வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

 ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!

8

நேர்காணல்: உடுமலை வடிவேல்

பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற வற்றாத நதி! அதன் இலக்கு, சுயமரியாதைக் கடல்! இது எல்லா மக்களுக்குமானது! அந்த சுயமரியாதை நதியில், ஜாதி, மத, பாலியல் பேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே கலந்துவிடுவார்கள்! இது நேரடியாக மழைநீர், மண்ணுக்கு வருவதைப் போன்றது. தேக்கங்களில் உபரி நீரைத் திறந்துவிடுவார்கள் அல்லவா? அதுவும் அந்த சுயமரியாதை நதிக்குத்தான் வந்துசேரும். இது பரம்பரையாக சுயமரியாதைக்காரர்களாக இருப்பவர்களின் வாரிசுகள்! அவர்களை கைப்பிடித்து அழைத்துவந்து, சுயமரியாதை நதியை அறிமுகம் செய்வித்து, கலக்கவிடுவார்கள்! இன்னும் சிலர், நதியின் ஓட்டத்தை தடுக்க முயன்று, முடியாமல் தாமும் நதியுடன் சேர்ந்து சுகமடைவர்! இவர்கள் எதிர் சித்தாந்தக்காரர்கள்! சரியான புரிதலில்லாத வைதீகக் குடும்பங்களில் பிறந்த ஓரிருவர் இயல்பாகவே சுயமரியாதை உணர்வு பெற்று, எங்கெங்கோ ஓடிவிட்டு பின்னர் தானாக அந்த சுயமரியாதை நதியைத் தேடி வந்து, ’செம்புலப் பெயல் நீர்போல’ தாமாகக் கலந்துவிடுவர்! இவர்கள் சுயமரியாதைச் சுயம்புகள்! அப்படிப்பட்ட ஆயிரமாயிரம் சுயமரியாதைச் சுயம்புகளில் பா.தெட்சிணாமூர்த்தி எனும் பா.தென்னரசும் ஒருவர். அவரை 2023 சனவரி 2 ஆம் நாள் பட்டாபிராமில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடினோம்.

அய்யா வணக்கம்.

வணக்கங்கய்யா.. 

கேள்வி: முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: அம்மா  பவுனம்மாள், பிறந்தது பட்டாளம் தேவராஜ் முதலி தெருவில். அப்பா பாலகிருஷ்ணன், அவர் பிறந்தது ஆம்பூர், அப்பா காங்கிரஸ்காரர். கூடப் பிறந்தவங்க மொத்தம் ஏழு பேரு. நான் அஞ்சாவது பிள்ளை. 1947 இல் ’உமராபாத்’தில் பிறந்தேன். இது அன்றைய வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரிலிருந்து 8 கி.மீ இருந்தது. அப்பாவுக்கு எழுதப் படிக்க தெரியாது. காமராசர் சொன்னார் என்று, எங்கப்பா 1965 இலேயே 5 ஆம் வகுப்பு வரையிலுமான தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். அதனாலேயே, இப்போதும் அந்தப் பகுதியில் ‘பள்ளிக்கூடத்தான் பேரன்’ என்றே எனக்கொரு பெயருண்டு. ஆனால், எனக்கு எட்டாம் வகுப்பு வரையில் படிக்கத்தான் வாய்ப்பு இருந்தது.

கேள்வி: ஓ... நீங்க எந்த வயதில் இயக்கத்திற்கு வந்தீர்கள்? 

பதில்: இயக்கத்திற்கு வருவதற்கு முன்பேயே இயக்க உணர்வு வந்துவிட்டதுங்கய்யா... எனக்கு 14 வயதிருக்கும்போதே தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஏன்னா? எங்கப்பா முஸ்லிம்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து, கைகட்டி நின்று எஜமான்னு சொல்லுவாரு. நான் அதை எதிர்த்துப் பேசுவேன். ’அவரும் மனிதர், நீங்களும் மனிதர், அவரை ஏன் எஜமான் என்கிறீர்கள்?’ என்பேன். இதற்காகவும் ”கோவிந்தா”ன்னு சொல்லச் சொல்லியும் கட்டிவைத்து அடிப்பாரு. ’முடியாது, ’கோவிந்தன்’ இருந்தால்தானே சொல்வதற்கு’ என்று, அந்த வயதிலேயே பதில் சொல்லியிருக்கேன். உமராபாத் என்ற இடத்திலிருக்கும் கைலாசகிரி மலைக்கு பறையர்களுக்கு ஒரு வழி? வசதி உள்ளவங்க போறதுக்கு ஒருவழி? ”ஏண்டா, ஆண்டவனைக் கும்பிடுவதற்கு இரண்டு வழியா?” என்று தகராறு செய்தேன். வேலூர் கலெக்டர் வந்தாரு! எனக்கு பதிலாக எங்க அப்பாவை கைது பண்ணிட்டாங்க. 

கேள்வி: ஓ, சரி, தந்தை பெரியாரை எப்போது சந்தித்தீர்கள்?

பதில்: 1956 அல்லது 1957 இல் என்று நினைக்கிறேன். ஆம்பூரிலிருந்து 10 கிலோ மீட்டரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசினார். அப்போது அங்கிருந்த பார்ப்பன வழக்குரைஞர் குப்புசாமி என்ற பார்ப்பான் வைத்ததுதான் சட்டம். அவர் சுகர்மில் இயக்குநர் வேற? அறங்காவலர் குழுத் தலைவரும் அவர்தான். ஒரு மணியகாரருக்கு இருக்கிற அதிகாரம் அந்த பாப்பானுக்கு இருந்தன. பள்ளிக்கூட சான்றிதழா? அவன்தான் கையெழுத்துப் போடணும். ஜாதி சான்றிதழா? அவன்தான் கையெழுத்து போடணும். அவன் பில் பாஸ் பண்ணாதான், விவசாயிக்கு கரும்புக்கு கட்டிங் கிடைக்கும். இதற்காக ஆறு மாசம் வரைகூட விவசாயிகள் காத்துக்கிடப்பார்கள். பள்ளிக்கூட வாத்தியாருக்கு இரண்டு இலவச வீடுகள் இருக்கும். பாப்பான்தான் வாத்தியாரு. அப்புறம்? வீடும் அவனுக்குத்தான். வெள்ளைக்காரன் காலத்திலேயே இவங்க இந்த இடத்தை புடிச்சிட்டாங்க. இப்படி பலப்பல கொடுமைகள். அவர்களால் ஊரே பாதிக்கப்பட்டிருந்தது. கவுண்டர்கள், கம்மாநாயுடு, நாலு வகை செட்டியாருங்க எல்லாரும் சேர்ந்து, அந்த பார்ப்பானைக் கண்டித்துத்தான் பாலூரில் கூட்டம் போடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில்தான் பெரியார் பேசுகிறார். 

அந்தக் காலனியில் தினமணி, கல்கண்டு படிக்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ’பெருமாள்’ என்றொருவர் இருந்தார். கையில் தடியுடனும், அதன் நுனியில் பொரி மூட்டையைக் கட்டிக்கொண்டு தோளில் போட்டுக் கொண்டு வருவார். அவர்தான் எனக்கு பெரியார், காமராசர், தமிழ்வாணன் ஆகியோரைப் பற்றி படிச்சுப் படிச்சு சொல்வார். அந்தப் பெருமாள்தான், என்னை பெரியார் பேசுகிற அந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அபோதுதான் பெரியாரை நான் நேரில் பார்த்தேன். அன்றைக்கு அய்யா பேசினது சரியாக நினைவு இல்லை. ஆனால், ’நான் இங்கே அறிவாளின்னு வரல! புத்திக் கூர்மை உள்ளவன்னு வரல! நான் சொன்னா நீங்க எல்லாத்தையும் கேட்டுக்கணும்னு நான் சொல்லல! என் மனசுக்கு பட்டதை நான் சொல்லப் போறேன். அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் உங்க விருப்பத்தை பொறுத்தது’ அப்பிடின்னு பேசுனதுதான் நினைவில் இருக்கு. 

கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகத்தில் சேரக்கூடிய வாய்ப்பு எப்போது வந்தது?

பதில்: 1962 இல் தொழில் செய்வதற்காக சென்னைக்கு வந்துட்டேன். அரசு உத்தியோகம் இல்லாததால் எனக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்னுட்டாங்க. வியாபாரத்தை அவர்கள் தொழிலாகவே கருதவில்லை. வேற வேலை பார்க்க வேண்டுமென்று எனக்கும் தோன்றவில்லை. ஆனால், வியாபாரத்தில்தான் கட்டுக் கட்டாக பணம் வந்தது. அப்போதுதான் எனக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டது. சத்தியவாணிமுத்து 1967 தேர்தலில் நின்றார்கள். அவங்களுக்கு நானும் வேலை செய்தேன். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ரொம்பத் தொல்லை கொடுக்கும். அப்போது சலூன் கடை, லாண்டரி கடைகள்தான் திமுகவுக்கு கிளைக் கழகம். அங்கேதான் பேச்சு! சந்திப்பு!

கேள்வி: ஓ...நீங்க முதலில் தி.மு.க.வில் இருந்தீர்களா?

பதில்: ஆமாங்கய்யா, 1968லேயே தி.மு.க. தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராக இருந்தேன். 1970 இல் தான், பட்டாளம் மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தை ஆசிரியர் துவக்கி வச்சாங்க. அந்த ஆண்டுதான் பகுத்தறிவாளர் கழகமும் தொடங்கப்பட்டது. அதற்குப்பிறகுதான் ஆசிரியர் தொடர்பு எனக்குக் கிடைத்தது. ஆசிரியர் என்னை தொழிற்சங்கத் தேர்தலில் நிற்கச் சொன்னார். நான், அழகிரி, வேலு, கருங்குழி கண்ணன், வெங்கடேசன், சண்முகம், குப்புராசு மச்சான் ஓட்டேரியில் இருக்கிற யமரோஸ் ஏழு பேருமே ’திராவிடர் கழக தொழிலாளர் அணி’யில் தேர்தலில் நின்று, வெற்றி பெற்றவர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஆசிரியரிடம், ’தொழிற்சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கிடைக்கிற சலுகை காரணமாக கேளிக்கை, பொழுதுபோக்குன்னு ஊர் சுத்திட்டு இருப்பாங்க. அதனால கழகத்துக்கு பயன்பட மாட்டாங்க’ என்று சொன்னேன். ஆசிரியரும் அதை ஆமோதித்தார். 

அந்த சமயத்தில்தான் சங்கராச்சாரியார் பின்னி மில்லுக்கு வந்தாரு. நான், ’ஓடிப்போன சங்கராச்சாரிக்கு இங்கென்ன வேலை? பண்டு, பலகாரத்தோட சோறு போட வருகிறாரா?’ என்று தட்டியில் எழுதி வச்சிட்டேன். அப்போது கேண்டீனில் உணவு அஞ்சு ரூபாயிலிருந்து, அறுபது ரூபாய்க்கு விலை ஏத்தியிருந்தாங்க. அதைக் கண்டித்துத்தான் ஆர்பாட்டம், பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. என்னைக் கைது பண்ணிட்டாங்க. அதுக்கப்புறமும் பூஜை பண்றதுக்கு சங்கராச்சாரியாரை கூட்டிட்டு உள்ளே வராங்க. எங்க பக்கம் நாலு பேர் சேர்ந்து பம்பை அடிச்சாங்க. சத்தம் பெருசா இருந்துச்சு. சங்கராச்சாரி போயிட்டாரு. பூஜையும் நடக்கவில்லை. 

கேள்வி: திராவிடர் கழகத்திற்கு எப்போது வந்தீர்கள்?

பதில்: திராவிடர் தொழிலாளர் கழகம், திராவிடர் கழகம் என்று பொறுப்புகளுக்கு மாறி, மாறி வந்துட்டேன். தொழிற்சங்கத்தில் இருந்து மங்களபுரம் திராவிடர் கழகத் தலைவர். பிறகு, வட சென்னைக்கு செயலாளர். மறுபடியும் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர். மறுபடியும் மங்களபுரம் கிளைக்கழகப் பொறுப்பு. அப்போது, பெரம்பூர் பாசறை பாலனின் அண்ணன் நெடுஞ்செழியனுக்குப்பிறகு, ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, ’தொழிலாளர் கழகத்தினுடைய தலைவரா இரு’ன்னு சொன்னாரு. அப்போதுதான் குணசீலன் ஓய்வுபெற்று வெளியே வந்தார். உடனே அவரைத் தலைவராகப் போட்டுட்டு, என்னைச் செயலாளராகப் போட்டாங்க. நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளிலேயே போவோம்; கூட்டம் போடுவோம். என்னை உடகார வைத்துக்கொண்டு குணசீலன் சைக்கிளை மிதிப்பாரு. சென்னையிலிருந்தும் ஆவடிக்கு வருவோம். செய்த பணிகளைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லுவோம். மாதவரத்தில் ’ஒருநாள் குடும்பவிழா!’ நடத்தினோம். அதில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்தினோம். ஆசிரியர் முழுமையாக உடனிருந்தார்.  

கேள்வி: உங்கள் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்க.

பதில்: 1975 இல் திருமணம் நடந்தது. இணையர் பெயர் உமாராணி. கொள்கையில் என்னைவிடவும் அவர் வேகமாக இருந்தார். ஜீவா, மீனா, சித்ரா ஆகியோர் மகள்கள். எல்லாரும் நன்றாக படித்திருக்கிறார்கள்; நன்றாக இருக்கிறார்கள். இணையர் உமாராணி, ’பெரியார் சமூகக் காப்பு அணித் தலைவர்’ உள்ளிட்ட, மகளிர் அணியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார்.

கேள்வி: பெரியார், மணியம்மையார் ஆகியோருடனான நேரடியான அனுபவம் பற்றி சொல்லுங்கள்

பதில்: பெரியாரிடம் நேரடியான அனுபவம் குறைவு. மணியம்மையார் கிட்ட சொல்ல முடியும். அதில் எப்போதும் நினைவிலிருப்பது அப்பல்லாம், காஞ்சிபுரம், திருத்தணி போன்ற வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு திடலில் வைத்து சோறு போடணும். அப்போதிருந்த எம்.ஆர்.ராதா மன்றம் பள்ளமாக இருக்கும். அதில் ஓரமாக உட்கார வைத்துதான் சோறு போடுவோம். அப்பொழுது கவிஞர் வீட்டில் இருந்து கரண்டி, கிண்ணம் வாங்கிட்டு வந்து, வந்தவங்களுக்கு சோறு போட்டு அனுப்புவோம். சமைக்கிறதுக்கு எப்படியோ மணியம்மையார் ஆளுங்களை வைத்து செஞ்சிடுவாங்க. பரிமாறுவது, இலையெடுப்பது எல்லாமே நாங்கதான். ரொம்ப தூரம் போற தோழர்கள், பட்டினியா போகக் கூடாது அப்படிங்கறது மணியம்மையாரோட கருத்து. 

(தொடரும்....)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

நேர்காணல்: உடுமலை வடிவேல்

8

கேள்வி: தலைமை எண்ணுவதைக்கூட நீங்கள் செயல்படுத்தியதை நான் கண்டுள்ளேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா? 

பதில்: ஒருவேளை பலராமன், குணசீலன், செம்பியம் ஏழுமலை போன்றவர்களிடமிருந்து அது வந்திருக்கலாம். முக்கியமாக காலம் சென்ற வடசென்னை மாவட்டத் தலைவராக இருந்த ப.கவுதமனின் தந்தை, பலராமன் அய்யாவைச் சொல்லலாம். பொறுப்புக்கு வருவதற்கு முன்பே பலராமன் அய்யா தொடங்கியிருந்த வடசென்னை பெரியார் மாளிகை கட்டட வேலையில் பங்கெடுத்துக் கொண்டேன். அதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்.காரங்க தொல்லை கொடுத்திருக்காங்க. இவரு, அவர்களை சிதறடிச்சிருக்காரு. பலராமன் அய்யா கொள்கைத் தெளிவும், துணிச்சலும் மிக்கவர். அவரும் சைக்கிளில்தான் வருவாரு. தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளுக்கு நல்ல,நல்ல ஆலோசனைகள் சொல்வாரு! சம்பாதிக்கிற காசை வீட்டில் கொடுக்கணும், சிக்கனமாக செல்வு செய்யணும், அப்பொழுதுதான் வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும், அப்படி வந்தாதான் இந்தக் கொள்கைக்காரங்க கெட்டுப்போகலேன்னு மக்களுக்குப் புரியும் அப்பிடிம்பாரு; தலைமையின் எண்ணப்படியே நடந்துக்குவாரு; ஏதாவது முக்கியமான செய்தி இருந்தாக்கூட, பெரியார் திடலில் உள்ள தலைவர் அறைக்குள்ளேகூட போகாமல் ஓரமா காத்துகிட்டு இருப்பாரு; ஆசிரியர் வெளியில் வந்து இவரைப் பார்த்து, ’என்னய்யா இங்க நிற்கறீங்க. உள்ளே வரவேண்டியதுதானே? என்று கடிந்து கேட்பாரு. இவரு, ‘உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நானும் உங்க நேரத்தை எடுத்துக்கணுமா?’ என்று சொல்லிவிட்டு, செய்தியைச் சொல்லிவிட்டு வந்துவிடுவார்! 

வடசென்னையில் ஈஸ்வரன் தெருவில்தான் அடிக்கடி கூட்டம் போடுவோம். அங்கிருக்கும் ஒரு பூங்காவில், ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சாகா நடத்துவாங்க. நம்மிடம், கணேசன், ராஜேந்திரன், கருத்தோவியன், ஏழுகிணறு கதிரவன், பெத்தநாயக்கம்பேட்டை ராஜேந்திரன், அவரு மகன் பிரபு, இந்தப் பக்கம் பட்டாளத்தில் ரவிச்சந்திரன், பட்டாளம் பன்னீர், தேவராஜ், சேகர் ஆகியோர் இருந்தார்கள். அதனால, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக நம்ம பிரச்சாரமும் ஜோரா இருந்தது. சிலம்பம் பயிற்சியை நாமளும் செஞ்சுகிட்டு இருந்தோம். பலராமன் இயக்கக் குடும்பத்து பெண்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாரு. அவருதான் இயக்கம் என்றால் என்ன? குடும்பம் என்றால் என்ன? என்பதை வாழ்ந்துகாட்டி எங்களுக்கு புரியவைத்தவர். 

கேள்வி: அதோடு முடிஞ்சு போச்சா பிரச்சினை? 

பதில்: 11.04.1985இல், ஆசிரியர், தோழர் க.பார்வதிக்கு, வடசென்னை ராயபுரத்தில் கூட்டம் நடத்துவதற்கு தேதி கொடுத்திருந்தாரு. மகளிர் நிதி திரட்டி அந்த நிகழ்ச்சியை நடத்துவாங்க. நம்ம ஒத்துழைப்பும் இருக்கும். அங்கு நமக்கும், இந்துமுன்னணிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பாண்டியன் என்ற பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது. பத்து பேரோடு ஒரு முட்டுசந்தில் ஆசிரியர் வேன் வரும்போது மடக்கிட்டானுங்க. கூட்டம் முடிஞ்சு நம்ம தோழர்கள் பெரும்பாலும் போயிட்டாங்க. ஆனாலும் சமாளிச்சோம். அவங்களும் கம்பு வச்சிருந்தாங்க, நாமும் ஏழெட்டு பேருடன் கம்புகளோடதான் இருந்தோம். தாக்குதல் நடத்துனாங்க. நாமும் திருப்பித் தாக்கினோம். அதுக்குள்ள காவலர்கள் வந்து, ஆசிரியர் வண்டியை பத்திரமாக அனுப்பிவச்சாங்க. பிறகு வழக்கு நடந்தது.  

கேள்வி: நெடிய இயக்க வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்கள்!

பதில்: மு.நீ.சிவராசன் அலுவலக அறையில் இருந்தேன். உள்ளிக்கோட்டை வை. கலை யரசன் அலுவலகப் பணியாக வெளியில் போயிருந்தார். வேகமாக நாலஞ்சு பேரு வந்தாங்க; ஆங்கிலப் பயிற்சி வகுப்புல சேரணும் அப்பிடின்னாங்க; நானும் சரியென்று படிவம் எடுத்து கொடுத்திட்டேன். நிரப்பி, அதற்குரிய காசும் கொடுத்தாங்க. கலையரசன் வந்தவுடன் அவரிடம் ஒப்படைத்தேன். விண்ணப்பங்களை பார்த்துவிட்டு, ”என்னங்கய்யா இப்படி பண்ணிட்டீங்க?” என்றார் அதிர்ச்சியுடன். நான், "என்னப்பா?” என்றேன். “பார்ப்பனர்களைச் சேர்த்திருக்கீங்களே” அப்பிடின்னாரு. “என்னடா இது? படிக்கிறேன்னு வந்தாங்க. கொடுத்திட்டேன்” அப்பிடின்னேன். அடுத்தநாள் மு.நீ.சிவராசன் வந்தாரு, “ஆசிரியர் என்ன சொல்லுவாருன்னு தெரியலயே”ன்னு ஆசிரியரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறாரு. அவரோ அமைதியாக, "எத்தனை மாணவர்கள்?” என்று கேட்டிருக்காரு; இவரு, "40ங்க” என்று சொல்லியிருக்காரு; "எத்தனை பேர் பார்ப்பனர்?”னு அவரு கேட்க, இவரு, "3 பேருங்க” என்றிருக்கிறார். ஆசிரியரோ, “விழுக்காட்டு அளவில் 3 பேரு இருக்கலாம், போய்யா” அப்பிடின்னுட்டார். அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது. 

100 கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிற காலம். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கூட்டம் நடத்துவோம். ஆசிரியர், ”உன்னால் முடியும்! நீ நடத்துய்யா” என்று என்னை ஊக்கப்படுத்தினார். எங்கெங்கு மக்கள் கூடுவார்கள் என்பதையும் ஆசிரியரே சொன்னார். வட சென்னை, தென்சென்னை, சாலிக்கிராமம் வரையிலும் போய் கூட்டம் போட்டோம். அடுத்து ஜமாலியால பேசும்போது சலசலப்பு வந்துச்சு. முதல்நாள் புரசைவாக்கத்தில் நடத்திட்டோம். ஆவடியில் மேடை போட்டும், மற்ற மாவட்டங்களில் மூன்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்தும் பிரச்சாரம் செஞ்சோம். வியாசர்பாடியில் அடுத்த கூட்டம். பெரம்பூர் கந்தன் ஒத்துழைப்போடு மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள, தணிகாச்சலம் ஏற்பாடு செய்திருந்தார். 

கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு, பெரியார் செல்வன், திருநாவுக்கரசு, லைலேண்ட் செல்வராஜ், தங்கமணி தம்பி இவங்க எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு போன பிறகு, எருக்கஞ்சேரி அன்பு கிட்ட மினிட்ஸ் புத்தகம், ஃபைல் எல்லாத்தையும் கொடுத்துட்டு, பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் வந்து, ரயில்வே லைன் தாண்டி வீட்டுக்குப் போக இருந்தேன். அங்கே தண்டவாளத்தில் நான்கு பேர் பட்டாக்கத்திகளுடன் படுத்துட்டு இருக்காங்க. ஒருவன் சட்டென்று பட்டாக் கத்தியை என் கழுத்தில் வச்சிட்டான்; கத்தியைப் புடிச்சு திருப்பி அவன் முகத்தை பார்க்கலாம் என்பதற்குள், விரல்களில் காயமாகி ரத்தம் கசியுது; சிரமத்துடன் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருத்தன் ஓடி வந்தான்; அவன் கையிலும் பட்டாக்கத்தி; நான் பின்னால் நகர்வதற்குள் வயிற்றில் சொருகிட்டான்; கத்தி முதுகுக்குப் பின்னால் வந்திடுச்சு; கழுத்தில் கத்தி வைத்தவனை கீழே தள்ளிவிட்டேன்; வயிற்றில் சொருகிய கத்தியுடனேயே, இந்தப்பக்கம் வந்தேன். ஆட்டோவுக்கு பயன்படுத்துகிற ரெக்சினை எடுத்து ரத்தம் வருகிற இடத்தில் வைத்து அழுத்திக் கொண்டேன். வெள்ளையன் தம்பி என்னைப் பார்த்துட்டான்; பிறகு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது செல்போன் கிடையாது. ஊத்தங்கரை பழனிச்சாமி வீட்டில்தான் போன் இருந்தது. அதில் அழைத்து ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனடியாக ஆசிரியர், மேலாளர் சீத்தாராமனுக்கு தகவல் கொடுத்து, பெரியார் சமூகக் காப்பு அணியைச் சேர்ந்த 10 பேரை எனக்கு பாதுகாப்புக்கு போடச்சொன்னார். உடல் நிலை சரியில்லாத செய்யாறு அருணாச்சலமும் வந்துட்டாரு. பஞ்சாட்சரம் அருகிலேயே இருந்தார். மதியத்திற்கு மேல்தான் உடம்பிலிருந்த கத்தியை வெளியில் எடுத்தாங்க. பகல் 2 மணிக்கு மேலதான் எனக்கு விழிப்பு வந்தது. நான் மயக்கத்தில் இருக்கும் போதே ஆசிரியர் ஏராளமான தோழர்களுடன் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆசிரியர், மறுநாளும் அம்மாவுடன் வந்து, “உடம்பைப் பார்த்துக்கொள்” என்றார். கே.எம்.சி.யிலிருந்து பெரியார் திடலுக்கு வந்தேன். அங்கு 20 நாட்களுக்கு மேலே கவிஞர் வீட்டில்தான் உணவு.

கேள்வி: அதற்குப் பிறகு உங்கள் இயக்கச் செயல்பாடு எப்படி இருந்தது?

பதில்: அதற்குப் பிறகுதான், வேகமாக வேலை செஞ்சேன். தங்கசாலை மணிக் கூண்டு பக்கத்தில் மாநில மாநாடு நடத்துகிற பொறுப்பை ஆசிரியர் என்னிடம் கொடுத்தார். அதே போல தங்கசாலையிலும் மத்தியிலிருந்த தலைவர்கள் வந்தாங்க. அப்போதெல்லாம் பதாகை போட வாய்ப்பில்லை. லாங்லாத் துணி எடுத்து, ஒரு லோடு லாரியில் மரம் எடுத்துவந்து, ரீப்பராக மாற்றி, துணியில் எழுதி 15, 20 அடி பேனர் விளம்பரம் செய்தோம். 

எனது பெயரையே ஆசிரியர்தான் மாற்றினார். அதாவது, பெங்களூரிலுள்ள அலசூர் ஏரிப் பக்கத்தில் இருக்கும் கண்டோன்மெண்ட் பகுதியில், கர்நாடகா திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த, தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில்தான் பா.தெட்சிணாமூர்த்தி என்ற சமஸ்கிருதப் பெயரை ஆசிரியர், பா.தென்னரசு என்ற தமிழ்ப் பெயராக மாற்றினார். 

கேள்வி: ஓ... சரி, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது, இன்றைக்கு உங்கள் உணர்வு எப்படியிருக்கிறது? 

பதில்: இயக்கத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆயிற்று! கடந்த ஜனவரியில் பெரியார் திடலில் ’சமூகநீதி பாதுகாப்புப் பயணம்’ செல்வதற்கான கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியரைப் பார்த்தபிறகு, கிட்டத்தட்ட எனது நோய்த்தன்மை குறைந்தது போலானது. பிப்ரவரி 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி கடலூர் வரை நடைபெறும் சுற்றுப்பயணம் குறித்து அவர் பேசியது எனது உற்சாகத்தை அதிகப் படுத்தியிருக்கிறது. ஆசிரியர், பெரியாரையும் மிஞ்சிவிட்டார். ”மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்றார் புரட்சிக்கவிஞர்! ஆசிரியர் ’தொழ’ வச்சுட்டார்! ஆசிரியர் ’பெரியார் உலகம்’ என்ற மிகப்பெரிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். ஆவடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரியார் உலகத்திற்கு ஏறக்குறைய ரூ.10 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம்! சென்னையைப் பொறுத்தவரையில் ஆவடி மாவட்டத்தில்தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம். கொடி மரங்கள் 67 இருக்கின்றன. 

இன்னும் இது அதிகமாகுமே தவிர குறையாது. இதற்கான அடித்தளமாக, ஆவடி பெரியார் மாளிகை 2007இல் தொடங்கப்பட்டு, சிறுகச் சிறுக சேகரித்து 2020இல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆவடி மனோகரன், ஆவடி கோ.முருகன், உடுமலை வடிவேல், வெ.கார்வேந்தன் உள்ளிட்ட ஏராளமான இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்களிப்போடும் கட்டப்பட்டு, மேலே கம்பீரமாக கழகக்கொடி பறக்கிறது. ஆசிரியரை அழைத்து துவக்க விழா நடத்தவேண்டும் என்பது நீண்ட காலத் திட்டம். 

அதற்குள் எனக்கு உடல்நிலை சரியில் லாமல், வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனது இணையருக்கும் உடல் நிலை சரியில்லை. எனது இயக்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, மிகுந்த மன நிறைவுடன்தான் இருக்கின்றேன் என்ற தென்னரசுவுக்கு 76 வயதுதான் என்றாலும், தனது உடல்நிலையை கருதி, ஈரோடு பொதுக் குழுவுக்கு சிலநாட்களுக்கு முன்பு, ஆசிரியருக்கு தன்னுடைய இயலாமையைச் சுட்டிக்காட்டி தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி, கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார். தலைவரும் கோரிக்கையை ஏற்று, அவரை மாவட்டக் காப்பாளராக அறிவித்திருக்கிறார். கடந்த 3-6-2023 அன்று பொறுப்புகள் மாற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திலும் தனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு, அடுத்த தலைமுறைக்கு நான் வழிகாட்டுவேன் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை எண்ணும்போது, மலைப்பாகத்தான் இருக்கிறது! அந்த உணர்வு பெரியாரில் தொடங்கி, அன்னை மணியம்மையார், ஆசிரியர் போன்ற தலைவர்களிடம் மட்டுமல்ல, ஒரு சாதாரண தொண்டரிடமும் இருப்பதுதான் அந்த மலைப்பை இன்னமும் அதிகப்படுத்துகிறது! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக