ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம்(23.8.1996)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (270)

ஜுலை 1-15,2021


கி.வீரமணி

சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் 23.8.1996 அன்று கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 31சி சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றுள்ளது. 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. வேலியே பயிரை மேய்வது போல, சட்ட விரோதமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணம். அதனைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.

கழகத் தோழர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து “கொளுத்துவோம்! கொளுத்துவோம்! பார்ப்பன நீதிபதிகளின் பொம்மைகளைக் கொளுத்துவோம்!’’ காப்போம்! காப்போம்! வகுப்புரிமையைக் காப்போம்! ஆகிய முழக்கங்களுடன் தோழர்களை வாழ்த்தி  பெரியார் திடலிலிருந்து புறப்பட்டோம். காவல் துறையினர் தடுத்ததால், ஈ.வெ.கி.சம்பத் சாலையில் அந்த நீதிபதிகளின் கொடும்பாவிகளுக்கு தீ வைக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த தோழர்களுடன் உரையாற்றுகையில், “இன்றைக்கு வைக்கப்பட்ட தீ சமூக அநீதிக்கு வைக்கப்பட்ட தீயாகும். இந்தத் தீ நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியட்டும். பெரியார் சுடர் உங்கள் கையில் உள்ளது. (சமூக நீதியினை பாதுகாக்கவே இது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்ல).

நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ளட்டும். 1948இல் நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, “நான் இறந்தாலும் ஏனைய திராவிடர் கழகத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது  வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள்’’ எனக் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். சிறை வாசம் நமக்குப் புதியதல்ல. அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினோம். அய்யா ஆணைப்படி 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை புகுந்தோம். 16 உயிர்களை பலி கொடுத்தோம். அதற்கு முன்னம் எத்தனை எத்தனைப் போராட்டங்கள். நன்றியுள்ள தமிழ்ப் பெருமக்களே, ஒத்துழைப்பு நல்குங்கள். நாங்கள் எங்களுக்காக _ எங்கள் பிள்ளை குட்டிகளின் வாழ்வுக்காக அல்ல சிறையேகுவது! உங்களுக்காக உங்களின் சந்ததிக்காக’’ எனக் கூறினேன். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும்  சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டோம். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியோடு நடைபெற்றது. திருவாரூரில் அய்யாயிரம் பேர் பேரணியாகச் சென்று சமூகநீதிப் போராட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். சென்னையில் பட்டாளம் பன்னீர்செல்வம் _ கலைச்செல்வி ஆகியோரும் அவரது 3 வயது பெண் குழந்தை மணியம்மையும் கைது செய்யப்பட்டனர். குடும்பம் குடும்பமாக கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கைது செய்யப்பட்டது. போராட்டத்தின் ஆழத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருந்தது.

நீதிபதிகள் கொடும்பாவி எரிப்பில் கலந்து கொள்ளும் கழகத் தோழர்கள் மற்றும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

கைது செய்யப்பட்டு கழகத் தோழர்களுடன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருக்கையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக ஒரு நர்சை அழைத்து வந்து இரத்த அழுத்தம்  பரிசோதிக்கப்பட்டது. பின்பு மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு தேவை எனவும், மருத்துவமனையில் சேர்க்கலாம் என்றும் கூறினார்கள். அப்பொழுது அதனை ஏற்க மறுத்து, “நான் சிறைக்குள் சென்று அங்கு செத்தாலும் சாவேனே தவிர, சிறைக்குப் போகாமல் மருத்துவமனையில் சேரமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டேன்.

சென்னை 14ஆவது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு 14 நாள்கள் (செப்டம்பர் 6 வரை) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இடம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது. பின்பு, காவல்துறை வேனிலே இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு வேலூர் சிறையில் விடியற்காலை அடைக்கப்பட்டோம். (இது கலைஞர் முதல்வராக இருந்த தி.மு.க ஆட்சியில் தான் நடைபெற்றது.)

கொடும்பாவி எரிப்பினைத் தொடர்ந்து கைதாகும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கழகத் தொண்டர்களையும், என்னையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வை.கோபால்சாமி, சிங்கப்பூர் வாழ் சுயமரியாதை இயக்கத்தவர்கள், திருநாவுக்கரசு, தமிழ் உணர்வாளர்கள், அமெரிக்கா வாழ் தமிழ் அமைப்புகள், உலகமெங்கும் வாழும் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வாயிலாக எடுத்துக் கூறியிருந்தனர். மாணவர்கள் சில பகுதிகளில் வகுப்புகளைப் புறக்கணித்து கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதினான்கு நாள்கள் வேலூர் சிறை வாசத்தினைத் தொடர்ந்து 6.9.1996 அன்று பகல் 1:00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள 14ஆவது பெருநகரக் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டோம். வழி நெடுக சமூகநீதிக்கு ஆதரவாகவும், சமூகநீதிக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டுக் கொண்டே கழகத் தோழர்கள் இருந்தனர். என்னுடன் சேர்ந்து 175 பேர் ஆஜர்படுத்தப்பட்டு அரசுத் தரப்பில் காவலை நீட்டிக்க வற்புறுத்தாத காரணத்தால், அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட்டோம். கழக வழக்கறிஞர் பாளையங்கோட்டை சண்முகம், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, த.வீரசேகரன், அ.அருள்மொழி மற்றும் இரத்தினகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். சென்¬னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இரு தினங்களுக்குப் பிறகு கழகத் தோழர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.


கட்டுரையின் ஒரு பகுதி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக