திங்கள், 3 மார்ச், 2025

சிதம்பரம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 

விடுதலை நாளேடு
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத் திரும்பப் பெறுக!

சிதம்பரம் நடராஜன் கோவிலை இந்து அறநிலையச் சட்டத்தின்கீழ் கொண்டு வருக!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனே எடுத்திடுக!

அகத்தியர் ஆய்வு என்ற பெயரில் தமிழின்மீது பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து மாநாடு

பல வகைகளிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை!
பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குக!

சிதம்பரம், பிப்.15 தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு, பொதுத் துறைகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் சிதம்பரத்தில் இன்று (15.2.2025) காலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:
முன்மொழிந்தவர்: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
மறைந்த மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (வயது 92, மறைவு 26.12.2024), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணையமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (வயது 76, மறைவு 14.12.2024), திராவிட இயக்க எழுத்தாளர் ‘முரசொலி’ செல்வம் (வயது 82, மறைவு 10.10.2024), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி (வயது 72, மறைவு 12.9.2024), இலங்கை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், போராளி மாவை. சேனாதிராஜா (வயது 82, மறைவு 29.1.2025), மூத்த வழக்குரைஞர் கிருட்டினகிரி ஜி.எச்.லோகாபிராம் (வயது 91, மறைவு 26.9.2024), ‘தலித் வாய்ஸ்’ ஆசிரியர், சமூகநீதியாளர் பெங்களூரு வி.டி.ராஜசேகர் (வயது 93, மறைவு 20.11.2024), புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.இராமச்சந்திரன் (வயது 83, மறைவு 8.12.2024), பகுத்தறிவாளர், பெரும்புலவர் கி.சு.இளங்கோவன் (மறைவு 11.10.2024), மறைந்த பாவாணர் அவர்க ளின் மகன் தே.மணிமன்றவாணன் (வயது 78, 19.10.2024), கல்வியாளர், பகுத்தறிவாளர் சிந்தை மு.இராசேந்திரன் (மறைவு 25.12.2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு திராவிடர் கழகப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை (வயது 78, மறைவு 20.1.2025), தென்சென்னை மாவட்டக் கழக மேனாள் காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு (வயது 92, மறைவு 13.8.2024), சென்னை பெரியார் திடல் புத்தக நிலைய மேனாள் மேலாளர் த.க.நடராசன் (வயது 87, 22.8.2024), திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் வ.மாரியப்பன் (வயது 64, 3.2.2025), எழுத்தாளர், சுயமரியாதைச் சுடரொளி ஒளிச்செங்கோ (வயது 90, மறைவு 9.1.2025), திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் இரா.நாராயணன் (வயது 80, மறைவு 9.11.2024), பகுத்தறிவு ஆசிரியரணியின் மேனாள் மாநிலத் தலைவர் மெ.அன்பரசு (வயது 96, மறைவு 8.10.2024), தலைநகர் தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் புலவர் த.சுந்தரராசன் (மறைவு 11.10.2024), திருவாரூர் மாவட்டக் கழகக் காப்பாளர் பி.இரத்தினசாமி (வயது 72, மறைவு 15.10.2024), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பகுத்தறிவாளர் புதுச்சேரி வீ.கண்ணையன் (மறைவு 20.10.2024), திருவாரூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி (வயது 81, மறைவு 3.12.2024), லால்குடி முத்துச்செழியன் (வயது 93, மறைவு 27.12.2024), வடலூர் மூதாட்டியார் லீலாவதி நாராயணசாமி (வயது 95, மறைவு 27.1.2025),

சென்னை – அஸ்தினாபுரம் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் (மறைவு 5.8.2024), திருச்செந்தூர் – ஒன்றிய கழகத் தலைவர் நடுநாலு மூலைக்கிணறு ரெ.சேகர் (மறைவு 14.8.2024), வடுவூர் புல்லவராயன் குடிகாடு பெரியார் பெருந்தொண்டர் வ.பாலகிருஷ்னன் (வயது 82, மறைவு 7.8.2024), திருச்சி மாவட்ட மேனாள் இளைஞரணித் தலைவர் சு.இளங்கோவன் (வயது 65, மறைவு 25.8.2024), கழகப் பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85, மறைவு8.9.2024), அவினாசி நகர கழகச் செயலாளர் க.அங்கமுத்து (வயது 84, மறைவு 10.9.2024),
திருவிடைமருதூர் ஒன்றியம் – கல்யாணபுரம் கிளைக் கழகத் தலைவர் ச.ஜோதி (மறைவு 30.9.2024), மதுரை மாநகர் – கிளைக் கழகப் பொறுப்பாளர் பா.முருகேசன் (வயது 54, மறைவு 5.10.2024), புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி (வயது 90, மறைவு 7.10.2024), ‘பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை’ நிறுவனர் பெ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 59, மறைவு 13.10.2024), லால்குடி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொறியாளர் முருகேசன் (வயது 75, மறைவு 6.11.2024), பாபா நாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் ஏ.கைலாசம் (மறைவு 15.11.2024), பெத்த நாயக்கன்பாளையம் – கொட்டவாடி ஒன்றிய கழகச் செயலாளர் பெரியசாமி (வயது 90, மறைவு 18.11.2024),
காரைக்குடி கழக மாவட்டத் தோழர் வீ.பாண்டிய ராஜன் (வயது 89, மறைவு 29.11.2024), நாகம்மையார் இல்லம் பாலா (வயது 84, மறைவு 2.12.2024), மன்னார்குடி நகரக் கழக செயலாளர் மு.ராமதாஸ் (மறைவு 11.12.2024), கடலூர் பெரியார் படிப்பக நூலகர் தி.மாதவன் (வயது 67, மறைவு 17.12.2024), மதுரை – கோவிந்தகுடி கிளைக் கழகச் செயலாளர் நா.சந்திரசேகரன் (வயது 73, மறைவு 26.12.2024), வடுவூர், மேல்பாதி பெரியார் பெருந்தொண்டர் வி.டி.நடராஜன் (மறைவு 4.1.2025), தஞ்சை – வல்லம் இராஜேந்திரன் (வயது 57, மறைவு 9.1.2025), திண்டுக்கல் அங்கப்பன் (வயது 67, மறைவு 10.1.2025), கோவை – ரங்கநாயகி அம்மாள் (வயது 94, மறைவு 17.1.2025), செய்யாறு ப.க. தோழர் இரா.திருநாவுக்கரசு (வயது 42, மறைவு 12.1.2025), குடந்தை மாவட்டக் கழக மேனாள் துணைத் தலைவர் வலங்கை வே.கோவிந்தன் (வயது 83, மறைவு 17.1.2025), மயிலாடுதுறை ஒன்றிய கழகத் தலைவர் நிடூர் ஆர்.டி.வி.இளங்கோவன் (மறைவு 31.1.2025), கரூர் பரமத்தி ஒன்றியத் தலைவர் தமிழ் சொக்கன் (வயது 55, மறைவு 12.12.2024)
ஆகிய கழகத்தின் அரும்பெரும் தொண்டர்கள், செயல்வீரர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் ஈடில்லா இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து இப்பொதுக்குழு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: கோ.கருணாநிதி
(வெளியுறவுச் செயலாளர்)
வழிமொழிந்தவர்: மு.சென்னியப்பன்
(கோபி மாவட்டத் தலைவர்)
தீர்மானம் 2:
‘மருத்துவ உயர் கல்வியில், இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது’ என்ற
உச்ச நீதிமன்ற உத்தரவு,

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

மாநில உரிமையைப் பறிக்கும் செயல்
மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளில் ‘இருப்பி டத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு அனுமதிக்க தக்கதல்ல’ என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
மருத்துவத்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது. ஆனால், கல்வி பொது பட்டியலில் உள்ளது என்பதால்தான் ஒன்றிய அரசு தொடர்ந்து இதில் தலையிடுகிறது என்று கூறப்படுகிறது. ‘‘பொதுப் பட்டியல்’’ என்ற மொழியாக்கமே தவறான ஒன்று! ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent List) என்பதே சரியானது. அதனை மறந்து அல்லது மறுத்து செயல்படுவது சட்ட ரீதியாகவே தவறானதும், முறைகேடுமாகும். மருத்துவக் கல்வி இடங்களை மாநில அரசுதான் செலவு செய்து உருவாக்குகிறது. அதற்கான செலவு, கட்டமைப்பு, கருவிகள், மருந்துகள் அனைத்தும் அளிப்பது மாநில அரசுதான். அப்படியிருக்கும்போது அகில இந்திய ரீதியில் ஒதுக்கீடு என்பது எப்படி சரி யானதாக இருக்க முடியும் என்பதுதான் நமது முக்கிய கேள்வியாகும். ஏற்கெனவே, ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு 50 சதவீத இடங்களைத் ‘‘தாரை வார்த்து’’ விட்டு, மீதமுள்ள 50 சதவீத இடங்களைத் தன் விருப்பப்படி நிரப்பும் உரிமை மட்டும் தான் மாநிலத்திற்கு உள்ளது. (இதுவே அரசமைப்புச் சட்ட விதிக்குத் தரப்படும் தவறான விளக்கத்தின் விளைவு) இதில், தன் விருப்பப்படி, மாநில அரசு முடிவெடுக்கக் கூடாது என்பதும், இந்த இடங்களில் இந்திய அளவில் யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதும், முறைகேட்டின் உச்சக்கட்டம் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிறைய ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’’ மருத்துவமனைகள் உரு வாக்கப்பட்டு வருகின்றன. இதில்  பணியாற்ற, ‘சூப்பர் ஸ்பெஷலிஸ்டு’ டாக்டர்களை உருவாக்க வேண்டிய தேவை மாநில அரசுக்கு உள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இத்தனை சிறப்பு மருத்துவர்கள் இருந்தால்தான் அந்த மருத்து வத்திற்கு சிறப்பு உயர்கல்வி இடங்களை உருவாக்க முடியும் என விதிகள் இருக்கின்றன. இம்மாதிரி சூழலில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய ரீதியில் ஒதுக்கீடு செய்தால், அவர்கள் படித்துவிட்டு அவரவர் சொந்த மாநிலத்திற்கோ தனியார் மருத்துவமனைகளுக்கோ, வெளிநாடுகளுக்கோ போய்விடுவார்கள். இதனால், நம்முடைய மருத்துவமனையில் பணியாற்ற சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் பற்றாக்குறை நிலை ஏற்படும். ஆகவே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் குறைய ஆரம்பிக்கும். மாநில அரசு செலவு செய்தாலும் அவர்கள் எதையும் முடிவு செய்ய முடியாது என்று சொல்வது சரியல்ல. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாக, வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் 1200–க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம் உருவாகியிருக்கிறது. இந்த இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் சேரலாம் என்றால், தமிழ்நாடு உள்பட அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும். மிக விரைவில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக ‘‘சீராய்வு மனு’’ (Review Petition) தாக்கல் செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை இப்பொதுக்குழு வரவேற்கிறது.  தமிழ் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதிக்கும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக அனைத்து சமூக நீதி அமைப்புகளும் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றுபட்டுப் போராட முன்வரவேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: வீ.குமரேசன் (பொருளாளர்)
வழிமொழிந்தவர்: இரா.செந்தூர்பாண்டியன்
(திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)
தீர்மானம் 3:
மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத்
திரும்பப் பெறுக!
பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக, மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் குறித்த விதிகள் இடம் பெற்றுள்ளன. இது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலே! அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அத்துடன் நில்லாமல், இதேபோன்ற தீர்மானத்தை, டில்லி, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஜார்கண்ட், கருநாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக, நாம் ஒன்றுபட்டு நிற்பது மிகவும் முக்கியமும், அவசிய முமாகும். இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, மாநிலச் சட்டப்பேரவைகளில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என, அம்மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளது பாராட்டத்தகுந்த முயற்சி. இதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் யுஜிசியின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி, தற்போது கல்வி, ‘‘ஒத்திசைவுப் பட்டியலில்’’ உள்ளது. மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கல்வி தொடர்பான எந்த முடிவையும் ஒன்றிய அரசு எடுக்கக்கூடாது. அரசமைப்பு சட்டம் ஏழாம் அட்ட வணை  மாநிலப் பட்டியல் எண் 32-இன்படி, பல்க லைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் நிர்வாக ரீதியான கட்டளையை யு.ஜி.சி. பிறப்பிக்க முடியாது என்கிற நிலையில், யு.ஜி.சி.யின் வரைவு விதிகள், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை; அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: அன்பு.சித்தார்த்தன்
(சிதம்பரம் மாவட்ட துணைத் தலைவர்)
வழிமொழிந்தவர்: சிவ.வீரமணி
(புதுச்சேரி மாநில தலைவர்)
தீர்மானம் 4 :
சிதம்பரம் நடராஜர் கோவிலை
இந்து அறநிலையச் சட்டத்தின்கீழ்
தமிழ்நாடு அரசு கொண்டு வருக!
‘‘சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் உடைமையில்லை. 10 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல – பொதுக் கோவில்தான்’’ என்று நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. தீட்சிதர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மேல்முறையீடுகள் செய்து, குறிப்பிட்ட தீட்சிதர் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே கோவிலை வைத்துக் கொண்டுள்ளனர்.
சிதம்பரம் கோவிலுக்குச் சொந்தமானது 2000 ஏக்கராகும். ஆனால், பெரும்பாலானவற்றை கோவில் தீட்சிதர்கள் விற்று, பணத்தைச் சுருட்டியுள்ளனர்.

வழக்குகள்மூலம் தெரிய வருகிறது!
சரியான வரவு – செலவுக் கணக்குகள் கிடையாது. உண்டியல் வைப்பது கிடையாது. காணிக்கையாக அளிக்கப்படும் நகைகளை முறையாகக் கணக்கில் கொண்டு வராததால், அவை தீட்சதர்களின் தனிப்பட்ட சொத்தாகப் போய்விடுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் 2004 ஆம் ஆண்டி லிருந்து 2008 ஆம் ஆண்டுவரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது ஆண்டு வருமானமாக அறநிலையத் துறை காட்டிய கணக்கு
6 கோடி ரூபாய். பூஜைப் பொருட்கள் விற்கின்ற கடை கள் ஏலம்மூலம் கிடைத்த தொகை ரூ.15 லட்சம். இப்பொழுது தீட்சதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருமானம், கோவில் நிலங்கள்மூலம் கிடைக்கும் வருமானம் இவை எல்லாம் போக, இந்த ஆறு கோடி ரூபாயையும் சுருட்டுகிறார்கள்.
ஆயிரங்கால் மண்டபத்தைக் கல்யாணங்கள் நடத்த வாடகைக்கு விடுகிறார்கள்; குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணம்.
கோவிலின் நடைமுறைகள், செயல்பாடுகள், தீட்சி தர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடை கிறார்கள்.
இவற்றையெல்லாம் கணக்கிலும், கவனத்திலும் கொண்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று இப்பொழுதுக்குழு வற்புறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: த.சீ.இளந்திரையன்
(விருத்தாசலம் மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 4(ஆ):
தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிரானது!

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசல் பாதை வழியாகக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன் நுழைந்தார் என்று சொல்லி, அந்த வாயிலை அடைத்து வைத்துள்ளார்கள். இது அரசின் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்துக்கு எதிரான அப்பட்ட மான செயல்பாடே! ஆதலால், அந்த நுழைவு வாயிலைத் திறந்திட ஆவன செய்யுமாறு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தலைமையில் இயங்கும் தி.மு.க. அரசினை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இதற்கென விரைவில் ஒரு கண்டன ஆர்ப்பாட் டத்தினை, ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து நடத்துவதற்கான தேதியை அறிவிக்கவேண்டும் என்று கழகத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறது இப்பொதுக்குழு.
முன்மொழிந்தவர்: வே.செல்வம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
வழிமொழிந்தவர்: இரா.வீரபாண்டி
(திண்டுக்கல் மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 5 (அ):
பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக
மீண்டும் பண்டாரத்தார்களை
நியமனம் செய்க!
பழனி மலையில் போகர் என்ற சித்தரால் நவ பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பழனி முருகன் சிலை.
போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி ஆண்டவன் கோவிலில், சித்தர் போகரின் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னர் அவர் வழி வந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன.
திருமலை நாயக்க மன்னர் ஆட்சியில் படைத்தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்னும் பார்ப்பனர், பழனி முருகன் கோவிலுக்கு வந்தபோது, கோவிலில் பூசை செய்தவர்கள் சூத்திரர்கள் என்பதால், ‘‘அவர்களிடம் பிராமணனாகிய நான் பிரசாதம் வாங்க முடியாது’’ என்று கூறி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களைப் பூசை செய்யும் பணியிலிருந்து நீக்கி, கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து அய்ந்து பார்ப்ப னர்களைக் கொண்டு வந்து அர்ச்சகர்களாக நியமித்தான் என்று பழனி கோவில் தலப் புராணமே கூறுகிறது.
ஆகமங்கள்பற்றியும், மரபுகள்பற்றியும் உச்சநீதி மன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். அந்த வகையில், பார்க்கப் போனாலும், பழனியாண்டவர் கோவிலிலிருந்து அர்ச்சகப் பார்ப்பனர்களை வெளியேற்றி, போகர் வழிவந்த குடும்பத்தினரையே அர்ச்சகர்களாக அமர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
வழிமொழிந்தவர்: ப.முத்தையன்
(தாம்பரம் மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 5 (ஆ):
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை சட்டம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தின்படி, முதற்கட்டமாக அர்ச்சகர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டனர். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மற்ற மற்ற கோவில்களிலும் அர்ச்சகர்களை நியமனம் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: ம.சந்திரசேகரன்
(கோவை மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: கோ.கண்மணி
(பொதுக்குழு உறுப்பினர்)
தீர்மானம் 6:
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க
ஒன்றிய அரசு முன்வர வேண்டும்

2011 ஆம் ஆண்டுக்குப்பின் 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலம் கடத்திவரும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. சட்டப்படி ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வது ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், மேலும் காலந்தாழ்த்தாது, உடனடியாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச்செயலாளர்)
வழிமொழிந்தவர்: கே.சி.எழிலரசன்
(திருப்பத்தூர் மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 7:
சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது!
சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே வலியுறுத்தப்பட்டுள்ள ஒன்றாகும். ஆனால், பி.ஜே.பி. தலைமையிலான அரசு, ஒன்றி யத்தில் அமைந்தது முதல், சமூகநீதித் துறையில் இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதற அடிக்கும் வகையில், பொருளாதார அளவுகோல் என்ற ஒன்று திணிக்கப்பட்டுள்ளது.‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’’ (‘‘Socially, Educationally Backward’’) என்ற அணுகுமுறையே சட்டப்படி சரியானதாகும். இதில் பொருளாதார அளவுகோல் முதல் சட்டத் திருத்தம் வந்தபோதே நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினர் என்ற பெயரில் பெரிதும் பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்டு இருப்பதும், அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருப்பதும், உச்சநீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பைத் தனக்குத்தானே மறுத்திடும் முரண்பாடு என்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதார அளவுகோல் என்னும் சமூகநீதிக்கு எதிரான இட ஒதுக்கீட்டை அறவே நீக்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் Socially and Educationally என்ற அளவுகோலை அறவே நீக்கிவிட்டு, வெறும் பொருளாதார அடிப்படையில் Economically என்ற அளவுகோல்மூலம் EWS என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி மேற்கொள்ளப்படும் என்று இப்பொழுதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
முன்மொழிந்தவர்: ம.மு.சுப்பிரமணியம்
(கன்னியாகுமரி மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: பூ.சுந்தரம்
(பொதுக்குழு உறுப்பினர்)

தீர்மானம் 8:
பொதுத்துறை நிறுவனங்களைத்
தனியார் மயமாக்கும் சமூக அநீதி!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மய மாக்கும் திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காட்டிலிருந்து100 விழுக்காடு உயர்த்தி இருப்பது, எல்.அய்.சி. நிறுவ னத்தைத் தனியார் மயத்தை நோக்கி நகர்த்தும் முயற்சியாகும். இதற்கு எதிராக, ‘‘பொதுத்துறை நிறுவ னங்களைப் பாதுகாப்போம்; அதன் சமூகநீதியைப் பாதுகாப்போம்’’ என்ற முழக்கத்துடன் அனைவரும் போராட முன்வருமாறு இப்பொதுக்குழு ஒடுக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும்​ கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: க.சிந்தனைச்செல்வன்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
வழிமொழிந்தவர்: வை.சிதம்பரம்
(பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

தீர்மானம் 9:
தனியார்த் துறைகளிலும்
இட ஒதுக்கீடு தேவை!

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கு நாளும் அதிகரித்துவரும் நிலையில், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை உணர்ந்து, அதற்கான சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் இதனை வலியுறுத்தவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: பா.மணியம்மை
(மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்)
வழிமொழிந்தவர்: பா.ஆல்பர்ட்
(மாவட்டக் காப்பாளர், லால்குடி)

தீர்மானம் 10:
‘திராவிட மாடல்’ அரசுக்கு பாராட்டு!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களால் 31.1.2025 அன்று முன்வைக்கப்பட்ட 2024–2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வ றிக்கையில்,  தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 47 சதவீதம், காலணி உற்பத்தித் தொழில்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக அதிகரிப்பு என தமிழ்நாடு இந்திய அளவில் பெரும் சாதனை புரிந்துள்ளது” எனப் பாராட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் துறைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி நடைபெற்று வரும், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி​லான ‘திராவிட மாடல்’ அரசுக்கு இப்பொதுக்குழு தனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: சவு.சுரேஷ்
(திருவாரூர் மாவட்டச் செயலாளர்)
வழிமொழிந்தவர்: ஜெ.புபேஷ்குப்தா
(நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்)

தீர்மானம் 11:
நெல் கொள்முதலைத் தனியாருக்குத்
தாரை வார்க்கக் கூடாது!

விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல் கொள்முதலை அரசே மேற்கொண்டுவரும் நிலையில், இனி தனியாருக்கு அந்த உரிமையைத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அரசே நெல் கொள்முதலைத் தொடரவேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: ஊமை.ஜெயராமன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
வழிமொழிந்தவர்: சி.மூர்த்தி
(திருவண்ணாமலை மாவட்டத் தலைவர்)

தீர்மானம் 12:
அகத்தியர் ஆய்வு என்ற பெயரில் தமிழின்மீது தொடுக்கப்படும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு

மத்திய செம்மொழி நிறுவனம் என்னும் அமைப்பு – தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பயனுள்ள பணிகளில் ஈடுபடாமல், அந்த நிறுவனத்திற்குத் துணைத் தலைவராக தமிழுக்கும், ஆய்வுகளுக்கும் சற்றும் தொடர்பில்லாத ஒரு பார்ப்பன அம்மையார் நியமக்கப்பட்ட நிலையில், சமஸ்கிருதக் கலாச்சா ரத்தைத் தூக்கி நிறுத்தும் வகையில் அகத்தியர் என்ற புராணக் கதாபாத்திரத்தை முன்னிறுத்தும் வேலை யில், ஒன்றிய அரசின் பெரும் நிதி உதவியுடன் வேகமாக செயல்பட்டு வருவதை தமிழின மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது நமது கடமையாகும்.
தமிழ்நாட்டு மக்களும், தமிழினப் புலவர்களும், பேராசிரியர்களும் இதனைக் கவனத்தில் கொண்டு, ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்கும் பணியில் முனைய வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றை சமஸ்கிருத சார்பு, ஆரியத் தத்துவத்தின் சாரம் என்று திரிபுவாதம் செய்ய முனைவதையும் இப்பொழுதுக் குழு கண்டிக்கிறது.
செம்மொழி நிறுவனம் என்ற நிறுவனத்தின் வழியாகத் தமிழ்மீது தொடுக்கப்படும் செயல்பாடுகளை முறியடிக்கவும், தமிழர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும், ‘‘தமிழின்மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டினை’’ சென்னையில் வரும் ஏப்ரல் மாதம், தன்மானப் பெரும் புலவர்கள், ஆய்வாளர்கள், இலக்கியச் செம்மல்களை அழைத்து நடத்துவது என இப்பொதுக்குழு தீர்மா னிக்கிறது.
முன்மொழிந்தவர்: சாமி.திராவிடமணி
(மாவட்டக் காப்பாளர், காரைக்குடி)
வழிமொழிந்தவர்: த.சண்முகம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

தீர்மானம் 13:
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
ஒன்றிய அரசின் 2025-2026​ ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில, வழமைபோல், தமிழ்நாட் டிற்கென்று எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைகள் முதலிய வளர்ச்சித் திட்டங்கள், பணிகளுக்கான நிதி குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள மாநிலங்களுக்கும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மட்டுமே நிதி ஒதுக்கீடு என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. சமக்ரா சிக்‌ஷா திட்டத்திற்காக பள்ளிக் கல்வித் துறைக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியைத் தர மறுப்பதும், அதைப் பிற மாநிலங்களுக்கு மடை மாற்றுவதும், பி.எம்.சிறீ திட்டத்தின்படி மும்மொழித் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவதும் அதிகார வரம்பு மீறலே ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு, இப்பொதுக்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள இப்பொதுக்குழு ஒன்றிய அரசை வற்புறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: சொ.தண்டபாணி
(கடலூர் மாவட்டத் தலைவர்)
வழிமொழிந்தவர்: நாத்திக.பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர்)

தீர்மானம் 14:
பொதுத் துறை நிறுவனங்களில்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு
50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் செயல்படும் ஒன்றிய அரசின் நிறுவ னங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். NLC, BHEL, ONGC Power Grid etc, வங்கிகள், ரயில்வே போன்றவற்றில் வட இந்தியர்கள் ஆதிக்கம் நிரம்பியுள்ளது. வட இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையிலேயே இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
தற்போதைய NLC விளம்பர எண் 19/2024ன் படி (16.12.2024), 167 பொறியாளர்களை GATE மதிப்பெண்கள் மூலம் எடுக்கவிருக்கிறது. எம்.இ., எ.டெக். படிப்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கேட் நுழைவு தேர்வை, என்.எல்.சி. பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்துவது அவசியம் அற்றதாகும். இந்த அதீத முறையை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுப் பட்டதாரி இளைஞர்களுக்கும் பயன்படும் வகையில் தேர்ந்தெடுப்பு நடைமுறைகள் அமைய வேண்டும் என்று இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றோர்

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக