புதன், 27 பிப்ரவரி, 2019

சமுகநீதி மாநாட்டில் மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுகநீதி - பெண்களுக்கான சொத்துரிமை எல்லாமே செத்தே போகும்

பொதுத் துறைகளை தனியார்த் துறைகளாக மாற்றப்படுவதன் சூழ்ச்சி என்ன?


சமுகநீதி மாநாட்டில் மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!


நமது சிறப்புச் செய்தியாளர்




தஞ்சை, பிப்.25  பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருமேயா னால், மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாகும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

24.2.2019 ஞாயிறு முற்பகலில் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவரங்கத்தில் நிறைவுரை யாற்றுகையில், முத் தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

இதே மேடையில் எத்தனையோ மாநாடுகளிலும், எத்தனையோ நிகழ்ச்சிகளிலும் கலைஞரோடு அமர்ந்து கலந்துறவாடிய நினைவுகளையெல்லாம் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றிய கலைஞர் அவர்களுக்கு இதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது, தான் குறிப்பிட்ட ஒன்றையும், அதற்குக் கலைஞர் கலகலப்பாக அதனை இரசித்ததையும் எடுத்துக் கூறினார்.

பக்கத்தில் இருப்பது தஞ்சைப் பெருவுடையான் கோவில்! அதனைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜசோழன். அந்த மாமன்னனின் சிலையை, அவனால் எழுப்பப்பட்ட அந்தக் கோவிலுக்குள் வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் விரும்பினார்.

ஆனால், அந்தக் கோவிலோ மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார்? அதுதான் கலைஞர். மாமன்னன் சிலையைக் கோவிலுக்குள்ளேதானே வைக்க அனுமதியில்லை. இதோ அந்தக் கோவில் வளாகத்தில், கோவிலின் முகப்பிலேயே திறக்கிறேன் என்று கூறித் திறந்து வைத்தார் அல்லவா! இதனை, கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நினைவூட்டிப் பேசிய நான் ஒரு கருத்தைச் சொன்னேன்.

கோவில் கட்டிய தமிழனெல்லாம் வீதியில்தான் நிற்பான் - கோவில் கட்டுவதற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவன், உழைக்காதவன் எல்லாம் கோவிலுக்குள்தான் இருப்பான்'' என்று நான் அந்த விழா மேடையில் சொன்னதை கலைஞர் அவர்கள் வெகுவாக ரசித்தார் என்பதை மாநாட்டு மேடையில் ஆசிரியர் சொன்னபோது ஒரே கலகலப்பு!

இதேபோல எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் - கலைஞர் அவர்கள் இல்லாத நிலையில், அவர் படத்தினைத் திறந்து வைக்க நேர்ந்ததை மிகவும் உருக்கத்துடன் குறிப் பிட்டார் ஆசிரியர் அவர்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் வகையில் அவரால் கொண்டு வரப்பட்ட ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்த் தொடர்பான சமூகநீதிக்கு எதிரான அந்த ஆணையை எரிக்கும் போராட்ட விளக்க மாநாடு இதே தஞ்சையில் இதே மேடையில்தான் நடைபெற்றது (17.9.1979).

அந்த ஆணையை எரித்து கோட்டைக்குச் சாம்பலை அனுப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்னடைந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 93 ஆம் சட்டத் திருத்த நகலும் எரிக்கும் போராட்டத்தை அறிவிக்கும் நிலையும் ஏற்படும் என்று தமிழர் தலைவர் அறிவித்தபோது மக்கள் கடலின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று.

சமுகநீதி மாநாட்டின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அது தொடர்பான கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து வைத்தார்.

கருநாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஹாவானூர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையில் மிக முக்கியமாக இடம்பெற்றிருந்த கருத்தைக் குறிப்பிட்டார். இந் தியாவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்கான உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்று ஜவகர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டிருந்ததை (1946) அந்த அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்டினார்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று இம்மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய கழகத் தலைவர், உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்களே, இதில் ஒரே ஒரு நீதிபதியாகவாவது தாழ்த்தப்பட்டவர்  உண்டா? என்ற வினாவை எழுப்பியவர் - இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகள் இருப்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் தான், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தானே என்று சொன்னபொழுது பலத்த கரவொலி!

பொதுத் துறைகள் ஒழிக்கப்படுவதன் இரகசியம்


இன்றைக்கு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் வேக வேகமாக தனியார்த் துறைகளாக ஆக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கக் கைகள் ஓங்கிக் சொண்டுள்ளன.

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத் தாலும், அதேநேரத்தில் பொதுத் துறைகளில் இட ஒதுக்கீடு இருப்பதாலுமே இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட இன்னொரு வகையில் இந்த வேலை நடக்கிறது என்ற ஒன்றை நுட்பமாகச் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கான சொத்துரிமைபற்றிக் கூறும் போது, 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் இதே மாதத்தில் கூட்டப் பெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் பெண் களுக்கான சொத்துரிமை குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அண்ணல் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக இருந்த நிலையில், அதற்கானதோர் சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தபோது அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதுபோன்ற அடிப்படையான சட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில், சட்ட அமைச்சராக இருந்து என்ன பயன் என்று பதவியைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். கொள்கையை நிறைவேற்றத் தான் பதவிகள் என்பதை இதன்மூலம் உணர்த்தியவர் அவர். இந்த உணர்வு யாருக்கு வரும்? என்று கேட்டபோது, மாநாட்டுப் பந்தலே நிசப்தம்!

1929 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை இயக்கத்தின் தீர்மானமான பெண்களுக்கும் சொத்துரிமை என்ற தீர்மானம்.

(இன்னும் சொல்லப்போனால் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத் தக்காரர்கள் மாநாட்டிலேயே இதுகுறித்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது). தி.மு.க. இடம்பெற்ற அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியிலே பெண்களுக்குச் சொத் துரிமைக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (2008).

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் அதற்கு முன்னதாகவே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (1989). இதையெல்லாம் திராவிடர் கழகத் தலைவர் தலைமை உரையில் சுட்டிக்காட் டினார்.

இந்த நாட்டில் பெண்களைப் பார்த்த பார்வையை ஒரு பழமொழிமூலம் சுட்டிக்காட்டினார்.

ஆசைக்கு ஒரு பெண்ணும்; ஆஸ்திக்கு ஓர் ஆணும் என்பதுதான் அந்தப் பழமொழி. அது என்ன ஆசைக்கு? இது என்ன பார்வை? என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் பெண்களுக்குச் சொத்துரிமை குறித்து சங்கர மடம் - இந்து மதத்தின் பார்வை என்னவாக இருந்தது என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.

சீனியர் சங்கராச்சாரியார் என்று சொல்லப்படும் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரசுவதி இதுகுறித்துக் கூறியதை - சங்கராச்சாரியாரின் ஆத்ம நண்பர் - ஆலோசகர் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரின் நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்.

ஸ்திரீகளுக்கு சொத்துரிமை வந்துவிட்டால், இஷ்டப்பட்ட வாளுடன் ஓடிவிடுவா'' என்று சொன்னவர் சங்கராச்சாரியார். இதுகுறித்துக் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து பெரும் அலையை ஏற்படுத்தியது.

இஷ்டப்பட்டவாளுடன் தானே போகிறார்? அதில் என்ன தப்பு?''

பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டால், ஸ்திரீதர்மம் அழிந்து போகும் என்று கவலைப்படுகிறார் சங்கராச்சாரியார் - அதற்கு மனுதர்மத்திலிருந்து எடுத்துக் காட்டையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் வாக்காளர்களில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் கருதவேண்டிய கருத்து ஒன்று உண்டு.

பி.ஜே.பி. மறுபடியும் ஆட்சிக்கு வருமேயானால், இந்த மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாக மாற்றப்படும் - பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்பது வாபசாகும்.

இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்று பெண்கள் சிந்திக்கவேண்டும்.

பெண்கள் வாக்களிக்காமல் இருப்பதோடு, அவர்களின் கடமை முடிந்துவிடாது. இந்தப் பாசிச இந்துத்துவா ஆட்சி மீண்டும் வராமல் தடுக்கும் வேலையிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் மாநாட்டுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

சமூகநீதி மாநாட்டின் தலைமை உரை - நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கவலையளிக்கக்கூடிய ஓர் உணர்வை சுட்டிக்காட்டினார். அது மிகவும் முக்கியமானது.

வாக்குரிமையை விலைக்கு விற்காதீர்!


தங்கள் வாக்குரிமையை விலைக்கு விற்கும் அந்த மனப்பான்மைதான் - கேவலம் பணத்துக்காக வாக்களிக்கும் புத்தி கூடவே கூடாது - உங்கள் உரிமையை விலைக்கு விற்கலாமா? என்று கேட்ட ஆசிரியர் வாக்குரிமையை விற்றால் நல்லாட்சி வளருமா? சமூகநீதியின் நிலை என்னாகும்? விலைக்கு வாங்கியவனிடம் உரிமையோடு கேட்க நம் கையில் எதுவும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடாதா?

ரூபாய் 50-க்கும், ரூ.500-க்கும், ரூ.5000-த்திற்கும் வாக்குரிமையை விற்றால் சொத்துரிமை மட்டுமில்லாமல் எல்லா உரிமைகளும் செத்தே போகும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர் (முழு உரை பின்னர்).

-  விடுதலை நாளேடு, 25.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக