புதன், 9 ஜனவரி, 2019

இந்து மதத்தில் பெண்களின் நிலை என்ன? நமோ சூத்திரர்கள்' என்றுதான் அழைக்கப்படுகின்றனர்

சென்னை சைதை கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்



சென்னை, ஜன.9 இந்து மதத்தில் பெண்களின் நிலை என்ன? நமோ சூத்திரர்கள்' என்றுதான் அழைக்கப் படுகின்றனர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க உரையாற்றினார்.
பகுத்தறிவுப் பகலவனின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

24.12.2018 அன்று சென்னை சைதாப்பேட்டை தேரடியில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், சைதைப் பகுதியில் அறிவாசான் அவர்களுடைய 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

இந்தக் கூட்டம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய விருப்பப்படி, ஒரு நல்ல வெற்றிகரமாக அமைந்த கூட்டம் - இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தலைமைக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
தள்ளாத வயதிலேகூட மூச்சு வாங்கக்கூடிய அளவிற்கு அய்யா அவர்கள் ஒன்றரை மணிநேரம் உரையாற்றிவிட்டு, தன்னுடைய மூத்திரச் சட்டியைக் கைகளில் தூக்கிக்கொண்டு, மற்றவர்கள் அவரை தாங்கி, வேனில் அமர்ந்தவுடன், அவர் கொஞ்சம்கூட இடைவெளி இல்லாமல், அன்னை மணியம்மையாரைப் பார்த்து அல்லது எங்களைப் பார்த்து கேட்கக்கூடிய முதல் கேள்வி, இந்தக் கூட்டத்தில் புத்தகம் எவ்வ ளவு விற்பனையாயிற்று? என்று கேட்பார். அது பணத்திற்காக அல்ல; சில பேர் நினைக்கலாம், பெரியாருக்குப் பணத்தாசை என்று. அவருடைய எல்லா பொருள் களையும் மக்களுக்காகக் கொடுத்தவர் அவர்.
நாங்கள் 200 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்றது என் போம். அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு புத்தகமும் இரண்டணா, நாலணா அளவிற்குத்தான் இருக்கும். உடனே பெரியார் அவர்கள், கைதட்டி, பரவா யில்லையே, இவ்வளவு பேர் இரண்டணா, நாலணா புத்தகங்களை வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், எவ்வளவு பேருக்கு அந்தப் புத்தகங்கள் படிப்பதற்குப் போயிருக்கும். இந்தக் கூட்டம் வெற்றிகரமாக அமைந் தது - நம்முடைய பிரச்சாரம் நீண்ட காலத்திற்குப் போயிருக்கிறது என்பார்கள்.
18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

அதுபோல, இங்கே நம்முடைய கவிஞர் கனிமொழி அவர்களின் மூலமாக விற்கப்பட்ட 60 செட் புத்தகங்கள், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு நல்ல மார்க்கெட் ஏஜெண்ட் எங்களுக் குக் கிடைத்தமைக்கு நன்றி. அடிக்கடி புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்தப் புத்தகங்களை வாங்குவது முக்கியமல்ல; படியுங்கள் என்று சொன்னார்.
அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் தலைவர் தந்தை பெரியார்

ஒரு சிறந்த அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இந்த நாட்டிலே, படிக்கவே வாய்ப்பில்லாத மக்களுக்குப் படிப்பை சொல்லிக் கொடுத்து, பிறகு எதைப் படிக்கவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம் இந்த இயக்கம் - தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம். அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பல இடங்களில், தந்தை பெரியார் அவர்களை, பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டும் காட்டுகிறார்கள்; கடவுள் மறுப்பாளராக மட்டும் சொல்லுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; ஆனால், பெரியார் அவர்களுடைய கருத்துச் சுதந்திரம்,
பெரியார் அவர்களுடைய சமத்துவத்திற்கான போராட்டம்,
பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமைக்கான போராட்டம் இவைகளையெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா?'' என்று எனக்கு முன் இங்கே உரையாற்றிய நம்முடைய கவிஞர் கனிமொழி அவர்களும், அய்யா நல்லகண்ணு அவர்களும், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும், அருள்மொழி அவர்களும் மிகச் சிறப்பான வகையில் எடுத்துச் சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையால், பயன்படாதவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாராவது இருக்கிறார்களா?

உங்களுக்குச் சுருக்கமான சில செய்திகளை நினைவூட்டுகிறேன். நேரிடையாக, கருப்புச்சட்டை அணிந்தவர்கள் ஒருபக்கம். அதேநேரத்தில், கருப்புச் சட்டை போடாமல், விபூதி பூசியிருப்பார்; நாமம் போட்டிருப்பார் அல்லது வேறு வகையான சிந்தனைகளுக்கு ஆளாகி, பக்தராகக்கூட இருப்பார் - ஆனால், அவர் உள்பட தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டால், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையால், பயன்படாதவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாராவது இருக்கிறார்களா? என்று விரல்விட்டு எண்ணிப் பார்க்கவேண்டும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று தந்தை பெரியார் அவர்களையும், எங்களையும் சொல்கிறார்கள். நாங்கள் அதை பெரிய அளவிற்கு எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால், பார்ப்பனர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை; அவர்களுடைய பேதத் தைத்தான் எதிர்க்கிறோம்.
அதற்கு அடுத்த செய்திகளுக்கு வருகிறேன்.
மனிதப் பார்வையோடு பெரியார் பார்த்தார். அந்தப் பார்ப்பன நண்பர்களேகூட கொஞ்சம் ஆற, அமர யோசனை செய்து, வெறுப்புகளில் இருந்து வெளியில் நின்று, மனிதநேயத்தோடு சிந்தித்துப் பார்த்தால், பெரியாரால், இந்த இயக்கத்தால், திராவி டர் இயக்கத்தால், சுயமரியாதை இயக்கத்தால், அவர்கள்தான் அதிகமாகப் பயன்பட்டு இருக்கிறார்கள், எங்களைவிட. இன்னுங்கேட்டால், பெண்கள் வேதம் படிக்கக்கூடாது; வெளியே வரக்கூடாது என்பது எல்லாப் பெண்களுக்கும்தான்.
இந்து மதம் எங்கே போகிறது?''

இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலினை எழுதிய அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் அவர்கள் 101 வயது வரை வாழ்ந்தவர். கடைசி காலத்தில் உண்மையை சொல்லவேண்டும் என்று சொல்லியவர்.
அவர் எழுதிய நூலில்,
பெண்களுக்கும், ஆரியப் பெண்கள், பார்ப்பனப் பெண்களுக்குக்கூட அவர்கள் கொடுத்திருக்கின்ற பெயர் நமோ சூத்திரர்கள்'' என்றுதான்.
அந்தப் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் சரி அல்லது அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் சரி, பார்ப்பனப் பெண்களுக்குக்கூட மனு தர்மம் கொடுத்திருக்கின்ற பெயர் நமோ சூத்திரர்கள்'' என்றுதான்.
அந்தப் பெண்களை வாழவிட்டார்களா? கணவன் இறந்த பிறகு சதி என்ற பெயரில் மனைவியை உயிரோடு எரித்தார்கள். இன்றைக்கு அந்த முறை இல்லை இங்கே. வடநாட்டில் இன்னமும் இருக்கிறது. சதி மாதா கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற சனாதன வழக்கம் இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்., அதனை செயல் படுத்துவதுதான் பா.ஜ.க. அரசு.
எங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையில் காவியின்மீது கோபம்? மனிதநேயத்திற்கு விரோதம் அல்லவா! கணவன் இறந்தால், மனைவியை உடனே ஓட ஓட விரட்டி, அந்தப் பெண் இளம்பெண்ணாக இருந்தாலும், நெஞ்சில் ஈரமில்லாமல், மனிதநேயம் இல்லாமல், அந்தப் பெண்ணை நெருப்பிலே போட்டு வதைத்தவர்கள். அதனை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று சொன்னால், இந்தக் கொள்ளைக்காரர்கள் மறுபடியும் அதனைப் புதுப்பிக்கவேண்டும் என்று கேட்கிறார்களே, அதற்குப் பெயர்தான் நண்பர்களே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து முன்னணி அமைப்பு, இந்துத்துவா தத்துவத்தினுடைய அமைப்பு. அவைக ளெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.
பேயைவிட பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்!''

இன்றைக்குப் பார்ப்பனப் பெண்களில், விதவைகளாக இருக்கின்ற அந்த சகோதரிகளில் யாரையாவது மொட் டைப் பாப்பாத்தி'' என்று ஒருவரைப் பார்க்க முடியுமா? அப்படி யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கலாம். கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது யாராலும். அதேநேரத்தில், அந்த வெள்ளைப் புடவையை, நம்மாள்களில் சிலர் விடவில்லை, சில ஊர்களில்.
குன்றக்குடி அடிகளார் சொல்வார், பேயைவிட பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்'' என்பார். இன்றைக்கு மொட்டைப் பாப்பாத்தி என்று மொட்டை அடித்துக் கொள்வதில்லை; வெள்ளைப் புடவை கட்டுவதில்லை. இவையெல்லாம் எப்படி வந்தது? பெரியார் கொடுத்த அருட்கொடை அந்த சமுதாயத்திற்கு. இதனை யாராவது மறுக்க முடியுமா? இன்றைக்குப் பெண்கள் படித்திருக்கிறார்கள். இன்றைக்குப் பெரியார் கொள்கைகள்  வெற்றி பெற்றிருக்கிறது
இன்றைக்கு எப்படிப் பார்த்தாலும், பெரியார் கொள்கைகள்  வெற்றி பெற்றிருக்கிறது.

எல்லோரும் கோவிலுக்குப் போகவேண்டும் என்று அவர்கள் ஆரம்பித்தார்கள்; கோவிலுக்குள் பேதம் இருக்கிறது, போகாதீர்கள் என்று நாங்கள் சொன்னோம்.
இப்பொழுது நிலைமை எப்படி இருக்கிறது என்றால், பெண்களே கோவிலுக்குப் போங்கள் என்று'' போராட்டம்.
பெண்களே கோவிலுக்குப் போகாதீர்கள்'' என்று அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் சென்ற பெண்கள், அங்கே தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கேட்டார்கள், நாளைக்கு சுவர் அமைக்கும் போராட்டம் நடத்துகின்றோம்; திராவிடர் கழகமும் கலந்துகொள்ளவேண்டும்'' என்று சொன்னார்கள்.
மகளிர் அணியினரை கலந்துகொள்ளச் சொல் கிறோம் என்றோம்.
பிறப்புரிமை' என்ற தலைப்பில் குடிஅரசில் பெரியார் எழுதியது!

பெரியாருக்கு இருந்த சிந்தனை மனிதநேயம். பெரியார் கொள்கை என்ன? சில பேர் பெரியாருடைய கொள்கைளையும், திட்டத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
இதோ என் கைகளில் இருப்பது தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு' ஏட்டில் எழுதிய மிகப்பெரிய ஒரு ஆரம்பமான கொள்கை விளக்க உரை.
பிறப்புரிமை'' என்ற தலைப்பில் எழுதியது.
மனிதனின் பிறப்புரிமை சுயமரியாதையே! திராவிடர், ஆரியர் என்றெல்லாம் சொல்லவில்லை அவர். மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!
மனிதனுக்கு அடையாளமே அதுதானே! மாட்டிடம் போய் அதனை சொல்ல முடியுமா? மாட்டை, மனிதனைவிட காப்பாற்றுகின்ற ஆட்சி ஆயிற்றே இங்கே. அதிலும் பசு மாடாக இருந்தால்தான் காப்பாற்றுவார்கள். எருமை மாட்டை காப்பாற்ற மாட்டார்கள். பசு பாதுகாப்பு என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கப் போகிறோம். எருமை மாடு பாதுகாப்பு இயக்கம் என்று.
இன்னுங்கேட்டால், பசு மாட்டைவிட, எருமை மாடுதான் அதிகமான அளவிற்கு பால் கொடுக்கிறது.
ஈ.வெ.கி.சம்பத் அவர்களும், கே.எஸ்.ராமசாமி அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்பொழுது, ரஷ்ய நாட்டிற்குச் சென்றிருந்தார்கள். அப்படி செல்கையில், அங்கே உள்ள ஆரம்பப் பள்ளிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை பார்க்கவேண்டும் என்று சொல்லி, அந்தப் பள்ளிகளைப் பார்வையிடச் சென்றார்கள்.
அங்கே பயில்கின்ற பிள்ளைகளின் அறிவுக்கூர்மை யைப் பார்க்கவேண்டுமே - இவர்களை வரவேற்று அவர்களுக்குப் பூச்செண்டுகளை அளித்தனர்.
இவர்களும் அந்தப் பள்ளியைப் பார்த்துவிட்டு, திரும்பிச் செல்லலாம் என்று நினைக்கையில்,
அந்தப் பள்ளியில் பயிலும் ஒரு பிள்ளை, நீங்கள் வருகிறீர்கள் என்றவுடன், இந்தியாவைப்பற்றி நூலகத்திற்குச் சென்று படித்தோம். சில சந்தேகங்கள் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை உங்களிடம் கேட்கலாம் என்று நினைக்கிறோம்'' என்று சொன்னார்.
இவர்களும், சின்ன பிள்ளைகள்தானே, அப்படி என்ன சந்தேகம் கேட்கப் போகிறார்கள் என்று நினைத்து, சரி என்று சொன்னார்கள்.
ஒரு பிள்ளை எழுந்து, உங்கள் நாட்டில், பசு மாட்டை கும்பிடுகிறீர்களாமே? மாட்டைப் போய் கும்பிடலாமா? அதற்கு என்ன காரணம்?'' என்று கேட்டார்.
சம்பத் அவர்கள், அரசியலில் என்னதான் மாறு பட்டவராக இருந்தாலும், அடிப்படையில் பகுத்தறிவு வாதி. அதிலிருந்து மாறியவர் கிடையாது.
கே.எஸ்.ராமசாமி அவர்கள், காங்கிரசுகாரர்; அமைச் சராக இருந்தார் பின்னாளில். அவரைப் பார்த்து, இவர் பதில் சொல்வார் என்றார் சம்பத்.
கே.எஸ்.ராமசாமி அவர்களும், சின்ன பிள்ளைகள் தானே என்று நினைத்துக்கொண்டு, பசு மாட்டை நாங்கள் கும்பிடுவது  உண்மைதான். அதற்கு என்ன காரணம் என்றால், அது நிறைய பால் கொடுக்கிற தல்லவா, அந்த நன்றி உணர்ச்சிக்காக நாங்கள் அதனைக் கும்பிடுகிறோம்; அதை கோமாதா என்று நினைக்கிறோம்'' என்றார்.
எருமை மாடு அதைவிட அதிகமாகப் பால் கொடுக்கிறதே, அதை ஏன் நீங்கள் கும்பிடவில்லை?''

உடனே இன்னொரு பிள்ளை எழுந்து, எருமை மாடு அதைவிட அதிகமாகப் பால் கொடுக்கிறதே, அதை ஏன் நீங்கள் கும்பிடவில்லை?'' என்று கேட்டார்.
அதைப்பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்.
எதற்காக இந்தச் செய்தியை சொல்கிறோம் என்றால், நம் நாட்டில் மாடுகளில்கூட மிகப்பெரிய அளவிற்கு பேதம். எனவே, பேதமிலா பெருவாழ்வு என்பதுதான் பெரியாருடைய தத்துவம்.
-  விடுதலை நாளேடு, 9.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக