ஞாயிறு, 19 மே, 2019

சென்னை - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது



சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் திராவிடர்  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முதல் வகுப்பு எடுத்தார். அமைப்புச் செயலாளர் வீ. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ. கோபால், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர். (அன்னை மணியம்மையார் அரங்கம், 11.5.2019)
விடுதலை நாளேடு, 11.5.2019

சென்னை மண்டல பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், தமிழர் தலைவர் ஆசிரியர் பயிற்சியாளர்களின் கேள்விகளுக்கு அரிய பதில்கள்!

எங்கள் அறிவுக்கண்கள் இன்றுதான் திறந்தன என்று புதிய பயிற்சியாளர்கள் ஒப்புதல் வாக்குமூலம்!
சென்னை. மே, 13 சென்னை மண்டல பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி யாளர்களுக்கு பல்வேறு தகவல்களை கற்றுக்கொடுத்தார்.
சென்னையில், திராவிடர் கழகத்திலுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை மண்டலச் செய லாளர் தே.செ.கோபால், மற்றும் வடசென்னை திராவிடர் கழகத்தின் தலைவர் சு.குமாரதேவன் ஆகியோரின் முன் முயற்சியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி
11-.5.2019, 12.5.2019 இரண்டு நாட்களில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு அதன்படியே சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு மனிதகுல விரோத அமைப்பு
தமிழர் தலைவரின் படப்பிடிப்பு!
பயிற்சி முகாமின் இரண்டாம் நாளின் (12.5.2019) முதல் வகுப்பாக “ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவம், காவி பாசிசம்’’ என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாடம் நடத்தினார். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோற்றம், அதன் தத்துவம் ஆகியவற்றை அவருக்குரிய வகையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஆதாரங்களோடு, பிறவி பேதம், பாலின பேதம்தான் அதன் அடிநாதம் என்பதைக் குறிப்பிட்டார். அதற்கு நேர் எதிரான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பதுதான் திரா விடர் இயக்கம் என்பதைச் சேர்த்துச் சொன்னார். அத்தோடு பார்ப்பனியத்தின் உத்தியே சூழ்ச்சியும், தந்திரமும்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார். ஆர்.எஸ்.எஸ். எப்படி யெல்லாம் இயங்குகிறது. அதன் கிளை அமைப்புகள் என்னென்ன? அதனுடைய பணிகள் என்னென்ன? அவை சமுகத்திற்குச் செய்த கேடுகள் என்னென்ன? என்பதைப்பற்றி ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவகர்த்தா கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' என்ற புத்தகத்திலிருந்து எடுத்துரைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு மனிதகுல விரோதி என்பதை ஆழமாகப் புரிய வைத்தார். முதல் வகுப்பைத் தொடர்ந்து அடுத்த வகுப்பு 'கேள்வியும், கிளத்தலும்' என்ற தலைப்பில் நடைபெற்றது. பயிற்சியாளர்கள் பல்வேறு கேள்விகளைகேட்டு, தமிழர் தலைவரிடம் அதற்குரிய பதில்களைப் பெற்றனர். அப்போது புதிதாகக் கலந்து கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். குறித்து தங்கள் அறிவுக்கண்கள் இப்போதுதான் திறந்தன என்றும் அவர்களைப்பற்றி இதுநாள் வரையிலும் மேலோட்டமாகத்தான் அறிந் திருந்தோம் என்றும் எங்கள், அறியாமையை எண்ணி வெட்கப்படுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறி னர். பின்னர் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தின் முன்பு தமிழர் தலைவருடன் பயிற்சியாளர்கள் அனை வரும் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.
“சமுகநீதி போராட்ட
வரலாறும் வழிமுறையும்’’
மதிய உணவுக்குப்பிறகு, “தமிழர் தலைவரின் வாழ்வும் தொண்டும்’’ என்ற தலைப்பில் வடசென்னை மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான சு.குமார தேவன் கற்றுக்கொடுத்தார். அவர் தனது உரையை எம்.ஆர் ராதாவைப் போலெல்லாம் நடித்துக்காட்டி நகைச்சுவை கலந்து கருத்துக்களும் செறிவாக இருக் கும்படியாக பாடம் நடத்தி, ஆசிரியரின் தலைமைப் பண்பை தெளிவாகப் புரிய வைத்தார். அதைத் தொடர்ந்து “சமுகநீதி போராட்ட வரலாறும் வழி முறையும்’’ என்ற தலைப்பில் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி கற்றுக்கொடுத்தார். இவர் தனது வகுப்பை சரியான புள்ளிவிபரங்களை காட்சிகளாகவே காட்டி விளக்கிப் பேசினார். அவ்வப் போது கேள்விகள் கேட்டு உரிய பதில் சொன்னவர் களுக்கு ஒரு மை எழுதுகோல் பரிசளித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்த சமுகநீதியால் எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது என்றும், மற்ற மாநிலங்களின் நிலை என்ன என்பதையும் சொல்லி, திராவிடர் இயக்கத்தின் அருமை பெருமைகளை புரிய வைத்தார். அவரைத் தொடர்ந்து “பெண்ணுரிமைக் களத்தில் கருத்து, சட்டம், போராட்டம்’’ என்ற தலைப்பில் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி பாடம் நடத்தினார். அவர் லண்டனைச் சேர்ந்த மேரி உல்சன் கிராப்ட், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சைமன் டிபோவர் ஆகிய பெண்ணுரிமைப் போராளிகளின் புத்தகங்களைக் குறிப்பிட்டு, இந்து மதத்தில் இருக்கும் பாலின பேதத்தைச் சுட்டிக்காட்டி, “ஒரு பெண் ஆணுக்கு ஏன் அடிமையாக இருக்க வேண்டும்?’’ என்று கேட்டவர் தந்தை பெரியார்தான் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். பின்னர் பயிற்சி யாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பெரியார் ஓர் அறிமுகம்!
முதல் நாளில் (11.5.2019) கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர்கலி.பூங்குன்றன் “பெரியார் ஓர் அறி முகம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். இதில் தந்தை பெரியாரைப்பற்றிய பல்வேறு கோணங்களை படம் பிடித்துக் காட்டியதைப்போல பல்வேறு வர லாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பெரியார் என்ற தனிநபரின் அறிமுகமே பெரியாரியம் என்கின்ற தத்துவத்தின் அறிமுகமாக மலர்ந்தது. அதைத்தொடர்ந்து, பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் “நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கச் சாதனைகள்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். தலைப்புக்கேற்ற படி நீதிக்கட்சியில் தொடங்கி திராவிடர் கழகம் வரையிலான வரலாற்றைத் தொட்டுக் காட்டினார். மூன்றா வது வகுப்பாக “சுயமரியாதைச் சுடரொளிகள், ஜாதி ஒழிப்புப் போராளிகள்’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஓவியா பாடம் நடத்தினார். அதில் சுயமரியாதை என்ற சொல்லின் ஆளுமையைக் குறித்தும், அந்த இயக்கத்தில் இருந்த தன்னலமற்ற தோழர்களின் தியாகங்களைக் குறித்தும், அதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமுகமாற்றங்களைக் குறித்தும் பட்டிய லிட்டார். மதிய உணவுக்குப் பிறகு “கடவுள் மதம் மூடநம்பிக்கைள்’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் வகுப்பெடுத்தார். நாம் கடவுள், மதம் மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறோம் என்பதற்காக இல்லாமல் அறிவியல் கண்ணோட்டத்தோடு இந்த மூன்று தலைப்புகளையும் அணுகி, தர்க்க ரீதியாக ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து அவைகளை அம்பலப்படுத்தினார். அதைத்தொடர்ந்து பேராசிரியர் கருணானந்தம் “திராவிடரா? தமிழரா?’’ என்ற தலைப்பில், ஒரு புதிய கண்ணோட்டத்தில் பாடம் எடுத்தார். அதாவது, மொழிவழிப் போராட்டத்தின் மூலம் நமது உரிமைகள் மீட்கப்படவில்லை. இன வழிப்போராட்டங்களின் மூலம் மீட்கப்பட்டிருக் கின்றன என்பதை ஆதாரங்களுடன் எளிமையாகப் புரியும்படி எடுத்துரைத்தார். முதல்நாளின் இறுதி வகுப்பாக கழகத்துணைத் தலைவர் “பண்பாட்டுப் படையெடுப்பு’’ என்ற தலைப்பில் ஒட்டுமொத்தமாக மொழியில் ஊடுருவி மற்ற எல்லா தளங்களிலும் ஆரியம் ஊடுருவி இருப்பதையும், அதை அகற்ற பெரியாரியம்தான் ஒரே போர்க்கருவி என்பதையும் எடுத்துரைத்தார்.
புத்தகங்களை மொய்த்த பயிற்சியாளர்கள்!
இரண்டாம் நாள் (12.5.2019) வகுப்புக்கு முன்னதாக கொடுங்கையூரைச் சேர்ந்த தோழர் வீரா 'விடுதலை' ஆண்டு சந்தா ஒன்றும், பெரியார் பிஞ்சுகள் குருமூர்த்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையும், அ.கு.தமிழ்த்தென்றல் தனது 14 ஆவது பிறந்தநாளையொட்டி ரூபாய் 5000 நன்கொடை யையும் தமிழர் தலைவரிடம் அளித்து வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தனர். பயிற்சி முகாமில் பயிற்சியாளர் களுக்கு இயக்கப் புத்தகங்கள் 50% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது. அதன்படி மிகக்குறுகிய நேரத்தில் சுமார் 8,000 மதிப்புள்ள புத்தகங்கள் 50% தள்ளுபடி விலை யில் பயிற்சியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பாராட்டுக்குரிய ஒருங்கிணைப்புப் பணிகள்!
இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் முன்கூட்டியே திட்டமிட்டதும், செயல்வடிவம் கொடுப்பதற்கான பணிகளையும் துணைப்பொதுச் செயலாளர் க.இன்பக் கனி, அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் மிகச்சிறப்பாக ஒருங் கிணைத்து சிறப்பித்தனர். காலை, மாலை இரண்டு நேரமும் தேனீரும், மதிய உணவும் பயிற்சிப்பட்ட றையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் எழுதுகோலும், குறிப்புப் புத்தகமும் முன்னதாக வழங்கப்பட்டது. ஏறக்குறைய அனை வருமே குறிப்புகளை கவனமாக எழுதிக்கொண்டனர். தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்ததும், அதில் மகளிர் அதிகமாக கலந்து கொண்டதும் குறிப் பிடத்தக்கது. பெரியார் சுயமரியாதை திருமண நிலை யத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில், ஆதிலட்சுமி, உடுமலை வடிவேல், பவானி, க.அமுதரசன், வை. கலையரசன், புத்தக நிலையம் விமல்ராஜ், பெரியார் திடல் சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் துணைநின்றனர். தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் மாதம் ஒரு முறை இதுபோன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று கொள்கைப் புத்துணர்ச்சி பெற்றிருந்த பயிற்சியாளர்கள் ஆவலாக ஒருங்கிணைப் பாளர்களிடம் கோரிக்கை வைத்தபடியே விடை பெற்றனர்.
- விடுதலை நாளேடு, 13.5.2019


சென்னை மண்டல பெரியாரியல் பயிற்சிப் பட்டறை



தமிழர் தலைவருடன் குழுப்படம் (சென்னை பெரியார் திடல் & 12.5.2019)
 - விடுதலை நாளேடு, 14.5.2019
பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை

பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம் மையார் அரங்கில் 11.05.2019 மற்றும் 12.05.2019 ஆகிய தேதிகளில் நடந்த 'பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையில்' கலந்து கொண்ட நாள்களை வாழ்க்கைப் பயனாகக் கருதுகிறேன்.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்த இளைஞர்களும் சிறுவயது பெண் களும் உற்சாகத்துடன் பங்கெடுத்து, எங்கள் பகுதிக் குச் சென்ற பின் முடை நாற்றம் வீசும் மூடநம் பிக்கைகளை நீக்குவோம் என்று உறுதி ஏற்றதைப் பார்த்து வியந்து போனேன்.

கடவுள் மறுப்புப் பேசுவோரை 'தி.க.' என்று குறிப்பிடுவார்களே அந்த இயக்கத்தில் என்ன பெரிதாகச் சொல்லிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில்தான் பட்டறைக்குள் நுழைந்தேன்.  சமத்துவம் என்பதும் சமூகநீதி என்பதும் வேறு வேறானவை என்றும் உண்மையான சமூக நீதியையே தந்தை பெரியார் முன்னிறுத்தி இருக் கிறார் என்றும் புரிந்து கொண்டேன்.  தனக்கான அடிமைகள் அய்யாவின்பால் ஈர்க்கப்பட்டுச் சென்று விடக்கூடாது என்பதற்காகவே உயர் ஜாதியினர் என்று கருதிக் கொள்வோர் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் செய்த சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டேன்.

கேள்விகளுக்கு அப்பாலான ஓர் உலகத்திலிருந்து கேள்விகளுக்கான விடையோடு இருக்கும் உங்களைப்  போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  நாம் எல்லோரும் ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்த போது சில தோழர்கள் உங்கள் இருக்கைக்குப் பக்கத்தில் நின்றிருந்தார்கள்.  நின்றிருப்பவர்களுக்கு இருக்கை கொடுங்கள் என்று நீங்கள் சொன்னதை நினைவிலேயே வைத்திருக்கிறேன்.

இன்று என் பெயருக்குப் பின்னால் ஜாதியில்லை,   ஒரு பெண்ணாக முனைவர் பட்டம் பெறும் வரை படித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் பெரியார் என்ற வேர்.  இதை அறியாமல் இருந்த எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது இந்தப் பட்டறை.

பிறப்பால், அடையாளங்களால் நம்மைத் தாழ்வுபடுத்த நினைப்போர் முன்னிலையில் அந்த அடிமைத்தனங்களைக் களைந்துவிட்டுத் திராவிடர் களாய் ஒன்றுபடுவோம்!  சூழ்ச்சிகளை முறியடிப் போம்!

- முனைவர் சி. ஆர். மஞ்சுளா

 விடுதலை நாளேடு, 16.5.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக