக்கள் பெருமகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். (ஆசிரியர் சந்திரராசு அவர்களின் வாழ்விணையருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்).
மாநாட்டுக் கருத்தரங்கம் தொடங்குமுன் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தினரின் சிலம்பம் மற்றும் சாகச விளையாட்டுகளும், புத்தர் கலைக் குழுவினரின் பறை இசையும் பட்டையைக் கிளப்பின.
கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.நாகராசு வரவேற்புரை ஆற்றினார்.
சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி மாநாட்டுக்குத் தலைமை வகித்து, புரட்சிக் கவிஞரின் பாடலை எடுத்துக் காட்டி திராவிடன் என்பதில் உள்ள பெருமிதத்தை விளக்கினார்.
மாநாட்டுக்குக் கீழ்க்கண்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
சின்னக்காவனம் நடேசனார், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் - க.ச.க.இரணியன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் - கெ.விஜயகுமார், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் - தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் - வெ.கார்வேந்தன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் - ச.மகேந்திரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் - சோ.சுரேஷ்
கழகக் கொடியேற்றம்
கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை செயலாளர் கு.செல்வி தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! தந்தை பெரியார் பணி முடிப்போம்! கடவுள் இல்லவே இல்லை என்ற முழக்கங்களுக்கிடையே திரா விடர் கழகக் கொடியை ஏற்றினார். அவர் தன்னுரையில் சனாதனத்தின் வேரை வீழ்த்தும் போர்க்குணத்தைக் கொண்டது திராவிடர் கழகக் கொடி,. இன இழிவை ஒழிக்கப் புரட்சி செய்வோம் என்ற தத்துவத்தைக் கொண் டது கழகக் கொடி என்று விரிவாக எடுத்துரைத்தார்.
திராவிடர் இனம் தலை நிமிர்ந்திட.. என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார்.
பார்ப்பனர் அல்லாதாரை திராவிடர் என்று ஏன் அழைக் கிறோம்  என்றால் அந்த சொல்தான் நமது இனத்திற்கு எதிரி பார்ப்பான் - ஆரியன் என்ற அடையாளத்தைக் காட்டுவதாகும் என்று குறிப்பிட்டார்.
திராவிடம் என்று சொல்லும்பொழுது தான் ஆரியமும், காவிக் கூட்டமும் அலருகின்றன என்பதிலிருந்தே திராவிடத்தின் அருமையை உணரலாம் என்று எடுத்துக் கூறினார்.
மே 12 என்பது - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதன்முதலில் மேடையேறி உரையாற்றிய நாள் - இன்றோடு அது பவள விழாவை - (75 ஆண்டுகள்) காணுகிறது என்று அவர் சுட்டிக் காட்டியபோது பெரும் ஆரவாரம்!
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றிய அமுதரசன் - பண்டைத் திராவிடத்தில் ஜாதி கிடையாது, அது ஒரு தாய், வழிச் சமுதாய அமைப்பு என்ற வரலாற்றை நினைவூட்டினார்.
உலகில் நாடே இல்லாத இனங்கள் இரண்டு உண்டு. ஒன்று ஆரியர், இன்னொருவர் யூதர் என்றும் குறிப்புக் காட்டினார்.
வரலாற்றில் முதன்மையான சமூக எழுச்சி போராட்டம் தந்தை பெரியார் தலைமை வகித்து நடத்தி வெற்றி கண்ட வைக்கம் போராட்டம். அந்த வைக்கத்திலிருந்து வந்த கே.ஆர்.நாராயணன்தான் இந்தியாவில் முதல் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்றும் குறிப்பிட்டார்.
பகுத்தறிவுச் சுடர் ஏந்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி புத்தருக் குப் பிறகு பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுத்தவர் தந்தை பெரியார் என்றார்.
படித்த மனிதன் கூட இன்னும் சாணியைப் பிடித்து வைத்து சாமி என்று கும்பிடுகிறானே என்று எள்ளி நகையாடினார். பஞ்சகவ்யம் என்று மாட்டு மூத்திரத்தை தட்சணை கொடுத்துக் குடிப்பதையும் சாடினார்.
ஆண்டு என்பது கருப்பையில் பிறக்கக் கூடியதா என்று கேட்ட இந்த இளம் வழக்குரைஞர் தமிழ் ஆண்டு என்று கூறி 60 வருடங்களைச் சொல்லுகிறார்களே அதில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.
தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தலைப்பில் வழக்குரைஞர் பா.மணியம்மை தன் உரையில் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமரைச் சந்திக்க முதல் அமைச்சர் தேதி கேட்டும், பிரதமர் தேதி கொடுக்காத - இந்தியா ஜனநாயக நாடுதானா?
மாநிலங்களைப் பிரதமர் மதிக்கும் இலட்சணம் - இதுதானா என்ற அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பினார்.
மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்ட மூன்று நூல்கள் குறித்து வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் சிறிது நேரம் விளக்கிப் பேசினார். தனக்கு மொழிப் பற்றோ, தேசப் பற்றோ கிடையாது; எனது பற்று எல்லாம் மானுடப் பற்றுதான் என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார் தான் என்றார் வழக்குரைஞர் குமாரதேவன்.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்ட தாவது.
தமிழ்நாட்டில் காவி ஊடுருவ முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் இங்குதான் பெரியார் பிறந்தார்.
திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதி பெற்றனர். ஏராளமான அளவில் மருத்துவர்கள் தோன்றினார்கள். 'நீட்' என்ற பெயராலே இதனை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டிவிட்டனர். நம் வீட்டுக்குள் புகுந்து நம் பிள்ளைகளின் கண்களைப் பிடுங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வு எழுதிட 1 லட்சத்து 2000 பேர் விண்ணப் பித்தனர் அதில் 30 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதிட வில்லை என்றால் காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வு எழுதிட வசதி செய்து கொடுக்க முடியாதா? வெளிமாநிலங்களுக்குச் சென்று எழுதிட எத்தனைப் பேருக்கு வாய்ப்பு இருக்கிறது - வசதியிருக்கிறது?
ஒருவர் எழுதுகிறார் - செம்மரம் வெட்ட வெளிமாநிலங் களுக்குப் போகும் போது 'நீட்' எழுதிட வெளி மாநிலத் துக்குப் போக முடியாதா என்று கேட்கிறார் என்றால் - இவர்களின் மனம் என்பது வெறும் மரக்கட்டைதானா? என்ற வினாவை எழுப்பினார் பிரச்சார செயலாளர்.
கடந்த ஆண்டு இந்த நீட்டுக்காக ஓர் அனிதாவை பறி கொடுத்தோம் என்றால் இவ்வாண்டு மூன்று தந்தை யர்களை இழந்தோம் என்ற வேதனையை வெளிப்படுத் தினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில் இம்மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் சம்பிரதாயமானவையல்ல, வருங்காலத் தில் அரசின் சட்டங்களாகக் கூடியவை. திராவிடர் கழகத்தின் கடந்த கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் இதன் உண்மை புரியும்.
பெண்களுக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை என்பவை எல்லாம் நமது இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சிதான் என்று குறிப்பிட்டார்.
ஒரு வெளிநாட்டுத் தோழர் இன்று என்னை சந்தித்த போது கணியூரில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் அணி மாநாட்டின் சிறப்பைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டார்.
மாற்றங்கள், வளர்ச்சிகள் என்பது பற்றி மோடி பேசி யதை நம்பி ஏமாந்தவர்களுள் நானும் ஒருவன். அதற்காக நானும் கொஞ்சம் பாடுபட்டிருக்கிறேன்; ஆதரவும் தெரி வித்திருக்கிறேன்.
நான் நம்பியது நினைத்தது தவறு என்று இப்பொழுது உணர்கிறேன். திராவிடர் கழகத்துக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன் என்று குறிப்பிட்டதைக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் எடுத்துக் கூறியதுதான் எத்தகைய உண்மை!
12 தீர்மானங்கள்
மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்மொழிய மக்கள் கடல் பலத்த கர ஒலிக்கிடையே ஆதரித்தது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தனது உரையில், இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 71 ஆண்டுகள் ஆனநிலையிலும், இன்றைய மாநாட்டில் கூட தீண்டாமை ஒழிப்பைப் பற்றியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதாக நாம்கூற முடியுமா?
தந்தை பெரியார் கேட்டாரே ஜாதி இருக்கும் இடத்தில் உண்மையான சுதந்திரம் இருக்க முடியுமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதிதான் இருக்கலாமா என்ற தந்தை பெரியார் கூற்றை நினைவூட்டினார்.
இந்திய அளவில் நிருவாகம், நீதித்துறைகளில் எல்லாம் பார்ப்பனர்கள் இன்னும் ஆதிக்கக் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருப்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். இறுதியாகக் கழகத் தலைவர் நிறைவுரையாற் றினார். மாநாடு இரவு 10 மணிக்கு முடிந்தது. கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கா.கார்த்தி நன்றி கூறினார்.
மாநாட்டின் சிறப்பம்சம் எங்கு நோக்கினும் கருமேகமாக உலாவந்த கழக இளைஞர் பட்டாளம்தான்.

- விடுதலை நாளேடு, 13.5.18


விடுதலை நாளேடு, 13.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக