ஞாயிறு, 30 நவம்பர், 2025

கழகத் தோழர் க.வெற்றிவீரன் 29.11.2025 காலை 7 மணியளவில் மறைவுற்றார்

 

மறைவு

அசோக்லேலன்ட் திராவிடர்தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும், சோழிங்கநல்லூர் திராவிடர் கழகத்தின் மூத்த தோழருமான ஜி.வெற்றிவீரன் இன்று (29.11.2025) காலை 7 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இணையர் இந்திரா, மகன்கள் தென்னரசு, இளமாறன் மற்றும் குடும்ப உறவுகளுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஜி.வெற்றிவீரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

முகவரி: இந்திரா இல்லம், 8-340, கம்பர் குறுக்குத் தெரு, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை (காயிதே மில்லத் கல்லூரி எதிரில்).

விடுதலை நாளேடு, 29.11.2025


– – – – –

தென் சென்னை மாவட்ட நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக செயலாளராகவும் இருந்தார்.


பிற்பகல் 4.10 மணி அளவில் இறுதி ஊர்வல வண்டி புறப்பட்டு நுங்கம்பாக்கம் கிராம  தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பிறகு நுங்கம்பாக்கம் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியின் போது தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் மறைந்த நுங்கம்பாக்கம் பகுதி தோழர் ம.நடராஜன் அவர்களின் துணைவியார் ந.பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 25 நவம்பர், 2025

பெரியார் உலக நிதி மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி- (எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி) (26.11.2025)

நன்கொடை
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2025) அவரது துணைவியார் ந.பத்மாவதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.3 ஆயிரமும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி.(24.11.2025)
- விடுதலை நாளேடு, 25.11.25

தென்சென்னை மாவட்டக் கழக சார்பில் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வழங்க கலந்துரையாடலில் முடிவு


தமிழ்நாடு
சென்னை, நவ. 25- தென் சென்னை மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 22.11.2025 அன்று மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி முன்னிலையிலும் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார்.

நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவியருவி ஈரோடு தமிழன் பன், தாம்பரம் பெரியார் பெருந் தொண்டர் தி.இரா.ரத்தினசாமி, அவரது இணையர் ர.ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

‘பெரியார் உலகம்’ கட்டுமான நிதிக்கு  தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது ஆண்டு (டிசம்பர்-2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும்,

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழகப் பரப்புரைப் பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் உலகம் நிதி திரட்டுவதற் காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிறைவாக இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 25.11.25


வெள்ளி, 21 நவம்பர், 2025

கழகத் தோழர் கி.காண்டீபன் மறைவு



பேரமனூர், நவ. 19- பேரமனூர் திராவிடர் கழக பொறுப்பாளர்

கி.காண்டீபன் (வயது 52), 2.11.2025 அன்று காலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகரியம், பேரமனூர், எம்.ஜி.ஆர். தெருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மா. நரசிம்மன் கழக கொடி போர்த்தினார். கழக பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந்தரம் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
உடன் மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு. அருண், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சே. சகாயராஜ், மாவட்ட அமைப்பாளர் அ.சிவ குமார், மாவட்ட துணைப் பொறுப்பாளர் சி.தீனதயாளன், மறைமலை நகர கழகத் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், மு ஏழுமலை, தென் சென்னை மாவட்டச் செய லாளர் செ.ர பார்த்தசாரதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி.பிற்பகல் 3.00 மணியளவில் இரங்கல் உரை ஆற்றினர்.
மாலை 4.00 மணி அளவில் புறப்பட்ட இறுதி ஊர்வலம், வீரவணக்க முழக்கத்துடன் இடுகாடு சென்றடைந்தது., இடுகாட் டில் உடல் புதைக்கப்பட்ட பின் சிறிது நேரம் அமைதி காக்கப்பட்டது.
இடுகாட்டில் அ.தி.மு.க நகர செயலாளர் எம்.ஜி. கே. கோபி கண்ணன், சிந்தனையாளர் பேரவை நிறுவனர் பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
பேரமனூர் நகர கழக தலைவர் கி நீலகண்டன், பேரமனூர் நகர செயலாளர் சு.விஜயராகவன், காட்டாங்குளத்தூர் ம.கருணாநிதி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் முனுசாமி, கி.காண்டீபன் இணையர் கா.அனிதா, மைத்துனர் தினேஷ், மகன் கா.செல்வா, மகள் கா.மலர், குடும்பத்தினர், மறைமலை நகர் ஆட்டோ ஓட்டுநர்கள் கோத்ரேஜ் தொழிற்சாலை ப.மணிவண்ணன், கோ.ஆனந்தராஜ் மற்றும் நண்பர்கள் இறுதிவரை கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்,
சுயமரியாதைச் சுடரொளி கி.காண்டீபன் எண்ணப்படி, குடும்பத்தின ரின் ஒத்துழைப்புடன்; எந்த வகை மூடச் சடங்குகள் இன்றி கழகக் கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 19.11.25


சனி, 15 நவம்பர், 2025

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ''சமூக நீதிக்கான கி.வீரமணி விருது'' வித்யா பூஷன் ராவத்திற்கு வழங்கப்பட்டது



 பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு ''சமூக நீதிக்கான கி.வீரமணி விருது'' வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிந்தார். உடன்: எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், முனைவர் கோ.ஒளிவண்ணன், மருத்துவர் ஆர்.மீனாம்பாள், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர்

இரா.தமிழ்ச்செல்வன்.
வித்யா பூஷன் ராவத்தின்
மகள் விதிதா பிரியதர்ஷினி
(சென்னை, 14.11.2025)

‘‘ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகம் வெளியீடு!



இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் ‘‘வித்யா பூஷன் ராவத்”கள் தேவைப்படுகிறார்கள்!
– திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விருதாளரைப் பாராட்டி உரை!

பெரியார்தான்; தமிழ்நாடுதான்; திராவிட மாடல்தான்
இந்தியாவின் ஒரே நம்பிக்கை!
– விருதைப் பெற்றுக் கொண்டு எழுத்தாளர் வித்யா பூஷன் ராவத் ஏற்புரை!

சென்னை, நவ.15 கிருமிகளை எதிர்க்க உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவை என்பதுபோல், மூடநம்பிக்கைகளை தகர்க்க, புத்தியின் எதிர்ப்பு சக்திக்கு பெரியார் அம்பேத்கர் தேவை என்று ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார். விருதை பெற்றுக் கொண்டு, ’திராவிடர் கழகம், திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பு’ என்று வித்யா பூஷன் ராவத் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.

இரு பெரும் விழாக்கள்!

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” மற்றும் “ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தக வெளியீட்டு விழா! என்று நடைபெற்ற இரு பெரும்  விழாக்கள் நேற்று (14.11.2025),  மாலை 6 மணியளவில், சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளர் – மருத்துவர் ஆர்.மீனாம்பாள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.   எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.  அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெற்றுக்கொண்டு, புத்தகம் குறித்த ஆய்வுரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து நிகழ்வில் தமிழ், ஆங்கில மொழிகள் கலந்து இணைப்புரை வழங்கிய முனைவர் கோ.ஒளிவண்ணன், விருதாளரை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வித்து உரையாற்றினார். விருதுக்கான கருத்துருவை வாசித்த மருத்துவர் சோம. இளங்கோவன், வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு, பலத்த கைதட்டல்களுக்கிடையே 2025 ஆம் ஆண்டுக்கான, “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” விருது வழங்கி சிறப்பித்தார். கழகத் தலைவர் விருதாளருக்கும், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அவரது மகள் பிரியதர்ஷினி அவர்களுக்கும் சேர்த்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து விருதாளரைப் பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாட்சி!

முன்னதாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், “பெரியார் பன்னாட்டு அமைப்பு” தொடங்கப்பட்டதன் பின்னணி மற்றும் இதுவரை விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன. அவர்களின் வரலாற்றை குறுகிய நேரத்தில் படக்காட்சி மூலம் விளக்கி, 1994 இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1996 இல் சமூகநீதிக் காவலரும்; இந்திய அரசின் முன்னாள் பிரதமருமான  வி.பி.சிங் முதல், 2022இல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வரையிலும் 22 சமூகநீதிப் போராளிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அந்த வரிசையில் எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்றும் விவரித்தார். விருது என்பது, விருதுக்கான கருத்துரு அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியிடப்பட்ட ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தின் விலை ரூ.250/- என்றும் சிறப்புச் சலுகையாக ரூ.200/- க்கு கிடைக்கும் என்று அறிவிக் கப்பட்டு, ஏராளமான தோழர்கள் உரிய தொகை கொடுத்து வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டனர்.

திராவிட மாடல்தான் ஒரே நம்பிக்கை!

விருதை பெற்றுக்கொண்ட வித்யா பூஷன் ராவத் தனது ஏற்புரையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் பரப்பி வருகிறார்; திராவிடர் கழகம் தான் திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பாக இருக்கிறது; நாங்கள் தமிழ்நாட்டு மாடலை பின்பற்ற விரும்புகிறோம்; வடநாட்டில் மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை; ஆர்.எஸ்.எஸ். இதைப் பயன்படுத்திக் கொள்கிறது; பெரியார், ஃபூலே, அம்பேத்கர் ஆகியோரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; பெரியார் – ஆசிரியர் வீரமணி – தமிழ்நாட்டின் பங்களிப்பு இந்தியா முழுவதற்கும் பெரிதாகத் தேவைப்படுகிறது; பெரியார் தான் – தமிழ்நாடு தான் – திராவிட மாடல் தான் நம்பிக்கை தருகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.

ஜாதி இருக்கும் வரை
சமூக நீதி இருக்கும்!

இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர்  உரையாற்றினார். ”நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சுற்றுப்பயணத்திற்கு அல்ல, பெரியாரின் தத்துவத்தை பரப்புவதற்குத்தான். மண் நன்றாக இருந்தால் விதைகள் உடனே முளைத்துவிடும். அப்படித்தான் ஆஸ்திரேலியா! மிகக்குறுகிய காலத்திலேயே ஒரு பன்னாட்டு மாநாடு அங்கே நடந்து முடிந்திருக்கிறது” என்றும், அதில் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் காணொலி உரைகள் வழங்கியதை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” பெற்ற வித்யா பூஷன் ராவத் அவர்களைப் பற்றி பேசும் போது, ”வடநாட்டில் தமிழ்நாட்டைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், வித்யா பூஷன் ராவத் மிகச்சரியாக புரிந்துகொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் இந்த விருது தனது பெயரில் இருப்பது தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பெரியார் பெயரில் தான் இருக்க வேண்டும் என்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்டதை எடுத்துரைத்தார். தொடர்ந்து, பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான மருத்துவர்கள் சோம. இளங்கோவன், இலக்குவன் தமிழ், சரோஜா இளங்கோவன் ஆகியோரின் தொண்டுகளை சிறப்பித்துப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் நடைபெற்ற நான்கு பன்னாட்டு மாநாடுகளின் சிறப்பை எடுத்துரைத்தார். ஜாதி இருக்கும் வரை ஜாதி அடிப்படையில் சமூக நீதி அவசியம் என்றார்! ஆகவே நமக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் வித்யா பூஷன் ராவத்கள் தேவைப்படுகிறார்கள். கிருமிகளை எதிர்க்க எப்படி உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவையோ அதுபோல, மூடநம்பிக்கைகளை தகர்க்க, புத்தியின் எதிர்ப்பு சக்திக்கு பெரியார் அம்பேத்கர் தேவை என்றும், இவ்விருது வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது இன்னமும் அவர் அதிகமாகத் தொண்டாற்றுவதை ஊக்கப்படுத்தத் தான் என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார்.

‘பெரியார் உலக’த்திற்கு
நா. எழிலன் எம்.எல்.ஏ. நன்கொடை

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்
நா. எழிலன் ‘பெரியார் திடலின் மாணவனாகிய நான் ‘பெரியார் உலக’த்திற்கு மேலும் 1 லட்சம் வழங்கு கிறேன்’ என்று குறிப்பிட்டு தமிழர் தலைவரிடம் அதற்குரிய காசோலை வழங்கினார்.

கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!

இறுதியில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  சே.மெ.மதிவதனி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், கலைமாமணி கலைவாணன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன், பெரியார் களம் தலைவர் இறைவி, சி.வெற்றிச்செல்வி, சேரலாதன், வேலூர் பாண்டு, தா.கு.திவாகரன், மு.சண்முகப்பிரியன், மு.ரா.மாணிக்கம், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா. இராசு, சிங்கபெருமாள் கோயில் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். உரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘பெரியார் உலகத்திற்கு’நன்கொடை


 சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ‘பெரியார் உலகத்திற்கு’

ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

''ஆஸ்திரேலியாவில் பெரியார்'' புத்தகத்தை மருத்துவர் சோம.இளங்கோவன் வெளியிட, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெற்றுக் கொள்ளுங்கள். கொண்டார்.





- விடுதலை நாளேடு, 15.11.2025

புதன், 12 நவம்பர், 2025

தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 




வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய். ஆர். அய் எதிர்த்து
தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை சைதாப்பேட்டையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு

சென்னை, நவ.11 ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைபாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய்.ஆர்.–அய் எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  இன்று (11.11.2025) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவர்

சென்னை சைதாப்பேட்டை (கலைஞர் பொன் விழா வளைவு) பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டி யன், மருத்துவர் கனிமொழி சோமு, திண்டுக்கல் அய். லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர்
சோ. சுரேஷ், நெய்வேலி ஞானசேகரன், கரு அண்ணாமலை, டைலர் கண்ணன் மற்றும் தோழர்கள் கலந்து
கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொறுப்பாளர்களும், தோழர்க ளும் பெருமளவில் பங்கேற்றனர்.