– திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் – திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப்பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வீரமர்த்தினி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். (சென்னை, 3.6.2026)
கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்! முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!
கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்! முதலமைச்சரின் திருச்சி உரை – மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!
சென்னை, ஜூன் 3 ‘‘கலைஞர் பிறந்த நாள் என்பது ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்! முதலமைச்சரின் திருச்சி உரை – பொதுவானவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல!’’ என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2026) அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து, பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’
தன்னைப்பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தெளிவாகப் பிரகடனப்படுத்தினார்!
தந்தை பெரியார் அவர்களுடைய ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் சிறப்பாகப் பயின்று, எழுத்தாற்றல், பேச்சாற்றல், கருத்தாற்றல், அரசியல் ஆளுமை ஆற்றல், போராட்டக் களத்தில் நின்று வென்று காட்டக்கூடிய அறப்போர் களத்தினுடைய ஆற்றல் இப்படிப் பல்வகையான ஆற்றல்களைத் தன்னகத்தே அடக்கி, தானே ஒரு வரலாறாக, அந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், இனி வரக்கூடிய தலைமுறைக்கும் ஆக்கிய ஓர் அற்புதமான சீரிய பகுத்தறிவுவாதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அண்ணா, கலைஞருக்குப் பிறகு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தொடர்ந்து செய்தார்!
தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவந்தொட்டு ஈர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட அந்த உணர்வை, அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் விடாதது மட்டுமல்ல, அவருக்குப் பிறகும், இந்த இயக்கம், எப்படி அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான வரலாற்றை உருவாக்கினார்களோ, அதுபோல, கலைஞருக்குப் பிறகு, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைத்து நம்முடைய அருமைத் தளபதி ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகராக’ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
எந்த ஆட்சி வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய திட்டங்களைப் புறந்தள்ளி, ஆட்சியைச் செய்ய முடியாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அகில இந்தியா மட்டுமல்ல, உலகத்தினுடைய பல பகுதிகளிலும் அந்தத் திட்டங்கள் பரவியுள்ளன.
பல ஆண்டுகால வரலாறு!
‘கலைஞர்’ என்ற, ‘திராவிடம்’ என்ற பெரிய ஆலமரத்திற்கு பல ஆண்டுகால வரலாறு உண்டு. நீதிக்கட்சியில் தொடங்கி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்றெல்லாம் அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.
இன்றைக்கு சிலர் நினைக்கிறார்கள், ‘திராவிடம் இல்லாமல் போய்விட்டது; காணாமல் போய்விட்டது’’ என்று அலட்சியமாக நுனிப் புல் மேய்கிறார்கள்.
திராவிடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. திராவிடம் என்றும் வாழும்; அதை வரலாறு என்றும் சொல்லும்!
கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் – ‘திராவிடர் எழுச்சி நாளாக’’ கொண்டாடப்படுகிறது!
ஆகவேதான், தாய்க்கழகமான திராவிடர் கழகம், இன்றைக்கு இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், கலைஞர் அவர்களுடைய 103 ஆம் ஆண்டு பிறந்த நாளினை, ‘‘திராவிடர் எழுச்சி நாளாக’’ தமிழ்நாடு மட்டுமல்ல, கருநாடக மாநிலத்திலும், மராட்டியத்திலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கம்போல பரப்புரை விழா நடத்துகிறது. தமிழின உணர்வாளர்களும், திராவிடப் பற்றாளர்களும் ஓரணியில் திரண்டு இதைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
எனவேதான், இது முழுக்க முழுக்க ஆழமான, அழுத்தம் கொண்ட, பல கொள்கை விழுதுகளை, பழுதில்லா விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போன்ற ஒரு திராவிடத் தத்துவம்!
தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல; ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம்!
ஆகவே, கலைஞருடைய பிறந்த நாள் என்பது, ஒரு தனி மனிதருடைய பிறந்த நாள் அல்ல. ஒரு தத்துவத்தினுடைய பாதுகாப்புப் பீடம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, கலைஞர் வாழ்க! திராவிடம் வெல்க! என்ற உறுதியோடு, தாய்க்கழகமான திராவிடர் கழகம் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறது.
அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல!
செய்தியாளர்: திருச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: முதலமைச்சருடைய முதல் பேச்சு, திருச்சியில் தொடங்கியது. ஆனால், இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவென்று சொன்னால், அவர், தன்னை ‘‘முதலமைச்சர்’’ என்பதை நினைவில் கொள்ளாமல், முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதைப்போலவே அவர் பேசியிருப்பது, மற்றவர்களால் முகம் சுழிக்கப்படுவது மட்டுமல்ல, அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இதுபோன்ற தன்னுடைய பேச்சு முறையை மாற்றிக் கொள்ளவேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கொள்கைத் தெளிவுள்ளவர்களுக்கும் அவருடைய உரை ஏற்புடையதல்ல.
முதலமைச்சருடைய முக்கியமான கடமை என்ன?
இது ஒரு கட்சியினுடைய அறிவுரையோ, விமர்சனமோ அல்ல. ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சி, ‘‘ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம்’’ என்று சொல்லும்போது, எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகளைச் சொல்கிறார்கள் என்பதை நுணுகி ஆராய்ந்து, அதற்குரிய பதிலையும், தம் ஆட்சியின் கொள்கை என்ன என்பதையும் மக்களுக்கு விளக்குவதுதான், முதலமைச்சருடைய முக்கியமான கடமையாகும்.
ஆனால், அவருடைய திருச்சி பேச்சு, மாற்றத்தைத் தரவில்லை, ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது.
செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், அடுத்தடுத்து த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய நிகழ்வைப் பார்க்க முடிகிறது; இது சரியான நகர்வுதானா?
தமிழர் தலைவர்: இது அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. எங்களிடம் அல்ல!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒன்றிய அரசு பணிகளில் பிற்ப்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிரப்ப மறுக்கும் பாஜக வை கண்டித்து மார்ச் 03 ம் தேதி திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி 27.02.26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை நடேசன் சாலை மற்றும் வி.பி.இராமன் சாலை சந்திப்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ச.மகேந்திரன் தலைமையில்
தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ,மாவட்ட துணைத்தலைவர்
மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை,
மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அ.அன்பு ,
அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தொடக்கவுரையாற்றினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் மற்றும்
துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ச.மாரியப்பன், கோடம்பாக்கம்
வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)
பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்)
வி.தங்கமணி, (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)
வி.யாழ்ஒளி, மாணவரணி
ஜெ.சொப்பனசுந்தரி, நொச்சி நகர்
மு.பாரதி, நொச்சி நகர்
த.பாரதி, மயிலாப்பூர்
வீ.லீலாவதி
சு. சூரியா
உதயசூரியன், அய்ஸ் அவுஸ்
ம.தி.பெரியார்ஆதவன்(மாணவரணி)
ம.தி.பெரியார்இனியன்(மாணவரணி)
கா.சுந்தர்
எஸ்.செல்வம்,எம்.டி.சி.திருவல்லிக்கேணி
ம. பூவரசன்
த.மு. யாழ்திலீபன்
எஸ்.கே.தேவன்
தினேஷ்குமார்
ரா.அஸ்தின்
எஸ்.ஏழுமலை
ஓட்டேரி கார்த்திக்(வடசென்னை) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்
கூட்ட இறுதியில் ச.தாஸ்(கோட்டூர்புரம்) நன்றி கூறினார்.
அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் சிறப்புரை
தென்சென்னை, மே 21– தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
தேர்தலுக்கு பிந்தைய களச்சூழல், அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
தீர்மானங்கள்
மாதம் ஒரு தெருமுனை பிரச் சாரக் கூட்டம் நடத்துவது.
சுவர் விளம்பரம் செய்வது.
மாதம் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
சிலருக்கு மட்டுமே பெயரோடு, ஊரும் ஒட்டிக் கொள்ளும். அந்த வகையில் ‘முத்தையன்’ என்பதைவிட, ‘தாம்பரம் முத்தையன்’ என்றாலே அனைவருக்கும் தெரியும். அதுவும் மன்னார்குடியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பைங்காநாடு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அங்கிருந்து சென்னை வந்து, அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்ட தாம்பரம் முத்தையன் குறித்து இந்த வாரம் பார்ப்போம்!
அய்யா வணக்கம்! நீங்கள் சென்னை வந்த கதையைக் கூறுங்கள்?
பக்கிரிசாமி-குஞ்சம்மாள் ஆகியோருக்கு 1960ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தேன். இப்போது 65 வயதாகிறது. ஒன்பதாம் வகுப்பு முடித்த நிலையில், வேலை தேடி சென்னை, தாம்பரத்திற்கு 1975ஆம் ஆண்டு வந்தேன். நான் வந்த போது மன்னார்குடி – சென்னை பயணச்சீட்டு 18 ரூபாய். இங்கு வந்ததும் தெரிந்தவர் மூலம் வெற்றிலை சீவல் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ.30. கடைக்குப் பொருட்கள் வாங்க வரும் கிறிஸ்டோபர் எனும் ஆசிரியருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இறுதிவரை நல்ல ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளையும் அவர் செய்தார். நான்கு ஆண்டுகள் வேலை பார்த்த நான், 1979ஆம் ஆண்டு, 19ஆம் வயதில் சொந்தமாகக் கடை வைத்தேன்.
அப்போதெல்லாம் நீங்கள் கொள்கையில் இருந்தீர்களா?
இல்லை. அதேநேரம் 1978, 1979 கால கட்டங்களில் நோன்பு இருந்து அய்யப்பன் கோயிலுக்குச் செல்வேன். இந்நிலையில் எங்கள் ஊர்க்காரர் ஒருவர், அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களைப் பார்க்க தலைமைச் செயலகம் வந்திருந்தார். என்னையும் அழைத்துக் கொண்டு போனார். நான் மாலையிட்டு சென்றதைப் பார்த்து அமைச்சர், “இங்கே இல்லாத கடவுளா? ஏன் கேரளாவிற்குச் செல்கிறீர்கள்? பெரியார் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்”, என்று கூறினார்.
ஒரு அமைச்சரே இப்படிச் சொல்கிறாரே என எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் கடைக்கு அருகில் “தங்கமணி பேப்பர் ஸ்டோர்” எனப் பிரபலமான ஒரு கடை இருந்தது. அங்கு ‘விடுதலை’ நாளிதழ் விற்பனைக்குக் கிடைத்தது. அதை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். அதில் திராவிடர் கழகப் புத்தகங்களின் பட்டியலும் இருந்தது. அதையும் அந்தக் கடைக்காரர் மூலமே வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். இப்படி தொடர்ச்சியான வாசிப்பு என்னைப் பகுத்தறிவாளராக மாற்றியது.
இயக்க அறிமுகம் எப்போது கிடைத்தது?
எங்கள் அப்பா கிராமத்தில் தலையாரியாக இருந்தார்கள். கணக்குப் பிள்ளையாக பார்ப்பனர் ஒருவர் இருந்தார். பெரியார் புத்தகங்களை நான் படிக்கிற போது, எங்கள் கிராமத்தில் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள், பார்ப்பனர்கள் காட்டும் வேறுபாடுகள் நினைவிற்கு வந்தது. இந்நிலையில் நான் படித்த நூல்கள் என்னுள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தன. அப்போது எனக்கு 22 வயது இருக்கும். அதன் பிறகும் தொடர்ந்து பகுத்தறிவு நூல்களை வாசித்து வந்தேன். எனது 26ஆவது வயது வரை இயக்க ரீதியாக நான் செயல்படவில்லை.
இதற்கிடையில் தி.ரா.இரத்தினசாமி அவர்கள் எங்கள் கடைக்குப் பொருட்கள் விற்பனை செய்ய வருவார். அவரின் இருசக்கர வாகனத்தில் “மனிதன் கண்டுபிடித்தது மின்சக்தி, மடையன் கண்டுபிடித்தது ஓம்சக்தி” என எழுதியிருக்கும். அவர் மூலம்தான் திராவிடர் கழக அமைப்பு எனக்கு அறிமுகமானது. அதன்பின்னர் தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் ஒன்றில், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த மேடையில் ஏறி, என்னைத் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.
உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
1988ஆம் ஆண்டு, எனது 28ஆவது வயதில் முதன் முதலில் பெரியார் திடலுக்குப் போனேன். அன்று முதல் இன்று வரை கருப்புச் சட்டைதான் அணிகிறேன். 1990ஆம் ஆண்டு ஆசிரியர் தலைமையில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பு கூட்டங்களில் மட்டுமே பார்த்த ஆசிரியர் அவர்களை, திருமண அழைப்புக் கொடுக்கும் போது நேரில் பார்த்தேன். தாம்பரத்தில் நடைபெற்ற எங்கள் திருமணத்தில் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டார்கள். தி.ரா.இரத்தினசாமி, ஆவடி மனோகரன், கிரிதரன் உள்ளிட்டோர் திருமணத்தில் பேசினர். எனக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் கிறிஸ்டோபர், இத்திருமணத்திற்குப் பெரும் உதவியாக இருந்தார். குடும்ப நண்பராகவும் இருந்த அவர், பின்னாளில் மறைந்து போனார்.
எனது இணையர் பெயர் நாகவள்ளி. அவரும் மன்னார் குடியைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் ஆத்திகராக இருந்தார். பின்னாளில், திராவிடர் கழகத்தில் இணைந்து, தற்போது கழகத்தில் நன்றாகச் செயல்பட்டு வருகிறார். மாவட்ட மகளிரணித் தலைவராக உள்ளார். அண்மையில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிலும் பங்கேற்றார். எங்கள் மகள் கனிமொழி சைனாவில் மருத்துவம் படித்தவர். அவரின் இணையர் பெயர் சிறீஜித். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரும் மருத்துவர். இருவருமே கேரளாவில் பணிபுரிகிறார்கள். தன்விருப்பத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
மகன் மணிமாறன் சென்னையில் இயந்திரவியல் துறையில் பணி செய்கிறார். பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த குடியாத்தம் அருள்மொழி அவர்களின் மகள் ஓவியாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனது திருமணத்திற்குத் தலைமையேற்ற ஆசிரியர்தான், மகன் திருமணத்திற்கும் தலைமையேற்று நடத்தி வைத்தார். “எங்கள் குடும்பங்களின் தலைவர்” என்று நாங்கள் சொல்வதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? சற்றொப்ப 3 ஆயிரம் பேர் பங்கேற்று, மாநாடு போல நடந்தது அந்தத் திருமணம்!
என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போவதுண்டா?
தாம்பரம் நகரத் தலைவர், கோட்ட செயலாளர் பொறுப்பு களில் இருந்தேன். தற்போது 25 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத் தலைவராக இருக்கிறேன். தி.ரா.இரத்தினசாமி அய்யா மகன் இராமசாமி மாவட்டத் தலைவராக இருந்தார். அதன்பிறகு அந்தப் பொறுப்பிற்கு நான் நியமிக்கப்பட்டேன். சென்னையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்வேன். பெரியார் திடல் நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாகப் போய்விடுவேன்.
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தோழர்களுடன் இணைந்து நானும் ஒருங்கிணைத்தேன்.
தவிர தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளுக்குச் சென்றுவிடுவேன். பெரும்பாலும் என் இணையரும் கலந்து கொள்வார்கள். திடலில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளின் போது “கேண்டீன்” நடத்துவேன். திருச்சி, சிறுகனூரில் நடைபெற்ற மாநாட்டில் பிரியாணி தயார் செய்து விற்பனை செய்தோம். இந்தியாவில் பெங்களூரு, டில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், ஜெர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். சொந்தப் பணியாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் சென்றுள்ளேன். அங்கும் தோழர்களைச் சந்தித்துள்ளேன். குறிப்பாக ஆசிரியர் மலேசிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நானும் அங்கிருந்தேன். அப்போது மலேசியா நாணயம் “ரிங்கிட்” கணக்கு செய்து நூல்கள் விற்பனை செய்துள்ளேன். அதேபோல அமெரிக்காவில் “டாலர்” மதிப்பிலும் நூல்கள் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
பிறந்த ஊர் மன்னார்குடி என்றாலும், சொந்த ஊர் தாம்பரம் என்றானது. ஆசிரியரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அந்த அனுபவத்தைக் கூறுங்கள்?
இந்த இயக்கம் இருப்பதற்கு ஒரே காரணம் ஆசிரியர் மட்டுமே! எத்தனையோ பேர் வந்திருக்கலாம், போயிருக்கலாம், ஆனால், இந்த இயக்கமும், சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டது நமது தலைவரால் தான்! ஆசிரியரின் சிந்தனையும், உழைப்புமே அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம்! சலிப்பும், ஓய்வும் கூடாது என்பதற்கு ஆசிரியரே முன்னோடி. 1995ஆம் ஆண்டு காலத்தில் “பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை” எனும் வாகனம் தமிழ்நாடு முழுக்கச் சென்றது. அந்த வாகனத்தைத் தாம்பரத்தில் வைத்துப் புத்தகங்களை விற்பனை செய்தோம். மூன்றே நாளில் ஒரு இலட்சம் ரூபாய் விற்பனை ஆனது.
அதைக் கருத்தில் கொண்டு தாம்பரத்தில் ஒரு புத்தகக் கடைத் திறக்க வேண்டும் என ஆசிரியர் முடிவு செய்தார்கள். அதன் விளைவாகத் தாம்பரம் பேருந்து நிலையத்தில் புத்தகக் கடைக்கென்றே ஓர் இடமும் பெறப்பட்டது. அதனை ஆசிரியர் அவர்களும், அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து பெரியார் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு, ஆசிரியரின் பிறந்தநாளான 2ஆம் தேதி, மாதந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு பேச்சாளர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். மாலை 6 மணிக்குத் தொடங்கி நிகழ்ச்சி 8 மணிக்கு நிறைவு பெறும்.
நான் முன்பு தொடங்கிய வெற்றிலை, பீடா கடையோடு இப்போது பேன்சி ஸ்டோர், கரும்புச்சாறு விற்பனை நிலையமும் இருக்கிறது. ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், “தமிழ்நாட்டில் ‘பெரியார் நகர்’ என்பது 1946ஆம் ஆண்டு தாம்பரத்தில் தான் முதன்முதலில் அமைக்கப்பட்டது” எனவும் முத்தையன் அவர்கள் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
திருவல்லிக்கேணி – அய்ஸ் அவுஸ் பகுதி கழகத்தின் சார்பில் 12.5.2026 மாலை 6:00 மணி அளவில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு சந்திப்பில் (பார்த்தசாரதி கோவில் தெற்கு நுழைவு வாயில் எதிரில்) பகுதி கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, எம்.டி.சி. செல்வம், தர்மா, உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது!
சென்னை, மே 16 ‘‘மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க ‘இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில், ‘நீட்’ என்ற தேர்வு திணிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில், அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இந்தியா முழுவதும் பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டது.
ஆனால், அதன் உண்மை முகம் அநீதியானது என்பது தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஆனாலும், விடாப்பிடியாக ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ‘நீட்’ தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் 2026–2027ஆம் கல்வியாண்டில் மருத்துவம் – இளநிலை (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் – இளநிலை (பிடிஎஸ்) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,432 மய்யங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், அந்தத் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடக்கும் முன்பே ராஜஸ்தானில் கசிந்து விட்டதாகப் புகார் எழுந்து, அதை விசாரித்த சி.பி.அய்., வினாத்தாள் கசிந்ததை உறுதி செய்ததையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. மீண்டும் ஒரு தேர்வு (மறு தேர்வு) ஜூன் 21 அன்று நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முதல் முறை அல்ல; ‘நீட்’ தேர்வு என்பது, அதைக் கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அரசு சொன்னதுபோல, ‘தகுதி – திறமையின் அடையாளம்’ அல்ல; மாறாக ஊழலின் ஊற்றுக் கண் என்பதற்கு 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள் கசிவுகள், 48 முறை மறுதேர்வுகள் நடந்துள்ளன என்பதே சான்று அல்லவா?
இப்போது மீண்டும் ஒரு மறுதேர்வா? ஏறத்தாழ 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டார்களே, மீண்டும் அந்த நிலை தொடரப் போகிறதா? மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குத்தான் இப்படிப்பட்ட தண்டனைகளா?
இந்த முறைகேடுகள் நடந்ததை ஒப்புக் கொண்டு தேசியத் தேர்வு முகமை இந்தஆண்டு மே 3 அன்று நடைபெற்ற ‘நீட்’ தேர்வை ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள், குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த ‘நீட்’ தேர்வு அல்ல; ஒட்டு மொத்தமாகவே ‘நீட் தேர்வு’ ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது. இந்த குரலை அழுத்தமாக, உரக்க எழுப்ப வேண்டிய கால கட்டம் இது!
இதை வலியுறுத்தி இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒத்த கருத்துடையோர்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளை யாட்டரங்கம் அருகில் இன்று (16.5.2026) காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
நீட் ஒரு நீண்ட கால நோய். தமிழ்நாட்டினுடைய கல்வியை மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்களின் கல்வியைப் பறிப்பது உள்பட, அதாவது உயர்ஜாதிக்காரர்கள் மட்டுமே பயன்படக் கூடிய, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு கல்வி முறை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றுதான், நீட் தேர்வாகும்.
மருத்துவக் கல்வியில், தொழிற் கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அது இந்தியாவிலேயே வியப்படைக்கூடிய மாநிலமாக இருக்கிறது. திராவிடம் அதனைச் செய்து வருகிறது; ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்னும் வேகமாக அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதையெல்லாம் கண்டு, பொறுக்க முடியாதவர்கள் – தந்தை பெரியார் மண்ணிலே மனுதர்மத்திற்கு இடமில்லை; இங்குக் குலதர்மக் கல்வியை இடம்பெறா மல் தடுத்த மண், இந்த மண் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் என்ற ஒரு கண்ணி வெடியைப் புதைத்து, நம்முடைய இளம் பிள்ளை களுடைய கனவுகளையெல்லாம் தகர்த்து வரக்கூடியதை எதிர்த்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல, இதுதான் சரித்திரத்தில் திருப்பு மய்யமும்கூட. தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது. 1952 இல், வகுப்புவாரி உரிமை என்பதை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்த பிறகும்கூட, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா போன்றவர்களும், தனித்து திராவிட இயக்கம்தான் நின்று, இந்தியாவிலே, அதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்குப் பரவலான பலன் கிடைத்தது.
இங்கே அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கொள்கைக் கூட்டணி என்பதுதான் மிக முக்கியம். கொள்கைக்காகத்தான் கூட்டணியே தவிர, பதவிக்காக கூட்டணி அல்ல என்பதை உணர்ந்து, திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்த நிலையில், மிகக்குறுகிய காலத்தில் நடைபெறுகின்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் பங்கேற்று இருக்கின்றார்கள்.
இவ்வார்ப்பாட்டம் சென்னை தலைநகரிலே மட்டும் நடைபெறவில்லை தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது.
இங்கே எத்தனைக் கட்சித் தோழர்கள் கலந்துகொள்கிறார்களோ, அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, இப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ஒலி முழக்கங்கள் எழுப்பட்டன. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ. கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில இளைஞரணி இணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், மாவட்டத் தலைவர்கள் இரா. வில்வநாதன், எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம், ப.முத்தையன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த. ஆனந்தன், வே. பாண்டு, வெ. கார்வேந்தன், மாவட்ட ச் செயலாளர்கள் செ.ர. பார்த்தசாரதி, ந. இராசேந்திரன், கோ. நாத்திகன், புரசை சு. அன்புச்செல்வன், ஜெ. பாஸ்கரன், க. இளவரசன், க. தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க உரை
ஆர்ப்பாட்டத்தின் தொடக்க உரையை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார்.
கண்டன உரை
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றியதை தொடர்ந்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் ச.இராஜசேகரன், கவிஞர் கண்மதியன் மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.அய்., பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கொடியுடன் ‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி எழுச்சி முழக்கமிட்டு பங்கேற்று சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘‘நீட்’’ தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக்கண்ணா?’’ என்ற புதிய புத்தகம் ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்டது.
-விடுதலை நாளேடு, 16.05.2026
'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் பங்கேற்ற கழகத் தோழர்கள்
சென்னை, மே 17- “மாணவர் உரிமை காக்க, உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் 'நீட்' தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் எழும்பூர் இராசரத்தினம் விளையாட் டரங்கம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கழகத் தோழர்கள் விவரம் வருமாறு:-
தென் சென்னை
இரா.வில்வநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்), பா.இராசேந்திரன்,எம்..டி.சி., ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர்), பெரியார் யுவராஜ் (இளைஞரணி இளைஞரணி செயலாளர்), பெரியார் யுவராஜ் (இளைஞரணி செயலாளர்) துணைத்தலைவர்), அ.அன்பு (மாவட்ட இளைஞ ராணி துணைத்தலைவர்), கோ.அரிகரன் (இராயப்பேட்டை பகுதி தலைவர்), க.விஜயராஜா (மயிலாப்பூர்), ம.தி.பெரியார் ஆதவன் (மாணவர் கழகம்), ம.தி.பெரியார் இனியன் (மாணவர் கழகம்), மு. ஆனந்தன்.