திங்கள், 11 ஜனவரி, 2021

மாநில இளைஞரணி மாநாடு சென்னை (1983)

மாநில இளைஞரணி மாநாடு 09.07.1983 அன்று எழுச்சியுடன் சென்னை பெரியார் திடலில் துவங்கியது. தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ஏராளமான இளைஞரணி தோழர்களும், கழகத் தோழர்களும், தோழியர்களும் பெரியார் திடல் முழுவதும் நிரம்பியிருந்தனர்.

தொடர்ந்து இளைஞரணி செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன் எழுச்சிமிக்க வரவேற்புரை ஆற்றினார்.

நான், ஈழத்தமிழர்கள் கொடுமையை விளக்கும் கண்காட்சியை திறந்து வைத்து எழுச்சி உரையாற்றினேன். அதனைத் தொடர்ந்து 06.07.1983 அன்று சோலையார் பேட்டையிலிருந்து புறப்பட்டு வடஆற்காடு மாவட்ட இளைஞர் அணியின் எழுச்சி சைக்கிள் பேரணி வழிநெடுக பிரச்சாரம் செய்துகொண்டு பெரியார் திடலை அடைந்தது.

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நான் ஆற்றிய எழுச்சிமிக்க உரையில், “தந்தை பெரியார் வழியில் இளைஞர்கள் சுயநலம் பாராது ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி எடுத்துக் கூறினேன்.

09.07.1983 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கில் நடைபெற்ற அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடக விழாவில் கலந்துகொண்டேன்.

மறுநாள் (10.07.1983 அன்று) சென்னை பெரியார் திடலில் ‘தமிழர் கலைப் பெருவிழா’ விழாவில், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், டாக்டர் மா.நன்னன், எம்.ஏ.அப்துல் லத்தீப், பொருளார் கா.மா.குப்புசாமி, அறந்தை நாராயணன் உள்ளிட்ட கழக முக்கிய பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.

விழாவில், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “ஈரோடு நகரத்தில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் துணை ஆசிரியராகத் தந்தை பெரியார் அவர்களி டத்திலே பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். அப்பொழுது திருவையாறு தியாகையர் உற்சவம்.

திருவையாற்றில் மறைந்துவிட்ட நம்முடைய இசையரசர் தண்டபாணி தேசிகர் அவர்கள் பாடுவதற்காகச் சென்றார்கள். அவர் தமிழ்ப்பாடல்களாகவே பாடினார். அவர் பாடி முடித்தப் பிறகு உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த இன்னொரு மகாவித்துவான் அந்த மேடையில் பாட வேண்டும். அந்த வித்துவானை அழைத்தபோது அவர் சொன்னார், “மேடை தீட்டாகி விட்டது. தமிழிசை பாடப்பட்ட காரணத்தால் மேடை தீட்டாகிவிட்டது. எனவே, மேடையைக் கழுவி சுத்தம் செய்து தோஷம் கழித்து புண்ணியதானம் செய்த பிறகு தான் நான் இந்த மேடையிலே ஏறுவேன்’’ என்று சொல்லி, அவர் சொன்னாவறு காரியங்கள் நடைபெற்று அதற்குப் பிறகு அவர் அந்த மேடையேறி தெலுங்குப் பாடல்களை _ வடமொழிப் பாடல்களைப் பாடினார் என்பது கற்பனையல்ல, நடந்த செய்தி!

இந்தச் செய்தி வந்தவுடன் தந்தை பெரியார் அவர்கள் கொதித்தார்கள், குமுறினார்கள். “என்னிடத்தில் செய்தியைத் தந்து ‘குடிஅரசு’ பத்திரிகையில் ஒரு துணைத் தலையங்கம் எழுது’’ என்று சொன்னார்கள். இன்றைக்கும் நீங்கள் காணலாம். பழைய ‘குடிஅரசு’ ஏட்டை எடுத்துப் பார்த்தால் ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் நான் எழுதினேன்.’’ என்று பழைய வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்து தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தமிழர்களின் இனவுணர்வு புத்துயிர் பெற இதுபோன்ற விழாக்கள் கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

கலை விழா நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய நான், தமிழர்கள் கலையில் ஆரியர்கள் செய்த சூழ்ச்சிகளையும், அதை முறியடிக்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சொன்ன கருத்துகளையும் சுட்டிக்காட்டி எழுச்சியான உரை நிகழ்த்தினேன்.


4.JPG - 4.73 MB
இளைஞரணி மாநாடு - தமிழர் கலைவிழாவையொட்டி நடந்த பேரணி (ஜூலை 10)

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
உண்மை இதழ்,16.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக