செவ்வாய், 23 மார்ச், 2021

ஐநாவிடம் அளிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து

ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து _ தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அய்.நா.வின் மனித உரிமைக் கமிஷனுக்கு அனுப்ப கழகம் திட்டமிட்டு, சென்னை மாநகரத்தில் 20 நாள்களாக 170 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை கழக இளைஞரணியினர் நடத்தி கையொப்பங்களைப் பெற்றனர். அப்படிப் பெறப்பட்ட பத்து லட்சம் கையொப்பங்களை கழக பொதுச் செயலாளர் என்னும் முறையில் என்னிடம் ஒப்படைக்க பொதுக் கூட்டத்திற்கு புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு காவல் துறையினர் ‘வினாயகர் சிலைகள்’ வைத்திருப்பதாகக் கூறி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 31.8.1995 அன்று திட்டமிட்ட இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டு, காரியத்தில் இறங்கினோம். பெரியார் திடலுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் உணர்ச்சியோடு திரண்டனர். வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பொதுக்கூட்டத்திற்கு கழகத் தோழர்களின் அணிவகுப்போடு தலைமை ஏற்று, “தந்தை பெரியார் வாழ்க! கருத்துரிமையை பறிக்காதே! மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் தடையா? என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. அப்போது போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்படியே சாலையில் அமர்ந்தோம். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. அப்போது தோழர்களிடம் உரையாற்றுகையில், “ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு கோடி கையொப்பங்களைப் பெற்று, அய்.நா.மனித உரிமைக் குழுவுக்கு அனுப்ப நாம் திட்டமிட்டு புதுப்பேட்டையில் நிறைவு விழா கூட்டத்திற்கு காவல் அனுமதி தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. புதுப்பேட்டை பகுதி என்றாலே _ அது இந்து முன்னணிக்கே குத்தகைக்கு விடப்பட்டு அவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்தது போல் காவல்துறை நடந்துகொள்வது எதனால்?

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து  தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தி கைதாகும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

இந்த ஆட்சியில் உள்துறை செயலாளராக ஒரு பார்ப்பனர், தலைமைச் செயலாளராக ஒரு பார்ப்பனர், சென்னை மாநகர காவல்துறை அதிகாரியாக ஒரு மலையாளி. இப்படி தமிழர் அல்லாதவர்களை காவல் துறையில் நியமித்துக் கொண்டு வருகிறார்கள். காவல் துறையில் உள்ள தமிழர் அதிகாரிகள் நாதியற்றுப் போய்விட்டார்கள் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? இது முடிவானதல்ல, இதுதான் துவக்கம். மீண்டும் சட்டப் போராட்டம் செய்து வென்று இதே இடத்தில் இந்த தடை செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தை நடத்துவோம்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். 200க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் என்னோடு கைது செய்யப்பட்டு, இரவு 10:00 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 1-15.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக