வெள்ளி, 24 நவம்பர், 2023

பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து நினைவுரை


பார்வதி மறைந்தாலும் பல பார்வதிகளை உருவாக்கியே மறைந்துள்ளார்
க.பார்வதி பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும்  
4

 சென்னை, நவ.24 - 
திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண்டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி (வயது 77)  கடந்த 8.11.2023 அன்றிரவு சென்னை தாழம்பூரிலுள்ள அவர் மகன் இல்லத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைவுற்றார். 

கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று பல்வேறு பொறுப்புகளை ஏற்று தொண்டாற்றியவர். கழகத்தில் மகளிர் தோழர்களை அரவணைத்து களப்பணிகளில் தீவிரமாக இறங்கிப் பணியாற்ற பெரிதும் ஊக்கமளித்ததுடன் தானும் அயராது பணியாற்றிய தொண்டறச் செம்மலாகத் திகழ்ந்தவர். அவர் மறைவைத் தொடர்ந்து அவரது விழிகள் சென்னை எழும்பூர் கண்மருத்துவமனை கண் வங்கிக்கு கொடையாக வழங்கப்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவரது உடல் கொடையாக அளிக்கப்பட்டது. முன்னதாக.  அவரது உடல் சென்னை பெரியார் திடலில் 9.11.2023 அன்று காலை வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு கழகக்கொடி போர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மரியாதை செலுத்தினர். கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெரியார் திடலில் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

படத்திறப்பு

11
சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (23.11.2023) மாலை  பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளர் கழகக் காப்பாளர் க.பார்வதி படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழர் தலைவர் நினைவுரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளர் கழகக் காப்பாளர் க.பார்வதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரையில் குறிப்பிட்டதாவது, பொதுவாக நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு வாருங்கள் என்பதுதான் வழக்கம். ஆனால், மறைவுற்ற பார்வதி அம்மையாரின்  உடல்நிலை கருதி கடைசி காலங்களில் அவரை வரவேண் டாம் என்று சொல்லும் நிலை இருந்தது. அப்படி அவர் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் உறுப்பினர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஏன் வருகிறீர்கள், ஓய்வாக இருங்கள் என்று கூறுவோம். புரட்சிக்கவிஞர் சொன்னதைப்போல் ‘கண்ணாடி பாத்திரத்தை கல்தரையில் வைத்தாற்போல்’ என்பது மாதிரி அவர் உடல்நிலை இருந்ததால் அப்படி கூறினோம். 

இயக்கத்தில் தொண்டராக, தோழராக, குடும்பப்பாசத் தோடு, குருதிக் குடும்பத்தைவிட கொள்கைக்குடும்பத்தோடு பாசத்தோடு இருப்பவர்.  இந்த இயக்கம் ஆடம்பரமில்லாத ஓர் இயக்கம். திண்ணையில் படுத்திருப்போம். குடும்ப விளக்கு-கூட்டுக் குடும்பம்- கொள்கைக்குடும்பமாக  உள்ளது இந்த இயக்கம்.

அன்னை மணியம்மையார் காலத்திலேயே கழகத்தில் மகளிரணியை உருவாக்கத்திட்டமிட்டிருந்த நிலையில், 1980 களில் மகளிரணியைத் தோற்றுவித்தபோது முதல் ஆளாக வந்தவர் அம்மையார் பார்வதி ஆவார்.

மாநாடுகளில் குடும்பம் குடும்பமாக சமமாக அமர்ந்து உண்பது பெரிய புரட்சி என்றால், அதைவிட பெண்களுக்கு தனி இடம் உண்டு என்று விளம்பரம் செய்யாத இயக்கம் இந்த இயக்கம். நாமெல்லாம் பிறக்காத காலத்திலேயே தந்தைபெரியரால் சுயமரியாதை இயக்கத்திலிருந்து இந்த புரட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இயக்கம் கொள்கை நெறியுடன், சமத்துவத்தை பேசுகின்ற தீவிர கொள்கை கொண்டது.

இயக்கத்தில் சிறு மாசு கூட ஏற்படாத இயக்கம். கட்டுப்பாட்டுக்கும், அடிமைத்தனத்துக்கு வேறுபாடு உண்டு. கட்டுப்பாடு என்பது போக்குவரத்தில் சிக்னலை மதித்து கட்டுப்படுவது போன்றது. அந்தக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து. இந்த இயக்கம் பகுத்தறிவு, மனித நேய இயக்கம், குறைசொல்ல முடியாத இயக்கம். 

உலகப்பார்வை என்றெல்லாம் பேசும் எவரும் நம் கிட்டேயே வரமுடியாது. வாழ்வதற்கான வழிகாட்டிக் கொள்கை நம் கொள்கை.

பிரச்சார எந்திரம் என்றால், அதில் மகளிரணி தனித் தன்மையானது. எண்ணிக்கை பெரிதல்ல, விஞ்ஞானிகள், டாக்டர்கள் குறைவாக இருப்பார்கள். ஆகவே எண்ணிக்கை பெரிதல்ல. மகளிரணி சார்பில் என்னுடைய பிறந்த நாள் மலர் வேலை என்று அப்பணியை கடைசி வரை செய்துள்ளார். 

விதவைக்கு பூச்சூட்டும் விழா என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழாவில் முதன்மையாராக இருந்தார். தாலி அகற்றும் நிகழ்விலும் அவர் செயல்பாடு தீவிரமானது. அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவார்.

பார்வதி அம்மையாரின் சமுதாயப்பணியைப் பாராட்டி நக்கீரன் சார்பில் சின்னக்குத்தூசி பெயரில் விருது அளிக்கப்பட்டபோது, அவ்விருதுக்கான பரிசுத் தொகையை ரூ 1லட்சத்தை அப்படியே இயக்கத்துக்கு அளிப்பதற்கு முன்வந்தார். அவர் ஒன்றும் மிகவும் வசதியான குடும்பத்தவர் இல்லை, என்றாலும் இயக்கத்துக்கு கொடுக்கவேண்டும் என்கிற அந்த எண்ணம் அவரிடம் இருந்தது. இயக்கத்தில் தொண்டாற்றிய பெருமக்களைப்போல் அவர் பெயரிலும் ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுரையில் குறிப்பிட்டார். 

கொள்கை வீரராக வாழ்ந்து மறைந்த அம்மையார் க.பார்வதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி  வரவேற்று உரையாற் றினார் . அவரது உரையில்:  பள்ளிக்காலம் தொட்டு அம்மை யார் பார்வதி அவர்களுக்கும் அவருக்கும் இடையே இருந்த தொடர்புகளை நினைவுப்படுத்தி, களப்பணியாற்ற தான்வந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் தன்னை வழிகாட்டி, இயக்க மகளிர் அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய விதத்தை பயிற்றுவித்தார் என்பதை எடுத்துக் கூறினார்.

அம்மையார் க.பார்வதி அவர்கள் பற்றிய அறிமுகவுரையை பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர், மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர்  வழக்குரைஞர் வீரமர்த்தினி  வழங்கினார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அம்மையார்   சிறை சென்ற நிகழ்வுகளையும், தான் மட்டும் போராட்டக் களங்களுக்கு வராமல் மற்ற மகளிர் தோழர்களையும் அவர் பக்குவப்படுத்தி அழைத்து வந்த விதத்தினைக் கூறினார். திராவிடர் கழக பேச்சாளர்களாக இன்று இருக்கக்கூடிய பெண்களை எவ்வாறு தனது சொந்த பிள்ளைகள் போல் அரவணைத்து ஊர் ஊராக கொள்கை பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதை விவரித்தார். குறிப்பாக தன்னையும் தனது மகள்களையும் எவ்வாறு அழைத்துச் சென்று பாதுகாத்தார் என்பதை எடுத்துக் கூறினார். கொள்கை உறுதியோடு இறுதி நாட்கள் வரை பணியாற்றிய அம்மையார் அவர்கள், கொள்கை வேறு குடும்பம் வேறு என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றார்.

அய்யா கருத்து இப்படித்தானே ; ஆசிரியர் அப்படித்தானே நம்மை வழிநடத்தினார்!

அனைவரும் கண்கலங்கும் வகையில் மிக உருக்கமான நினைவேந்தல் உரையை  டெய்சி மணியம்மை அவர்கள் வழங்கினார். தனது 12 வயதில் தந்தை பெரியாருடைய கொள்கைகளைப் பரப்புவதற்கு என் மகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அம்மையார் பார்வதி அவர்களிடம் தனது தந்தை தன்னை ஒப்படைத்தது தொடங்கி, பின் நாட்களில் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆகின்ற வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அம்மையார் பார்வதி அவர்கள் தன்னை எப்படி நெறிப்படுத்தினார் என்பதை பல்வேறு சம்பவங்களின் வாயிலாக எடுத்துக் கூறினார். அவரின் அணுகுமுறையால் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை கழகக் குடும்ப உறுப்பினர்களை சொந்த குடும்பம் போல் பாவிக்கக் கூடிய வகையில் தன்னை பக்குவப்படுத்திய விதத்தை விவரித்தார். 

பேருந்துகளில் செல்லும்போது தாயுள்ளத்தோடு அம்மையார் பார்வதி அவர்கள் காட்டிய அக்கறையைத் , தங்கள் மீது காட்டிய அன்பினை உருக்கமாக பதிவு செய்தார். எது நடந்தாலும், எந்த சூழலிலும் கொள்கையை விட்டு தராதவராக எப்படி வாழ்ந்து மறைந்தார் என்பதையும், அவரைப் போலவே மற்ற மகளிரையும் உருவாக்க நினைத்து அப்படி ஒருவராக தன்னை உயர்த்தி காட்டினார் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துக் கூறினார். 12 வயதில் திடலுக்கு அழைத்துவரப்பட்ட டெய்சி மணியம்மை பின் நாட்களில் மாநில மகளிர் பாசறை உருவானபோது அதன் மாநில செயலாளராக ஆசிரியரால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதுதான் அம்மையார் பார்வதி அவர்களுக்கு தான் செலுத்தும் நன்றியாக அமைந்தது என்றார். எந்த செயலாக இருந்தாலும், எந்த சூழலாக இருந்தாலும் மனம் துஞ்சாது அய்யா கருத்து இப்படித்தானே ; ஆசிரியர் அப்படித்தானே நம்மை வழிநடத்தினார் என்ற வார்த்தையை அவர் கூற தவறியது இல்லை என்றார். அவரை நினைக்கும் போதெல்லாம் "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை" என்ற குறள் தான் எப்போதும் நினைவுக்கு வரும் என்று கூறி நிறைவு செய்தார்.

பல தாய்களின் மடிகளை எங்களுக்கு கொடுத்த இயக்கம்!

இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதை தனது உரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் நினைவேந்தல் உரையாக வழங்கினார். அவரது உரையில்:  அமைதியாக வாழ்ந்து கொள்கை பிடிப்போடு மறைந்த அம்மையார் பார்வதி அவர்களுடைய மறைவு நமக்கெல்லாம் வெறுமையாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது என்றார். எப் படியெல்லாம் தங்களைப் போன்ற பெண்களை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை தனி புத்தகமாகவே எழுத முடியும் என்றார். திராவிடர் இயக்கத்திற்கென்று நிறையத் தனித்தன்மைகள் இருக்கிறது. குறிப்பாக தன்னைப்போல் யாரும் வந்து விடக்கூடாது என்று போட்டியாக அரசியலில் நினைக்கும் சமூகத்தில் திராவிடர் கழகத்தின் உண்மையான பற்றாளர்கள் நம்மை போல் இன்னும் இரண்டு பேர் உருவாக வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த உணர்வை அம்மையார் பார்வதி அவர்களிடம் காண முடிந்தது என்றார். 

ஒவ்வொரு குழந்தைகளையும் ஆசிரியர் இடத்திலும் கழக முன்னோடிகள் இடத்திலும் தங்களது பெற்றோர்கள் ஒப் படைத்தார்கள். அப்படி, தன்னை அம்மா பார்வதி அவர் களிடத்தில் ஒப்படைத்த போதும் சரி, ஆசிரியரிடம் ஒப் படைத்த போதும் அவர்கள் எல்லாம் எப்படி அரவணைத்து அழைத்துச் சென்றார்கள் என்பதை பல்வேறு நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டு கூறினார். இயக்கக் குடும்பங்கள் தான் இயக்கத்தின் வலிமையாக இருந்தது. அந்த இயக்கத்தின் வலிமையாக பல தாய்களின் மடிகளை எங்களுக்கு கொடுத்தது இந்த இயக்கம் தான் என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்தார். எல்லா சங்கடங்களையும் தாங்கிக்கொண்ட அம்மா பார்வதி அவர்கள் தனக்கு பின்னால் வரக்கூடியவர்களுக்கும் பொது வாழ்க் கைக்கு வந்த பிறகு தன்மானம் பார்க்கக் கூடாது என்ற அறிவுரையை கூறுவார் என்றார். 

மகளிர் அணியை வலுப்படுத்த ஊர் ஊராக அவர்கள் சென்ற விதத்தையும், ஒவ்வொரு கழக குடும்பப் பெண் களையும் கூட்டத்திற்கு அழைத்து வந்த பாங்கையும் விவரித்தார். இரண்டு முக்கிய நிகழ்வுகள் கழகத்தில் நடந்தது ஒன்று விதவைகளுக்கு பூச்சூட்டும் நிகழ்வு ; மற்றொன்று தாலி அகற்றும் நிகழ்வு. இந்த இரு பெரும் நிகழ்வுகளும் அனைவரும் எதிர்பார்க்காத வண்ணம் நடைபெற்றது. அதனை முன் நின்று நடத்தியவர் அம்மா பார்வதி அவர்கள் என்றார். இயக்கம், குடும்பம் இரண்டையும் அம்மா பார்வதி அவர்களின் இணையர் கணேசன் அவர்கள் வேறாக பார்த்தது கிடையாது. அவர் மறைந்த பிறகு நான்கு பிள்ளைகளோடு ஏன் இயக்கத்திற்கு வர வேண்டும் என்று அவர் விலகி இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் குடும்பத்தையும் செவ்வனே பார்த்துக்கொண்டு களப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர் அவர் என்றார். உடல் நலம் பாதிக்கப்பட்டு முதல் முறையாக  அம்மா பார்வதி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிகழ்வினை கூறி, அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய உறுதியோடு இருந்திருப்பார் என்றார். அம்மையார் பார்வதி அவர்களுக்கு இருந்த உள்ள உறுதி குறிப்பாக பகுத்தறிவா ளர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றார்.

தனித்தன்மை மிக்க திராவிடர் கழக மகளிர் அணி!

பெரியார் கொள்கை வழியில், ஆசிரியரின் தலைமையில் தடம் மாறாது பயணித்த அம்மையாரின் சிறப்பினை மட்டுமின்றி ஒவ்வொரு கழகத் தோழரும் எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையாக கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் நினைவேந்தல் உரை அமைந்தது. அவரது உரையில்: இது ஒரு உருக்கமான நிகழ்ச்சி என்றும், புதுவண்ணையில் முதல் முறையாக அம்மையார் பார்வதி அவர்கள் மேடையில் உரையாற்றிய காட்சி தனக்கு கண் முன்னால் வருகிறது என்றார். குடும்பத்திற்கும் இயக்கப் பணிக்கும் அவர் வருவதற்கு ஆணிவேராக அமைந்தது அவரது வாழ்விணையர் கணேசன் என்றார். 

அம்மையார் பார்வதி அவர்களின் கொள்கை உறுதிக்கு ஒரு சான்று இரண்டு மகன்களையும் கழகக் குடும்ப பெண்களுக்கு தான் திருமணம் என்ற ஏற்பாட்டினை செய்து வைத்தார். காரணம் கழகம் தான் அவரது குடும்பம் என்றார். குடும்பச் சுமையையும், ஏற்றுக்கொண்டு இயக்கப் பணியையும் செய்வதென்பது சாதாரண காரியம் அல்ல.  அவர் அப்படி செய்த அந்த செயல்களை அனைவரும் இன்றைக்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயக்கத்தையும் குடும்பத்தையும் சரியாக வழி நடத்துவதில் அம்மையார் பார்வதி அவர்கள் அனைவருக்கும் முன்னோடி, வழிகாட்டி என்றார். திராவிடர் கழக மகளிர் அணி சிறப்பாக செயல்படுவதற்கு அடித்தளமிட்டவர்கள் அம்மையார் பார்வதி, திருமகள் இறையன், ஏ.பி.ஜே மனோரஞ்சிதம், தங்கமணி போன்றவர்கள். 

ஒவ்வொருவரும் நம்முடைய கொள்கையை நினைத்து தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். எந்தவித ஆசாபாசங்களு மின்றி, எதையும் எதிர்பார்க்காமல், அனைத்தையும் துறந்து துறவிக்கு மேலானவர்களாக கருஞ்சட்டை தொண்டர்கள் வாழ்ந்தார்கள். கழக மகளிர் அணியைப் பார்த்து இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் "தனித்தன்மை மிக்க திராவிடர் கழக மகளிர் அணி தோழர்களே" என்று குறிப்பிட்டதை நினைவுப்படுத்தினார். எவ்வளவு ஆழமான வார்த்தைகள்! அவை நமது மகளிர் அணியின் செறிவான, நுட்பமான, தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகளால் தான் அவரால் அப்படி கூற முடிந்தது என்றார். 

ஆண்களே சமாளிப்பதற்கு, கடினமான சூழல்தான் இந்த கருஞ்சட்டையைப் போட்டுக் கொண்டு பயணிப்பது. அதே கருஞ்சட்டையை அணிந்துப் பெண்கள் வந்தார்கள் என்றால் அது சாதாரணமானதல்ல. திருச்சியில் இருந்து இந்தி எதிர்ப்பு கருஞ்சட்டை படை வந்தபோது வந்த நூறு ஆண்களோடு ஒரே ஒரு பெண்தான் இருந்தார். அவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இந்த வரலாறு வேறு இயக்கத்திற்கு இருக்குமா? என்றார்.:பெரியார் காலத்திலும், ஆசிரியர் காலத்திலும் ஏதாவது ஒரு கறை படிந்து சொல்லை இந்த இயக்கத்தைப் பார்த்து யாரேனும் சொல்ல முடியுமா? என்று அனைவரின் கர ஒலிக்கு மத்தியில் பதிவு செய்தார். 

நம் கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது!

பெரியாரியம் என்பது வாழ்க்கை நெறிமுறை ; பெரியார் என்பது வளர்ச்சிக்கான தடம் என்பதை அனைவரும் மற்றவர்களுக்கு காட்டும்படி வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் அம்மையார் பார்வதி என்றார். சட்டை எரிப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று அனைத்துப் போராட்டங்களிலும், கழக மகளிர் , கழக கருஞ்சட்டைத் தோழர்கள் எப்படி பங்கெடுத்தார்கள் என்பதை வரலாற்று குறிப்புகளோடு விவரித்தார். இறுதியாக 1964 இல் மன்னார்குடியில் நடைபெற்ற கலந்துரையாடலில் தந்தை பெரியார் கூறிய செய்தியை அனைவரும் தங்கள் வீட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதிலும் குறிப்பாக "நம் கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது" என்ற செய்தியைக் கூறி, இதுதான் ஒரு கழகத்தின் முக்கிய பலம் என்றார்.  பெரியார் சொன்னதை நினைவுப்படுத்தி, இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது . நமக்கு கிடைத்த தலைவர்கள் போல் வேறு எந்த இயக்கத்திற்கும் கிடைத்ததில்லை. மறைந்த பிறகும் தனது உடலை கொடையாக கொடுத்தவர் அம்மையார் பார்வதி அவர்கள்; மறைந்தும் வாழ்கிறார். மறைகின்ற வரை எந்தக் கொள்கை உணர்ச்சியோடு அவர் வாழ்ந்தாரோ அதே கொள்கையை அவருக்கு பின்னால் அவரது குடும்ப உறுப்பினர்கள் எடுத்து செல்வதுதான் அவருக்கு காட்டக்கூடிய நன்றியாக அமையும் என்றார்.

அம்மையார் பார்வதி வாழ்கிறார்; வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!

இறுதியில் நிகழ்வேந்தல் உரையும், கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் உரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார்.  அம்மையார் பார்வதி வாழ்கிறார்; வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு பார்வதி மறைந்தாலும் பல பார்வதிகளை உருவாக்கி இருக்கிறார். அவரது இழப்பு சாதாரணமான இழப்பு அல்ல. அனைவரும் ஆறுதல் பெற வேண்டும் என்பதற்காக நிகழ்வு நடைபெறுகிறது. சில பேர் களத்திற்கு வராவிட்டாலும் அவர்கள் இருப்பதே நமக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும். அப்படி அமைந்தவர் அம்மையார் பார்வதி என்றும், கடைசியாக தான் பார்த்தது அவரை இந்த அரங்கில் தான் என்று அம்மையார் பார்வதி அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி, ஒவ்வொரு கழக மகளிரும் எப்படி இருக்க வேண்டும் ; ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும் எந்த அளவு உறுதியோடு நடைபோட வேண்டும் என்பதை பல்வேறு செய்திகளோடு, வரலாற்று குறிப்புகளோடு ஆசிரியர் பதிவு செய்தார். நம் மகளிர் அணி தனித்தன்மையானது. 

என்றென்றைக்கும் எடுத்துக்காட்டாக அம்மையார் பார்வதி இருப்பார்கள். திடலில் அவரது பெயரில் ஏதேனும் ஒரு இடம் அமையும் என்று ஆசிரியர் தனது நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டார். தந்தை பெரியாருக்கு பிறகு கழகத்தை வழிநடத்தி, ஒவ்வொரு குடும்பங்களின் தலைவராக ஆசிரியர் எந்த அளவிற்கு நம்மை பக்குவப்படுத்துகிறார் என்ற வியப்பிலும் நன்றி பெருக்கோடும் அனைவரும் அமர்ந்திருந்தனர். 

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் அம்மையார் பார்வதி அவர்களின் மூத்த மகன் மணிமாறன் நன்றி கூறினார். தனது தந்தையை மணந்த பிறகு அதுவரையில் பக்தியோடு இருந்த தனது தாயார் பார்வதி அவர்கள் எப்படி பகுத்தறிவுவாதியாக மாறினார் என்பதை எடுத்துக் கூறி, பெரியார் பணியே எம் பணி என்று வாழ்ந்தவர் தனது தாயார் என்றும், அவர் தொண்டு செய்வதற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி கூறினார்.

பங்கேற்றவர்கள்

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மோகனா வீரமணி, பிரச்சாரச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி,துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பெரியார் நூலக வாசர் வட்டத் தலைவர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, டெய்சி மணியம்மை, சி.வெற்றி செல்வி, தஞ்சை கலைச்செல்வி, பெரியார்செல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், குடியாத்தம் தேன்மொழி, தங்க.தனலட்சுமி, மகளிரணி இறைவி, உத்ரா, பண்பொளி, மாட்சி, பூவை செல்வி, வி.வளர்மதி, உமா செல்வராஜ், மு.பவானி, த.மரகதமணி,மோகனப்ரியா, முகப்பேர் செல்வி, சுமதி, வெண்ணிலா உள்ளிட்ட மகளிர் தோழர்கள் ஏராளமானவர்கள் நெகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால்,வழக்குரைஞர் சி.அமர்சிங், புலவர் பா.வீரமணி,  பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், மாவட்டத் தலைவர்கள் தாம்பரம் ப.முத்தையன், தென்சென்னை இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புசெல்வன், கோ.வீ.ராகவன், பெரியார்மாணாக்கன், உடுமலை வடிவேல், முகப்பேர் முரளி, செல்வராசு, கொடுங்கையூர் கோ.தங்கமணி, செங்கை சுந்தரம், சி.காமராஜ் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள்,  பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த பார்வதி அவர்களின் மகன்கள் க.மணிமாறன்-இந்திராதேவி, க.செல்வமணி-அறிவுச்சுடர், மகள் க.மேகலா, கவுதமன், மருமகன் சின்னதுரை மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

12

பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி,அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர்களின் பெயர்த்தி ம.அனிச்சம், பல் மருத்துவர், சிறு கவிதை ஒன்று  வாசித்தார்

பார்வதி அம்மையாரின் பேத்தி 
எழுதிய கவிதை
பார்வதி அம்மையாரே
உம் கவிதையை நீரே இயற்றினீரே
8.3.1946இல்
இவ்வுலகில் முதன் முறையாக உம் பாதம் பதித்தீரே
உமக்கென நான்கு செல்வங்களுடன்
ஒரு சமுதாயம் உருவாக்கினீரே
திராவிடர் கழக தமிழர் சங்கத்தில்
உம் பெயர் பதித்தீரே
8.11.2023இல்
உம் கல்லறையில் பெரியார் பெருந்தொண்டர்
வீரத் தமிழச்சி என்ற பெயரை நீரே பொறித்தீரே
வாழ்க நீ பாட்டி - பேரப் பிள்ளைகள்
பின் தொடர்வோம்!
பெரியார் பெருந்தொண்டர்
க. பார்வதி அவர்களின் பெயர்த்தி
ம.அனிச்சம், பல் மருத்துவர்
நேற்று (23.11.2023) நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி நினைவேந்தல் நிகழ்ச்சியில்..
ம.அனிச்சம், பல் மருத்துவர் தனது பிறந்த நாள் (22.11.2023) மகிழ்வாக 'விடுதலை' சந்தா ரூ.3000த்தை  கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக