ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



விடுதலை நாளேடு
Published April 28, 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி
ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்)
காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகத்தினர் பங்கேற்பு

சென்னை, ஏப்.28 சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியான ‘தூர்தர்ஷன்’ காவி மயமாக்கலைக் கண்டித்து இன்று (28.4.2024) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழக இளைஞரணி – திராவிடர் மாண வர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது ஹிந்தி செய்தி அலைவரிசையான தூர்தர்ஷன் நியூஸ் இலச் சினையை (லோகோவை) காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.
ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெ னவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவை யும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க் கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை அலுவலக ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந் துள்ளனர். ஜி-20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொலைக்காட்சியின் இலச்சினையை காவி வண்ணத்தில் மாற்றியதற்கு சமூக வலை தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில் ‘‘உலகப் பொது மறை தந்த வள்ளுவ ருக்குக் காவிச் சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள்மீது காவி பெயிண்ட் ஊற்றி, அவமானப்படுத்தினார்கள்.
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷ்வாணி என சமஸ்கிருதமயமாக்கினார் கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல் லையும் நீக்கினார்கள். தற்போது தொலைக்காட்சி இலச்சினையிலும் காவிக் கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவி மயமாக்கும் பா.ஜ.க. சதித் திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

தமிழர் தலைவர் போராட்ட அறிவிப்பு

இந்நிலையில், ‘‘சுயமரியாதை இயக்க நூற் றாண்டு ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா முதல் நிகழ்வு 25.4.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடை பெற்றது.
இவ்விழாவில் ஒன்றிய அரசு தொலைக்காட்சி யின் காவி மயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் 28-4-2024 அன்று காலை 10 மணியள வில் சென்னை அண்ணாசாலை (சிம்சன்) தந்தை பெரியார் சிலையில் இருந்து, கழகத் தோழர்கள் ஊர்வலமாக வாலாஜா சாலை வழியாகச் சென்று, ‘தூர்தர்ஷன்’ அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (28-4-2024) காலை திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, கழக மாநில இளைஞரணி செயலாளர் கோ.நாத்திக பொன்முடி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அதற்கு முன்னதாக, சென்னை அண்ணா சாலை, தந்தை பெரியார் சிலை அருகே கூடிய கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், அனைவரும் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் அமைந்திருக்கும் ஒன்றிய அரசுத் தொலைக்காட்சி ‘தூர்தர்ஷன்’ நிலையத்திற்கு முன்பு செல்ல முற்பட்டபோது, அண்ணா சாலை பெரியார் சிலை அருகேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கமிட்டு தோழர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சுரேஷ் வரவேற் புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்க வுரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த் தினார். திராவிடர் கழக இளைஞரணி மாநில துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் நன்றி கூறினார்.

முன்னதாக திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மு.சண்முகப் பிரியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.தங்கமணி ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கங் களை எழுப்பினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, செயலவைத் தலை வர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், கொடுங்கையூர் தே.செ.கோபால், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற் றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்!

காப்போம், காப்போம்!
மொழி உரிமை காப்போம்!
காப்போம், காப்போம்!
மதச்சார்பின்மையைக் காப்போம்!
ஏற்க மாட்டோம், ஏற்கமாட்டோம்!
ஹிந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்!
ஏற்கமாட்டோம், ஏற்கமாட்டோம்!
அரசுத் தொலைக்காட்சியில்
ஹிந்தித் திணிப்பை ஏற்கமாட்டோம்!
ஒன்றிய அரசு நிறுவனமா?
ஆர்.எஸ்.எஸ். நிறுவனமா?
பொதிகை என்னும் தமிழ்ப் பெயரை
தூர்தர்ஷன் என்று மாற்றியதேன்?
சமஸ்கிருதத் திணிப்பின் வாயிலாக
பண்பாட்டைத் திணிப்பதா?
காவி மயமாக்காதே, காவி மயமாக்காதே!
ஒன்றிய அரசுத் தொலைக்காட்சியை
காவி மயமாக்காதே, காவி மயமாக்காதே!
ஒன்றிய அரசின் தொலைக்காட்சியா?
ஆர்.எஸ்.எஸ்.இன் ஊதுகுழலா?
அகில இந்திய வானொலியை
ஆகாஷ் வாணி ஆக்க முயற்சியா?
தமிழுக்கான இடத்தைப் பறித்து
ஹிந்திக்கு முன்னுரிமையா?
தமிழுக்கான இடத்தைப் பறித்து
சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமையா?
ஒன்றிய அரசு நிறுவனங்களை
ஆர்.எஸ்.எஸ். மயம் ஆக்காதே!
அரசமைப்புச் சட்டம் தந்த
சுதந்திரமான அமைப்புகளில்
ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதிக்கமா?
அரசமைப்புச் சட்டம் தந்த
தன்னிச்சையான அமைப்புகளில்
பி.ஜே.பி.யின் ஆதிக்கமா?
போராடுவோம், வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக