சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், போளூர் பன்னீர்செல்வம், சிதம்பரம் செல்வரத்தினம், மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் எழுத்தாளர் முத்துவாவாசி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோவீ.ராகவன், சூளைமேடு இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், இராமச்சந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி, பழனிபாலு, முரளி, க.கலைமணி, விஜய், மகேஷ், கணேசன், அசோக்குமார், பெரியார் மாணாக்கன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை
அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
சென்னை, பிப்.3 – வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அறிஞர் அண்ணாவின்57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
‘‘பெரியாரோடு இருந்த காலமே
எனக்கு வசந்த காலம்!’’
‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சரானவுடன் தாம் எழுதிய தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்க் கட்டுரையில் குறிப்பிட்டார். ‘‘நான் இன்றைக்கு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது பெருமையாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், நான் பெரியாருடன் பிரச்சாரத்தைத் தொடங்கி, காடு மேடெல்லாம் அவரோடு சென்ற காலம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வசந்த காலம்’’ என்று பூரிப்போடு குறிப்பிட்டார்.
முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர், நேரிடையாகத் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்று, அவர் நடத்தி வந்த அந்த ஆட்சி, இன்றைக்கும் பாதை மாறாமல், கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த நேரத்திலும் சரி, அதுபோல், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒரு முழுக் கட்டம் முடிந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி விரைந்து போகக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் சரி, சிறப்பாக அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு போகிறார்.
அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள்,
அண்ணா கொடுத்த முழக்கங்கள்!
சில நேரங்களில், சில ஆட்சிகள் அருகிக்கொண்டு போகும். ஆனால், அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள், அண்ணா கொடுத்த முழக்கங்கள், இன்றைக்குப் பெருக்கல் இருக்கிறதே தவிர, மற்றபடி சுருக்கலிலோ, வழுக்கலிலோ இல்லை. அதைச் செய்கின்ற ஒரு நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்குத் தொடர்கிறது.
எனவேதான், அண்ணாவை நாம் போற்றுகிறோம், அண்ணாவைப் பின்பற்று கிறோம். அண்ணா வகுத்தப் பாதையில் அயராது உழைக் கிறோம். அண்ணாவினுடைய முப்பெரும் சாதனைகள் என்றைக்கும் நிரந்தரமானவை. அதற்கு எடுத்துக் காட்டாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக் கின்ற அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத் தான், அண்ணாவுக்குச் சிறப்பான ஒரு பெருமையை நாம் உண்டாக்குகின்றோம் என்று அர்த்தம்.
அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு!
அண்ணா உருவாக்கிய கட்டடம் மணல் மேடு அல்ல. அது கற்பாறை, தொடரும். அதுதான் அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அதை நிரூபிக்கும். அதை உலகத்திற்கு அறிவிக்கும்.
செய்தியாளர்: ஒரு பக்கம் நட்சத்திரங்கள் தொடங்கி இருக்கக்கூடிய புதிய கட்சி; இன்னொரு பக்கம் வலிமையான வலதுசாரி கூட்டமைப்பு – இன்றைய காலகட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்ன மாதிரியான ஓர் அரசியல் தேவைப்படுகிறது? என்ன மாதிரியான நிலைப்பாடு மக்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தேர்தல் முடிந்தவுடன், வலது – ‘‘சாரி’’ என்று சொல்வார்கள்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
-விடுதலை நாளேடு, 3.2.26
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக