ஞாயிறு, 5 மார்ச், 2023

இளைஞரணி தோழர்கள் எழுந்து நின்று எடுத்துக்கொண்ட இலட்சிய உன்னத உறுதிமொழி!

 

திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (22.1.2023) நடைபெற்ற மாநிலம் தழுவிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடலில் இளைஞரணி தோழர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி.

கழகத் தலைவர் கூறக் கூற அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியைக் கூறினார்.

உறுதிமொழி

1. நான் ஜாதி, மத, பாலின வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு மனிதம் பேணும் இளைஞன்!

2. சமத்துவம், சம வாய்ப்பு, புதிய சமூகப் படைப்பு என்ற பாதையில் இறுதி மூச்சு அடங்கும் வரை தந்தை பெரியார் பணி முடிப்பேன்!

3. திராவிடர் கழக இளைஞனாகிய நான், பருவம் பாராது, தன்மானத்தைத் தாண்டி, இன மானத்தைப் போற்றுவேன் - அதற்காகவே உழைப்பேன்!

4. கொள்கை, இலட்சியம் என் உயிர் மூச்சு.

5. பிரச்சாரம், போராட்டம் என்ற பாதையில் கூர்முனை மழுங்காமல் செயல்பட எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பேன்!

6. மக்களை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடுவேன்; மனிதநேய அடிப் படையில் குருதிக் கொடை,  விழிக்கொடை, உடற்கொடை உள்ளிட்டவற்றிற்கு என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

7. கட்டுப்பாடு, ஒற்றுமை, ஒழுக்கம் என்பவற்றைப் பேணி, நடப்பில் காட்டி, கழகத்தின் மற்ற அணிகளோடு இணைந்து இயக்கத்தை முன்னிறுத்தி செயல்படும் சிப்பாயாக இருப்பேன்!

8. பதவிக்காக அல்ல - உதவிக்காக இருக்கக் கூடிய இயக்கமான திராவிடர் கழகத்திற்கு முழு மையாக என்னை நான் ஒப்படைத்துத் தொண்டறப் பணியை மேற்கொள்வேன்!

9. சிந்திப்பது தலைமை - செயல்படுவது எனது கடமை என்ற உணர்வை இதயத்தில் ஏற்றி, இயக்கத்தில் பணியாற்றுவேன். உழைப்பே எனது அடையாளம் - தொண்டே எனது ஊதியம் என்ற உணர்வோடு பாடுபடுவேன்!

தந்தை பெரியார் காண விரும்பிய சமூகத்தைப் படைப்பதே என் வாழ்நாள் பணியாகக் கருதி உழைப்பேன்!

மேற்கண்ட உறுதிமொழியை கழக இளை ஞரணியினர் எடுத்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக