சனி, 31 மே, 2025

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று சிலர் கூறிவருகிறார்கள்.

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க ‘நீர்’ அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து;  மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு ‘10 அடி மானம்’ என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.ஹ

ஆண்டு கணக்கு பொதுவாக தற்போது கிறிஸ்து பிறப்பை (கிறிஸ்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பது வேறு செய்தி) மய்யமாக வைத்து கி.மு./ கி.பி. என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ‘சுறவம்’ (தை) மாதத்தில் முதல் நாள் தொடங்குகிறது. அதாவது சூரியன் தென் திசை பக்கமாக இருந்து வடதிசை பக்கமாக செல்லும் நிலையை மய்யமாக வைத்து ஆண்டு தொடங்குகிறது.

அப்போது ஆடு போன்ற ஒத்த வடிவம் உடைய விண்மீன் கூட்டம், வானில் தெரிய தொடங்குவதால் யாரு – ஆடு – ஆண்டு என்ற பெயரும் வந்தது. இந்த குறிகளை மய்யமாக வைத்து, தமிழ் ஆண்டு கணிக்கப்பட்டது.

இயந்திரங்களில், மோட்டார் இயங்கு திறனை, குதிரையின் இழு திறனை மய்யமாக வைத்து, ஒரு குதிரை திறன்; இரு குதிரை திறன்  (Horsepower) என்று கணிக்கப்பட்டது. இதே போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்த அளவுகள் சிலவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெப்பநிலையை கணிக்க செல்சியஸுக்கு (°c)  பதிலாக, பாரன் ஈட் (°F) முறை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கு பதிலாக மீட்டர். லிட்டருக்கு பதிலாக கிலோ. ஏ.எம்./ பி. எம். முறைக்கு பதிலாக கிரீன் விச் நேரம் ( GMT ). மயில் என்பதற்கு பதிலாக கிலோமீட்டர். குதிரை திறனுக்கு(HP) பதிலாக கிலோ வாட்சு (KW) என்று பலவற்றை குறிப்பிடலாம். கி.மு./ கி.பி. என்பதற்கு பதிலாக பொ.மு./ பொ.பி. என மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாறுதல் அனைத்துமே நமது பயன்பாட்டு முறைக்கு எளிதாகவும், ஏற்றால் போல் இருப்பதற்காகவும், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

செல்சியசில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், பாரன் ஈட்டில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது; ஒரே விடை தான் வரும். அளக்கும் முறையில் தான் வேறுபாடு, கிறிஸ்தவர்கள் கணித்துள்ள கி.மு. / கி.பி. ஆண்டு கணக்குப்படி (கிரிகோரியன் ஆண்டு) தந்தை பெரியார் பிறந்தது கி.பி. 1879 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆகும். தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி, தந்தை பெரியார் பிறந்தது தி.பி 1910, புரட்டாசி மாதம். இறந்தது கி.பி. 1973 டிசம்பர், தி.பி. 2004 மார்கழி என்று வரும்.

கிரிகோரியன் ஆண்டு படி கணக்கிட்டாலும் திருவள்ளுவர் ஆண்டு படி கணக்கிட்டாலும் தந்தை பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95 என்று தான் வரும். புத்தர், திருவள்ளுவருக்கு முன்னால் பிறந்திருந்தாலும்; திருவள்ளுவர் ஆண்டின்படி, புத்தர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தான், புவியின் சுழற்சியை கொண்டு, ஞாயிற்று (சூரிய) குடும்பத்தின் வயதை  கணக்கிடும் முறையும் ஆகும். அதாவது ‘ஒளி ஆண்டு’ என்கின்ற அளவை வைத்து கணக்கிடுகின்றனர். புவி  ஞாயிற்றை ({சூரியன்) சுற்றி வரும் காலம், ஓர் ஆண்டு ஆகும். இந்த ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு தொலைவு பயணிக்கிறதோ, அது ஓர் ‘ஒளி ஆண்டு தொலைவு’ ஆகும். இந்த பயணத் தொலைவு ஏறக்குறைய 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் (5.88 டிரில்லியன் மைல்) ஆகும்.

புவியின் சுழற்சி வேகம் மாறுபட்டால் ஒழிய, கணக்கில் பிசகு வராது. அப்பொழுதும் கணக்கில் மாற்றம் செய்து கணக்கை சரிப்படுத்தி விடலாம்.

காலத்தையும் அளவையும் நமக்காகத்தான் பயன்படுத்துகிறோம்! வேற்றுக் கோளில் உள்ளவர்களுக்குமா பயன்படுத்துகிறோம்! அப்படியே பார்த்தாலும் ஈடுகட்டிவிடலாம்,

நிலவின் ஈர்ப்பு விசை, புவியின் ஈர்ப்பு விசையை விட 6 மடங்கு குறைவு. ஒரு மனிதனின் எடை புவியில் 60 கிலோகிராம் என்றால், நிலவில் அவரின் எடை 60/6 = 10 கிலோகிராம் இருக்கும்.

இந்த வகையில் அனைத்தையும் கணித்து விடலாம். இருக்கும் அளவுகளே போதுமானவை தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக