புதன், 27 பிப்ரவரி, 2019

தஞ்சை சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

தி.மு.க.வின் பாதையை தீர்மானிப்பது பெரியார் திடலே திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தவே முடியாது.

தமிழர் தலைவர் ஆசிரியர் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டவேண்டும்


தஞ்சை சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்




தஞ்சாவூர், பிப்.25 திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது; தி.மு.க. செல்லவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடலே என்றும், தமிழர் தலை வர் ஆசிரியர் நீண்ட காலம் வாழ்ந்து வழிகாட்டவேண் டும் என்றும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முரசொலித்தார்.

தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (24.2.2019) நடைபெற்ற சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் கழகத்தினுடைய மாநில மாநாடாக அதிலும் குறிப்பாக சமுக நீதி மாநாடு என்ற தலைப்பில் நேற்றும் இன்றும் மிகுந்த எழுச்சியோடு ஏற்றத்தோடு உணர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மாநாட்டில் இரண்டாவது நாளாக நடைபெறக்கூடிய இந்த மாலை நேரத்தில் நானும் பங்கேற்கிற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேரத்தின் அருமைக் கருதி சுருக்கமாக உரையாற்றக்கூடிய வாய்ப்பினை நான் பெற்றிருக் கின்றேன். இந்த வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக் கூடிய மாநாட்டுக் குழுவைச் சார்ந்திருக்கக் கூடிய அத்துணை பேருக்கும், குறிப்பாக நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு - என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்பு கின்றேன்.

தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக் கின்றேன்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்று அடிக்கடி அல்ல; தொடர்ந்து எடுத்துச் சொல்வார்.

அதனைப் பின்பற்றித்தான் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் அழைத்தவுடனே, ஆசிரியர் அவர்கள் எந்தச் சூழ்நிலையில் எந்தப் பணிகள் இருந்தாலும் இந்த மாநாட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்று அன்பு அழைப்பாக அல்ல; அன்புக் கட்டளையாக எனக்கு வழங்கி அந்தக் கட்டளையை நானும் சிரமேல் ஏற்றுக் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன்.

தாய் என்றால் - உயிர் கொடுத்தவள்; உணர்வைக் கொடுத்தவள், தாய் என்றால் நம்மை வளர்த்தவள், ஏன் வழிகாட்டக் கூடியவள். ஆமாம் திராவிடர் கழகம் தான்! திராவிட உணர்வுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

திராவிடர் கழகம்தான் திராவிட இயக்கத்திற்கு உணர்வைக் கொடுத்திருக்கிறது, திராவிட உணர்வை வளர்த்தெடுத்து, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. நேற் றைக்கும் வழிகாட்டியது, இன்றைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, நாளைக்கும் அது தான் வழிகாட்டப் போகிறது.

ஆசிரியர் பிறந்த நாளில் நான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி!


கடந்த டிசம்பர் 2ஆம் நாள் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள். அந்த பிறந்த நாளிற்கு வாழ்த்துச் செய்தி சொல்ல, நான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன். அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. கலங் கரை விளக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தாய்க் கழகம் தான் திராவிடர் கழகம் என்பதை நான் அதில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

தி.மு.கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன். திரா விடர் கழகம் நடத்தியிருக்கும் எத்தனையோ நிகழ்ச்சி களுக்கு நான் வந்ததுண்டு. ஏன்; திராவிடர் கழக மாநாடுகளிலும் நான் பங்கேற்று உரையாற்றி யது உண்டு. ஆனால், இப்பொழுது, தி.மு.கழகத் தலைவராகப் பொறுப்பேற்று முதன் முதலில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றபோது பூரிப்படைகின்றேன். புளகாங்கித உணர்வோடு இந்த மேடையில் நின்று கொண்டிருக்கின்றேன்.

நம்முடைய ஆசிரியர் அழைத்தால் நிச்சயமாக அந்த அழைப்பை என்னால் தட்ட முடியாது, எப்போதும் வருவேன்! இப்போது மட்டுமல்ல; எப்போதும் வருவேன். எந்த நேரத்திலும் வருவேன், எந்தச் சூழ்நிலையிலும் வருவேன், எந்தக் காலக்கட்டத்திலும் வருவேன்.

அய்யா ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் அவர் களுடைய பெருந்தொண்டர், அய்யா ஆசிரியர் அவர் கள் தலைவர் கலைஞர் அவர்களுடைய உற்ற நண்பர். நான் இந்த மேடையில் நிற்கின்ற நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கின்றேன். என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.

சிறையிலிருந்து கொள்கை வீரனாக நான் வெளிவர ஆசிரியரே காரணம்!


தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி 76 ஜனவரி மாதம் 31ஆம் தேதி கலைக் கப்படுகின்றது. கலைக்கப்பட்டதற்குப் பின்னால், மிசா என்ற ஒரு கொடுமையான சட்டம் தமிழ்நாட்டில் பாய்கின்றது. அதையொட்டி, தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு சிறைச்சாலைகளில் மிசா கைதிகளாக அடைக்கப்படுகின்றார்கள். அப்போது சென்னை சிறைச் சாலையில் ஓராண்டு காலம் நானும் அடை பட்டிருந்தேன் என்று சொன்னால் - அடைபட்டு ஒரு கொள்கை வீரனாக சிறையிலிருந்து வெளி வந்தேன் என்று சொன்னால் - அதற்கு முழுக் காரணம் இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அய்யா ஆசிரியர் அவர்கள்தான். அதைத்தான் நினைத்துப் பார்க்கின்றேன். முதன் முதலில் சிறைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு மிசா சட்டத் தின் மூலம் தான் எனக்கு கிடைத்தது.



மாநாட்டில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, பேராசிரியர் காதர் மொகிதீன், இரா.முத்தரசன், பேராசிரியர் அருணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்தும், நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்தார்


அப்பொழுது கைது செய்யப்பட்டு இரவு 12 - 1 மணி அளவில் மயானத்திற்குள் சென்றால் எப்படி இருக்குமோ அதுபோல் என்னை அழைத்துச் சென்று அந்தச் சிறையில் இருக்கக்கூடிய கடைசிக் கொட்டடி 9ஆம் நம்பர் பிளாக் - நாங்கள் அடை படுவதற்கு முதல் நாள் வரையில் அந்த இடத்தில் அடைக்கப் பட்டிருந்தவர்கள் யார் என்று சொன்னால், தொழு நோய் இருக்கக்கூடிய கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பிளாக். ஒவ்வொரு அறையிலும் 9 பேர் 10 பேர் படுத்திருக்கின்றார்கள்.

கையை ஒரு பக்கம்கூட தூக்கிப் போட முடியாது. புரள முடியாது. அசந்து கூட காலை மடக்க முடியாது, அப்படிப்பட்ட அறையில் அனைவரும் படுத்திருக் கின்றார்கள்.

அந்த இருட்டில் ஒரு அறையைத் திறந்து என்னை உள்ளே செல்லச் சொன்னார்கள், நான் சென்ற போது என்னுடைய கால் தடுத்து இடறியது. அப்போது என்னைத் தடுத்த கால் நம்முடைய ஆசிரியருடைய கால்கள். உடனடியாக, என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு எப்படி இருக்கின்றாய். எப்பொழுது நீ கைது செய்யப்பட்டாய், என்ன நிலைமை வெளியில்? அவர் முதல் நாள் காலையிலேயே கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று விட்டார். நான் அடுத்த நாள் இரவு செல்லுகின்றேன். வெளியில் இருக்கக்கூடிய செய்திகளை யெல்லாம் கேட்டுவிட்டு தலைவர் எப்படி இருக்கின்றார் என்று எனக்கு தெம்பு கொடுத்து தைரியம் கொடுத்து அந்த ஓராண்டு காலம் முழுவதும் ஒரு கொள்கை வீரனாக என்னைப் பயிற்று வித்திருக்கக் கூடிய ஒரு ஆசிரியராக அய்யா அவர்கள் இருந்தார்கள்.

கடைசி நிமிடம் வரை பயணத்தை நிறுத்தாதவர் பெரியார்!


அன்றைக்கு என்னுடைய வயது 23. அய்யா ஆசிரியருடைய வயது 40. இன்றைக்கு அவருடைய வயது 86. அப்பொழுது எப்படிப் பார்த்தேனோ அதே ஆசிரியராக, மன்னிக்கவும் -அதே இளைஞராக - இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.


தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய உயிர் பிரிகின்ற கடைசி நிமிடம் வரையில் தன்னுடைய பயணத்தை அவர் நிறுத்தியது கிடையாது. சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த தலைவர் உலகத்தில் ஒருவர் உண்டென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் தான். வாழ்நாள் முழுவதும் பயணம் பயணம் தான். அவரிடத்தில் பலர் சென்று சொல்லுவார்கள் ஓய்வெடுக்கக் கூடாதா? என்று!


அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் என்ன பதில் சொல்லியிருக்கின்றார் என்று சொன்னால்,


நாதஸ்வரக் குழலாக இருந்தால் ஊதியாக வேண்டும்,


மத்தளமாக இருந்தால் அடிபட்டாக வேண்டும்,


மனிதனாக இருப்பவன் உழைத்தாக வேண்டும் என்பார்.


பெரியாரிடத்தில் பயிற்சி பெற்றவரல்லவா ஆசிரியர் அவர்கள். அப்படித்தான் ஆசிரியர் அவர்களும் தொடர்ந்து உழைத்துக் கொண்டி ருக்கின்றார். தலைவர் கலைஞர் உழைத்தார். இதோ இங்கு நின்று கொண்டிருக்கக் கூடிய நானும் உழைப்பதற்காக ஓரளவிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். காரணம் நம்முடைய சமுதாயம் மேம்படவேண்டும். தன்மானத்தோடு இருந்திடவேண்டும், சுயமரியாதை உணர்வு பெற்ற வராக இருந்திட வேண்டும். அதற்கு, திராவிடர் கழகத்தை விட்டால் நாதி கிடையாது, திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் நாதி கிடையாது.


இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் அறிஞர் அண்ணா!


`தி.க.,வும் தி.மு.க.,வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். இந்த இரண்டு இயக்கங்களும் இந்த இனத்தினுடைய காவல் தெய்வங்களாக, விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. இந்த இரண்டு கழகங்கள் இருக்கின்ற வரையில் எத்தனைக் காவிகள் வந்தாலும் சரி; அது எத்தனை மத அமைப்புகளைக் கூட்டிக்கொண்டு வந்தாலும் சரி; எத்தனை சாதி அமைப்புகளை கூட்டிக் கொண்டு வந்தாலும் சரி; திராவிடர் இயக்கத்தை வீழ்த்த எந்தக் கொம்பனாலும் முடியாது. அதற்கு சாட்சிதான் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி மாநாடு என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.

உலகில் எந்த சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் கிடைக்காத பெருமை தந்தை பெரியாருக்குக் கிடைத்தது. எந்தக் கொள்கைக்காக அவர் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினாரோ அந்தக் கொள்கைக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்தது என்று சொன்னால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திட மறுத்திட முடியாது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்து முக்கிய மான மூன்று தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார்கள்.

தந்தை பெரி யாரின் வாழ்நாளிலேயே சுயமரியாதைத் திருமணங்கள் அவர் நினைத்தது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அண்ணா முதலமைச்சராக இருந்து அதை சட்டமாக்கி தந்தார்கள். சீர்திருத் தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும்.

அதேபோல் 1972 தந்தை பெரியாருடைய மிகப்பெரிய கனவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற தீர்மானத்தை, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சட்டமாக்கித் தந்தார்கள்.

இன்னொரு குறை தந்தை பெரியாருக்கு நீண்ட நாட்களாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று. 1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்து 1968இல் அது நிறைவேற்றப்படுகின்ற நேரத்தில் சட்டமன்றத்தில் அண்ணா அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றி அதற்குப் பிறகு அதற்காக ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

இப்போது கலைவாணர் அரங்கமாக இருக்கக்கூடிய அரங்கம் அன்றைக்கு மாணவர் அரங்கம். அந்த அரங்கத்தில் தான் அந்த விழா நடைபெறுகின்றது. ஆனால், அண்ணா அவர்களால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வந்தார்.

உடல் நலிவுற்ற நிலையிலும் விழாவிற்கு வந்தவர் அண்ணா!


காரணம், அவர் உடல் நலிவுற்று கடுமையான வலி தாங்க முடியாத நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

அப்பொழுது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைத்த விழா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மருத்துவர்கள் போகக்கூடாது என்று தடுக்கின்றார்கள். வீட்டில் இருக்கக்கூடிய உற வினர்கள். அவரது குடும்பத்தைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள் போகக்கூடாது என்று, ஏன்; அவரைச் சுற்றி என்றைக்கும் இருக்கக்கூடிய கழகத் தம்பி மார்கள் அத்துணை பேரும் தடுத்தார்கள், முடியாது. நான் போய் தான் தீருவேன் என்று பிடிவாதமாக அத்துணை அறிவுரைகளையும் நிராகரித்துவிட்டு நேரடியாக விழாவிற்கு வருகின்றார். வந்து பேசுகின்ற போது சொல்லுகின்றார்.

இந்த விழாவிற்கு என்னை போகக் கூடாது என்று உடல் நலத்தைக் கருதி சொன்னார்கள். அதையும் மீறி வந்திருக்கின்றேன் என்று சொன்னால், தமிழ்நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் கிடைத்திருக்கக்கூடிய இந்த விழாவில் நான் பங்கேற்கவில்லை என்று சொன்னால் இந்த உடல் இருந்து என்ன பயன்? என்ற உணர்வோடு நான் வந்திருக் கின்றேன் என்று சொன்னார்.

தந்தை பெரியாரின் மனக்குறையாக இருந்த நம்முடைய தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயரும் சூட்டப்பட்டது. இந்த மாநாட்டிற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் சமுக நீதி மாநாடு என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள். சமுகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கக்கூடிய அநீதிகள் ஆக்கிரமிக்கும் வேளையில் உண்மையிலே, இந்த சமுகநீதி மாநாடு தேவை தான். கட்டாயம் தேவைதான். நடத்தப்பட வேண்டும் என்பது அவசியம் தான்.

மாநாடு அல்ல - போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம்!


இன்னும் சொன்னால், சமுக அநீதி என்பது மத்திய அரசாங்கத்தின் அநீதியாக, மாநில அரசாங்கத்தின் அநீதியாக மாறிவிட்ட காலத்தில் சமுக நீதியைக் காக்க மாநாடு அல்ல, பல போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியத் திற்கு நாம் வந்திருக்கின்றோம்.

மத்தியில் ஆளக்கூடிய மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய ஆட்சி இந்த சமுக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அரசாக அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குழி தோண்டிப் புதைப்பதைக்கூட நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக தந்திரமாக செய்து கொண்டிருக் கக்கூடிய நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக் கீடு வழங்கிட வேண்டும் என்பதுதான் சமுக நீதி. சமுக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் காலம்காலமாக யாரெல்லாம் புறக் கணிக்கப் பட்டார்களோ, பின் தங்கி இருக்கிறார்களோ அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் அதுதான். அந்த சாதனைக்குக் காரணமானவர் தான் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அன்றைக்கே ஜவஹர்லால் நேரு எதிர்த்தார்!


நாடாளுமன்றத்துக்கே போகாத தந்தை பெரியார் இந்த சாதனையை சாதித்துக் காட்டினார். அப்படிப்பட்ட அந்தச் சூழ்நிலையில் சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக என்று மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாக கொண்டு வர வேண்டும் என்று அன்றைக்கே சிலர் கோரிக்கை வைத்தார்கள். அன்றைக்கு பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் அதை திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்கள். முழுமனதோடு சொல்லியிருக்கின்றார், அதை ஏற்க முடியாது என்று. பொருளாதார அளவுகோல் என்பது மாறி விடும், இன்று ஏழையாக இருப்பவர் அடுத்த ஆண்டு பணக்காரராக மாறிவிடுகிறார். அது போல் இன்று பணக்காரராக இருப்பவர், அடுத்தாண்டு மாறிவிடக்கூடிய சூழ்நிலை. அதனால் பொருளாதார அளவுகோல் சரியாக வராது என்று பிரதமர் நேரு அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். பொருளாதார அளவு கோல் என்பது அன்றைக்கே கைவிடப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதமும் நடை பெற்றிருக்கின்றது, அதன்பிறகு வாக்கெடுப்பும் நடை பெற்றிருக்கின்றது, அந்த வாக்கெடுப்பில் பொருளாதார அளவு கோலுக்கு ஆதரவாக 5 எம்.பி.க்கள். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் 243 எம்.பி.க்கள். அப்படிப்பட்ட பொருளாதார அளவு கோலை தான் இப்போது நரேந்திரமோடி அவர்கள் கொண்டு வருகிறார். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்த சின்னப்ப ரெட்டி அவர்கள் ஒரு தீர்ப்பில் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். இடஒதுக்கீடு என்பது கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்குத் தானே தவிர, அது வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று அந்த நீதியரசர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

சமுகநீதிக் கொள்கையை குழிதோண்டிப் புதைப்பது ஆகும்!


சமுக நீதி என்ற பெயரால் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தருவது சமுக நீதிக் கொள்கையை குழி தோண்டிப் புதைப்பது ஆகும்.


பொருளாதார இட ஒதுக்கீடு என்ற பெயரால் மோடி கொண்டு வந்திருப்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல, சமுக நீதியை ஒழிக்கும் திட்டம். மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக் கூடியவர்கள் ஏழைகளா? 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் ஏழைகளா? இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால் வாக்குக்காக அரசியல் இலாபத்திற்காகத்தானே தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது.


அண்மையில் அய்ந்து மாநிலத் தேர்தலில் மோடி தோற்றுப் போனார். தோற்றுப்போன காரணத்தால் மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை எப்ப்படியாவது வாங்க வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுக்கக்கூடிய நிலையில் இன்றைக்கு இந்தத் தந்திரத்தை அவர் கையில் எடுத்திருக்கின்றார். அதனால் தான் இப்பொழுது பார்க்கின்றோம், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் பணம் கொடுக்கப்போகின்றேன் என்கிறார்.

6 ஆயிரத்தை ஒரே தவணையாக அல்ல; 3 தவணையாக 2000, 2000, 2000 என்று மூன்று தவணையாகப் பிரித்துக் கொடுக்கப்போகின்றேன் என்று அறிவித்திருக்கின்றார். நான் கேட்கின்றேன், இதே விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, எத்தனையோ போராட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; நம்முடைய தலைநகராக இருக்கக்கூடிய டில்லிக்கே சென்று போராடினார்களே, விதவிதமான போராட்டங்களை நடத்தினார்களே, சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார்கள். பிச்சையெடுத்து போராட்டம் நடத்தி னார்கள். கண்ணில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினார்கள். அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார்களே, வெட்கத்தை விட்டுச் சொல்லுகின்றேன், முழு நிர்வாணப் போராட்டம் நடத்தினார்களே, இதைவிட கேவலம் இந்தியாவிற்கு தேவையா? அவர்கள் வைத்த கோரிக்கை என்ன? கோரிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். பிரதமர் எங்களை அழைத்துப் பேசட்டும் என்றார்கள். பேசினாரா? அழைத்துப்பேசினார்களா? கிடையாது

விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கலைஞர் செய்த சாதனை!


இதே தலைவர் கலைஞர் அவர்கள் விவசாயப் பெருங்குடி மக்களுக்காக செய்த சாதனைகள் எத்த னையோ உண்டு. மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் இதே விவசாயப் பெருங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டம் நாராயணசாமி நாயுடு தலைமையில் போராட்டம் நடத்தினார்களே. என்ன போராட்டம் என்றால், மின்சாரக் கட்டணம் குறைக்க வேண்டும். எவ்வளவு? 1 பைசா. 1 பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லி போராடு கின்ற நேரத்தில் செவிமடுத்துக் கேட்டார்களா? அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். ஆனால், 89இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு யாரும் கோரிக்கை வைக்காத நேரத்தில் சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார்.

தி.மு.க. அடையாளம் காட்டுபவரே அடுத்த பிரதமர்!


அதேபோல், 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்ததும், ஏழாயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தாரே தலைவர் கலைஞர் அவர்கள்.

இப்படி சொன்னதை செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள், சொல்லாததையும் செய்தவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆனால், இன்றைக்கு ஓட்டுக்காக இந்த அறிவிப்பு கள். பூச்சி மருந்துகூட வாங்க உதவாது. நரேந்திர மோடி அவர்களால் இன்றைக்கு இந்தியா 15 ஆண்டுகாலம் பின்னோக்கிப் போயிருக்கிறது. மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் - வரப்போவது இல்லை - வருவதற்கான வாய்ப்பே இல்லை. விரைவிலே வரவிருக்கின்ற நாடாளு மன்றத் தேர்தலால் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வரப்போகிறது.

அப்படி வந்தால், தமிழ்நாட்டில் திராவிடமுன்னேற்றக் கழகம் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமர். ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமர் என்று ஏற்கெனவே அறிவித்து இருக்கிறேன், நிச்சயம் அந்த நிலை உருவாகப் போகிறது.

நாடாளுமன்றத்துக்கே வராத, உச்ச நீதி மன்றத்தையே மதிக்காத, ரிசர்வ் வங்கியை, சி.பி.அய். அதிகாரிகளை பந்தாடுகிற, மாநில அரசுகளை மதிக்காத, மாநில முதலமைச்சர் களை அடிமைகளாக நினைக்கிற நரேந்திர மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் - கம்யூனல் - கரப்ஷன் மூன்றையும் அடிப்படையாக வைத்து நடக்கும் அரசு தான் மோடியின் அரசு. அதாவது ஊழல், முதலீடுகள், பண்பாடு ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் குவிய வேண்டும் என்று மோடி நினைக்கிறார். மோடியுடன் சேர்ந்துள்ள அனைவரையும் நாம் எதிர்க்கிறோம். இந்த மதவாத சக்தி களை தேர்தல் களத்தில் முறியடிக்க பிரச்சாரக் களத்தில் திராவிடர் கழகம் கை கோர்க்க வேண்டும் என்று அழைக்கிறேன்.

இந்த மாநாட்டில் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கலாம் என கருதுகிறேன். வேறொன்றும் இல்லை. உங்கள் உடல்நலத்தை மனதில் வைத்துக்கொண்டு சுற்றுப் பயணத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சுற்றுப் பயணத்தை மேற்கொள்வது தான் உங்களுக்கு உற்சாகம், ஊக்கம். அது எங்களுக்கும் தெரியும். எங்களு டைய ஆசை தந்தை பெரியாரைப் போல் தலைவர் கலைஞரைப் போல நீங்கள் நீண்ட ஆண்டு காலம் வாழ வேண்டும். நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்து இந்த சமூகத்துக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும், வாதாட வேண்டும். வாழ்வியல் சிந்தனைகள் எழுதி வரும் அவருக்கு நான் இதனைச் சொல்லத்தேவையில்லை.

இன எதிரிகளை வீழ்த்திட வாரீர்! தயாராவீர்!


திருவாரூரில் 1948ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் கூட்டிய தென் மண்டல திராவிட மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். அவ்வளவு அழகாக உணர்ச்சி ததும்ப பேசியது மாநாட்டில் பதிவாகி இருக்கின்றது. அந்த மாநாட்டை நடத்திய போது தலைவர் கலைஞருக்கு வயது 24. ஆசிரியருக்கு வயது 14. இதோ ஆசிரியர் நடத்தும் மாநாட்டுக்கு கலைஞரின் மகனாக நான் வந்திருக்கின்றேன். இன எதிரிகளை வீழ்த்திட வாரீர்!

தயாராவீர் என்று சொல்லி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
-  விடுதலை நாளேடு, 25.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக