‘தந்தை பெரியார் பிறந்த நாள்’ ஒரு மாதம் முழுவதும் ஒட்டுமொத்தமான தமிழினத்தின் பண்பாட்டுத் திருவிழா!
தமிழர் இல்லமெல்லாம் இனமான விழாவாகப் பூத்துக் குலுங்கட்டும்!
பட ஊர்வலம் – குடும்ப விருந்து – பேச்சுப் போட்டி – விளையாட்டுப் போட்டிகள் – ஓட்டம்/நடை (Run/walk) – நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்!
திட்டமிட்டுச் செயல்படுவீர் கழகத் தோழர்களே, இனவுணர்வாளர்களே!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் உற்சாகமூட்டும் தீர்மானம்!

சென்னை, செப்.3 தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 அன்று, தமிழர் இல்லமெல்லாம் உணர்ச்சியூட்டும் உற்சாக விழாவாக நடத்துவது என்றும், பட ஊர்வலம், குடும்ப விருந்து உள்பட பல்வேறு சிறப்புகளோடு ஒரு மாதம் முழுவதும் நடைபெற கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும், இன உணர்வாளர்களும் திட்டமிட்ட வகையில் காலக்கதிரவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவ்விவரம் வருமாறு:
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில், 3.9.2026 முற்பகல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
கீழ்க்கண்ட பெருமக்களின், கழகத் தோழர்களின் மறைவிற்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இச்செயற்குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நேபாளத்தில் இயற்கைப் பேரிடர் பெருவெள்ளத்தால் பரிதாபமாக மறைவுற்றவர்களுக்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பெரியார் பெருந்தொண்டர் பருத்தியூர் இராமலிங்கம் (வயது 83, மறைவு 5.7.2026), பெரியார் கொள்கையாளர் பட்டாபிராம் து.ஜெயபிரகாஷ் நாராயண் (வயது 81, மறைவு 26.6.2026), பெரியார் பெருந்தொண்டர் நாமக்கல் வை.நடராசன் (வயது 92), மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக மகளிரணித் தலைவர் மேகலா (வயது 52, மறைவு 21.7.2026), அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத் தலைவர் எஸ்.குமாரதாஸ் (வயது 67, மறைவு 28.7.2026), பெரியார் பெருந்தொண்டர் செம்பனூர் நடராஜன் (வயது 96, மறைவு 28.8.2026), பதிப்பாளர் கவிஞர் வைகறை வாணன் (வயது 77, மறைவு 1.8.2026), பேராசிரியர் முனைவர் நளினிதேவி அம்மையார் (வயது 82, மறைவு 29.8.2026), புஞ்சைப் புளியம்பட்டி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயமரியாதை வீரர் மறைந்த சாமிநாதன் அவர்களின் வாழ்விணையர் சம்பூர்ணம் அம்மையார் (வயது 87, மறைவு 1.9.2026), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற மேனாள் செயலாளர் குடியரசி அவர்களுடைய தந்தையாருமாகிய தோழர் கிட்டப்பா (மறைவு 2.9.2026) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை எழுச்சியூட்டும் நாளாக, நன்றியை வெளிப்படுத்தும் திருவிழாவாக நாடெங்கும் கொண்டாடுவது!
ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் உலகத் தலைவர் தந்தை பெரியார் ஆவார்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசியல், ஜாதி, மத, பாலின வேற்றுமைகளைக் கடந்து, அனைவருக்கும் அனைத்தும் என்ற சம உரிமை, சமூகநீதிக்காகப் பாடுபட்டு, தன் வாழ்நாளிலேயே தனது போராட்டத்துக்கான வெற்றியைக் கண்டு களித்த காலக் கதிரவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் என்பது தமிழ் இனத்தின் ஒட்டுமொத்தமான பண்பாட்டுத் திருவிழா நாளாகும். உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களுக்கும் அந்நாள் மகிழ்வூட்டும் பொன்னாளே!
அந்த வகையில் வரும் செப்டம்பர் 17, தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை நமது இனத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது – நன்றி காட்டும் திருநாளாக மட்டுமல்ல, இனி நாம் பெறவேண்டிய உரிமைகளுக்காக உறுதி எடுத்து உழைக்கும் உற்சாகத் திருவிழாவும் ஆகும்.
‘‘பெரியார் உலகம்’’ என்ற அழியா வரலாற்று மய்யத்தை உருவாக்க நம்மை நாமே செயல் வேகப்படுத்திக் கொள்ள உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளுமாகும்.
அய்யாவின் இந்த 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிலும் வெகு சிறப்பாக, மிகுந்த எழுச்சியாக, ஆக்கப்பூர்வமான வகையில் கொண்டாடுவது என்று இச்செயற்குழு புது உற்சாகத்தோடு தீர்மானிக்கிறது.
கழகத் தோழர்கள் புத்தாடை அணிந்து, கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, விழாவைக் கோலா கலமாகக் கொண்டாடவும்,
கீழ்க்கண்ட வகையில் கொள்கை விழாவாக அதனை திட்டமிட்டு நடத்திடவும் கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
4 செப்.17 காலை சென்னை, பெரியார் திடலில் பிறந்த நாள் விழா – மலர் வெளியீடு.
4 மாலை – சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.
4 தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் வீடுதோறும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுதல்.
4 செப்.17 அல்லது அவ்வாரத்தில் வாய்ப்பான நாள்க ளில் பெரியார் பட ஊர்வலம் – தமிழ்நாடெங்கும்.
4 கழகக் கொடியேற்றுதல், தந்தை பெரியார் சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, பொதுமக்கள் மத்தியில் விழா நடத்துதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல்.
4 செப்.12 – பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள்
4 செப்.20 – தமிழ்நாடு முழுவதும் ஓட்டம்/நடை (Run/walk for Periyar).
4 செப்.27 – குடும்ப விருந்து – பிள்ளைகளுக்கு விளையாட்டுப் போட்டி (சென்னையில், தமிழர் தலைவர் பங்கேற்பு)
4 அக்டோபர் முதல் வாரத்தில் ஆங்கிலம், பிற மொழி களில் பன்னாட்டு அளவிலும், பிற மாநிலங்களிலும் இருந்து பங்கேற்கும் வகையில் காணொலிக் கூட்டம் நடத்துதல்.
4 ‘பெரியார் கேட்கும் கேள்விகள்?’ புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஒரே நாளில், தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கம்.
இன்னோரன்ன வகையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், ஏற்றமுடன், எழுச்சியுடன் முன்கூட்டியே திட்டமிட்டு, தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
- விடுதலை நாளேடு, 4.9.26