திங்கள், 18 ஏப்ரல், 2016

போராட்ட வீரர் பட்டியல் அளிப்பு -தென் சென்னை-11.4.16



போராட்ட பட்டியல் குவிகிறது!

ஏப்ரல் 18 அன்று நடைபெறவுள்ள மறியல் போராட்டத்திற்கு பட்டியல் பெறும் கலந்துரை யாடல் கூட்டங்கள் தென் சென்னை யில் 11.4.2016 அன்று மூன்று இடங்களில் எழுச்சியுடன் நடை பெற்றன.
நுங்கம்பாக்கம்
முதல் கூட்டம் நுங்கம்பாக்கம் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லத்தில் 6 மணியளவில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி கடவுள் மறுப்பு கூறி கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார்.
தொடர்ந்து மாவட்டத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன் உரையாற்றினார்.
வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன் உரையாற்றினார்.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா. பார்த்திபன் ஆகியோர் உரையாற்றிய பின், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
அவர் தமதுரையில், நம்முடைய இந்தப் போராட்டமான அர்ச்சகர் உரிமைப் போராட்டம் நம்மைப் பொருத்தவரை ஓர் இழிவு ஒழிப்புப் போராட்டமாகும். இப்போராட்டத்திற்கு திரளாக அனைவரும் வரவேண்டும் என்று உரையாற்றினார்.
தோழர் நுங்கம்பாக்கம் வெற்றிவீரன் நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் வடபழனி செல்வராஜ், சூளைமேடு இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
துணைத் தலைவரிடம் போராட்ட வீரர்கள் பட்டியல் வழங்கப்பட்டது.
மந்தைவெளி
இரண்டாவது கூட்டம் (11.4.2016) இரவு 7 மணியளவில் மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கழக துணைத் தலைவர் கவிஞர் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சூளைமேடு இராமச்சந்திரன், மயிலை ஈ.குமார், ஈழமுகிலன், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
அவரது உரையில், கழகத் தலைவர் போராட்டத் தலைமை யேற்கிறார். மாநிலத் தலைநகரில் பங்கேற்கிறார். இதில் திரளாக தோழர்கள் பங்கேற்று அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும்.
இது ஒரு நீண்ட நெடிய இன இழிவு ஒழிப்புப் போராட் டத்தின் தொடர்ச்சியாகும். சென்னை மண்டலம் முழுவதும் பயணம் செய்து தோழர்களை சந்தித்து வருகிறோம். தோழர் கள் ஆர்வமாக உள்ளனர்.
தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று அரசு அறிவித்தும், பத்தாயிரம் தோழர்கள் பங்கேற்றனர். மூன்றாயிரம் தோழர்கள் சிறை சென்றனர். அப்போராட்டத்தின் நீட்சிதான் இப்போராட்டமாகும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சி.செங்குட்டு வன், டி.ஆர்.சேதுராமன், மணித்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன், கோ.மஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாகப் போராட்டத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வழங்கப்பட்டது.
மயிலை - நொச்சி நகர்
மூன்றாவது கூட்டம் மயிலாப்பூர் நொச்சி நகர் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் இல்லத்தில் 8 மணியளவில் நடைபெற்றது.
கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை வகித்தார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் பிஞ்சு வி.யாழ்ஒளி கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
தொடர்ந்து வடமாட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் உரையாற்றினார்.
இறுதியாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையாற்றினார்.
அவர் தமதுரையில், இந்த போராட்டத்தை நாம் வெற்றி கரமாக நடத்தவேண்டியது அவசியமாகிறது. தந்தை பெரியார் அவர்களால் தமது வாழ்நாளில் இறுதி மாநாடக அறிவிக்கப் பட்டு நடைபெற்ற தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாட்டில் இறுதியாக அறிவித்த போராட்டம் இந்தப் போராட்டமாகும். இம்மாநாடு நடைபெற்று சில நாள்களில் தந்தை பெரியார் மறைந்தார்.
அய்யா அவர்களின் மறைவிற்குப் பின் அன்னை மணியம்மையார் காலத்தில் போர் தொடர்ந்தது. அஞ்சலகம் முன் மறியல் போராட்டத்தை நடத்தினார்.
மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினோம். மயிலாப்பூர் கோவில் முன் மறியல் அறப்போராட்டத்தினை நடத்தினோம். அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பின், கழகத் தலைவர் தமிழர் தலைவர் காலத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி யுள்ளோம்.
தமிழ்நாடு அரசு (கலைஞர் ஆட்சி காலத்தில்) இரண்டு முறை சட்டம் இயற்றியும் இன்னும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கவில்லை.
நாம் நடத்தும் இப்போராட்டம் இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்த உரிமையை பெற்றுத் தரவிருக்கும் போராட்டமாகும்.
தந்தை பெரியாரின் ஆணைப்படி ஜாதியை ஒழிக்க சட்டத்தை எரித்தவர்கள் நம் கழகத் தோழர்கள்.
இந்தப் போராட்டத்தை திராவிடர் கழகம் முன்னின்று நடத்துவதற்கான காரணம் இது ஒரு இன இழிவு ஒழிக்கும் போர். பக்தர்களான அவர்களுக்கு இருக்கும் இந்த இன இழிவை யாரும் ஒழிக்க முன்வராததால் நாம் முன்னின்று செய்கிறோம்.
இந்தியாவின் வரலாற்றில் 83 வயதில் 73 ஆண்டு பொது வாழ்க்கையை உடைய தலைவர் நம் கழகத் தலைவர். அவரது தலைமையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.
தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், கருவறையில் நுழைய தடுக்கப்படுவதன்மூலம் அவர்களின் இன இழிவு நிலை நிறுத்தப்படுகிறது. இதனை தமிழர்களுக்கு உணர்த்தி அனைவரையும் பங்கேற்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் இரா.பிரபாகரன், சந்தோஷ்குமார், சு.கிருஷ்ணமூர்த்தி, சதிஷ், விமல், பிரேம் குமார், பிரேம் சாகா மற்றும் மகளிரணி தோழியர்கள் வி.வளர் மதி, அஜந்தா, பவானி, வி.தங்கமணி, சரண்யா, சூளைமேடு இராமச்சந்திரன், துணைவேந்தன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்று கூட்டங்களிலும் கழகத் தோழர்கள் வெ.கலையரசன், க.கலைமணி, மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுவண்ணை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களின் தலைமையில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள மனித உரிமை போராட்டமான, ஜாதி தீண்டாமை ஒழிப்பு மறியல் போராட்டத்தில் பங்கேற்க வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரணி, இளைஞரணி, மகளிரணி என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள், தோழியர்கள் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்க கழகத் தலைவர் அறிவித்த அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வத் தோடும், மகிழ்ச்சியோடும் பெயர் பட்டியலை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடத்தில் வழங்கினர்.
வடசென்னை மாவட்டத்தில் புதுவண்ணையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் கூட்டம் (9.4.2016) மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மகளிர் பாசறை அமைப்பாளர் த.மரகதமணி கடவுள் மறுப்பு கூறினார்.
பிறகு சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், மாநில தொழிலாளரணி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் மறியல் போராட்டத்தின் நோக்கத்தைப்பற்றி பேசினர். கழக குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் அனைவரும் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தை வலுப்பெறச் செய்வதாக கூறி கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை வழங்கினர்.
இறுதியாக இன இழிவை நீக்க அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டத்தின் நோக்கத்தை கழக துணைத் தலைவர் எடுத்துக் கூறினார்.
இறுதியாக திருவொற்றியூர் ராஜேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
மகளிரணி தோழர்கள் உமா செல்வராஜ், பசும்பொன் செந்தில்குமாரி, விஜயா, சத்தியா, பா.மணியம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரம்பூர்
வடசென்னை மாவட்டத்தின் பெரம்பூர் பகுதி செம்பியம் இராமலிங்கம் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் (9.4.2016) நடைபெற்றது.
சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மை கடவுள் மறுப்பு கூறினார். அனைவரையும் மாவட்டச் செயலாளர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் மறியல் போராட்டத்தையும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தைப்பற்றியும் எடுத்துப் பேசினார்.
சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் மறியல் போராட்டத்தின் நோக்கத்தை கூறினார். மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொள்வோம் என்று கூறினார்.
இறுதியாக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார், ஜாதியைப் பாதுகாக்கும் சட்டத்தை கொளுத்தவேண்டும் என்று கூறியபோது, சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள். அதுபோல ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ள இன இழிவை நீக்கும், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்றார். இந்தப் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் போராட்டமாக அமையவேண்டும் என்றார். சொ.அன்பு நன்றி கூறினார்.
வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன்  கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், வெ.ஞானசேகரன், சு.குமாரதேவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
-விடுதலை,12.4.16
-விடுதலை,12.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக