வெள்ளி, 22 செப்டம்பர், 2017

யுகத்துக்கு ஒரு தலைவர்தான் தோன்றுவார் அவர்தான் தந்தை பெரியார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முழக்கம்



சென்னை, செப். 20- யுகத்துக்கு ஒரு தலைவர் தோன்றுவார், அவர்தான் தந்தை பெரியார் என்று முழக்கமிட்டார்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
17.9.2017 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பெருமதிப் பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண் ணன் அன்புராஜ் அவர்களே, எனக்கு முன்னர், தந்தை பெரியார் அவர்களின் அருமை பெருமைகளை மிக எளிய தமிழில் நம்மிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றி அமர்ந் திருக்கின்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் சுப.வீ.அவர்களே,
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக் கின்ற திராவிடர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்களே, திரளாகக் கூடியிருக்கின்ற அய்யா பெரியார் அவர்களின் பெருந்தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உங்களிடையே உரையாற்றக் கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் காணிக்கையாக்குகிறேன்.
இன்னும் நான்கு நாள்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கின்ற மாநில சுயாட்சி மாநாடு தொடர்பான பணிகளில் நான் ஈடுபடவேண்டிய ஒரு நெருக்கடி.
பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், தமிழர் தலைவர் அவர்களோடு நான் பேசவேண்டும்
இன்றைக்கு கட்சியின் மிக முக்கியமான முன்னணி பொறுப்பாளர் மதுரையைச் சார்ந்த தோழர் கண்ணதாசன் அவர்களின் தாயார் இறந்துவிட்டார். நான் வந்தே தீர வேண்டும் மதுரைக்கு என்று தோழர்கள் எல்லாம் வற் புறுத்தியும்கூட, இன்றைக்குப் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், தமிழர் தலைவர் அவர்களோடு நான் பேசவேண்டும்; தயைகூர்ந்து பொறுத்துக் கொள்ளுங் கள், படத் திறப்பு நிகழ்விற்கு வருகிறேன் என்று அந்தத் தோழரை சமாதானப்படுத்திவிட்டு, நான் இந்த நிகழ்வில் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள், இன் றைக்கு உலகத் தலைவராகப் பரிணமித்திருக்கிறார்; நம் கைகளில் தவழும் பிறந்த நாள் மலர், அதைக் கட்டியம் கூறுகிறது.
அண்மையில், தமிழர் தலைவர் அவர்களும், மேடையில் அமர்ந்திருக்கின்ற அத்துணைத் தோழர்களும் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்தார்கள்.
பகுத்தறிவு சிந்தனையாளர்களும், சுயமரியாதைச் சுடர்களும் பங்கேற்ற ஒருங்கிணைத்த மாநாடு
அய்ரோப்பாவில் இருக்கின்ற ஒரு முக்கியமான நாடு ஜெர்மன். தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை மாநாடு அங்கே நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து நாம் ஆட் களைக் கொண்டு போய் அங்கே அமர வைத்து அந்த மாநாட்டை நடத்தவில்லை. ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர் களும், ஜெர்மன் நாட்டின் தாய்மொழியான டோச் மொழி யைப் பேசக்கூடியவர்களும், உலக நாடுகளில் வாழுகின்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களும், சுயமரியாதைச் சுடர்களும் பங்கேற்று ஒருங்கிணைத்த மாநாடு, அந்த மாநாடு.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை  உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்றார் பாரதிதாசன்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று அவர் சொன்னது, எவ்வளவுப் பொருத்தமாக, சரியாக இன்றைக்கு இருக்கிறது என்பதை, ஜெர்மனியில் நடைபெற்ற அந்த மாநாடு உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்றவர்கள் மட்டும்தான், பெரியா ரைப் பின்பற்றுவார்கள்; பெரியாரின் கொள்கைகளைப் பேசுவார்கள்; பெரியாரைப் போற்றுவார்கள் என்றில்லாமல், உலகமெங்கும் யாரெல்லாம் பகுத்தறிவு நம்பிக்கைக் கொண் டிருக்கிறார்களோ, சுயமரியாதையில் நம்பிக்கைக் கொண்டி ருக்கிறார்களோ, அறிவியல் பூர்வமாக சிந்திக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் தலைவர் தந்தை பெரியார் என் பதுதான் இன்றைக்கு நடைமுறையில் நாம் கண்டுவருகிற எதார்த்தமான உண்மை.
தந்தை பெரியாரை இன்றைக்கு 
உலகு தொழுகிறது
ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தால், அந்தக் கட்சித் தொண்டர்கள் மட்டும்தான் போற்றுவார்கள். ஆனால், ஒரு கோட்பாட்டுக்குத் தலைவராக இருந்தால், உலகமே போற்றும். அதுதான் கட்சித் தலைவருக்கும், கோட்பாட்டுத் தலைவருக் கும் உள்ள வேறுபாடு.
திருமாவளவன் ஒரு கட்சித் தலைவர். ஆனால், தந்தை பெரியார் ஒரு கோட்பாட்டுத் தலைவர் - ஒரு தத்துவத்தின் தலைவர். ஆகவே, கோட்பாடு என்பது மானுடத்திற்குப் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு என்று அதை சுருக்க முடியாது. அதனால்தான், தந்தை பெரியாரை இன்றைக்கு உலகு தொழுகிறது.
மனக்குகையில் சிறுத்தை எழும்
எனக்கு இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பாரதிதாசனுடைய வரிகளில், மனக்குகையில் சிறுத்தை எழும் என்று சொல்லியிருக்கிறார். பெரும்பாலும், உயரத்தைப்பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம், சிங்கம், புலி என்றுதான் சொல்வார் கள். நம்முடைய அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்கூட, புலிகள் என்றுதான் இயக்கத்திற்குப் பெயர் சூட்டினார். இங்கு பெரும்பாலான ஜாதியவாதிகள் எல்லாம் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவதற்கு, சிங்கத்தைத்தான் அடையா ளப்படுத்துகிறார்கள். சிங்கத்தைப்பற்றியும், புலியைப்பற்றியும் சிந்திக்காமல், பாரதிதாசன் அவர்கள், மனக்குகையில் சிறுத்தை எழும் என்று சொல்லியிருக்கிறார். சிறுத்தைக்கு உள்ள வீரியம், சிறுத்தைக்கு உள்ள வேகம், சிறுத்தைக்கு உள்ள அந்தப் பாய்ச்சல், தந்தை பெரியாரிடம் இருப்பதை, பாரதிதாசன் அவர்கள் பார்த்திருக்கிறார். 94 வயது வரையில், அவருடைய கடைசி மூச்சு வரையில், சோர்வின்றி, சலிப் பின்றி இந்த மக்களுக்காக உழைத்திருக்கிறார்.
மனிதன் என்றால், ஏமாற்றங்களால், தோல்விகளால், அடிக்கடி விரக்தி அடைவது உண்டு. சோர்வடைவது உண்டு, சலிப்படைவது உண்டு. இவன்தான் சராசரி மனிதன். ஒரு நாளைக்கு ஒன்றை எதிர்பார்க்கிறான், அந்த எதிர்பார்ப்பு நடைபெறவில்லையென்றால், அவன் முகம் வாடிவிடுகிறது; சுருங்கி விடுகிறது.
புரட்சியாளர் அம்பேத்கருக்கு நிகரான அவமதிப்புகளை சந்தித்தவர் தந்தை பெரியார்.
அம்பேத்கர் அவர்கள், ஜாதியின்பெயரால் இழிவுபடுத்தப் பட்டார் என்பதை நாம் அறிவோம். எவ்வளவு படித்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவிக்குப் போனாலும், எத்தகைய ஆற்றல் வாய்ந்த சிந்தனையாளராக உலக அரங்கில் அவர் மிளிர்ந்தாலும், இந்த ஜாதீய சமூக கட்டமைப்பில், அவருக்கு அவமதிப்பும், அவமானமும் மிஞ்சியது. அவை ஜாதியின் பெயரால் நிகழ்ந்தன.
தந்தை பெரியார் தீண்டப்படாத சமூகத்திலிருந்து பிறந்த வர் அல்ல. அப்படி ஒரு பிறப்பின் அடிப்படையில் அவருக்கு அவமதிப்பு நிகழ - சேரியிலே பிறந்து, சேரியிலே வளர்ந்து, சேரியிலே வாழ்ந்து - செல்லுமிடமெல்லாம் தலைகுனியக் கூடிய அளவுக்கு ஆன ஒரு இழிவு, பிறப்பின் அடிப்படையில் அவருக்கு இல்லை. ஆனாலும், புரட்சியாளர் அம்பேத்கருக்கு நிகரான அவமதிப்புகளை சந்தித்தவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரை நாம் 
நெஞ்சிலே சுமக்கவேண்டும்
மிகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தவர் தந்தை பெரியார். யாருக்காக இவர் மூச்சைப் பிடித்துக்கொண்டு பாடாற்றினாரோ - யாருக்காக அவர் அல்லும் பகலும் உழைத் தாரோ - யாருக்காக அப்படி அடிவயிறு வலிக்கப் பேசினாரோ - அவர்களே இவரை அவமதித்திருக்கிறார்கள் - செருப்பை எடுத்து வீசியிருக்கிறார்கள் - நரகலை அள்ளி வீசியிருக் கிறார்கள் என்றெல்லாம் நாம் படிக்கின்றபொழுது, கேள்விப் படுகின்றபொழுது நெஞ்சிப் பதைக்கிறது. அப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது, நாம் சந்திக்கின்ற இந்த அவமதிப்புகள் எல்லாம் மிகமிக மிகச் சொற்பம்; மிகமிகக் குறைவு. கல்லெடுத்து வீசுகிறார்கள், அது வேறு; ஆனால், நரகல் எடுத்து தந்தை பெரியார்மீது வீசுகிறார்கள்; அவர் அணிந்திருந்த சட்டையில் அந்த மலம் பட்ட நிலையி லும்கூட, ஆத்திரப்படாமல், உரையை பாதியிலேயே நிறுத்தி விடாமல், எதிர்த்து வசைபாடாமல், எவன் இப்படி செய்தவன் என்று ஒலிபெருக்கியில், அதட்டாமல், தன்னுடைய தொண் டர்களை வன்முறைக்குத் தூண்டாமல், அந்த நரகலை சகித் துக்கொண்டு, அந்த வாடையை, நாற்றத்தைச் சகித்துக் கொண்டு, சால்வையால் அதனை மறைத்துக்கொண்டு, தன்னுடைய கருத்தைப் பேசுகிற வரையில் அதில் உறுதியாக நின்று, மூன்று மணிநேரம் கருத்தைப் பேசிவிட்டு வந்தவர் தான் தந்தை பெரியார். இப்படியெல்லாம் ஒரு சகிப்புத் தன்மை தலைவர்களுக்கு வேண்டும் என்றால், தந்தை பெரியாரை நாம் நெஞ்சிலே சுமக்கவேண்டும்.
எண்ணிப்பாருங்கள், ஒரு செருப்பை வீசுகிறான், நாம் பேசிய கருத்துக்கு எதிராக எவனோ ஒருவன் செருப்பை வீசுகிறான். அந்த மூடன் யார்? அவனைப் பிடியுங்கள் என்று பெரியார் அவர்கள் சத்தம் போடவில்லை. நான் இந்த மண்ணில் எவ்வளவு மதிப்பிற்குரியவனாக இருக்கிறேன், நான் எப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன், நான் எப்படிப்பட்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவன், எனக்கு எதிராக ஒருவன் செருப்பை எடுத்து வீசுகிறான், அவனைப் பிடியுங்கள் என்று தன் தொண்டர்களை, நண்பர்களை அவர் ஏவிவிடவில்லை, தூண்டிவிடவில்லை.
வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார்; ஏனய்யா, என்று தோழர்கள் கேட்டிருக்கிறார்கள்; ஒரு செருப்பு இங்கே போட்டுவிட்டான், அது நம் கையில் கிடைத்துவிட்டது. இன்னொரு செருப்பு எங்கே இருக்கிறது, அதைத் தேடிப் பாருங்கள், தனித்தனியே கிடந்தால், யாருக்கும் பயன்படாது, இரண்டையும் சேர்த்து நாம் எடுத்தால், யாருக்காவது கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
பெரியார் நமக்கு சொல்லுகிற செய்தி
எவ்வளவுப் பக்குவம், எவ்வளவு முதிர்ச்சி, யார்மீது கோபப்படவேண்டும் என்பதுகூட ஒரு தலைவருக்குத்தான் தெரியும். சாதாரண மக்களின்மீது ஒருவன் கோபப்படுகிறான், அறியாமையில் உழலுகிறவன்மீது ஒருவன் கோபப்படுகிறான், எளியவர்கள்மீது ஒருவன் கோபப்படுகிறான், அவமதிக்கின்ற வன்மீது ஒருவன் கோபப்படுகிறான் என்றால், அவன் தலைவன் இல்லை. அது தலைமைப் பண்பு அல்ல. அதுதான் பெரியார் நமக்கு சொல்லுகிற செய்தி.
நம் கொள்கைப் பகைவர்களிடம்தான் கோபப்படவேண் டும்; நம்முடைய கொள்கை எதிரிகளிடம்தான் நாம் கோபப் படவேண்டும். யாரோ ஒருவன், விவரம் இல்லாமல் நடந்து கொள்கிறான் என்கிறபொழுது, அதற்காக நாம் கோபப் பட்டால், நாம் ஒரு தலைவனாக இருந்து மக்களை வழிநடத்த முடியாது. ஒரு கோட்பாட்டை மக்களுக்கு வழங்கிவிட முடியாது.
யுகத்திற்கு ஒரு தலைவர்தான் தோன்றுவார், அவர்தான் தந்தை பெரியார்
ஆகவே, தந்தை பெரியார் அவர்கள், பொதுவாழ்க்கைக்கு வந்தார் என்றால், பதவிக்காகவோ, பவுசுக்காகவோ, சுகத்திற் காகவோ அல்ல. அதனை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதெல்லாம் எப்பொழுதே நிகழ்கின்ற ஒன்று. பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்களில், 99.99 சதவிகிதம் பதவிக்காக, பவுசுக்காக, அதிலே கிடைக்கின்ற சுகத்திற்காக - எந்தக் கட்சிக்குப் போனால், பெரிய பதவியை வாங்கலாம்; எந்தப் பதவியை வாங்கினால், அதன்மூலம் பொருளை ஈட்டலாம். எந்தக் கட்சியில் சேர்ந்தால், சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ செல்லலாம், மந்திரியாகலாம் என் றெல்லாம் கணக்குப் போட்டுத்தான் பொதுவாழ்வுக்கு வருகிறார்களே தவிர, இந்த அப்பாவி மக்களுக்கு, அறியாத மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, அடிமைத்தனத்தில் உழல்கின்ற மக்களுக்கு வழிகாட்டவேண்டும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கவேண்டும், அவர்களை சுரண்டுகிற வர்களை எதிர்த்துப் போரிடவேண்டும், அதற்கான யுத்த களத்தை அமைத்திடவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தாடு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள், லட்சத்தில் ஒன்று, கோடியில் ஒன்று. அந்தக் கோடியில் ஒருவர்தான் தந்தை பெரியார். எப்பொழுதாவது யுகத்திற்கு ஒரு தலைவர் தோன் றுவார், அப்படி தோன்றிய தலைவர்களில் ஒருவர்தான் தந்தை பெரியார்.
பதவிதான் முக்கியம், பவுசுதான் முக்கியம், புகழ்தான் முக்கியம், சொத்து சுகம்தான் முக்கியம் என்று கருதியிருந்தால், காங்கிரசு கட்சியிலேயே அவர் இளித்துக்கொண்டே, சிரித்துக் கொண்டே எப்படியோ நத்திப் பிழைத்திருப்பார். என்ன அவருக்கு சங்கடம் இருந்தது? காங்கிரசு கட்சியில் அவருக்கு என்ன மதிப்பில்லாமல் இருந்தது? அவர் நினைத்திருந்தால், எந்தப் பதவியையும் காங்கிரசு கட்சியில் பெற்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால், அன்றைய நிலையில், தமிழ்நாட்டில் உயர்ந்த பதவியை அவரால் பெற்றிருக்க முடியும். காங்கிரசு கட்சியிலேயே தொடர்ந்திருந்தால், காங்கிரசு கட்சியிலேயே நீடித்திருந்தால், அந்தப் பதவிகளையெல்லாம்விட உயர்ந்தப் பதவிகளை தேசிய அளவிலான பதவிகளைக்கூட அவரால் பெற்றிருக்க முடியும். ஆனால், தனக்கு நேர்ந்த அவமதிப்பால் அல்ல, காங்கிரசு கட்சியில் ஒடுக்கப்பட்டு இருக்கின்ற, உழைக்கின்ற மக்களுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், காங்கிரசு கட்சி மாநாட்டில், பார்ப்பன சமூகத்திற்குத் தனி தண்ணீர் குவளை - மற்றவர்களுக்குத் தனி தண்ணீர் குவளை என்கிறபொழுது,
வ.வே.சு. அய்யருடைய குருகுலத்தில், பார்ப்பன சமூகத் தைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஒரு தண்ணீர் பானை - மற்ற குழந்தைகளுக்கு வேறு தண்ணீர் பானை என்கிற தகவல் களையெல்லாம் அறிந்த பிறகு,
இப்படி ஒரு இழிவு ஜாதியின் பெயரால், பிறப்பின் அடிப் படையில் இந்த மண்ணில் நிகழ்கிறது என்கிறபோது, இதை யெல்லாம் சகித்துக்கொண்டு, இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தக் கட்சியில், இந்த அரசியலில் நாம் நீடிக்க வேண்டுமா? என்று சிந்தித்தாரே, அதுதான் சுயமரியாதை.
சகிப்புத் தன்மை என்பதற்கும்
ஒரு வரையறை உண்டு
யாரோ ஒருவன் நரகலை அள்ளி வீசியபொழுது சகித்துக்கொண்ட அந்த சகிப்புத்தன்மை,
யாரோ ஒருவன் செருப்பை எடுத்து வீசியபொழுது, அதனை சகித்துக்கொண்ட அந்த சகிப்புத்தன்மை,
ஜாதியின் பெயரால், இந்தப் பேதத்தைக் கடைபிடிக்கிறார் களே என்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சகிப்புத் தன்மை என்பதற்கும் ஒரு வரையறை உண்டு. எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள முடியாது. சகிப்புத் தன்மை என்பதை இப்படிப் பொதுமைப்படுத்தி விட முடி யாது. பதவிக்காக, பவுசுக்காக எதையாவது சகித்துக் கொண் டிருக்க முடியாது.
சகிப்புத்தன்மைக்கான அளவுகோல் என்பது தன்மானம்
சகிப்புத்தன்மைக்கான அளவுகோல் என்பது சுயமரி யாதை.
பொங்கி எழுந்தார் பெரியார்;
குமுறி எழுந்தார் பெரியார்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் தன்மானம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறான். சுயமரி யாதை என்றால் என்னவென்று தெரியவில்லை. நெடுங் காலத்து அடிமைச் சமூகத்தில் பிறந்து, வளர்ந்து பழக்கப்பட்டு விட்டதால், அடிமைத்தனத்தைக்கூட உணர முடியாத வாழ்க்கை - சுதந்திரம் என்றால், என்னவென்று உணர முடியாத ஒரு வாழ்க்கை - சுயமரியாதை என்றால், என்ன வென்று உணர முடியாத வாழ்க்கை. அப்படிப்பட்ட நிலையில் கிடக்கிறவன் தன்னை அவமதித்தபொழுது அதனை சகித்துக் கொண்டார் தந்தை பெரியார். ஆனால், ஒரு கட்சி மாநாட்டி லேயே ஜாதி அடிப்படையில் அணுகிறார்கள் என்பதைப் பார்க்கிறபொழுது பொங்கி எழுந்தார் பெரியார்; குமுறி எழுந்தார் பெரியார்.
அதிலிருந்துதான் அவர் அரசியல் கட்சி என்கிற அந்தக் களத்திலிருந்து வெளியேறி, தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நாள்கூட மீண்டும் அரசியலுக்குப் போகலாம் என்று எண் ணாமல், பதவியைக் கண்டு சலனப்படாமல், ஊசலாடாமல், எடுத்த முடிவில், நிலைப்பாட்டில் உறுதியாக நின்று இறுதி மூச்சு வரையில் பாடுபட்டார்.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபொழுது, இன் றைக்குத் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிற அரசியலாக இருந்தாலும், சமூகக் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற முரண்பாடுகளாக இருந்தாலும், மோதல்களாக இருந்தாலும், உரையாடல்களாக இருந்தாலும், அனைத்திற்கும் அடித்தளம் தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக்கூடாது.
அகில உலக அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
தந்தை பெரியாரை மய்யப்படுத்தித்தான், அவர் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து, இன்றைக்கு 2017 ஆம் ஆண்டு திருமாவளவன் இந்த மேடையில் நின்று பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நொடிப்பொழுது வரையில், தமிழ்நாட்டின் சமூகமும், தமிழ்நாட்டின் அரசியலும், தமிழ் நாட்டின் பண்பாடும் தந்தை பெரியாரை மய்யப்படுத்தியே சுழன்று வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது அகில இந்திய அளவில் பரவி, இன்றைக்கு அகில உலக அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
எல்லா காலத்திலும் மனிதர்களை நாம் ஏமாற்றிவிட முடியாது. காலப்போக்கில், நாளடைவில், அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுபூர்வமாக சிந்திக்கத் தொடங்குகிறபொழுது, எது உண்மையோ, அதைத்தான் ஏற்பார்கள். நேற்று முன்தினம் நான் மருத்துவர் சேப்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ் வில் பேசுகின்றபொழுது ஒன்றைக் குறிப்பிட்டேன், இன் றைக்கு விடுதலையில் அதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்  மிகவேகமாக முன்னெடுத்துச் செல்கிறார்
தந்தை பெரியார் அவர்கள் மறைந்து, இத்தனை ஆண்டு கள் கடந்த நிலையிலும்கூட, நம்மிடையே அவர் இல்லை என்ற நிலையிலும்கூட, தந்தை பெரியார் அவர்கள் இருந்தால், எந்த அளவிற்கு வீரியம் குன்றாமல், இந்தக் கருத்தியல் பணியை, பரப்புகிற பணியை எடுத்துச் செல்வாரோ, அதைப் போல, அதைவிடப் பன்மடங்கு இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்  மிகவேகமாக முன் னெடுத்துச் செல்கிறார்.
அவரைவிட என்று நான் சொல்வதற்குக் காரணம், அவர் காலத்தில், இன்றைக்கு இருந்த நவீன தொழில்நுட்பம் இல்லை. இன்றைக்குப் புதிய புதிய நவீன தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, பெரியாரி யலைக் கொண்டு செல்லுகிற ஆற்றல் பெற்றவராக தமிழர் தலைவர் அவர்கள் விளங்குகிறார்.
ஆகவே, அது இன்றைக்கு அதைவிட வேகமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அவருடைய கருத்தியலை அடைகாத்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திராவிடர் கழகத்திற்குப் பிறகு தமிழக அரசியல் என்பது, 50 ஆண்டுகாலம் திராவிட கருத்தியலை அடிப்படையாகக் கொண்டவர்கள்தான், பெரியாரின் அரசியலை அடிப்படையாகக் கொண்டவர்கள்தான் தமிழ்நாட்டை ஆள முடியும் என்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அது தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. அதனால்தான், அண்ணா அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும், இந்த ஆட்சியை, இந்த அரசை பெரியாரின் காலடியில், நான் காணிக்கையாக வைக்கிறேன் என்று நன்றி உணர்ச்சியோடு, நன்றிப் பெருக்கோடு, பெரியாரைப் பார்த்து ஆடை போர்த்தி தன்னுடைய நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் மாணவர் பேரறிஞர் அண்ணா என்பது உறுதிப்படுகிறது
கருத்தியல் முரண்பாடுகள் வரும்; அதனால், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு அரசியல் இயக்கம் உருவானது. தன்னுடைய தொண்டர்கள், தன்னுடைய சீடர்கள், தன்னுடைய மாணவர்கள், தன்னுடைய தம்பிகள் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டார்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று அந்த நேரத்திலும்கூட, ஆட்சியைப்பற்றியோ, பதவியைப் பற்றியோ கவலைப்படாதவர் தந்தை பெரியார்.
பொதுவாக மனித இயல்பு என்னவென்றால், நம்மகூட இருந்தான், அவன் அரசியலுக்குப் போய் முதலமைச்சராகி விட்டான். என்னிடம்தான் உதவியாளராக இருந்தான்; இன்றைக்கு நான் இப்படி இருக்கிறேன், அவன் அப்படி இருக்கிறான் என்று சொல்வது மனித இயல்பு.
ஆனால், அப்படி எண்ணாதவர் தந்தை பெரியார்; அதைவிட, பெரியாரால்தான் இந்த நிலைக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்பதுதான். உண்மையிலேயே தந்தை பெரியாரின் மாணவர் பேரறிஞர் அண்ணா என்பது உறுதிப்படுகிறது.
இல்லையென்றால், அந்த இடைவெளியை அப்படியே அவர் வைத்திருக்க முடியும். பெரியாரைப் போய் பார்க்காமல் இருந்திருக்கமுடியும். பெரியாரை சந்தித்து, அவருடைய ஆட்சியைக் காணிக்கையாக்காமல் இருந்திருக்க முடியும். உலகமே வியந்து பார்த்திருக்கும். ராஜாஜி அவர்களையே அதிர வைத்தவர் பேரறிஞர் அண்ணா.
ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா சொன்னார்
ராஜாஜியும், அண்ணாவும் சந்தித்துக் கொண்டபொழுது, ஏராளமான விமர்சனங்கள் வந்தன; ராஜாஜியும், அண்ணாவும் கூட்டணி வைத்தபொழுது கடுமையான விமர்சனங்கள் வந்தன. ராஜாஜியோடு கூட்டணி வைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா சொன்னார்.
எல்லோரும் கேட்டார்கள் அண்ணாவைப் பார்த்து, இது சரியா? ராஜாஜி அவர்களோடு சேர்ந்தல்லவா வெற்றி பெற்றீர்கள்; இப்பொழுது பெரியாருக்குக் காணிக்கை என்று சொல்கிறீர்களே என்று கேட்டபொழுது,
இத்தனை ஆண்டுகாலம் எங்களை ஏமாற்றியது ராஜாஜி வாரிசுகளின் குணம்; ஒருமுறைதானே நாங்கள் ஏமாற்றியிருக்கிறோம், அதனால் என்ன? என்று அண்ணா சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆக, இதுதான் பெரியாரின் பண்பு. அண்ணாவிடமிருந்து வெளிப்பட்டது பெரியாரின் பண்பு. அது ஒரு யுக்தி; அது ஒரு ராஜதந்திரம். அதிகாரத்தைக் கைப்பற்றுவது நம்முடைய இலக்கு. அந்த அதிகாரம் யாருக்கானது என்றால், பெரியாரின் கொள்கைக்கானது, பெரியாரின் கோட்பாட்டுக்கானது.
பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் அவர்கள் சொன்னார்,
அண்ணா சாதித்துக் காட்டியது - பெரியாரின் வழியில் அவர் சாதித்துக் காட்டியது - சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டவடிவமாக்கியது; தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது; இருமொழிக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள், அண்ணாவே சொன்ன சாதனைகள் என்று அந்த அரங்கிலே நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் நினைவூட்டினார்.
பெரியாருக்குக் கிடைத்த வெற்றி
சுயமரியாதைத் திருமணம் என்பது சட்டப்பூர்வமான ஒன்று என்பதை அண்ணாவால் நிலைநாட்ட முடிந்தது என்றால், அது பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. பெரியாரியம் எப்படியெல்லாம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்காக சொல்கிறேன்.
அண்ணா, பெரியாரின் மாணவனாக இல்லாதிருந்தால், மும்மொழித் திட்டத்தை அனுமதித்திருப்பார்.
அண்ணா, பெரியாரின் மாணவனாக இல்லாதிருந்தால், தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும்; இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்திருப்பார்.
அண்ணா, பெரியாரின் மாணவனாக இருந்ததினால்தான், இந்த சிந்தனைகள் அவருக்கு மேலோங்கி இருந்தது. அதே வழியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் அதனைக் கட்டிக் காத்தார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
தமிழர்களுக்கு ஏன் நீ தலைமை தாங்கவேண்டும்?
தந்தை பெரியார் அவர்களின் மொழி உணர்வு, இன உணர்வு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. சிலர் அதைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அவரையே கேட்டிருக்கிறார்கள், தமிழர்களுக்கு ஏன் நீ தலைமை தாங்கவேண்டும்? என்று.
அந்த யோக்கியதை அவர்களுக்கு இல்லாமல் இருப்பதால், நான் தலைமை தாங்குகிறேன் என்றார்.
ஏன் அதை அவர் சொல்லவேண்டும்; அவர்களுக்கு அந்த அக்கறை இல்லாத காரணத்தினால், நான் அக்கறையோடு இருக்கிறேன் என்பதுதான் அதன் பொருள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் பேசவில்லை என்றால், திருமாவளவன்தான் பேசவேண்டும் என்பதல்ல, இதோ நான் பேசுகிறேன் என்று தமிழர் தலைவர் பேசினால், அதில் என்ன தவறு? பேசிக்கொண்டிருக்கிறார்கள், உதாரணத்திற்குச் சொல்கிறேன்.
ஆகவே, யாரும் பேசவில்லை என்கிறபொழுது, யாரும் கவலை கொள்ளவில்லை என்கிறபொழுது, யாரும் அக்கறை கொள்ளவில்லை என்கிறபொழுது, இந்த மக்களுக்காக அக்கறை கொண்டு, கவலை கொண்டு இந்தக் களத்திலே தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
தமிழ்மொழி சீர்திருத்தத்தைப்பற்றி நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் அங்கே எடுத்துச் சொன்னார், அதே அரங்கில்.
எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், பெரியாருடைய கருத்தியலுக்கும் முரண்பாடு உண்டு. ஆனாலும், பெரியாரின்மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்புண்டு. ஏனென்றால், அண்ணாவிற்குப் பெரியாரின்மீது மிகு மதிப்புண்டு. அண்ணாவை ஏற்றுக்கொண்டவர் எம்.ஜி.ஆர். எனவே, அண்ணா மதித்த பெரியாரை மதிப்பது எம்.ஜி.ஆரின் கடமை.
எழுத்தில் ஒரு சீர்திருத்தத்தைப் புகுத்தியவர் தந்தை பெரியார்
எனவே, பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை, உடனடியாக அரசுபூர்வமாக அங்கீகரித்தார் எம்.ஜி.ஆர்.
இன்றைக்கு நாமெல்லாம் பயன்படுத்தக்கூடிய தமிழ் எழுத்துகள் பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பட்டவை. யானைத் தும்பிக்கை மாதிரி எழுத்தை எழுதிக் கொண்டிருந்தோம். இன்றைக்கு இரட்டைக் கொம்புள்ள கை, லை போடுகிறோம்; யானைத் தும்பிக்கைப் போன்ற அந்த வடிவத்தை நீக்கி, இந்த வடிவத்தைக் கொண்டு, எழுத்தில் ஒரு சீர்திருத்தத்தைப் புகுத்தியவர் தந்தை பெரியார், அதனை அங்கீகரித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னால், தமிழ்மீது அவருக்கு வெறுப்பு இருக்கிறது என்று சொன்னால், தமிழ் மொழியை மேம்படுத்தவேண்டும் என்று அவர் ஏன் சிந்திக்கவேண்டும்? தமிழ் மொழியில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். அதனால்தான், இன்றைக்குக் கணினி மொழியாக தமிழ் மாறியிருக்கிறது; உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரு அறிவியல் மொழியாக, கணினி மொழியாக தமிழ் உள்வாங்கப்பட்டதற்குத் தந்தை பெரியார்தான் காரணம் என்பதை, போலித் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்தி - இந்து - இந்தியா;  இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் பெரியாரியம்
தமிழ்த் தேசியம் என்பது வெறும் தமிழ் வாழ்கிற என்கிற ஒரு முழக்கத்தில் இல்லை. தமிழ்த் தேசியம் என்றால் என்னவென்று மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், தமிழ்த் தேசியம் என்பது - இந்திய தேசியத்திற்கு எதிரானது. அதிலிருந்து நீங்கள் தமிழ்த் தேசியத்தைப் புரிந்துகொண்டால்தான், அதிலுள்ள உள்ளடக்கத்தை உணர முடியும். வெறும் மொழி உணர்விலிருந்தும், இன உணர்விலிருந்தும் வெளிப்படுவதல்ல தமிழ்த் தேசியம். பெரியாரியம் என்றால், அது இந்திய தேசியத்திற்கு எதிரானது - பெரியாரியம் என்றால், அது இந்து தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேசியமும், இந்து தேசியமும் வேறு வேறல்ல. இந்தி தேசியமும் வேறல்ல.
இந்தி - இந்து - இந்தியா;  இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் பெரியாரியம் - இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம்.
எனவே, பெரியாரியம் = தமிழ்த் தேசியம்.
ஏனென்றால், பெரியாரியம்தான் ஜாதியை எதிர்க்கிறது-
பெரியாரியம்தான் ஜாதியைக் கட்டிக் காப்பாற்றி அதனைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற இந்துத்துவத்தை எதிர்க்கிறது -
பெரியாரியம்தான் இந்துத்துவத்தை எதிர்ப்பதன்மூலம், இந்திய தேசியத்தை எதிர்க்கிறது -
இதே பெரியார்தான், தமிழ்நாட்டை தனிநாடாக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாங்கள் தனி நாடு கோரிக்கையை எழுப்புவோம் என்று சொன்னவரும் பெரியார்தான்.
வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்றார் அண்ணா
வடவர் ஆதிக்கம் மேலொங்குகிறபொழுதெல்லாம் அவர் கொதித்திருக்கிறார். அவருடைய சிந்தனையிலிருந்துதான், வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்று அண்ணா பேசினார்.
அந்த சிந்தனையிலிருந்து தென்னாடு - திராவிட நாடு என்கிற கோரிக்கையை அண்ணா முன்வைத்தார்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஒன்று. ஒன்றிலிருந்துதான் மற்றொன்று. பெரியாரியத்திலிருந்துதான் இவை அனைத்தும் கிளைத்தன.
அண்ணாவின் சிந்தனைகளும், கலைஞரின் செயல்பாடுகளும் சரி அவையெல்லாம் பெரியாரியத்திலிருந்துதான், பெரியார் சிந்தனையிலிருந்துதான் கிளைத்தன.
ஆகவே, தமிழ்த் தேசியம் என்பதை வெறும் மொழி உணர்வாகவோ, இன உணர்வாகவோ மட்டுமே புரிந்துகொண்டால், அது வெறும் இனவாதமாக மாறும். அப்படி இனவாதமாக மாறுகிறபொழுதுதான், பெரியாரை வேற்று மொழிக்காரர் என்றும், புரட்சியாளர் அம்பேத்கரை மராத்தி மொழிக்காரர் என்று சொல்கிற அருவெறுப்பான அரசியல் வெளிப்படுகிறது.
அரசியல் அறியாமை 
பெரியாரையும், அம்பேத்கரையும் மொழியின் அடிப்படையில் ஒருவர் அந்நியப்படுத்த முயற்சிக்கிறார் என்றால், அதைவிட அறியாமை வேறு எதுவுமே இருக்க முடியாது - அரசியல் அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.
நான் தொடக்கத்தில் சொல்லியதைப்போல,
கட்சித் தலைவர்கள் ஒரு குறுகிய பகுதியினருக்குத் தலைவர்களாக இருக்கமுடியும் -
மதத் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மதத் தலைவர்களாக இருப்பார்கள் -
இனவாதிகள் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு இனவாதிகளாக இருப்பார்கள் -
ஜாதியவாதிகள் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குத் தலைவர்களாக இருப்பார்கள் -
மானுடத்தையும், மானுட நேயத்தையும் செழுமைப்படுத்துவதற்கான கோட்பாட்டை வழங்குகிற தலைவர்கள் உலகம் முழுவதும், அனைத்து வரம்புகளையும் தாண்டி தலைவர்களாக மிளிர்வார்கள்.
அந்த வரிசையில் வந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆக, தமிழ்த் தேசியம் என்பது, இந்திய தேசியத்தை எதிர்ப்பது என்பதை உணரத் தொடங்கினால், பெரியாரியத்தின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள  முடியும்.
பெரியாரியத்தை ஆழமாகப் படிக்கத் தொடங்கினால்தான்....
பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலையை உடைத்தார்; அவர் இந்துக்களுக்கு எதிரி; அவர் கடவுள் இல்லை என்று சொன்னார். கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரி பெரியார் என்று, பெரியாரின் சிந்தனைகளைச் சுருக்கிப் பார்க்க சிலர் முயற்சிக்கிறார்கள்.
பெரியாரியத்தை ஆழமாகப் படிக்கத் தொடங்கினால்தான், ஏன் கடவுளை அவர் எதிர்க்கத் தொடங்கினார் என்று தெரியும்.
கடவுளைப் பயன்படுத்திக் கொண்டு, கடவுளின் பெயரால், இங்கு அனைத்துவிதமான ஆதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள், சுரண்டிக் கொண்டிருக்கிறார், மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள், தொடர்ந்து அவர்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கெல்லாம் பாதுகாப்பாக இருப்பது இந்தக் கடவுள் கோட்பாடு என்பதுதான், கடவுள் சிலைகள் என்பதுதான் - அதனைக் கொண்டிருக்கின்ற கோவில்கள் என்கிற அந்த இல்லங்கள்தான் என்பதை உணர்ந்ததினால், எதன்மீது இவன் அறியாமை கட்டி வைக்கப்பட்டிருக்கிறதோ, பிணைக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த அடையாளத்தையே நொறுக்குவது என்று தந்தை பெரியார் அவர்கள் சம்மட்டியைத் தூக்கினார்.
அந்தக் கடவுளை நான் காலால் மிதிக்கிறேன், என்னை என்ன செய்கிறது என்று பார்!
நீ கடவுளைக் கண்டுதானே பயப்படுகிறாய்; கடவுள் உன்னை இப்படி செய்துவிடுவார்; அப்படி செய்துவிடுவார் என்றுதானே உன்னை மிரட்டி வைத்திருக்கிறார்கள்; கடவுளைக் கண்டுதானே உனக்கு இவ்வளவு அச்சம்; மேற்கொண்டு எதையும் சிந்திக்காமல் இருக்கிறாய். அவர்களுடைய ஏய்ப்பு நடவடிக்கையை, மோசடி நடவடிக்கையை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்; உன்னை ஏமாற்றுவதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். எந்தக் கடவுளைக் கண்டு நீ அச்சப்படுகிறாயோ, அந்தக் கடவுளை நான் காலால் மிதிக்கிறேன், என்னை என்ன செய்கிறது என்று பார்! என்னை ஒன்றும் செய்யவில்லையே!
கடவுள் இல்லை என்று நான் சொல்கிறேன்,
என்னை என்ன செய்துவிடுவார் கடவுள் என்று பார்.
கடவுள் என்னை எதுவும் செய்யமாட்டார் - நான் துணிந்து செய்கிறேன், நீயும் துணிந்து வா!
இதுதான் தந்தை பெரியார் விட்ட சவால்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு, உழைக்கின்றவர்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு, பாமர மக்களுக்கு விடுத்த அழைப்பு - அறைகூவல்!
எதைக் கண்டு நீ அச்சப்படுகிறாயோ, அந்த அச்சம் போலியானது. திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. உன்மீது திணிக்கப்பட்டது - அச்சப்படாதே! கடவுளைக் கண்டு அச்சப்படாதே! பேய், பில்லி, சூனியம் கண்டு அச்சப்படாதே! நரகம் - சொர்க்கம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள். இவற்றையெல்லாம் நீ நம்பவேண்டும் என்பதற்காக, அவர்கள் உருவாக்கி வைத்துள்ள கட்டுக்கதைகள்தான் புராணக்கதைகள். எனவே, இவற்றையெல்லாம் நீ நம்பாதே!
பெரியாரியம் உலகம் முழுவதும் பரவியினால்,
இதுதான் தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் இந்தக் களத்திலே செய்த துணிச்சலான போராட்ட நடவடிக்கைகள்.
பேசிக்கொண்ட போகலாம், தந்தை பெரியாரின் சிந்தனைகள் மிக ஆழமானவை - மிகப்பரந்தவை. உலகம் முழுவதும் பரவவேண்டியவை. பெரியாரியம் உலகம் முழுவதும் பரவியினால், மனிதநேயம் தழைக்கும் - சுயமரியாதை தழைக்கும் - ஜனநாயகம் தழைக்கும் - சமத்துவம் தழைக்கும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.
அனைத்துத் தளங்களுக்கும் வழிகாட்டக்கூடிய
ஒரு ஆளுமைதான் தந்தை பெரியார்
பழகுகிறவர்கள் நம்மிடத்திலே நன்றாகப் பழகவில்லை என்றால், மனம் திறந்து பேசவில்லை என்றால், அன்பொழுக நம்மிடத்திலே அணுக வில்லை என்றால், மனம் வாடிவிடுகிறது; முகம் வாடிவிடுகிறது. ஆகவே, வெறுப்பும், சலிப்பும் மனித னுடைய இயற்கை; சராசரி மனிதனுடைய இயற்கை. பொதுவாழ்க்கையில் இது மிகமிக அதிகம். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாது. பொதுவாழ்க்கையில் நாம் நினைப்பதைப்போல், எல்லோரும் நடந்து கொள்வதில்லை. நாம் நினைப்பதுபோல், எல்லோரும் நம்முடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வருவ தில்லை. அதனால், பொதுவாழ்க்கையில் வெறுப்பும், சலிப்பும் மிக அதிகமாக ஏற்படும். அதிலும், அரசியல் என்பதில் இன்னும் கடினமானது. சமூகம், அரசியல், பண்பாடு இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். அரசியல் இயக்கத் தலைவர்கள் அரசியல் தளத்தில் மட்டும்தான் பணியாற்றுவோம். தந்தை பெரியார் போன்ற கோட்பாட்டுத் தலைவர்கள், சமூகத் தளத்திலும் பாடாற்றவேண்டும்; அரசியல் தளத்திலும் பாடாற்றவேண்டும்; பண்பாட்டுத் தளத் திலும் பாடாற்றவேண்டும் என்று அனைத்துத் தளங் களுக்கும் தலைமை கொடுப்பது.
அதுதான் பெரியார் என்கிற தலைவருக்கும், ஒரு கட்சித் தலைவருக்கும் உள்ள வேறுபாடு. ஆக, சமூகத் தளத்திலும் அவர் தலைவராக நிற்கவேண்டும்; மக்களை வழிநடத்தவேண்டும். அரசியல் தளத்திலும், அரசியல் இயக்கங்களை வழிநடத்தவேண்டும், வழி காட்டவேண்டும். இந்தப் பண்டிகைகளை ஏன் கொண்டாடுகிறீர்கள், இவை எல்லாம் மூடத்தன மானது என்று பண்பாட்டுத் தளத்திலும், மாற்று வழியை மக்களுக்குச் சொல்லவேண்டும். இந்த மூன் றோடும் பின்னிப் பிணைந்ததுதான் பொருளாதாரத் தளமும்கூட. அதிலும் வழிகாட்டவேண்டும். இப்படி அனைத்துத் தளங்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு ஆளுமைதான் தந்தை பெரியார் அவர்கள்.
ஆகவே, இதில் இன்னும் அதிகமான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும், சோர்வும் ஏற்படுவது இயற்கை. ஆனால், கடைசி மூச்சுவரையில், தான் எடுத்துக் கொண்ட லட்சியத்திலிருந்து வழுவாமல், தான் அடையவேண்டிய இலக்கை நோக்கி, வீரியம் குன்றாமல், வேகம் குறையாமல் பணியாற்றிய பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.
சோர்வடைகிற பொழுதெல்லாம் நாம் மீண்டும் அதிலிருந்து மீளவேண்டும்; வீரியத்தோடு பணியாற்ற வேண்டும் என்றால், தந்தை பெரியார் அவர்களையும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் நாம் நெஞ்சிலே நினைத்துக் கொள்ளவேண்டும்.
-விடுதலை,20.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக