ஞாயிறு, 23 மார்ச், 2025

துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனார்!-வி.சி.வில்வம் - செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களிடம் நேர்காணல்

 

இயக்க மகளிர் சந்திப்பு (53) துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனார்!-வி.சி.வில்வம்

விடுதலை நாளேடு
கட்டுரை

துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனாரா? அது என்ன கதை?

அப்போது காயிதே மில்லத் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தேன். மறைமலை இலக்குவனார் அவர்களின் வாழ்விணையர் தான், எனக்குப் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். ஒருநாள் கல்லூரி முடித்து வெளியே வரும்போது, ஒருவர் துண்டறிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாங்கிப் படித்தால், அதில் பெரியார் கருத்துகள் இருந்தது. உடனே அது தொடர்பாய் அந்தத் தோழரிடம் பேசினேன். பெரியார் கருத்துகளை நேரடியாக அதுவரை அறிந்ததில்லை. எனினும் எனது தந்தையார் எம்.எஸ்.ஆறுமுகம் வள்ளலார் கொள்கையில் தீவிரமாக இயங்கியவர். மேடைகளிலும் அதுதொடர்பாய் பேசக் கூடியவர்.

எனவே எங்கள் வீட்டிலும் மூடநம்பிக்கைக் கருத்துகளோ, சிலை வழிபாட்டு முறைகளோ இருந்ததில்லை. ஆதலால் பெரியார் கருத்துகளைப் படித்ததும் சீக்கிரம் பிடித்துப் போனது. எனக்குத் துண்டறிக்கை வழங்கிய அந்தத் தோழரின் இயற்பெயர் மனோகரன், சைதை தென்றல் என்று இயக்கத்தில் அழைப்பார்கள். அவர் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றியவர். தோழராக அறிமுகமாகி, நட்பாகி, காதலாகி, இணையராக இணைந்துவிட்டோம்.
வள்ளலார் வழி முற்போக்குப் பாதை என்றாலும், அது மென்மையான முறை. அப்படியிருக்க புரட்சிகர பெரியார்

இயக்கத் தோழரைத் தங்கள் தந்தையார் ஏற்றுக் கொண்டாரா?

சைதை தென்றல் அவர்கள் நேரடியாகவே என் அப்பாவிடம் வந்து பெண் கேட்டார். தொடக்கத்தில் அப்பா மறுத்துவிட, சைதை எம்.பி.பாலு மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி இருவரும் எங்களின் ஜாதி மறுப்பு, தாலி மறுப்புச் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். 1978 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போதில் இருந்தே சைதை தென்றல் மும்மரமாக இயங்கியவர்.

அரசுப் பணியில் இருந்ததால் மனோகரன் என்கிற இயற்பெயர், சைதை தென்றலாக மாறியது. அந்தக் காலத்தில் சைதாப்பேட்டை பகுதித் தலைவராகவும் செயல்பட்டவர். போராட்டங்களில் ஈடுபடுவது, தீவிரமாகத் தம்மை வெளிக்காட்டிக் கொள்வது போன்ற காரணங்களால் இணையருக்குப் பணி உயர்வு என்பது இறுதிவரை கிடைக்கவில்லை.

அந்தளவு தீவிரத்தன்மை கொண்டவரா
உங்கள் இணையர்?

தீவிரம் என்பது அவரின் மிகுந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது.

ம.வீ.கனிமொழி, ம.வீ.அருள்மொழி ஆகிய எங்கள் பிள்ளைகளிடமும், என்னிடமும் கொள்கைகள் குறித்து நிறைய பேசுவார். பெரியார் மற்றும் ஆசிரியரின் வாழ்வியல்கள் குறித்து எடுத்துக் கூறி, அதை எப்படி முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைப்பார். கனிமொழி அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார், அருள்மொழி அரசு வழக்குரைஞராகத் தமிழ்நாட்டில் இருக்கிறார். பெரியாரின் கொள்கை நெறி அவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. இருவருக்குமே ஆசிரியர் அய்யா தான் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆசிரியர் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் அறிவித்தால், இணையரும் பெயர் கொடுப்பார். அரசு ஊழியராக இருப்பதால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஆசிரியர் மறுப்பார். 1982 ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இடம் வேண்டும் என்கிறபோது, எனது தந்தையார் தான் ஒரு பள்ளிக்கூட மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அப்பா இருந்தார். இதற்கு உதவியாக எம்.பி.பாலு உள்ளிட்ட சைதாப்பேட்டை கழகத் தோழர்களுடன் எனது இணையரும் இருந்தார். அந்த மாநாட்டில் நான் முதன்முதலில் பேசினேன். அப்போது நடந்த ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். அப்பா வள்ளலார் கொள்கையில் இருந்தாலும், பெரியார் கொள்கையின் மீதும் உணர்வுடன் இருந்தவர்.

தங்கள் அம்மா குறித்து எதுவும் கூறவில்லையே?

அது மிகப்பெரிய துயரம். எங்கள் அம்மா பெயர் ரமணிபாய். எனக்கு 2 வயது இருக்கும் போதே அம்மா மறைந்துவிட்டார். இப்போது எனக்கு 65 வயதாகிறது. அம்மாவை நான் ஒளிப்படத்தில் கூட பார்த்ததில்லை. அது பெரும் குறை என்றாலும், எனது அப்பாதான், எனக்கு அம்மாவாக இருந்து பார்த்துக் கொண்டார்.‌ என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர்.

2 அண்ணன், 2 அக்கா, கடைசியாக நான். எங்கள் அப்பா தான் சமையல் செய்வது, பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புப் பணிகளைச் செய்வார். உடன்பிறந்தோர் அனைவருமே நல்ல பணியில் இருக்கிறோம். நான் எம்.எட்., படிக்கிற காலத்தில் தந்தையும் என்னை விட்டு மறைந்துவிட்டார்.

அந்தக் காலத்தில் இருந்தே பெரியார் திடல் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனது கல்வி, வேலைத் திட்டம் குறித்து ஆசிரியர் அடிக்கடி கேட்பார். தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை எப்போதும் அவர் கொடுப்பார். எனது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கும் மிக முக்கியமானது. என்னைக் குறித்து அக்கறையோடு விசாரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆசிரியரை எனது தந்தையாகவே உணர்வேன்.

உங்களின் கல்வி நிலை என்ன?

நான் எம்.ஏ., எம்.எட்., முடித்து 10 ஆண்டுகள் பொருளாதார ஆசிரியராகப் பணி புரிந்தேன். பிறகு பி.எல்., முடித்து வழக்குரைஞர் ஆனேன். தொடர்ந்து இளஞ்சிறார்களுக்கான மனோதத்துவம் பயின்றேன். வழக்குரைஞர் தொழிலில் 26 ஆண்டுகள் அனுபவம். இதில் 24 ஆண்டுகளாக இலவச சட்ட உதவி மய்யத்திலும் பணி செய்கிறேன்.
1998 காலகட்டத்தில் வழக்குரைஞர் பணிக்கு மகளிர் மிகக் குறைவாகவே வருவார்கள். இன்றைக்கு ஆண்களுக்குச் சரிநிகராக வந்துவிட்டார்கள். நான் கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்துவேன். கொலை வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு போன்றவற்றை எல்லாம் எடுத்து நடத்தியுள்ளேன். பொதுவாகக் கிரிமினல் வழக்குகளை மகளிர் எடுத்து நடத்துவதில்லை.

திராவிடர் கழகத் தோழர்களை
உங்கள் பார்வையில் எப்படி மதிப்பிடுவீர்கள்?

மிக உயர்வாக மதிப்பிடுவேன். கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. கும்பகோணம் மாநாட்டிற்காக நாங்கள் போகும்போது விபத்தில் சிக்கிக் கொண்டோம். நள்ளிரவு நேரத்தில் துரை.சக்ரவர்த்தி அய்யா எடுத்த முயற்சியால் மீண்டு வந்தோம். அதேபோல ஈரோடு நிகழ்ச்சி முடித்து இரவு 12 மணி வரை பேருந்து இல்லை. பேராசிரியர் காளிமுத்து, சண்முகம் இருவரும் கடைசி வரை இருந்து உதவி செய்தார்கள். பேச்சு, எழுத்து எதுவாக இருந்தாலும் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா ஆலோசனைகள் கூறுவார்கள். அதேபோல மறைந்த பெரியார் சாக்ரடீசு ‘உண்மை’ இதழில் சட்டத்துறை தொடர்பான கேள்வி – பதில் எழுதச் சொன்னார்.

புலவர் இராமநாதன் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாரதிதாசன் கவிதைகள் என்றும் நினைவில் நிற்கும். எனது அப்பா இறந்தபோது இடுகாடு செல்லாத நான், எம்.பி.பாலு அவர்கள் இறந்தபோது இடுகாட்டில் சென்று இரங்கல் கூட்டத்தில் பேசி வந்தேன். “கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப் படுத்தப்படுகிறது” என்பதை வலுவாக நான் நம்புகிறேன்.

தங்களின் இயக்கப் பணிகள் குறித்துக் கூறுங்கள்?

எனக்குச் சொந்த ஊரே சென்னை, சைதாப்பேட்டை என்பதால் பெரியார் திடல் வருகை என்பது எளிதானது. எனினும் திருமணத்திற்குப் பிறகே இணையருடன் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். தென் சென்னை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர், வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர், வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர், வழக்குரைஞரணி மாநில அமைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஆசிரியர் வழங்கி, என்னை இயங்கச் செய்தார்.

அத்துடன் பெரியார் திடலில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடைபெறும் “புதுமை இலக்கியத் தென்றல்” அமைப்பில் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் தலைவர் பொறுப்பிலும் இருந்தேன். கரோனா காலத்திலும் வாரந்தோறும் இணைய வழியாகக் கூட்டங்களை நடத்தினோம். தற்சமயம் வியாழன் தோறும் நடைபெறும் “பெரியார் நூலக வாசகர் வட்டத்தின்” தலைவராக இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஆசிரியர் அவர்களால் செயலவைத் தலைவர் எனும் பொறுப்பிற்கும் நியமிக்கப்பட்டுள்ளேன்.

இயக்கப் போராட்டங்களில் பங்கேற்று
சிறை சென்ற அனுபவம் உண்டா?

1986ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயிட்டுக் கொளுத்தினர். அதில் நானும் கலந்து கொண்டு, சென்னை மத்தியச் சிறையில் 15 நாட்கள் காவலில் இருந்தேன்.

சிறையில் க.பார்வதி, செ.ஹேமலதா தேவி, ஏ.ஜோதி, தையல்நாயகி, பட்டம்மாள், அறிவுக்கொடி, செ.மீரா (ஜெகதீசன்), எம்.சந்திரா, க.கங்கேஸ்வரி, உண்ணாமலை, க.மீனாட்சி, செல்வி இந்திராணி, சொர்ணா (ரங்கநாதன்) உள்ளிட்டோர் ஒன்றாக இருந்தோம். இதில் பெங்களூர் தோழர் சொர்ணா (ரங்கநாதன்) சிறையில் இருந்தவாறே எனக்கு எம்.எட்., படிப்புச் சொல்லிக் கொடுத்தார்.

அதேபோல தாலி அகற்றும் நிகழ்வு 2015 ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்றது. அதை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. உடனே கழகச் சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தை அணுகிய போது, நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் தந்தார். தீர்ப்பைப் பெற்று மகிழ்வாய் வந்த வேளையில், ஆசிரியர் அவர்கள், “இப்போது நாம் அனுமதி வாங்கினாலும் நாளை காலை அவர்கள் மேல்முறையீட்டிற்குச் செல்வார்கள்”, எனக் கூறினார்கள். எனவே 10 மணிக்கு முன்பாகவே நாம் நிகழ்ச்சியை நடத்திவிட வேண்டும் என அறிவித்து, அவ்வாறே தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் அது குறிப்பிடத்தகுந்தது. இது பெரியார் மண்தான் என நிரூபித்த தருணங்களில் அதுவும் ஒன்று எனத் தம் இயக்க வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள்!

செவ்வாய், 18 மார்ச், 2025

அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

அன்னை மணியம்மையார் நினைவு நாள்

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

 அன்னை மணியம்மையார் நினைவு நாள் : கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை!

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்

திராவிடர் கழகம்

அன்னையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மரியாதை

சென்னை, மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 47ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னையார் சிலைக்கு மலர் மாலை
தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைக்கத் தன்னை அர்ப்பணித்த தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2025) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணியினர் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலமாகச் சென்று மலர் மாலை அணிவித்தனர்.

அய்யா, அம்மா நினைவிடங்களில் மரியாதை
இதையடுத்து பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் கழக மகளிர், அணியினர் பாசறையினரால் அன்னை மணியம்மையார் நினைவிடம். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு, திராவிடன் நிதி, பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


பங்கேற்றோர்


இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்,

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பெரியார் யுவராஜ், கரு.அண்ணாமலை, விருகை செல்வம், வெ.கண்ணன், டி.ஆர்.சேதுராமன், ச.மாரியப்பன், அரங்க.இராஜா, அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை பாலு, பா.மேகராஜன். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், சி.பாசுகர், நா.பார்த்திபன், சி.காமராஜ், கோ.தங்கமணி, சொ.அன்பு, அ.புகழேந்தி, த.மு.யாழ்திலீபன், சு.பெ.தமிழமுதன்.
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஆவடி – பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், சக்திவேல், முகப்பேர் முரளி, படப்பை சந்திரசேகரன், திருவொற்றியூர் பெ.செல்வராசு, ஓவியர் பெரு.இளங்கோ, சரவணன், ச.சனார்த்தனன், மு.நா.இராமண்ணா, இருதயநாத், தஞ்சாவூர் கே.கருணாநிதி, ப.பிரசாத், நம்பியூர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கழக மகளிரணி
இறைவி, சண்முகலெட்சுமி, மா.தமிழரசி, சீர்த்தி, செ.பெ.தொண்டறம், நூர்ஜகான், மு.பவானி, வி.வளர்மதி, த.மரகதமணி, செ.உமா, ராஜேஸ்வரி, இ.இந்திரா, பூங்குழலி, இலக்கியா, முகப்பேர் செல்வி, பெரியார் பிஞ்சுகள் மகிழன், பிரபு, யாழிசை மற்றும் திரளான மகளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

சீர்காழியை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் கு.ந.இராமண்ணா – ேஹமா ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு 14ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக் குரைஞர் த. வீரசேகரன். (இதுவரை வழங்கியது ரூ.55,000)

திராவிடர் கழகம்

அன்னையார் தலைமையில் நாம் எடுத்த உறுதிமொழி!

பெரியார் கல்வி நிறுவனங்கள்
தோழர்களே, தோழர்களே,
தந்தை பெரியார் மறைந்த நிலையில் திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் கூடிய நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நாம் எடுத்த தீர்மானம் என்ன?
“திராவிடர் கழகத்தவராகிய நாங்கள், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்!” (6.1.1974)
இதன்படி அன்னையார் தலைமையிலும், அவர்களின் மறைவிற்குப் பிறகும் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம்; ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் மலரும் வரை நம் பணிகள் தொடரும்! தொடரும்!!
அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார் தயார் என்று அன்னையார் நினைவு நாளாகிய இன்று உறுதி எடுத்து உழைப்போம்! உழைப்போம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

திங்கள், 17 மார்ச், 2025

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத்தின் சார்பில் மரியாதை [சென்னை – 10.3.2025]

 

விடுதலை நாளேடு
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்


அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் தொண்டற த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 10- தொண் டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்தும் மரியாதை செலுத் தப்பட்டது.
அன்னையார் சிலைக்கு மாலை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகள் வாழ வைத்த அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) காலை 10 மணியளவில் திராவிடர் கழகம், கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையர் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர் ஊர்வலமாக சென்று மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

தலைமையில் உறுதிமொழி
இதையடுத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடம் ஆகியவற்றில் மலர் வளையம் வைக்கப்பட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உறுதிமொழி கூற கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடத் தொழிலாளரணி, திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

சிங்கப்பூர் தோழர்கள்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி கலைச்செல்வம் ஆகியோர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மருத்துவர் மீனாம்பாள், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமுதரசன், இருதயநாத், முனைவர் ஜெயக்குமார், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு மற்றும் மயிலை டி.ஆர்.சேதுராமன், தாம்பரம் சு.மோகன்ராசு, கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, சி.காமராஜ், பி.சி.ஜெயராமன், தமிழினியன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, தென்.மாறன், ஜெ.ஜெனார்த்தனன், மு.இரா.மாணிக்கம், சி.செல்லப்பன் மற்றும் எராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மகளிரணியினர்…

இறைவி, செ.பெ.தொண்டறம், த.மரகதமணி, ஞானதேவி, கே.கனிமொழி, அருணா பத்மாசூரன், இரா.சு.உத்ரா பழனிசாமி, கே.மீனாம்பாள், கே.பிரித்தா, வி.வளர்மதி, ஆர்.ஏ.காவேரி, ஜி.வாணி, பி.இராஜேசுவரி, தங்க.தனலட்சுமி, மோகனப்பிரியா, ஜி.தங்கமணி, மு.இலக்கியா, மலையரசி கலைச்செல்வம், வீ.கா.தா.பெரியார்செல்வி, அன்பரசி, முத்துலட்சுமி, ஆதிலட்சுமி, நாகவள்ளி, மாலதி, இந்திரா, ரவணம்மாள் மற்றும் ஏராளமான மகளிர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள்


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் சிலை, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர் [சென்னை – 10.3.2025]

செவ்வாய், 4 மார்ச், 2025

ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் போர் முழக்கம்

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

* 1938ஆம் ஆண்டிலேயே ஹிந்தியை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியவர் தந்தை பெரியார்

* ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு!
* ஹிந்தியை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு என்பதுதான் ஜனநாயகமா?
* இது வெறும் கட்சிப் போராட்டமல்ல – மக்கள் போராட்டம்
* 234 இடங்களிலும் எங்களை வெற்றி பெற வைக்கப் போகிறீர்கள்!
இறுதி வெற்றி எங்களுக்குத்தான் – நாங்கள் இங்கு
ஒன்றுபட்டு நிற்கிறோம் – போர்ச் சங்கு ஊதுகிறோம்!

சென்னை, பிப்.19 தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கான 234 இடங்களிலும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும் நிலையை ஹிந்தியை திணிப்பதின்மூலம் ஒன்றிய அரசே ஏற்படுத்துவதாகவும், ஒன்றுபட்டு நிற்கின்ற எமக்கே இறுதி வெற்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
நேற்று (18.2.2025) மாலை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மும்மொழித் திணிப்பைக் கண்டித்து இந்தியா கூட்டணியின் சார்பில் சென்னை சிங்காரவேலர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரைற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் கூடியிருக் கின்ற இந்தக் கூட்டம் – இந்தக் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் புதுமையான ஓர் அறைகூவல் கூட்டம்.
நம்மை வம்புக்கு இழுக்கக் கூடிய ஓர் ஆட்சி – ஒன்றிய ஆட்சி- காவி ஆட்சி – ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி- தூங்காதே, எங்களை எதிர்த்து நில் என்று சொல்வதற்காக ஹிந்தி திணிப்பின் மூலமாக, தங்களுடைய முடிவுரையை எழுதக் கூடிய ஓர் ஆட்சி – இப்போது தயாராக வந்திருக்கின்ற நேரத்தில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு மாறுதலை தெளிவாக நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அய்யா, அண்ணா தத்துவம்
இங்கே அமைச்சர்கள் இருக்கிறார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள், போராட்டக் களத்தையே வாழ்வாகக் கருதிக் கொண்டிருக்கின்ற எண்ணற்ற தோழர்கள் இங்கே இருக்கிறார்கள். இவ்வளவு திரளாக வந்திருக்கக்கூடிய மக்கள், கண்டனம் தெரிவிக்கக்கூடிய இந்தக் கூட்டத்தினுடைய அடிப்படை என்னவென்று சொன்னால், இதுவரையில் கண்டன ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி என்று சொன்னால், அதில் தலைவர்கள் இருப்பார்கள், பேசுவார்கள்.
ஆனால், இங்கே நம்முடைய துணை முதலமைச்சர் உள்பட, அமைச்சர்கள் உள்பட எல்லோரும் கலந்துகொள்கிறார்கள் என்றால், அண்ணா அவர்கள் சொன்ன தத்துவம், அய்யாவின் கருத்தோட்டம் இவை அத்துணையும் இங்கே முன்னால் நிற்கிறது- இந்தத் திணிப்பை எதிர்க்கின்ற, கண்டனத்தைத் தெரிவிக்கின்ற கூட்டம் இது!
மிரட்டிப் பார்க்கிறார்கள்!
அது என்னவென்று சொன்னால், அவர்கள் மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்; இந்த ஆட்சியை கொஞ்சம் உருட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

நிதியைத் தராமல் நாம் கொஞ்சம் இழுத்துப் பார்த்தால், இவர்கள் வழிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், உங்கள் கனவு பலிக்காது; இது தமிழ் மண்; இது பெரியார் மண், திராவிட மண்; இந்த மண் உரிமை முழக்கத்தைச் சொல்லக்கூடிய மண் என்ற காரணத்தினால்தான், இங்கே எங்கள் துணை முதலமைச்சரிலிருந்து, அமைச்சர்கள்வரை இந்தப் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள், கலந்து கொண்டிருக்கின்ற தலைவர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இரு மொழித் திட்டத்திற்கு வித்திட்ட நம்முடைய அண்ணா அவர்கள், முதலமைச்சராக இருந்த காலகட்டத் திலும் சொன்னார்கள்; பல நேரங்களிலும் சொன்னார்கள். எங்களை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கக் கூடாது என்பதற்காகச் சொன்னார்கள்.

‘‘எங்களுக்குப் பதவி என்பது அது மேல் துண்டு. ஆனால், கொள்கை என்பது எங்களுக்கு வேட்டி போன்றது -அதை மறந்துவிடாதீர்கள்’’ என்று அண்ணா சொன்னார்!
அதனை உணர்ந்த காரணத்தினால்தான், நாம் ஒன்றிய அரசை எதிர்த்து, அவர்களுடைய கொள்கைகளை எதிர்த்து முழங்கப் போகின்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா? என்று யாரும் நினைக்கவில்லை.

தாளமுத்து நடராசன் பரம்பரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தில், அமைச்சர்களாக இவர்கள் வரவில்லை; கொள்கைக்காரர்களாகத்தான் வந்திருக்கிறார்கள். தாளமுத்து, நடராசன் பரம்பரை என்பதைக் காட்டுவதற்காகத்தான் வந்திருக்கின்றார்கள்.
அந்த உணர்வோடுதான் இந்தக் கண்டனக் கூட்டம், தலைவர்களின் முழக்கங்கள் அத்தனையும் நடைபெறு கின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றெல்லாம் தொடங்கி, ஒரே கலாச்சாரம் என்று வந்தார்கள்.
அந்த ஒரே கலாச்சாரத்தில் என்ன இருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, அந்தச் சூட்சமத்தை தந்தை பெரியார் அவர்கள், 1938 இல், தமிழறிஞர்களை கூட்டி, சிறப்பாகச் சொன்னார்.

வட சென்னைதான் தொடக்கம்!
நம்முடைய மொழி என்பதற்காக மட்டும் நாம் எதிர்க்கவில்லை. இதே வடசென்னைதான் அப்போதும் அடித்தளமிட்டது. அதே வடசென்னைதான் மீண்டும் ஒரு போர்க் குரலை எழுப்புவதற்கு களம் காணுவதற்காக வந்திருக்கிறது. தொடக்கம் இங்கேதான் – முடிவும் இங்கேதான் நடக்கப் போகிறது.
எங்கே தொடங்கினார்களோ ஹிந்த ஆதிக்கத்தை – அதன் முடிவு வரக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு அடையாளம் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய துறையில் மிக முக்கியமாக இருக்கக்கூடியது – பண்பாட்டுத் துறை.
ஹிந்தியை நீங்கள் எதிர்க்கிறீர்களே என்று சொன்னார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் ஹிந்தியைத் திணித்தார்கள். இப்போது இருக்கின்ற காவி அமைச்சர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

ஆச்சாரியாரின் அறைகூவல்!

நீங்கள் ராஜகோபாலாச்சாரியாரைவிட மிகவும் புத்திசாலி என்றோ, அரசியல் வியூகத்தை வைத்திருக்கின்றோம் என்றோ யாரும் தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
எந்த ஆச்சாரியார்?
அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பித்த அந்தப் போராட்டம் – அறிஞர் அண்ணா, ‘‘சர்வாதிகாரி’’ என்று அந்தப் போராட்டத்தில் சர்வாதிகாரியாக இருந்தார். இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியவேண்டும்.
இன்று, இளைஞர்களுக்கே தலைமை தாங்கக் கூடிய ஒருவர், இந்தக் களத்திலே நின்று கொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அவருக்குப் பதவி முக்கியமல்ல; அவருக்குத் துண்டு முக்கியமல்ல; வேட்டிதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கொள்கைதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எங்களுடைய துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் என்ற முறையில் அவர்கள் இங்கே வரவில்லை. அதற்குப் பதிலாக, இந்த இயக்கத்திற்காக உயிரைக் கொடுக்கக் கூடிய தொண்டர்கள் என்ற உரிமையோடு அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள் என்று சொன்னால், இங்கே எழுதாத இந்த சுவரெழுத்தை எழுதிக் கொள்ளவேண்டும்.
அண்ணா அவர்கள் அந்த முழக்கத்தைத்தான் சொன்னார்கள். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போர் நடந்தது என்று வரலாறு உண்டு. இந்த வரலாற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
ராஜகோபாலாச்சாரியார் அன்றைக்கு தோற்றுப் போனார். ஆனால், இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது – வெற்றி பெற்றே தீரும் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், ஒன்றை அடையாளத்திற்குச் சொல்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இங்கே வந்து இருக்கக்கூடிய என்.வி.என். சோமுவின் மகள். அன்று நடந்த போராட்டத்தில் கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் ஹிந்திப் போராட்டத்திற்காக சிறைச்சாலையேகினர். சிறையிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டபோது, ஆட்சிக்கு வருவோம்; நாம் அமைச்சர்களாக ஆவோம்; அல்லது பதவிகளைப் பெறுவோம் என்று நினைக்கவில்லை.

பதவியல்ல முக்கியம்!
உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் இருக்கிறதே தவிர, வெறும் பதவி என்பது உரிமைப் பெறுவதற்கான ஒரு வழி – ஒரு மார்க்கமே தவிர வேறொன்றுமில்லை.
அப்போது ஆச்சாரியார், ‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா?” என்று கேள்வி கேட்டார்.
அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார்.
காலத்தின் கோலம் எப்படி ஆயிற்று என்று சொன்னால், ஹிந்திதான் இருக்கும் என்று சொன்னார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு நாணயமான எதிரி என்கின்ற காரணத்தினால் வெளியிட்டார்.
‘‘ஹிந்தியை நாங்கள் கட்டாயப் பாடமாக்குவதற்கு அடிப்படை, வெறும் ஹிந்திக்காக அல்ல; சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவேண்டும்’’ என்பதற்காகத்தான் என்று, லயோலா கல்லூரியில் அவர் பேசினார்.
இப்போதும் புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுடைய சூட்சமத்தை! வெறும் ஹிந்தித் திணிப்புக்காக மட்டும் நாம் எதிர்க்கவில்லை. திணிப்பு எங்கே இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், திராவிடர் இயக்கமும், தி.மு.க. கூட்டணியும் எந்நாளும் எதிர்த்தே தீரும் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அதைவிட ஆழமான ஒரு தத்துவம் உண்டு – அதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு!

மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்கின்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வதற்காகச் சொல்கிறேன்.
இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு – சமஸ்கிருதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு – பண்பாட்டுப் படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஆட்சி மொழிகள் பகுதியில் இடம்பெறுகிறபோது என்ன சொல்லியிருக்கின் றார்கள் என்று சொன்னால்,
According to the Indian Constitution, “Hindi in Devanagari script” is the official language of the Union, as stated in Article 343(1)
தயவு செய்து இதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். Devanagari script என்று சொன்னால், தேவ பாஷை.
சமஸ்கிருதம் மட்டும்தான் தேவ பாஷையாம். நம்முடைய தமிழ் மொழி நீஷ பாஷையாம்.

செம்மொழியானது கலைஞரின் முயற்சியால்

தமிழ் மொழியை, செம்மொழியாக்கித் தந்த தலைவருடைய மேடை இந்த மேடை. கலைஞர் அவர்கள் அதனை செய்தார்.
அப்படிப்பட்ட தமிழ் மொழியை, செம்மொழியை நீஷ பாஷை என்று சொல்கிறார்கள்.
கோயிலில் கடவுளுக்குத் தமிழ்மொழி புரியாதா? என்று கேட்டவர்கள் நாம். இதோ செய்கிறோம் என்று சொல்லி, தமிழில் அர்ச்சனை என்று சாதனை செய்த ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி.
எனவே, இந்த ஆட்சி தத்துவங்களை, கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சி.
அந்தக் காலட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘இது சமஸ்கிருத ஆதிக்கம்’’ என்று. தமிழறிஞர்கள், மறைமலையடிகள் போன்றவர்கள் எல்லாம் திரண்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆட்சிக் காலத்தில், ஹிந்தியை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. அப்போராட்டத்தில் எங்கள் தோழர்களைப் பலியாக்கி, தாளமுத்து நடராசனுக்கு அண்மையில்தான் நினைவிடத்தைப் புதுப்பித்தார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் – திராவிடத்தினுடைய தனிப்பெரும் தலைவராக இன்றைக்கு இந்தியாவே பார்த்து அலறக்கூடிய அளவிற்கு அவருடைய முழக்கங்களும், உரிமைகளும் இருக்கின்றன.
நீ, திமிர்த்தனமாகப் பேசாதே, உன் திமிரை இறக்கிக் காட்டக்கூடிய ஆற்றல், தமிழ் மண்ணுக்கு உண்டு; தமிழர்களுக்கு உண்டு என்று அவர்கள் உரையடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆச்சரியார் என்ன சொன்னார்?
அதே ராஜகோபாலாச்சாரியார், பிறகு என்ன சொன்னார் தெரியுமா?
யாரோ ஒருவர் இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கக்கூடிய அவருக்கு நாங்கள் சொல்கிறோம்.
ராஜாஜியை நீங்கள் வெறும் கவர்னர் ஜெனரலாக மட்டுமே படித்திருப்பீர்கள்; ஆனால், அதே ராஜாஜிதான், 1938 இல், ஹிந்தியைத் திணித்தார்.
‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கயரா?’’ என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. இதுபோன்ற மேடைகளில், ஆச்சாரியாரையே அண்ணா அவர்கள் அழைத்து, ஒரு முழக்கம் கொடுத்தார்.
இந்த வரலாற்றை, இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் – மும்மொழித் திட்டம்தான் என்று ஆணவத்தோடு பேசக்கூடியவர். இன்னுங்கேட்டால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல, திமிர்த்தனத்தோடு பேசினால், உன் திமிரை இறக்கிக் காட்டுவதற்குத் தமிழ்நாட்டில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கின்றார்.

அன்றைக்கு என்ன நடந்தது தெரியுமா? உங்களுக்கு நினைவூட்டுகிறோம்; டில்லிக்கு நினைவூட்டுகிறோம்.
ஆச்சாரியார், இதுபோன்ற மேடையில் அமர்ந்தார்; திராவிட மேடையில் வந்து அமர்ந்தார். அப்படி அமர்ந்தது மட்டுமல்ல, ஒரு புதிய முழக்கத்தைக் கொடுத்தார்.
வாழ்நாளிலேயே பெரியார், அந்த வெற்றியைப் பார்த்தார்; அண்ணா பார்த்தார், இந்த இயக்கம் பார்த்தது.
இன்னமும் உங்கள் காலத்திலும் காட்டப் போகிறோம்; நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள்.
ராஜகோபாலாச்சாரியார் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘Hindi Never; English Ever’’ என்று சொன்னார்.
எந்த ஹிந்தியை ஆச்சாரியார் திணித்தாரோ, அந்த ஆச்சாரியாரையே பணிய வைத்து, வளைய வைத்தது, இந்த இயக்கம், ஹிந்திக்கு இங்கே வேலையில்லை என்று சொல்ல வைத்தது.

English Ever என்பது அப்புறம்; Hindi Never என்பதற்கு என்ன பொருள்?
ஒருபோதும் ஹிந்தி வராது என்று, கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஆச்சாரியார் சொன்னாரே, அவரைவிட நீங்கள் என்ன மிகப்பெரிய அறிவாளிகளா?
எனவே, இந்த மேடை வெறும் அலங்கார மேடையல்ல; அறைகூவல் மேடையாகும்.
நிதிக்கும் மறுப்பு – நீதிக்கும் மறுப்பு!
அரசமைப்புச் சட்டத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமை இது. நிதி வேண்டும் என்று உங்களிடம் கேட்டபோது, நிதியையும் மறுக்கிறீர்கள்; நீதியையும் மறுக்கிறீர்கள்.
சமூகநீதிக்கும் இடந்தர மறுக்கிறீர்கள். உங்களிடத்தில் நாங்கள் சலுகையோ, பிச்சையோ கேட்கவில்லை. நாங்கள், எங்களுடைய பணத்தைத்தான் உரிமையோடு கேட்கிறோம்.

எனவேதான், எங்களுடைய உரிமைகளை நிலை நாட்டுகின்ற உரிமைப் போராட்டம்தான் இந்தப் போராட்டம்.
எனவே, இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்ற நேரத்தில், ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஏனென்றால், அடுத்து, நம்முடைய இளைஞர்களை எழுப்பி, இந்த ஆட்சியினுடைய கொள்கை என்ன? என்பதை எடுத்துக் காட்டும் வகையில், ‘‘முறியடிக்கப்படாத முப்பெரும் சாதனைகள்’’ என்று புத்தகமே போட்டிருக்கின்றோம்.
அண்ணா அவர்கள் ஓராண்டு ஆட்சியில் இருந்தார்கள். அந்த ஓராண்டு ஆட்சிக்காலத்தில் அண்ணா அவர்கள் பேசிய பேச்சு ஆவணம் போன்றது.
இங்கே நம்முடைய வைகோ அவர்கள் சிறப்பான முறையில் அதனைக் குறிப்பிட்டார்கள்.

அண்ணாவின் உருக்கமான பேச்சு!
அண்ணா அவர்கள் பேசும்பொழுது அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் நான்.
அண்ணா அவர்கள் உருக்கமாக பேசினார். உடல்நலக் குறைவோடு பேசினார். கலைவாணர் அரங்கத்தில்!
அப்போது அவர் சொன்னார், ‘‘நங்கள் மூன்று பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றோம்.
ஒன்று, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம்.
இரண்டு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும். நடந்த திருமணங்களும் செல்லும்; நடக்கும் திருமணங்களும் செல்லும்; இனி நடக்கப் போகின்ற திருமணங்களும் செல்லும்.
மூன்றாவது, இருமொழிக் கொள்கைதான் தமிழ் – ஆங்கிலம்தான்! மூன்றாவது மொழிக்கு இங்கே இடமில்லை என்று தெளிவாகச் சொன்னார்.

ஓராண்டு காலத்தில், இந்த முப்பெரும் சாதனைகளைச் செய்திருக்கின்றோம். நான் கேள்விப்பட்டேன், இங்கே இருக்கின்ற ஆதிக்கவாதிகள் எப்படியாவது இதனை மாற்றிவிடவேண்டும் என்று ஆட்சியைக் கலைத்து விடலாம் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று என் காதில் விழுந்தது.
உங்களால் முடியுமா? என்றால், உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எதையும் செய்யலாம் என்பதை நான் தெளிவாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒன்றே ஒன்று.
அது என்னவென்று சொன்னால்,
தமிழ்நாடு பெயரை பழையபடி சென்னை மாகாணமே இருக்கவேண்டும்; சுயமரியாதைத் திருமணம் செல்லாது; தமிழ்நாட்டில் இருமொழித் திட்டத்தை எடுத்துவிட்டு, மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வரலாம் என்று நீங்கள் முயற்சி செய்வீர்கள். அந்த அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். ஆட்சியைப் பயன்படுத்தி செய்யலாம் என்று நினைப்பீர்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் செய்கின்ற நேரத்தில், ஓர் அச்சம் உங்களை உலுக்கும்; இதைச் செய்துவிட்டு வெளியே போக முடியுமா? என்கிற அச்சம் உங்களை உலுக்கும். அந்த அச்சம் உங்களை உலுக்கும்பொழுதெல்லாம், அண்ணாதுரைதான் இந்த நாட்டை எந்நாளும் ஆளுகிறான் என்று பொருள்” என்று அண்ணா விளக்கம் சொன்னார்.
இதற்கு என்ன அர்த்தம்?

எங்கள் போரட்டம் தொடரும்!
அண்ணாவினுடைய ஆட்சி, திராவிட ஆட்சி, பெரியார் மண்ணின் ஆட்சி என்று சொன்னால், என்றைக்கும் இந்தப் போராட்டம் தொடரும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதற்கு அடையாளம்.
எனவே நண்பர்களே, இது உலைக்களத்தில் அடித்திருக் கின்ற முதல் வாய்ப்பு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு போர்ச் சங்கு முழக்கம். இது வெறும் கண்டன முழக்கமல்ல. போர்ச் சங்கு ஊதியாகிவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தோழர்களே, தயாராக இருக்கவேண்டும்; தயாராக இருக்கவேண்டும்.
இன்னுங்கேட்டால், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், 200 இடங்களில் அல்ல; 234 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்வதற்காகத்தான் – இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
நீங்கள் வேகமாகச் செல்லுங்கள்; விரைவாக வெற்றியும் எங்களிடம் வரும்.
வெல்க தமிழ்!
வீழ்க திணிப்பு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.



அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி முழக்கம்!


தமிழ்நாடு