வியாழன், 19 மார்ச், 2026

தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் மார்ஷலின் 150 ஆவது பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை

திராவிடர் கழகம்

சர்.ஜான் மார்ஷல் 150ஆம் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழர் தலைவர் பேட்டி


அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது,
கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்!
இதுதான் எங்களது கோரிக்கை – அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார்!

திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 19  அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்.  இல்லை யென்றால், அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

இன்று (19.3.2026) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  சர்.ஜான் மார்ஷலின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். சென்னை எழும்பூரில் உள்ள அருங்கட்சியகம் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சர். ஜான் மார்ஷல் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக  வந்து,  சிறப்பாக தொல் பொருள் ஆய்வை மேற்கொண்ட நேரத்திலே, இந்த நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்பதை தன்னுடைய ஆய்வுத் திறத்தால் நிறுவினார். ‘வேதகால நாகரிகத்தை விட அதற்கும்  முன்பு ஏற்பட்ட பழம்பெரும் நாகரிகம் திராவிட நாகரிகம்.  ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவற்றில் இருந்த கட்டுமானங்களும், கழிவுநீர் வடிகால் வசதிகளும் சிறந்ததொரு நாகரிகம் என்பதற்கு முதன்மையான சான்றுகளாகக் கிடைக்கின்றன’ என்று சொன்ன சர்.ஜான் மார்ஷல் அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் இன்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியில்
சர்.ஜான் மார்ஷலுக்குச் சிலை திறப்பு!

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெருமையோடு உச்சரிக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள், அவருக்கென்று இங்கே சிலை எடுத்தார்கள்.  இலக்கியவாதிகளும் சிலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் வற்புறுத்திய நிலையில், அதற்கு அறிவிப்பு கொடுத்தது மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்’ என்று மிகத் தெளிவாக காட்டக்கூடிய வகையில் இந்த சிலையையும் கடந்த ஆண்டு திறந்தார்கள். அது பாராட்டி வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்களுக்கு முன்னால், ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த அடிப்படையிலான ஒரு செய்தி – கீழடி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்திற்கு உடன்பாடானது மட்டுமல்ல, அதற்கும் மூத்தது என்று தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அந்த நாகரிகத்தினுடைய அறிக்கைகள், அதற்குரிய தரவுகள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்று ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மோடி அரசு, திட்டமிட்டு அதை வெளியிடாமலேயே வைத்திருக்கிறார்கள்.

அந்த ஆய்வில் ஈடுபாடோடு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் தொல்லை கொடுத்து மாற்றி இருக்கின்ற நேரத்திலே, 8 இடங்களில் மேலும் அகழ்வாய்வு செய்வதற்கு அனுமதி தராமல் மறுத்து வைத்திருந்தார்கள். தொடர்ந்து முதலமைச்சருடைய போராட்டத்தினாலே அதற்கு அனுமதி கொடுத்து, அதனை நேற்று (18.3.2026) முதலமைச்சர் தெளிவாக்கி இருக்கிறார். 8 அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் மட்டும் போதாது. கீழடி அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்கள். சர்.ஜான் மார்ஷல் அவர்களுடைய 150 ஆம் பிறந்தநாள் விழாவிலே, இதுதான் எங்களுடைய கோரிக்கையாக மட்டுமல்ல, அடுத்த போராட்டமாகவும் இருக்கும்.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலந்து கொண்டோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழக மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அன்பு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை
சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர்  பாண்டு, செயலாளர் தமிழினியன், கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், ஜனார்த்தனன், செல்லப்பன்,மாணிக்கம், இளவரசி, பூங்குழலி, அருள், உத்ரா, யுகேஷ், பூவை தமிழ்செல்வன், மகேந்திரன், தன்ராஜ், பெரியார் பிஞ்சுகள் திராவிட எழில்,யாழ் தமிழ், பெரியார் சம்பத், உடுமலை வடிவேல், பா. சிவக்குமார், புகழேந்தி, ச.விஜய், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், பிரகாஷ், க. கலைமணி, கணேசன், டெய்சன், அசோக்குமார் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 19.03.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக